back to top
HomeTamilயோசுவா அதிகாரம் - 24 - திருவிவிலியம்

யோசுவா அதிகாரம் – 24 – திருவிவிலியம்

யோசுவா அதிகாரங்கள் (Tamil Bible: Ecumenical Tamil Translation – ETB)

Click the play button to listen or click the Download button to save a copy.
Audio Bible by Rev. Fr. Arulselvam Rayappan. Know more about him here

செக்கேமில் உடன்படிக்கையைப் புதுப்பித்தல்

1செக்கேமில் யோசுவா இஸ்ரயேலின் எல்லாக் குலங்களையும் ஒன்று கூட்டினார். இஸ்ரயேலின் முதியோர்களையும் தலைவர்களையும் நடுவர்களையும் அதிகாரிகளையும் அழைத்தார். அவர்கள் கடவுள் முன்னிலையில் ஒன்றுகூடினர்.

2யோசுவா எல்லா மக்களுக்கும் கூறியது: “இஸ்ரயேலின் கடவுளாகிய ஆண்டவர் இவ்வாறு கூறுகின்றார்: ‘முற்காலத்தில் ஆபிரகாம், நாகோர் ஆகியோரின் தந்தை தேரா உட்பட்ட உங்கள் மூதாதையர் நதிக்கு அப்பால் வாழ்ந்தபொழுது அவர்கள் மற்ற தெய்வங்களுக்கு ஊழியம் செய்தனர்.

3உங்கள் தந்தையாகிய ஆபிரகாமை நதிக்கு அப்பாலிருந்து அழைத்து வந்து. கானான் நாடு முழுவதிலும் நடத்திச் சென்றேன்; அவனது வழிமரபைப் பெருக்கினேன்; அவனுக்கு ஈசாக்கை அளித்தேன்.

4ஈசாக்கிற்கு யாக்கோபையும் ஏசாவையும் அளித்தேன்; ஏசாவுக்குச் செபீர் மலையை உடைமையாக அளித்தேன். யாக்கோபும் அவன் மக்களும் எகிப்திற்குச் சென்றனர்.

5மோசேயையும் ஆரோனையும் அனுப்பி அங்கே என் செயல்களின் மூலம் எகிப்தை வதைத்தேன். பின்னர், உங்களை வெளியே கொணர்ந்தேன்.

6உங்கள் தந்தையரை எகிப்திலிருந்து வெளியே கொணர்ந்தேன். அவர்கள் கடலுக்குள் சென்றார்கள். எகிப்தியர் தேரில் குதிரைகளுடன் செங்கடலுக்குள் உங்கள் தந்தையரைத் துரத்திச் சென்றனர்.

7அவர்கள் ஆண்டவரை நோக்கிக் கதறினர். அவர் அவர்களுக்கும் எகிப்தியருக்கும் இடையில் இருளை வைத்தார். அவர் எகிப்தியரைக் கடலில் அமிழ்த்தினார். நான் எகிப்தியருக்குச் செய்ததை அவர்கள் கண்கள் கண்டன. நீங்கள் நீண்ட காலம் பாலைநிலத்தில் வாழ்ந்தீர்கள்.

8யோர்தானுக்குக் கிழக்கில் வாழும் எமோரியரின் நாட்டுக்கு உங்களைக் கொண்டுவந்தேன். அவர்கள் உங்களுடன் போரிட்டார்கள். நான் அவர்களை உங்கள் கையில் ஒப்படைத்தேன். அவர்களது நிலத்தை நீங்கள் உடைமையாக்கிக்கொண்டீர்கள். உங்கள் முன்னிருந்து அவர்களை அழித்து ஒழித்தேன்.

9மோவாபின் அரசன் சிப்போரின் மகன் பாலாக்கு இஸ்ரயேலுக்கு எதிராகப் படை திரட்டிப் போர் தொடுத்தான். உங்களைச் சபிக்குமாறு பேகோரின் மகன் பிலயாமை அழைக்க ஆளனுப்பினான்.

10நான் பிலயாமுக்குச் செவிகொடுக்க விரும்பவில்லை. அவன் உங்களுக்கு ஆசி வழங்கினான். உங்களைப் பாலாக்கின் கையினின்று விடுவித்தேன்.

11நீங்கள் யோர்தானைக் கடந்து எரிகோவுக்கு வந்தீர்கள். எரிகோவின் மக்களும், எமோரியரும், பெரிசியரும், கானானியரும், இத்தியரும், கிர்காசியரும், இவ்வியரும், எபூசியரும், உங்களுக்கு எதிராகப் போர் தொடுத்தனர். அவர்களையும் உங்கள் கையில் ஒப்படைத்தேன்.

12நான் உங்களுக்கு முன்னே குளவிகளை அனுப்பினேன். அவை உங்கள் முன்னிருந்து இரு எமோரிய அரசர்களை விரட்டின. இது நிகழ்ந்தது உங்கள் வாளாலும் அன்று; உங்கள் அம்பாலும் அன்று.

13நீங்கள் உழுது பயிரிடாத நிலத்தில் அறுவடை செய்தீர்கள். நீங்கள் கட்டாத நகர்களில் நீங்கள் வாழ்கின்றீகள். நீங்கள் நடாத திராட்சை, ஒலிவத் தோட்டங்களின் பயனை நீங்கள் நுகர்கின்றீர்கள். இவை அனைத்தும் நான் உங்களுக்குக் கொடுத்தவையே.”

14இப்பொழுது, ஆண்டவருக்கு அஞ்சி உண்மையோடும் நேர்மையோடும் அவருக்கு ஊழியம் புரியுங்கள். நதிக்கு அப்பாலும், எகிப்திலும், உங்கள் மூதாதையர் பணிந்து வந்த தெய்வங்களை விட்டு விலகுங்கள்.

15ஆண்டவருக்கு ஊழியம் புரிவது தீயது என்று உங்கள் பார்வைக்குத் தோன்றினால், உங்கள் மூதாதையர் நதிக்கு அப்பால் பணிந்து வந்த தெய்வங்களுக்கோ, உங்கள் நாட்டில் உங்களுடன் வாழும் எமோரியரின் தெய்வங்களுக்கோ இவர்களுள் யாருக்கு ஊழியம் செய்வீர்கள் என்பதை நீங்களே இப்போது முடிவு செய்யுங்கள். ஆனால், நானும் என் வீட்டாரும் ஆண்டவருக்கே ஊழியம் செய்வோம்.

16மக்கள் மறுமொழியாக, “ஆண்டவரைக் கைவிட்டு வேற்றுத் தெய்வங்களை வணங்குவது எங்களிடத்தே அறவே நிகழாதிருப்பதாக!

17ஏனெனில், எங்கள் கடவுளாகிய ஆண்டவர் எங்களையும் எங்கள் மூதாதையரையும் அடிமைத்தன வீடாகிய எகிப்து நாட்டிலிருந்து வெளியே கொண்டுவந்தார். எங்கள் கண்முன் இப்பெரிய அடையாளங்களைச் செய்தார். நாங்கள் நடந்து வந்த எல்லா வழிகளிலும் நாங்கள் கடந்து வந்த மக்களிடையிலும் எங்களைக் காத்தருளினார்.

18ஆண்டவர் எல்லா மக்களையும், இந்நாட்டில் வாழ்ந்த எமோரியரையும் எங்கள் முன்னிருந்து விரட்டினார். நாங்களும் ஆண்டவருக்கு ஊழியம் புரிவோம். ஏனெனில், அவரே எங்கள் கடவுள்” என்றனர்.

19யோசுவா மக்களிடம், “உங்களால் ஆண்டவருக்கு ஊழியம் செய்ய இயலாது. ஏனெனில், அவர் தூய கடவுள். அவர் வேற்றுத் தெய்வ வழிபாட்டைச் சகிக்காத கடவுள். உங்கள் குற்றங்களையும் பாவங்களையும் அவர் மன்னிக்கமாட்டார்.

20நீங்கள் ஆண்டவரைக் கைவிட்டு வேற்றுத் தெய்வங்களை வணங்கினால் அவர் மீண்டும் உங்களுக்குத் தீங்கு செய்வார். உங்களுக்கு நன்மை செய்த அவர் உங்களை அழித்து விடுவார்” என்றார்.

21மக்கள் யோசுவாவிடம், “இல்லை, நாங்கள் ஆண்டவருக்கே ஊழியம் புரிவோம்” என்றனர்.

22யோசுவா மக்களிடம், “ஆண்டவருக்கு ஊழியம் செய்ய அவரை நீங்களே தெரிந்து கொண்டீர்கள் என்பதற்கு நீங்களே சாட்சிகள்” என்றார். அவர்கள், “நாங்களே சாட்சிகள்” என்றனர்.

23“இப்பொழுது உங்கள் நடுவில் உள்ள வேற்றுத் தெய்வங்களை விலக்கி விடுங்கள். இஸ்ரயேலின் கடவுளாகிய ஆண்டவரிடம் உங்கள் இதயங்களைத் திருப்புங்கள்” என்றார்.

24மக்கள் யோசுவாவிடம்,“எங்கள் கடவுளாகிய ஆண்டவருக்கு நாங்கள் ஊழியம் புரிவோம். அவரது குரலுக்குக் கீழ்ப்படிவோம்” என்றனர்.

25அன்று யோசுவா மக்களுக்காக உடன்படிக்கை செய்தார். செக்கேமில் அவர் அவர்களுக்கு விதிமுறைகளையும் ஒழுங்குகளையும் கொடுத்தார்.

26யோசுவா இவ்வார்த்தைகளைக் கடவுளின் திருச்சட்டநூலில் எழுதினார். ஒரு பெரும் கல்லை எடுத்து அதை ஆண்டவரின் திருத்தலத்தில் ஒரு கருவாலி மரத்தின் கீழ் நாட்டினார்.

27யோசுவா எல்லா மக்களிடமும், “இதோ! இக்கல் நமக்கு எதிரான சான்றாக இருக்கும். ஏனெனில், ஆண்டவர் நம்மோடு பேசிய எல்லாவற்றையும் இது கேட்டது. நீங்கள் உங்கள் கடவுளை ஏற்றுக்கொள்ள மறுத்தால் இது உங்களுக்கு எதிரான சான்றாக இருக்கும்” என்றார்.

28யோசுவா மக்களை அவரவர் உரிமைச் சொத்தாகிய பகுதிகளுக்கு அனுப்பி வைத்தார்.

யோசுவா, எலயாசர் இறப்பு

29இந்நிகழ்ச்சிக்குப்பின் நூனின் மகனும் ஆண்டவரின் ஊழியருமாகிய யோசுவா இறந்தார். அவருக்கு வயது நூற்றுப்பத்து.

30அவரை அவரது உரிமை நிலத்தின் எல்லையில் இருந்த திம்னத்செரா என்ற இடத்தில் அடக்கம் செய்தனர். இது எப்ராயிம் மலைநாட்டில் காகசு மலைக்கு வடக்கே உள்ளது.

31யோசுவாவின் வாழ்நாள் முழுவதிலும், யோசுவாவுக்குப்பின் வாழ்ந்த முதியோர்களின் நாள்களிலும் இஸ்ரயேல் மக்கள் ஆண்டவருக்கு ஊழியம் புரிந்து வந்தனர். ஆண்டவர் இஸ்ரயேலுக்குச் செய்த அனைத்தையும் அம்முதியோர் அறிந்திருந்தனர்.

32இஸ்ரயேல் மக்கள் எகிப்திலிருந்து கொண்டுவந்த யோசேப்பின் எலும்புகளைச் செக்கேமில் ஒரு நிலப்பகுதியில் புதைத்தனர். இப்பகுதி யாக்கோபு செக்கேமின் தந்தையாகிய ஆமோரின் மக்களிடமிருந்து நூறு வெள்ளிக் காசுக்கு வாங்கியது. யோசேப்பின் மக்களுக்கு இது உரிமையாயிற்று.

33பின்னர், ஆரோனின் மகன் எலயாசர் இறந்தார். அவருடைய மகன் பினகாசுக்கு எப்ராயிம் மலைநாட்டில் கொடுக்கப்பட்ட கிபயாவில் அவரை அடக்கம் செய்தனர்.


24:2 தொநூ 11:27.
24:3 தொநூ 12:1-9; 21:1-3.
24:4 தொநூ 25:24-26; 36:8; 46:1-7; இச 2:5.
24:5 விப 3:1-12:42.
24:6-7 விப 14:1-31.
24:8 எண் 21:21-35.
24:9-10 எண் 22:1; 24:25.
24:11 யோசு 3:14-17; 6:1-21.
24:12 விப 23:28; இச 7:20.
24:13 இச 6:10-11.
24:30 யோசு 19:49-50.
24:32 தொநூ 33:19; 50:24-25; விப 13:19; யோவா 4:5; திப 7:16.
Pradeep Augustine
Pradeep Augustinehttps://bible.catholicgallery.org/
Pradeep Augustine is the founder of Catholic Gallery. He is a passionate Writer, An Artist, a computer geek and a part-time Blogger who loves to write a lot of contents on Catholicism in his free time. He is the founder of the Technical Blog www.GetCoolTricks.com, where he shares a lot of technical Contents. Stay connected with him on his social profiles.
Access Catholic Videos
Subscribe to our YouTube channel to access Mass Readings and Prayers as videos.
No Thanks