Home » யோபு அதிகாரம் – 9 – திருவிவிலியம்

யோபு அதிகாரம் – 9 – திருவிவிலியம்

யோபு அதிகாரங்கள் (Tamil Bible: Ecumenical Tamil Translation – ETB)

Click the play button to listen or click the Download button to save a copy.

கடவுளது நீதியின் மேன்மை

1யோபு அதற்கு உரைத்த பதில்:

2உண்மையில் இது இவ்வாறு

என்று அறிவேன்; ஆனால், மனிதர்

இறைவன்முன் நேர்மையாய் இருப்பதெப்படி?

3ஒருவர் அவருடன் வழக்காட விரும்பினால்,

ஆயிரத்தில் ஒன்றுக்கேனும்

அம்மனிதரால் பதிலளிக்க முடியுமா?

4இறைவன் உள்ளத்தில் ஞானமுள்ளவர்;

ஆற்றலில் வல்லவர்;

அவர்க்கு எதிராய்த் தம்மைக் கடினப்படுத்தி,

வளமுடன் வாழ்ந்தவர் யார்?

5அவர் மலைகளை அகற்றுவார்;

அவை அதை அறியா; அவர் சீற்றத்தில்

அவைகளைத் தலைகீழாக்குவார்.

6அசைப்பார் அவர் நிலத்தை

அதனிடத்தினின்று;

அதிரும் அதனுடைய தூண்கள்.

7அவர் கட்டளையிடுவார்;

கதிரவன் தோன்றான்;

அவர் மறைத்திடுவார் விண்மீன்களை.

8தாமே தனியாய் வானை விரித்தவர்,

ஆழியின் முதுகை மிதித்து நடந்தவர்.

9வடமீன் குழுவையும், மிருகசீரிடத்தையும்,

கார்த்திகை விண்மீன்களையும்,

தென்திசை விண்மீன் குழுக்களையும்

அமைத்தவர் அவரே.

10உணர்ந்திட இயலாப் பெருஞ்செயல்களையும்,

கணக்கிட முடியா அருஞ்செயல்களையும்

ஆற்றுநர் அவரே.

11இதோ! என் அருகே அவர் கடந்து செல்கையில்

நான் பார்க்க முடியவில்லை; நழுவிச்

செல்கையில் நான் உணர முடியவில்லை.

12இதோ! அவர் பறிப்பாரானால்,

அவரை மறிப்பார் யார்? யாது செய்கின்றீர்

என அவரைத் கேட்பார் யார்?

13கடவுள் தம் சீற்றத்தைத் தணிக்கமாட்டார்;

அவரடி பணிந்தனர்

இராகாபின் துணைவர்கள்.

14இப்படியிருக்க, எப்படி அவருக்குப்

பதிலுரைப்பேன்? எதிர்நின்று

அவரோடு எச்சொல் தொடுப்பேன்?

15நான் நேர்மையாக இருந்தாலும்

அவருக்குப் பதிலுரைக்க இயலேன்;

என் நீதிபதியிடம் நான்

இரக்கத்தையே கெஞ்சுவேன்.

16நான் கூப்பிட அவர் பதிலுரைப்பினும்,

என் வேண்டுதலுக்கு அவர்

செவிகொடுப்பார் என்று நம்புவதற்கில்லை.

17புயலினால் என்னை நொறுக்குவார்;

காரணமின்றி என் காயங்களைப்

பெருக்குவார்.

18அவர் என்னை மூச்சிழுக்கவும் விடாது,

கசப்பினால் என்னை நிரப்புகின்றார்.

19வலிமையில் அவருக்கு நிகர் அவரே!

அவர்மேல் வழக்குத் தொடுப்பவர் யார்?

20நான் நேர்மையாக இருந்தாலும்,

என் வாயே என்னைக் குற்றவாளியாக்கும்;

நான் குற்றமற்றவனாக இருந்தாலும்,

மாறுபட்டவனாக அது என்னைத் தீர்ப்பிடும்.

21குற்றமற்றவன் நான்;

என்னைப்பற்றிக் கவலையில்லை;

என் வாழ்க்கையையே வெறுக்கின்றேன்.

22எல்லாம் ஒன்றுதான்; எனவேதான்

சொல்கின்றேன்; “அவர் நல்லாரையும்

பொல்லாரையும் ஒருங்கே அழிக்கின்றார்’.

23பேரிடர் சாவைத் திடீரெனத் தரும்போது,

அவர் மாசற்றவரின்

நெருக்கடி கண்டு நகைப்பார்.

24வையகம் கொடியோர் கையில்

கொடுக்கப்படுகின்றது; அதன் நீதிபதிகளின்

கண்களை அவர் கட்டுகின்றார்.

அவரேயன்றி வேறு யார் இதைச் செய்வார்?

25ஓடுபவரைவிட விரைந்து செல்கின்றன

என் வாழ்நாள்கள்;

அவை பறந்து செல்கின்றன;

நன்மையொன்றும் அவை காண்பதில்லை.

26நாணற் படகுபோல் அவை விரைந்தோடும்;

இரைமேல் பாயும் ஒரு கழுகைப்போல் ஆகும்.

27‘நான் துயர் மறப்பேன்;

முகமலர்ச்சி கொள்வேன்;

d புன்முறுவல் பூப்பேன், எனப் புகல்வேனாயினும்,

28என் இடுக்கண் கண்டு நடுக்கமுறுகின்றேன்,

ஏனெனில், அவர் என்னைக்

குற்றமற்றவனாய்க் கொள்ளார் என அறிவேன்.

29நான்தான் குற்றவாளி எனில்,

வீணே ஏன் நான் போராடவேண்டும்?

30பனிநீரில் நான் என்னைக் கழுவினும்,

சவர்க்காரத்தினால்

என் கைகளைத் தூய்மையாக்கினும்,

31குழியில் என்னை அவர் அமிழ்த்திடுவார்;

என் உடையே என்னை வெறுத்திடுமே!

32ஏனெனில், அவரோடு நான் வழக்காடவும்,

வழக்கு மன்றத்தில் எதிர்க்கவும்

என்னைப்போல் அவர் மனிதர் இல்லை.

33இருவர்மீதும் தம் கையை வைக்க,

ஒரு நடுவர்கூட எம் நடுவே இல்லையே.

34அகற்றப்படுக அவர் கோல் என்னிடமிருந்து!

அப்போது மிரட்டாது என்னை

அவரைப்பற்றிய அச்சம்!

35அவரிடம் அச்சமின்றிப் பேசுவேன் அப்போது;

அப்படிப் பேசும் நிலையில்

நான் இல்லையே இப்போது.


9:2 யோபு 4:17.
9:9 யோபு 38:31; ஆமோ 5:8.


9:13 இராகாபு = தீங்கை விளைவிக்கும் ஒரு நீர்வாழ் விலங்கு.
Pradeep Augustine Avatar

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Stay Connected

Recently added Bibles

Download our App

Get our official Catholic Gallery app for daily Mass readings, prayers & more

Your Faith. Your Way.
Download the Catholic Gallery app for offline Mass readings, daily prayers, and audio Bible — all in one place.
Available on:
No Thanks