Home » யோபு அதிகாரம் – 15 – திருவிவிலியம்

யோபு அதிகாரம் – 15 – திருவிவிலியம்

யோபு அதிகாரங்கள் (Tamil Bible: Ecumenical Tamil Translation – ETB)

Click the play button to listen or click the Download button to save a copy.

யோபின் சொற்களே அவர்க்குத் தீர்ப்பிடல்
(15:1-21:34)

1அதற்குத் தேமானியனான எலிப்பாசு

சொன்னான்:

2வெற்று அறிவினால் ஞானி

விடையளிக்கக்கூடுமோ?

வறண்ட கீழ்க்காற்றினால்

வயிற்றை அவன் நிரப்பவோ?

3பயனிலாச் சொற்களாலோ,

பொருளிலாப் பொழிவினாலோ

அவன் வழக்காடத் தகுமோ?

4ஆனால், நீர் இறையச்சத்தை இழந்துவிட்டீர்;

இறைச்சிந்தனை இல்லாது போனீர்.

5உம் குற்றம் உம் வாயை உந்துகின்றது;

வஞ்சக நாவை நீர் தேர்ந்துகொண்டீர்.

6கண்டனம் செய்தது உம் வாயே;

நானல்ல; உம் உதடே

உமக்கு எதிராய்ச் சான்றுரைக்கின்றது.

7மாந்தரில் முதல்பிறவி நீர்தாமோ?

மலைகளுக்கு முன்பே உதித்தவர் நீர்தாமோ?

8கடவுளின் மன்றத்தில் கவனித்துக் கேட்டீரோ?

ஞானம் உமக்கு மட்டுமே உரியதோ?

9எங்களுக்குத் தெரியாத எது உமக்குத் தெரியும்?

எங்களுக்குப் புரியாத எது உமக்குப் புரியும்?

10நரைமுடியும் நிறைவயதும்கொண்டு,

நாள்களில் உம் தந்தைக்கு மூத்தோர்

எங்களிடை உள்ளனர்.

11கடவுளின் ஆறுதலும், கனிவான சொல்லும்

உமக்கு அற்பமாயினவோ?

12மனம்போன போக்கில் நீர் செல்வது ஏன்?

உம் கண்கள் திருதிருவென விழிப்பது ஏன்?

13அதனால், இறைவனுக்கு எதிராய்

உம் கோபத்தைத் திருப்புகின்றீர்;

வாயில் வந்தபடி

வார்த்தைகளைக் கொட்டுகின்றீர்.

14மாசற்றவராய் இருக்க மானிடர் எம்மாத்திரம்?

நேர்மையாளராய் இருக்கப்

பெண்ணிடம் பிறந்தவர் எம்மாத்திரம்?

15வான தூதரில் இறைவன் நம்பிக்கை வையார்;

வானங்களும் அவர்தம் கண்முன்

தூயவையல்ல;

16தீமையை தண்ணீர் போல் குடிக்கும்

அருவருப்பும் ஒழுங்கீனமும் நிறைந்த மாந்தர்

எத்துணை இழிந்தோர் ஆவர்?

17கேளும்! நான் உமக்கு விளக்குகின்றேன்;

நான் பார்த்த இதனை நவில்கின்றேன்;

18ஞானிகள் உரைத்தவை அவை!

அவர்கள் தந்தையர் மறைக்காதவை அவை!

19அவர்களுக்கே நாடு வழங்கப்பட்டது;

அன்னியர் அவர்களிடையே நடமாடியதில்லை.

20துடிக்கின்றனர் துன்பத்தில் மூர்க்கர்

தம் நாளெல்லாம்; துன்பத்தின் ஆண்டுகள்

கொடியோர்க்குக் கூட்டப்பட்டுள்ளன.

21திகிலளிக்கும் ஒலி

அவர்களின் செவிகளில் கேட்கும்;

நலமான காலத்தில் அழிப்பவர் தாக்கலாம்.

22அவர்கள் இருளினின்று தப்பிக்கும்

நம்பிக்கை இழப்பர்;

வாளுக்கு இரையாகக் குறிக்கப்பட்டனர்.

23எங்கே உணவு என்று ஏங்கி அலைவர்;

இருள்சூழ்நாள்

அண்மையில் உள்ளதென்று அறிவர்.

24இன்னலும் இடுக்கணும்

அவர்களை நடுங்க வைக்கும்;

போருக்குப் புறப்படும் அரசன்போல்

அவை அவர்களை மேற்கொள்ளும்.

25ஏனெனில், இறைவனுக்கு எதிராக

அவர்கள் கையை ஓங்கினர்;

எல்லாம் வல்லவரை எதிர்த்து வீரம் பேசினர்.

26வணங்காக் கழுத்தோடும்

வலுவான பெரிய கேடயத்தோடும்,

அவரை எதிர்த்து வந்தனர்.

27ஏனெனில், அவர்களின் முகத்தைக்

கொழுப்பு மூடியுள்ளது;

அவர்களின் தொந்தி பருத்துள்ளது.

28பாழான பட்டணங்களிலும்,

எவரும் உறைய இயலா இல்லங்களிலும்,

இடிபாடுகளுக்குரிய வீடுகளிலும்

அவர்கள் குடியிருப்பர்.

29அவர்கள் செல்வர் ஆகார்;

அவர்களின் சொத்தும் நில்லாது;

அவர்களது உடைமை மண்ணில் பெருகாது.

30இருளுக்கு அவர்கள் தப்புவதில்லை;

அவர்களது தளிரை அனல் வாட்டும்.

அவர்களது மலர்

காற்றில் அடித்துப்போகப்படும்.

31வீணானதை நம்பி ஏமாந்து போகவேண்டாம்;

ஏனெனில், வெறுமையே

அவர்களது செயலுக்கு வெகுமதியாகும்.

32அவர்களது வாழ்நாள் முடியுமுன்பே

அது நடக்கும்;

அவர்களது தளிர் உலர்ந்துவிடும்;

33பிஞ்சுகளை உதிர்க்கும்

திராட்சைச் செடிபோன்றும்

பூக்களை உகுக்கும் ஒலிவமரம் போன்றும்

அவர்கள் இருப்பர்.

34ஏனெனில், இறையச்சமிலாரின் கூட்டம்

கருகிப்போம்; கையூட்டு வாங்குவோரின்

கூடாரம் எரியுண்ணும்.

35இன்னலைக் கருவுற்று அவர்கள்

இடுக்கண் ஈன்றெடுப்பர்;

வஞ்சகம் அவர்களது வயிற்றில் வளரும்.


15:14-16 யோபு 25:4-6.


15:30 ‘அவர்தம் வாயின் ஊதுதலால் வாரிப்போகப்படுவான்’ என்பது எபிரேய பாடம்.
Pradeep Augustine Avatar

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Stay Connected

Recently added Bibles

Download our App

Get our official Catholic Gallery app for daily Mass readings, prayers & more

Your Faith. Your Way.
Download the Catholic Gallery app for offline Mass readings, daily prayers, and audio Bible — all in one place.
Available on:
No Thanks