யோபு அதிகாரம் – 10 – திருவிவிலியம்

யோபு அதிகாரங்கள் (Tamil Bible: Ecumenical Tamil Translation – ETB)

Click the play button to listen or click the Download button to save a copy.
Audio Bible by Rev. Fr. Arulselvam Rayappan. Know more about him here

1என் உள்ளம் என் வாழ்வை

அருவருக்கின்றது; என் ஆற்றாமையைத்

தாராளமாய்க் கொட்டித் தீர்ப்பேன்;

உள்ளத்தில் கசப்பினை

நான் உரைத்திடுவேன்.

2நான் கடவுளிடம் சொல்வேன்;

என்னைக் கண்டனம் செய்யாதீர்;

என் மீது நீர் சாட்டும் குற்றத்தின் காரணம்

என்னவெனச் சாற்றுவீர்.

3என்னை ஒடுக்குவதும்

உமது கையின் படைப்பை இகழ்வதும்

உலுத்தர் சூழ்ச்சியில் உளம் மகிழ்வதும்

உமக்கு அழகாமோ?

4ஊனக் கண்களா உமக்கு உள்ளன?

உண்மையில்,

மானிடப்பார்வையா உமது பார்வை?

5மானிட நாள்கள் போன்றவோ உம் நாள்கள்?

மனிதரின் வாழ்நாள் அனையவோ

உம் ஆண்டுகள்?

6பின், ஏன் என் குற்றங்களைத்

துருவிப் பார்க்கிறீர்? ஏன்

என் பாவங்களைக் கிளறுகின்றீர்?

7நான் குற்றமற்றவன் என நீர் அறிந்தாலும்,

உம் கையினின்று என்னைத்

தப்புவிப்பவர் ஒருவருமில்லை.

8என்னை வனைந்து வடிவமைத்து

உண்டாக்கின உம் கைகள்; இருப்பினும்,

நீரே என்னை அழிக்கின்றீர்.

9தயைகூர்ந்து நினைத்துப் பாரும்!

களிமண்போல் என்னை வனைந்தீர்;

அந்த மண்ணுக்கே என்னைத்

திரும்பச் செய்வீரோ?

10பால்போல் என்னை நீர் வார்க்கவில்லையா?

தயிர்போல் என்னை நீர்

உறைவிக்கவில்லையா?

11எலும்பும் தசைநாரும் கொண்டு

என்னைப் பின்னினீர்;

தோலும் சதையும் கொண்டு

என்னை உடுத்தினீர்.

12வாழ்வையும் இரக்கத்தையும்

எனக்கு வழங்கினீர்; என் உயிர் மூச்சை

உம் கரிசனை காத்தது.

13எனினும், இவற்றை உம் உள்ளத்தில்

ஒளித்திருந்தீர்; இதுவே உம் மனத்துள்

இருந்ததென நான் அறிவேன்.

14நான் பாவம் செய்தால்,

என்னைக் கவனிக்கிறீர்;

என் குற்றத்தை எனக்குச்

சுட்டிக்காட்டாது விடமாட்டீர்;

நான் குற்றம் புரிந்தால்

அதை என்மீது சுமத்தாது விடீர்.

15நான் தீங்கு செய்தால், ஐயோ ஒழிந்தேன்!

நான் நேர்மையாக இருந்தாலும்

தலைதூக்க முடியவில்லை; ஏனெனில்,

வெட்கம் நிறைந்தாலும்

வேதனையில் உள்ளேன்.

16தலைநிமிர்ந்தால் அரிமாபோல்

என்னை வேட்டையாடுவீர்;

உம் வியத்தகு செயல்களை

எனக்கெதிராய்க் காட்டுவீர்;

17எனக்கெதிராய்ச் சான்றுகளைப்

புதுப்பிக்கிறீர்; என்மீது

உமது சீற்றத்தைப் பெருக்குகிறீர்;

எனக்கெதிராய்ப் போராட்டத்தைப்

புதிதாக எழுப்புகிறீர்.

18கருப்பையிலிருந்து என்னை

ஏன் வெளிக் கொணர்ந்தீர்?

கண் ஏதும் என்னைக் காணுமுன்பே

நான் இறந்திருக்கலாகாதா?

19உருவாகாதவன் போலவே

இருந்திருக்கக்கூடாதா?

கருவறையிலிருந்தே

கல்லறைக்குப் போயிருப்பேனே;

20என்னுடைய நாள்கள் சிலமட்டுமே;

என்னிடமிருந்து எட்டி நிற்பீரானால்,

மணித்துளி நேரமாவது மகிழ்ந்திருப்பேன்;

21பின்னர், இருளும் இறப்பின் நிழலும் சூழ்ந்த

திரும்ப இயலாத நாட்டிற்குப் போவேன்.

22அது காரிருளும் சாவின் நிழலும் சூழ்ந்த

இருண்ட நாடு; அங்கு ஒழுங்கில்லை;

ஒளியும் இருள்போல் இருக்கும்.


10:10 மனிதன் கருவாகி, தாய் வயிற்றில் வளரும் நிகழ்ச்சியை இவ்வசனம் வருணிக்கிறது.
Pradeep Augustine: Pradeep Augustine is the founder of Catholic Gallery. He is a passionate Writer, An Artist, a computer geek and a part-time Blogger who loves to write a lot of contents on Catholicism in his free time. He is the founder of the Technical Blog www.GetCoolTricks.com, where he shares a lot of technical Contents. Stay connected with him on his social profiles.
Related Post