ஓசேயா அதிகாரம் – 6 – திருவிவிலியம்

ஓசேயா அதிகாரங்கள் (Tamil Bible: Ecumenical Tamil Translation – ETB)

Click the play button to listen or click the Download button to save a copy.
Audio Bible by Rev. Fr. Arulselvam Rayappan. Know more about him here

இஸ்ரயேலரின் போலி மனமாற்றம்

1“வாருங்கள், ஆண்டவரிடம் நாம்

திரும்புவோம்; நம்மைக்

காயப்படுத்தியவர் அவரே,

அவரே நம்மைக் குணமாக்குவார்;

நம்மை அடித்து நொறுக்கியவர் அவரே,

அவரே நம் காயங்களைக் கட்டுவார்.

2இரண்டு நாளுக்குப் பிறகு

நமக்குப் புத்துயிர் அளிப்பார்;

மூன்றாம் நாளில்

நம்மை எழுப்பி விடுவார்;

அப்பொழுது நாம்

அவர் முன்னிலையில் வாழ்ந்திடுவோம்.

3நாம் அறிவடைவோமாக,

ஆண்டவரைப்பற்றி

அறிய முனைந்திடுவோமாக;

அவருடைய புறப்பாடு

புலரும் பொழுதுபோல் திண்ணமானது;

மழைபோலவும், நிலத்தை நனைக்கும்

இளவேனிற்கால மாரிபோலவும்

அவர் நம்மிடம் வருவார்” என்கிறார்கள்.

4எப்ராயிமே! உன்னை நான்

என்ன செய்வேன்?

யூதாவே! உன்னை நான்

என்ன செய்வேன்?

உங்கள் அன்பு

காலைநேர மேகம் போலவும்

கதிரவனைக் கண்ட பனிபோலவும்

மறைந்துபோகிறதே!

5அதனால்தான் நான்

இறைவாக்கினர் வழியாக

அவர்களை வெட்டி வீழ்த்தினேன்;

என் வாய்மொழிகளில்

அவர்களைக் கொன்று விட்டேன்;

எனது தண்டனைத் தீர்ப்பு

ஒளிபோல வெளிப்படுகின்றது.

6உண்மையாகவே

நான் விரும்புவது பலியை அல்ல,

இரக்கத்தையே விரும்புகின்றேன்;

எரிபலிகளைவிட,

கடவுளை அறியும் அறிவையே

நான் விரும்புகின்றேன்.

7அவர்களோ ஆதாம்* என்ற இடத்தில்

உடன்படிக்கையை மீறினார்கள்;

அங்கே எனக்கு

நம்பிக்கைத் துரோகம் செய்தார்கள்.

8கிலயாது கொடியோர் நிறைந்த நகர்;

அதில் இரத்தக்கறை படிந்துள்ளது.

9கொள்ளையர் கூட்டம்

வழிப்போக்கருக்காகக்

காத்திருப்பது போல்

குருக்களின் கூட்டம்

செக்கேமுக்குப் போகிற வழியில்

காத்திருந்து கொலை செய்கின்றது;

கொடுமையன்றோ அவர்கள் செய்வது!

10இஸ்ரயேல் குடும்பத்தாரிடம்

மிகக் கொடிய செயலொன்றை

நான் கண்டேன்;

அங்கே எப்ராயிமின்

வேசித்தனம் இருந்தது,

இஸ்ரயேல் தீட்டுப்பட்டிருந்தது.

11யூதாவே! உனக்கும்

அறுவடைக்காலம் ஒன்று

குறிக்கப்பட்டிருக்கின்றது.

நான் என் மக்களை

நன்னிலைக்குத் திரும்பக்

கொணரும் போது,


6:6 மத் 9:13; 12:7.

6:7 “ஆதாமைப்போல்” என்பது எபிரேய பாடம்.
Pradeep Augustine: Pradeep Augustine is the founder of Catholic Gallery. He is a passionate Writer, An Artist, a computer geek and a part-time Blogger who loves to write a lot of contents on Catholicism in his free time. He is the founder of the Technical Blog www.GetCoolTricks.com, where he shares a lot of technical Contents. Stay connected with him on his social profiles.
Related Post