Home » ஓசேயா அதிகாரம் – 12 – திருவிவிலியம்

ஓசேயா அதிகாரம் – 12 – திருவிவிலியம்

ஓசேயா அதிகாரங்கள் (Tamil Bible: Ecumenical Tamil Translation – ETB)

Click the play button to listen or click the Download button to save a copy.

இஸ்ரயேலரின் கடந்த கால அனுபவமும் ஆண்டவரின் கண்டிப்பும்

1எப்ராயிம் காற்றை உண்டு,நாள்

முழுவதும் கீழைக் காற்றைப் பிடிக்க

ஓடுகிறான்;

பொய்யும் வன்செயலும்

அவனிடம் பெருகி விட்டன;

அசீரியாவோடு

உடன்படிக்கை செய்கின்றான்;

எகிப்துக்கு

எண்ணெய் கொடுத்தனுப்புகின்றான்.

2ஆண்டவருக்கு யூதாவோடு

வழக்கு ஒன்று உண்டு;

யாக்கோபை அவன் தீய

வழிகளுக்கேற்பத் தண்டிப்பார்;

அவன் செயல்களுக்குத் தக்கபடி

கைம்மாறு தருவார்.

3யாக்கோபு தன் தாயின் வயிற்றிலேயே

தமையனை முந்திக் கொண்டான்;

பெரியவனாக வளர்ந்த பின்போ

கடவுளோடு போராடினான்.

4வான தூதரோடு போராடி

வெற்றி கொண்டான்;

கண்ணீர் சிந்தி,

அவர் அருளை வேண்டிக்கொண்டான்;

பெத்தேல் என்னுமிடத்தில்

அவரை சந்தித்தான்;

அவரும் அங்கே அவனுடன் பேசினார்.

5அந்த ஆண்டவரே

படைகளின் கடவுள்;

ஆண்டவர் என்பதே அவரது பெயராம்.

6ஆதலால், இஸ்ரயேலே!

உன் கடவுளிடம் திரும்பி வா;

இரக்கத்தையும் நீதியையும் கடைப்பிடி;

எப்போதும் உன் கடவுளை

நம்பிக் காத்திரு.

பேராசையும் தண்டனையும்

7ஆனால், இஸ்ரயேல்

கள்ளத் தராசைக்

கையில் வைத்திருக்கும்

கானானியன் போன்றவன்;

அவன் கொடுஞ்செயல் புரியவே

விரும்புகின்றான்.

8எப்ராயிம், ‘நான்

பணக்காரனாகிவிட்டேன்,

எனக் கென்று

செல்வம் சேர்த்துக்கொண்டேன்’

என்கிறான். ஆனால்,

அவனது செல்வம் எல்லாம்

சேர்ந்தும்கூட

அவனது தீச்செயலின் பழியை அகற்றாது!

9எகிப்து நாட்டினின்று

உன்னை அழைத்து வந்த நாள் முதல்

நானே உன் கடவுளாகிய ஆண்டவர்;

விழா நாள்களில் போல

மறுபடியும் உன்னைக்

கூடாரங்களில் வாழச் செய்வேன்.

10இறைவாக்கினர்களிடம் பேசினேன்;

நானே காட்சிகளின்

எண்ணிக்கையைப் பெருக்கினேன்;

இறைவாக்கினர் வாயிலாக

உவமைகளில் பேசினேன்.

11கிலயாதில்

தீச்செயல் மலிந்திருப்பதால்

அவர்கள் திண்ணமாய் அழிவார்கள்;

கில்காலில் காளைகளைப்

பலியிடுவதால்

உழவுசால் அருகே இருக்கும்

கற்குவியல் போல்

அவர்களுடைய பலிபீடங்கள் ஆகிவிடும்.

12யாக்கோபு ஆராம் நாட்டிற்குத்

தப்பி ஓடினான்;

இஸ்ரயேல் ஒரு பெண்ணுக்காக

ஊழியம் செய்தான்;

அப்பெண்ணுக்காக ஆடு மேய்த்தான்.

13இறைவாக்கினர் ஒருவரைக் கொண்டு

ஆண்டவர் இஸ்ரயேலை

எகிப்திலிருந்து கூட்டி வந்தார்.

இறைவாக்கினர் ஒருவரால்

அவன் பாதுகாக்கப்பட்டான்.

14எப்ராயிம் ஆண்டவருக்கு

மிகவும் சினமூட்டினான்;

அவனுடைய தலைவர்

அவனுடைய இரத்தப் பழியை

அவன் மேலேயே சுமத்துவார்;

அவனுடைய நிந்தையை

ஆண்டவர் அவன் மேலேயே திருப்புவார்.


12:3 தொநூ 25:26.
12:3-4 தொநூ 32:24-26.
12:4 தொநூ 28:10-22.
12:9 லேவி 23:42-43.
12:12 தொநூ 29:1-20.
12:13 விப 12:50-51.
Pradeep Augustine Avatar

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Stay Connected

Recently added Bibles

Download our App

Get our official Catholic Gallery app for daily Mass readings, prayers & more

Your Faith. Your Way.
Download the Catholic Gallery app for offline Mass readings, daily prayers, and audio Bible — all in one place.
Available on:
No Thanks