எசேக்கியல் அதிகாரம் – 5 – திருவிவிலியம்

எசேக்கியல் அதிகாரங்கள் (Tamil Bible: Ecumenical Tamil Translation – ETB)

Click the play button to listen or click the Download button to save a copy.
Audio Bible by Rev. Fr. Arulselvam Rayappan. Know more about him here

எசேக்கியேல் தன் தலையையும் தாடியையும் மழித்துக்கொள்ளல்

1“மானிடா! மழிக்கும் கத்தியைப் போன்று கருக்கலான ஒரு வாளை எடுத்து, அதைக்கொண்டு உன் தலையையும் தாடியையும் மழித்துக்கொள். ஒரு தராசை எடுத்து அந்த முடியைப் பங்கிடு.

2அதில் மூன்றிலொரு பங்கை முற்றுகை நாள்கள் முடியும்போது நகரின் நடுவில் நெருப்பினால் சுட்டெரி; மூன்றிலொரு பங்கை நகரைச் சுற்றிலும் வாளால் வெட்டிப்போடு; மூன்றில் ஒரு பங்கைக் காற்றில் தூற்றிவிடு. ஏனெனில் நான் அவர்களை உருவிய வாளுடன் பின்தொடர்வேன்.

3அதில் கொஞ்சம் நீ எடுத்து உன் ஆடையின் முனைகளில் முடிந்து வை.

4பிறகு அதில் இன்னும் கொஞ்சம் எடுத்து, அதைத் தீயிலிட்டுச் சுட்டெரி. அதனினின்று இஸ்ரயேல் வீட்டார் அனைவருக்கும் எதிராகத் தீ புறப்படும்.”

5தலைவராகிய ஆண்டவர் கூறுவது இதுவே: வேற்றினத்தாரிடையேயும் சூழ்ந்துள்ள நாடுகள் நடுவிலும் நான் திகழச் செய்த எருசலேம் இதுவே.

6அம்மக்கள் வேற்றினத்தாரைவிடக் கேடு கெட்டவர்களாய் என் நீதிநெறிகளை எதிர்த்தார்கள். தங்களைச் சுற்றியுள்ள நாடுகளைவிட மிகுதியாக என் நியமங்களை எதிர்த்தார்கள். ஏனெனில் அவர்கள் என் நீதிநெறிகளை ஒதுக்கித் தள்ளி, என் நியமங்களின்படி நடவாமற் போனார்கள்.

7எனவே, தலைவராகிய ஆண்டவர் இவ்வாறு கூறுகிறார்: உங்களைச் சுற்றியுள்ள மக்களினங்களைக் காட்டிலும் அதிகமாய் நீங்கள் கிளர்ச்சி செய்தீர்கள்; என் நியமங்களின்படி நடக்கவில்லை. என் நீதி நெறிகளைக் கடைப்பிடிக்கவில்லை. உங்களைச் சுற்றியுள்ள மக்களினங்களின் நீதிநெறிகளின்படிகூட நீங்கள் நடக்கவில்லை.

8ஆகவே, தலைவராகிய ஆண்டவர் இவ்வாறு கூறுகிறார்: வேற்றினத்தார் கண்முன் நானே உங்கள் நடுவிலிருந்து உங்களுக்கெதிராகத் தீர்ப்பு வழங்குவேன்.

9உங்கள் எல்லா அருவருப்பான செயல்களுக்காகவும், நான் இதுவரை செய்யாததும் இனிச் செய்யாதிருக்கப் போவதுமான ஒன்றை உங்கள் நடுவே செய்யப்போகிறேன்.

10எனவே உங்களுள் பெற்றோர் தம் பிள்ளைகளையும் பிள்ளைகள் தம் பெற்றோரையும் தின்பர்; உங்களுக்கு நான் தண்டனைத் தீர்ப்பு அளித்து உங்களுள் எஞ்சியிருப்போர் அனைவரையும் எல்லாத் திசைகளிலும் சிதறடிப்பேன்.

11என்மேல் ஆணை! வெறுப்புக்கும் அருவருப்புக்கும் உரிய உங்கள் எல்லாச் செயல்களாலும் என் திருத்தூயகத்தை நீங்கள் தீட்டுப்படுத்தியதால் நான் உங்களைவிட்டு விலகிவிடுவேன். என் கண்கள் உங்களுக்கு இரக்கம் காட்டா. இது தலைவராகிய ஆண்டவரின் அறிவிப்பு.

12உங்களுள் மூன்றிலொரு பங்கினர் கொள்ளை நோயால் மடிவர்; பஞ்சத்தால் அழிவர்; இன்னும் மூன்றிலொரு பங்கினர் வாளால் வீழ்வர்; எஞ்சிய மூன்றிலொரு பங்கினரை எத்திசையிலும் சிதறுண்டு போகச் செய்து, அவர்களை உருவிய வாளோடு தொடர்வேன்.

13இவ்வாறு என் சினம் தணியும்; அவர்கள்மீது எனக்குள்ள சீற்றத்தை ஆற்றிக்கொள்வேன், பழிதீர்த்துக் கொள்வேன். என் சீற்றம் அவர்கள் மீது பாய்ந்து முடியும்போது ஆண்டவராகிய நான் என் பேரார்வத்தினால் பேசியுள்ளேன் என அவர்கள் அறிந்து கொள்வர்.

14இவ்வழியாய்க் கடந்து செல்வோர் அனைவரும் காணும்படி உன்னைச் சுற்றியுள்ள மக்களினங்களிடையே உன்னைப் பாழாக்கி, பழிச்சொல்லுக்கு ஆளாக்குவேன்.

15சினத்தோடும், சீற்றத்தோடும் உனக்கு நான் தண்டனைத் தீர்ப்பு வழங்கும்போது, உன்னைச் சுற்றியுள்ள மக்களினங்களுக்கு அது பழிச்சொல்லும் வசைமொழியும் எச்சரிக்கையும் திகிலுமாய் இருக்கும். ஆண்டவராகிய நான் பேசியுள்ளேன்.

16உங்களைப் பாழாக்குவதற்காக நான் வறட்சியின் கொடிய அம்புகளை அவர்கள்மீது எய்வேன். உங்களை அழிப்பதற்காகவே அவற்றை எய்வேன். உங்களிடையே வறட்சியை மிகுதிப்படுத்தி உங்கள் உணவின் தரவை நிறுத்திவிடுவேன்.

17நான் வறட்சியையும், கொடிய விலங்குகளையும் உங்கள் மேல் ஏவுவேன். அதனால், நீங்கள் உங்கள் பிள்ளைகளை இழப்பீர்கள்; கொள்ளை நோயும் இரத்தக் களறியும் உங்களிடையே உண்டாகும். ஆண்டவராகிய நானே பேசியுள்ளேன்.


5:10 புல 4:10.
5:17 திவெ 6:8.
Pradeep Augustine: Pradeep Augustine is the founder of Catholic Gallery. He is a passionate Writer, An Artist, a computer geek and a part-time Blogger who loves to write a lot of contents on Catholicism in his free time. He is the founder of the Technical Blog www.GetCoolTricks.com, where he shares a lot of technical Contents. Stay connected with him on his social profiles.
Related Post