Home » இணைச் சட்டம் அதிகாரம் – 10 – திருவிவிலியம்

இணைச் சட்டம் அதிகாரம் – 10 – திருவிவிலியம்

இணைச் சட்டம் அதிகாரங்கள் (Tamil Bible: Ecumenical Tamil Translation – ETB)

Click the play button to listen or click the Download button to save a copy.

பத்துக் கட்டளைகளை மோசே மீண்டும் பெறுதல்
(விப 34:1-10)

1அந்நாளில் ஆண்டவர் என்னை நோக்கி, ‘முன்னவைப்போன்ற இரு கற்பலகைகளை வெட்டி எடுத்துக் கொண்டு மலைமேல் ஏறி என்னிடம் வா. மரத்தால் ஆன பேழையையும் உனக்காகச் செய்துகொள்.

2நீ உடைத்துப் போட்ட முன்னைய பலகைகளில் இருந்த வார்த்தைகளையே நான் இப்பலகைகளிலும் எழுதுவேன். நீ அவற்றைப் பேழையில் வை’ என்றார்.

3எனவே, சித்திம் மரத்தாலான ஒரு பேழையைச் செய்தேன். முன்னவை போன்ற இரு கற்பலகைகளை வெட்டி எடுத்தேன். அவ்விரு கற்பலகைகளையும் என் கையில் எடுத்துக்கொண்டு மலைமேல் ஏறினேன்.

4சபை கூடிய நாளில், மலையில் நெருப்பினின்று, உங்களுக்குக் கூறிய பத்துக்கட்டளைகளை முன்பு எழுதியது போலவே ஆண்டவர் அப்பலகைகளில் எழுதினார். பின்னர், அவர் அவற்றை என்னிடம் கொடுத்தார்.

5அப்பொழுது நான் திரும்பி மலையிலிருந்து இறங்கி, நான் செய்திருந்த பேழையில் பலகைகளை வைத்தேன். ஆண்டவர் எனக்குக் கட்டளையிட்டபடி அவை அங்கே உள்ளன.

6அதன்பின், இஸ்ரயேல் மக்கள் பெனயாக்கானுக்கு அருகிலுள்ள பெயரோத்திலிருந்து மோசேராவுக்குப் பயணம் செய்தார்கள். அங்கே ஆரோன் இறந்து அடக்கம் செய்யப்பட்டார். அவர் மகன் எலயாசர் அவருக்குப் பதிலாக குரு ஆனார்.

7அங்கிருந்து அவர்கள் குத்கோதாவுக்கும் தொடர்ந்து பாய்ந்தோடும் ஆறுகள் உள்ள யோற்றுபாத்தாவுக்கும் பயணம் செய்தார்கள்.

8அந்நாளில் ஆண்டவரின் உடன்படிக்கைப் பேழையைச் சுமக்கவும், இந்நாள்வரை இருப்பது போல ஆண்டவர் திருமுன் நின்று பணிபுரியவும், அவருடைய பெயரால் ஆசி வழங்கவும், ஆண்டவர் லேவியின் குலத்தைத் தனித்து வைத்தார்.

9எனவேதான், லேவியர்க்குத் தம் சகோதரர்களுடன் பங்கு இல்லை; உரிமைச் சொத்தும் இல்லை; உங்கள் கடவுளாகிய ஆண்டவர் அவர்களுக்குச் சொல்லி இருப்பதுபோல, ஆண்டவரே அவர்களது உரிமைச் சொத்து.

10முதன்முறை போன்றே நான் நாற்பது பகலும் நாற்பது இரவும் மலைமீது தங்கியிருந்தேன். மீண்டும் ஒருமுறை ஆண்டவர் என் மன்றாட்டைக் கேட்டார். உங்களை அழிப்பதை ஆண்டவர் விரும்பவில்லை.

11ஆண்டவர் என்னிடம், ‘நீ எழுந்து மக்களுக்குமுன் புறப்பட்டுச் செல். நான் அவர்களுக்கு அளிப்பதாக அவர்களின் மூதாதையருக்கு ஆணையிட்டுச் சொன்ன நாட்டுக்குள் சென்று அதை அவர்கள் உடைமையாக்கிக்கொள்ளட்டும்’ என்றார்.

கடவுள் எதிர்பார்ப்பவை

12எனவே, இஸ்ரயேலரே, உங்கள் கடவுளாகிய ஆண்டவருக்கு அஞ்சி, அவர்தம் அனைத்து வழிகளிலும் நடந்து, அவர் மீது அன்புகூர்ந்து, உங்கள் முழு இதயத்தோடும் உங்கள் முழு உள்ளத்தோடும் அவருக்குப் பணிபுரிந்து,

13உங்களுக்கு எல்லாம் நலமாகும் பொருட்டு நான் இன்று கற்பிக்கின்ற அவர்தம் கட்டளைகளையும் நியமங்களையும் நீங்கள் கடைப்பிடிக்க வேண்டுமென்பதன்றி, அவர் உங்களிடமிருந்து வேறு என்ன எதிர்பார்க்கின்றார்?

14விண்ணும் விண்ணின் வானங்களும், மண்ணும் அதில் உள்ள அனைத்தும் உங்கள் கடவுளாகிய ஆண்டவருக்கு உரியன.

15இருப்பினும், உங்கள் மூதாதையரின்மீது பற்றுவைத்து அன்பு கூர்ந்தார். அவர்களுக்குப்பின் அவர்களுடைய வழிமரபினராகிய உங்களை எல்லா மக்களினங்களினின்றும், இந்நாளில் இருப்பதுபோலத் தெரிந்துகொண்டார்.

16ஆகவே, உங்கள் உள்ளத்தை விருத்த சேதனம் செய்யுங்கள். வணங்காக் கழுத்தினராய் இராதீர்கள்.

17ஏனெனில், உங்கள் கடவுளாகிய ஆண்டவரே, தெய்வங்களுக்கெல்லாம் கடவுள், இறைவர்க்கெல்லாம் இறைவன். மாட்சியும் ஆற்றலும் உள்ள அஞ்சுதற்குரிய கடவுள் அவரே. அவர் ஓர வஞ்சனை செய்வதில்லை; கையூட்டு வாங்குவதும் இல்லை.

18அநாதைகளுக்கும் கைம்பெண்களுக்கும் நீதி வழங்குபவர் அவரே. அந்நியர்மேல் அன்புகூர்ந்து அவர்களுக்கு உணவும் உடையும் கொடுப்பவர் அவரே.

19அந்நியருக்கு அன்பு காட்டுங்கள்; ஏனெனில், எகிப்தில் நீங்களும் அந்நியராய் இருந்தீர்கள்.

20உங்கள் கடவுளாகிய ஆண்டவருக்கே அஞ்சுங்கள்; அவருக்கே பணிபுரிந்து அவரைப் பற்றிக்கொள்ளுங்கள். அவர் பெயராலே ஆணையிடுங்கள்.

21அவரே உங்கள் புகழ்ச்சி! அவரே உங்கள் கடவுள்! உங்கள் கண்கள் கண்ட ஆற்றல்மிகு அச்செயல்களை உங்களுக்காகச் செய்தவர் அவரே.

22உங்கள் மூதாதையர் எழுபது ஆள்களாய் எகிப்துக்குப் போனார்கள். இப்பொழுதோ உங்கள் கடவுளாகிய ஆண்டவர் உங்களை வானத்து விண்மீன்கள் போல் பெருகச் செய்துள்ளார்.


10:6 எண் 20:28; 33:38.
10:8 எண் 3:5-8.
10:10 விப 34:28.
10:17 1 திமொ 6:15; திவெ 17:14; 19:16; திப 10:34; உரோ 2:11; கலா 2:6; எபே 6:9.
10:22 தொநூ 15:5; 22:17; 46:27.
Pradeep Augustine Avatar

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Stay Connected

Recently added Bibles

Download our App

Get our official Catholic Gallery app for daily Mass readings, prayers & more

Your Faith. Your Way.
Download the Catholic Gallery app for offline Mass readings, daily prayers, and audio Bible — all in one place.
Available on:
No Thanks