பொதுக்காலம் 12ஆம் வாரம் – வெள்ளி
முதல் வாசகம்
யூதா மக்கள் நாடு கடத்தப்பட்டனர்.
அரசர்கள் இரண்டாம் நூலிலிருந்து வாசகம் 25: 1-12
செதேக்கியாவினது ஆட்சியின் ஒன்பதாம் ஆண்டு பத்தாம் மாதம் பத்தாம் நாளில், பாபிலோனிய மன்னன் நெபுகத்னேசர் தன் எல்லாப் படைகளோடு எருசலேமுக்கு எதிராக வந்து, பாளையம் இறங்கி அதைச்சுற்றிலும் முற்றுகைத் தளம் எழுப்பினான். இவ்வாறு அரசன் செதேக்கியா ஆட்சியேற்ற பதினோராம் ஆண்டு வரை, நகர் முற்றுகைக்கு உள்ளாகியிருந்தது. அவ்வாண்டு நான்காம் மாதம் ஒன்பதாம் நாள் நகரில் பஞ்சம் கடுமை ஆயிற்று. நாட்டு மக்களுக்கு உணவே கிடைக்கவில்லை.
அப்பொழுது, நகர் மதிலில் ஒரு திறப்பு உண்டாக்கப்பட்டது. போர்வீரர் அனைவரும் அரசப் பூங்காவின் இரு மதில்களுக்கு இடையே அமைந்த வாயில் வழியாக அராபாவை நோக்கி இரவில் ஓடினர். கல்தேயரோ நகரைச் சுற்றி முற்றுகையிட்ட வண்ணம் இருந்தனர்.
கல்தேயப் படையினர் அரசனைப் பின் தொடர்ந்து சென்று, எரிகோ சமவெளியில் அவனைப் பிடித்தனர்; அவனது படை முழுவதும் அவனை விட்டுச் சிதறி ஓடிற்று. அவர்கள் அரசனைப் பிடித்து, இரிபலாவில் இருந்து பாபிலோனிய மன்னனிடம் கொண்டு சென்றார்கள். மன்னன் அவனுக்கு எதிராகத் தீர்ப்பு வழங்கினான். பாபிலோனிய மன்னன், செதேக்கியாவின் புதல்வர்களை அவனது கண்முன்னே கொன்றான். மேலும் அவனுடைய கண்களைப் பிடுங்கிய பின், விலங்கிட்டு அவனைப் பாபிலோனுக்கு இழுத்துச் சென்றான்.
பாபிலோனிய மன்னன் நெபுகத்னேசர் ஆட்சியேற்ற பத்தொன்பதாம் ஆண்டு ஐந்தாம் மாதம் ஏழாம் நாளன்று, அவன் பணியாளனும், மெய்க்காப்பாளர் தலைவனுமாகிய நெபுசரதான் எருசலேமிற்குள் நுழைந்தான். அவன் ஆண்டவரின் இல்லத்தையும், அரசனது அரண்மனையையும், எருசலேமில் இருந்த எல்லா வீடுகளையும் தீக்கிரையாக்கினான்; பெரிய வீடுகளை எல்லாம் தீயிட்டுப் பொசுக்கினான். மெய்க்காப்பாளர் தலைவனுடன் இருந்த கல்தேயரின் படையினர் எருசலேமைச் சுற்றிலும் இருந்த மதில்களைத் தகர்த்தெறிந்தனர்.
மெய்க்காப்பாளர் தலைவன் நெபுசரதான் நகரில் எஞ்சியிருந்த மக்களையும், பாபிலோனிய மன்னனிடம் சரணடைந்து இருந்தவர்ளையும், விடப்பட்டிருந்த கைவினைஞரோடு சேர்த்து நாடு கடத்தினான். மெய்க்காப்பாளர் தலைவன் திராட்சைத் தோட்டங்களையும், வயல்களையும் கவனிக்கும் பொருட்டு நாட்டின் ஏழைகள் சிலரை அங்கேயே விட்டு வைத்தான்.
ஆண்டவரின் அருள்வாக்கு.
பதிலுரைப் பாடல்
திபா 137: 1-2. 3. 4-5. 6 (பல்லவி: 6 காண்க)
பல்லவி: உன்னை நினையாவிடில் என் நா மேல்வாயோடு ஒட்டிக் கொள்வதாக!
நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி
மத் 8: 17
அல்லேலூயா, அல்லேலூயா! ஆண்டவர் நம் பிணிகளைத் தாங்கிக் கொண்டார்; நம் துன்பங்களைச் சுமந்துகொண்டார். அல்லேலூயா.
நற்செய்தி வாசகம்
நீர் விரும்பினால், என் நோயை நீக்க உம்மால் முடியும்.
✠ மத்தேயு எழுதிய தூய நற்செய்தியிலிருந்து வாசகம் 8: 1-4
அக்காலத்தில்
இயேசு மலையிலிருந்து இறங்கியபின் பெருந்திரளான மக்கள் அவரைப் பின்தொடர்ந்தார்கள். அப்பொழுது தொழுநோயாளர் ஒருவர் வந்து அவரைப் பணிந்து, “ஐயா, நீர் விரும்பினால் எனது நோயை நீக்க உம்மால் முடியும்” என்றார். இயேசு தமது கையை நீட்டிஅவரைத் தொட்டு, “நான் விரும்புகிறேன், உமது நோய் நீங்குக!” என்று சொன்னார். உடனே அவரது தொழுநோய் நீங்கியது. இயேசு அவரிடம், “இதை எவருக்கும் சொல்ல வேண்டாம், கவனமாய் இரும். ஆனால் நீர் போய் உம்மைக் குருவிடம் காட்டி மோசே கட்டளையிட்டுள்ள காணிக்கையைச் செலுத்தும். நீர் நலமடைந்துள்ளீர் என்பதற்கு அது சான்றாகும்” என்றார்.
ஆண்டவரின் அருள்வாக்கு.