back to top
HomeTamil Mass Readingதிருப்பலி வாசகங்கள் - ஜூன் 2, 2024

திருப்பலி வாசகங்கள் – ஜூன் 2, 2024

கிறிஸ்துவின் திருவுடல், திருஇரத்தம்

பெருவிழா

முதல் வாசகம்

ஆண்டவர் உங்களோடு செய்துள்ள உடன்படிக்கையின் இரத்தம் இதோ.

விடுதலைப் பயண நூலிலிருந்து வாசகம் 24: 3-8

அக்காலத்தில்,

மோசே மக்களிடம் வந்து ஆண்டவர் சொன்ன அனைத்து வார்த்தைகளையும் விதிமுறைகளையும் அறிவித்தார். மக்கள் அனைவரும் ஒரே குரலாக; “ஆண்டவர் கூறிய வார்த்தைகள் அனைத்தையும் நாங்கள் செயல்படுத்துவோம்” என்று விடையளித்தனர்.

மோசே ஆண்டவரின் வாக்குகள் அனைத்தையும் எழுதி வைத்தார். அதிகாலையில் அவர் எழுந்து மலையடிவாரத்தில் ஒரு பலிபீடத்தையும், இஸ்ரயேலின் பன்னிரண்டு குலங்களுக்காகப் பன்னிரண்டு தூண்களையும் எழுப்பினார். அவர் இஸ்ரயேல் மக்களின் இளைஞர்களை அனுப்பி வைக்க, அவர்களும் ஆண்டவருக்கு எரிபலிகள் செலுத்தினர். மாடுகளை நல்லுறவுப் பலிகளாகவும் ஆண்டவருக்குப் பலியிட்டனர்.

மோசே இரத்தத்தில் ஒரு பாதியை எடுத்துக் கலங்களில் விட்டு வைத்தார். மறு பாதியைப் பலிபீடத்தின் மேல் தெளித்தார். அவர் உடன்படிக்கையின் ஏட்டைஎடுத்து மக்கள் காதுகளில் கேட்கும்படி வாசித்தார். அவர்கள், “ஆண்டவர் கூறிய அனைத்தையும் நாங்கள் செயல்படுத்திக் கீழ்ப்படிந்திருப்போம்” என்றனர்.

அப்போது மோசே இரத்தத்தை எடுத்து மக்கள்மேல் தெளித்து, “இவ்வனைத்து வார்த்தைக்குமிணங்க, ஆண்டவர் உங்களோடு செய்துள்ள உடன்படிக்கையின் இரத்தம் இதோ” என்றார்.

ஆண்டவரின் அருள்வாக்கு.

பதிலுரைப் பாடல்

திபா 116: 12-13. 15-16. 17-18 (பல்லவி: 13)

பல்லவி: மீட்பின் கிண்ணத்தைக் கையில் எடுத்து, ஆண்டவர் பெயரைத் தொழுதிடுவேன்.

12ஆண்டவர் எனக்குச் செய்த எல்லா நன்மைகளுக்காகவும் நான் அவருக்கு என்ன கைம்மாறு செய்வேன்?13மீட்பின் கிண்ணத்தைக் கையில் எடுத்து, ஆண்டவரது பெயரைத் தொழுவேன். – பல்லவி

15ஆண்டவர்தம் அன்பர்களின் சாவு அவரது பார்வையில் மிக மதிப்புக்குரியது.16ஆண்டவரே! நான் உண்மையாகவே உம் ஊழியன்; நான் உம் பணியாள்; உம் அடியாளின் மகன்; என் கட்டுகளை நீர் அவிழ்த்து விட்டீர். – பல்லவி

17நான் உமக்கு நன்றிப் பலி செலுத்துவேன்; ஆண்டவராகிய உம் பெயரைத் தொழுவேன்;18இப்பொழுதே உம் மக்கள் அனைவரின் முன்னிலையில் ஆண்டவரே! உமக்கு என் பொருத்தனைகளை நிறைவேற்றுவேன். – பல்லவி

இரண்டாம் வாசகம்

கிறிஸ்துவின் இரத்தம் நம் மனச்சான்றை தூய்மைப்படுத்துகிறது!

எபிரேயருக்கு எழுதப்பட்ட திருமுகத்திலிருந்து வாசகம் 9: 11-15

சகோதரர் சகோதரிகளே,

கிறிஸ்து தலைமைக் குருவாக வந்துள்ளார். அவர் அருளும் நலன்கள் இப்போது நமக்குக் கிடைத்துள்ளன. அவர் திருப்பணி செய்யும் கூடாரம் முன்னதை விட மேலானது, நிறைவு மிக்கது. அது மனிதர் கையால் அமைக்கப்பட்டது அல்ல; அதாவது, படைக்கப்பட்ட இவ்வுலகைச் சார்ந்தது அல்ல. அவர் பலியாகப் படைத்த இரத்தம் வெள்ளாட்டுக் கிடாய்கள், கன்றுக்குட்டிகள் ஆகியவற்றின் இரத்தம் அல்ல, அவரது சொந்த இரத்தமே. அவர் ஒரே ஒருமுறை தூயகத்திற்குள் சென்று எக்காலத்திற்குமென அதைப் படைத்து நமக்கு என்றுமுள்ள மீட்பு கிடைக்கும்படி செய்தார்.

வெள்ளாட்டுக்கிடாய்கள், காளைகள் இவற்றின் இரத்தமும் கிடாரியின் சாம்பலும் தீட்டுப்பட்டவர்கள்மீது தெளிக்கப்படும்போது, சடங்கு முறைப்படி அவர்கள் தூய்மை பெறுகிறார்கள். ஆனால் கிறிஸ்துவின் இரத்தம், வாழும் கடவுளுக்கு நாம் வழிபாடு செய்யுமாறு, சாவுக்கு அழைத்துச் செல்லும் செயல்களிலிருந்து நம் மனச்சான்றை எத்துணை மிகுதியாய்த் தூய்மைப்படுத்துகிறது!

ஏனெனில் என்றுமுள்ள தூய ஆவியினால் தம்மைத்தாமே கடவுளுக்கு மாசற்ற பலியாகக் கொடுத்தவர் அவரே. இவ்வாறு அவர் புதிய உடன்படிக்கையின் இணைப்பாளராயிருக்கிறார். கடவுளால் அழைக்கப்பட்டவர்கள் அவரால் வாக்களிக்கப்பட்ட என்றும் நிலைக்கும் உரிமைப்பேற்றைப் பெறுவதற்கென்று இந்த உடன்படிக்கை உண்டானது. இது ஒரு சாவின் மூலம் ஏற்படுத்தப்பட்டது. இந்தச் சாவு முந்திய உடன்படிக்கையை மீறிச் செய்த குற்றங்களிலிருந்து மீட்பளிக்கிறது.

ஆண்டவரின் அருள்வாக்கு.

தொடர்பாடல்

இத்தொடர் பாடலை விருப்பம் போல் பயன்படுத்தலாம்: இதை முழுமையாக அல்லது குறுகிய பாடமாக “வானவர் உணவிதோ” என்ற (21ஆம்) அடியிலிருந்தும் சொல்லலாம் அல்லது பாடலாம்.

  1. சீயோனே, உன் மீட்பரைப் புகழ்வாய்,
    கீதமும் பாடலும் இசைத்தே உந்தன்
    ஆயரை, தலைவரைப் புகழ்வாயே.
  2. எல்லாப் புகழும் கடந்தவர் அவரே;
    இயலாது உன்னால் அவரைப் புகழ,
    இயன்ற மட்டும் துணிந்திடுவாயே.
  3. உயிர்மிகு அப்பம் உயிர்தரும் உணவாம்
    போற்றுதற்குரிய இப்பேருண்மை
    இன்று சிந்தனைக்கு ஏற்ற பொருளே.
  4. தூய விருந்தின் பந்தியில் அன்று
    பன்னிரு சோதரர் கூட்ட மதற்கே
    கிடைத்த உணவிது; ஐயமே யில்லை.
  5. ஆர்ப்பரிப் புடனே இனிமையும் கலந்த
    நிறைபுகழ்க் கீதம் ஒலிப்பதோ டன்றி
    மகிழ்வும் மனதில் பெருகிடல் தகுமே.
  6. பெருஞ்சிறப்பான திருவிழா இன்றே
    இத்திரு விருந்தை முதன் முதலாக
    நிறுவிய நாளை நினைவுகூர்கின்றோம்.
  7. புதிய பேரரசரின் இத்திருப் பந்தியில்
    புதிய ஏற்பாட்டின் புதுத்தனிப் பாஸ்கா
    பழைய பாஸ்காவை முடிவுறச் செய்யும்.
  8. புதுமை பழமையைப் போக்குதல் காணீர்,
    உண்மை நிழலை ஓட்டுதல் காணீர்,
    ஒளியோ இரவை ஒழித்தல் காணீர்.
  9. திருவிருந்ததனில் நிறைவேற்றியதைத்
    தம் நினைவாகச் சீடரும் செய்யக்
    கட்டளை தந்தார் கிறிஸ்து பெருமான்.
  10. திருக் கட்டளையால் அறிவுரை பெற்று
    அப்பமும் இரசமும் மீட்புக்குரிய
    பலிப் பொருளாக அர்ச்சிக்கின்றோம்.
  11. அப்பம் மாறி அவர் ஊன் ஆவதும்,
    இரசமது மாறி இரத்தமாவதும்
    கிறிஸ்துவர்க் கருளிய உண்மையாமே.
  12. புலனையும் அறிவையும் முற்றும் கடந்து,
    இயற்கை முறைமைக் கப்பால்,
    உள்ளத்தை உறுதியோ டேற்கும் உயிர்விசு வாசம்.
  13. அப்பமும் இரசமும் குணங்களில் வேறாய்
    அவற்றின் தோற்றம் மட்டுமே யிருக்க
    அற்புத உட்பொருள் மறைவாய் உள்ளதே.
  14. ஊனே உணவு, இரத்தமே பானம்
    இருவித குணங்கள் ஒவ்வொன் றுள்ளும்
    கிறிஸ்து முழுவதும் உண்டெனக் கொள்வீர்.
  15. உண்பவர் அவரைப் பிய்ப்பதுமில்லை.
    உடைப்பதுமில்லை, பிரிப்பதுமில்லை.
    அவரை முழுதாய் உண்கின் றனரே.
  16. உண்பவர் ஒருவரோ, ஆயிரம் பேரோ,
    ஒருவர் உண்பதையே அனைவரும் உண்பர்;
    உண்பதால் என்றுமே தீர்வதுமில்லை.
  17. நல்லவர் உண்பர், தீயரும் உண்பர்
    அதனால் அவர் பெறும் பயன் வெவ்வேறாம்
    முன்னவர் வாழ்வார், பின்னவர் அழிவார்.
  18. நல்லோர் வாழ்வார், தீயோர் அழிவார்:
    உணவொன்றாயினும் எத்துணை வேறாம்
    பயன்விளைத் திடுமெனப் பகுத்துணர் வாயே.
  19. அப்ப மதனைப் பிட்ட பின்னரும்
    முழுமையில் எதுவோ அதுவே பகுதியில்
    உளதாம், அறிந்திடு, ஐயமே வேண்டா.
  20. உட்பொருள் பிளவு படுவதே யில்லை;
    குணத்தில் மட்டும் பிடப்படுமே
    அவரது நிலையும் உருவும் குறையா.
  21. வானவர் உணவிதோ வழிநடப் போர்க்கும்
    உணவா யிற்றே; மக்களின் உணவை
    நாய்கட் கெறிதல் நலமா காதே.
  22. ஈசாக் பலியிலும் பாஸ்கா மறியிலும்
    நம் முன்னோர்க்குத் தந்த மன்னாவிலும்
    இந்தப் பலியின் முன்குறி காண்பீர்.
  23. நல்ல ஆயனே, உண்மை உணவே,
    யேசுவே, எம்மேல் இரங்கிடு வீரே,
    எமக்குநல் அமுதே ஊட்டிடுவீரே.
  24. நும்திரு மந்தை எம்மைக் காத்து,
    நித்திய வாழ்வினர் வாழும் நாட்டில்
    நலன்கள் அனைத்தும் காணச் செய்வீர்.
  25. அனைத்தும் அறிவோய், அனைத்தும் வல்லோய்,
    மாந்தர்க் கிங்கு உணவினைத் தருவோய்,
    அங்கும் பந்தியில் அமரச் செய்வாய்.
  26. அமர்ந்து நும்முடன் பங்கினைக் கொள்ளவும்,
    வான்திருக் கூட்டத்தின் நட்பினராகவும், அருள்வீர்,
    ஆமென், அல்லேலூயா.

நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

யோவா 6: 51-52

அல்லேலூயா, அல்லேலூயா! விண்ணகத்திலிருந்து இறங்கி வந்த வாழ்வு தரும் உணவு நானே. இந்த உணவை எவராவது உண்டால் அவர் என்றுமே வாழ்வார், என்கிறார் ஆண்டவர். அல்லேலூயா.

நற்செய்தி வாசகம்

இது எனது உடல்; இது எனது உடன்படிக்கையின் இரத்தம்.

மாற்கு எழுதிய தூய நற்செய்தியிலிருந்து வாசகம் 14: 12-16, 22-26

புளிப்பற்ற அப்ப விழாவின் முதல் நாள் வந்தது. பாஸ்கா ஆட்டுக்குட்டியைப் பலியிடும் அந்நாளிலே இயேசுவின் சீடர், “நீர் பாஸ்கா விருந்துண்ண நாங்கள் எங்கே சென்று ஏற்பாடு செய்ய வேண்டும் என விரும்புகிறீர்?” என்று கேட்டார்கள்.

அவர் பின்வருமாறு கூறி, தம் சீடருள் இருவரை அனுப்பினார்; “நீங்கள் புறப்பட்டு நகருக்குள் செல்லுங்கள். மண்குடத்தில் தண்ணீர் சுமந்துகொண்டு ஓர் ஆள் உங்களுக்கு எதிரே வருவார். அவர் பின்னே செல்லுங்கள். அவர் எந்த வீட்டுக்குச் செல்கிறாரோ, அந்த வீட்டின் உரிமையாளரிடம், “‘நான் என் சீடர்களோடு பாஸ்கா விருந்து உண்பதற்கான என் அறை எங்கே?’ என்று போதகர் கேட்கச் சொன்னார்” எனக் கூறுங்கள். அவர் மேல்மாடியில் ஒரு பெரிய அறையைக் காட்டுவார். அது தேவையான வசதிகளோடு தயார் நிலையில் இருக்கும். அங்கே நமக்கு ஏற்பாடு செய்யுங்கள்.” சீடர்கள் சென்று, நகரை அடைந்து, தங்களுக்கு அவர் சொல்லியவாறே அனைத்தையும் கண்டு பாஸ்கா விருந்துக்கு ஏற்பாடு செய்தார்கள்.

அவர்கள் உண்டுகொண்டிருந்தபொழுது அவர் அப்பத்தை எடுத்து, கடவுளைப் போற்றி அதைப் பிட்டு, அவர்களுக்குக் கொடுத்து, “இதைப் பெற்றுக்கொள்ளுங்கள்; இது எனது உடல்” என்றார். பின்பு அவர் கிண்ணத்தை எடுத்துக் கடவுளுக்கு நன்றி செலுத்தி அவர்களுக்குக் கொடுத்தார். அனைவரும் அதிலிருந்து பருகினர். அப்பொழுது அவர் அவர்களிடம், “இது எனது உடன்படிக்கையின் இரத்தம்; பலருக்காகச் சிந்தப்படும் இரத்தம். இனிமேல் இறையாட்சி வரும் அந்நாளில்தான் நான் திராட்சைப்பழ இரசத்தைக் குடிப்பேன்; அதுவரை ஒருபோதும் குடிக்க மாட்டேன் என உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன்” என்றார்.

அவர்கள் புகழ்ப்பாடல் பாடிவிட்டு ஒலிவமலைக்குச் சென்றார்கள்.

ஆண்டவரின் அருள்வாக்கு.

ஜூன்-2024 ஜூலை ►
ஞா 30 2 9 16 23
தி 3 10 17 24
செ 4 11 18 25
பு 5 12 19 26
வி 6 13 20 27
வெ 7 14 21 28
1 8 15 22 29
Archive 2024 2025
Pradeep Augustine
Pradeep Augustinehttps://bible.catholicgallery.org/
Pradeep Augustine is the founder of Catholic Gallery. He is a passionate Writer, An Artist, a computer geek and a part-time Blogger who loves to write a lot of contents on Catholicism in his free time. He is the founder of the Technical Blog www.GetCoolTricks.com, where he shares a lot of technical Contents. Stay connected with him on his social profiles.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!
Access Catholic Videos
Subscribe to our YouTube channel to access Mass Readings and Prayers as videos.
No Thanks