Home » திருப்பலி வாசகங்கள் – ஜூன் 3, 2023

திருப்பலி வாசகங்கள் – ஜூன் 3, 2023

பொதுக்காலம் 8ஆம் வாரம் – சனி

முதல் வாசகம்

எனக்கு ஞானம் புகட்டுகிறவர்களுக்கு நான் மாட்சி அளிப்பேன்.

சீராக்கின் ஞான நூலிலிருந்து வாசகம் 51: 12-20b

மன்னராகிய ஆண்டவரே, உமக்கு நன்றி கூறுவேன்; உம்மைப் புகழ்வேன்; உம்முடைய பெயரைப் போற்றுவேன்.

நான் இளைஞனாய் இருந்தபோது, பயணம் மேற்கொள்ளுமுன் என்னுடைய வேண்டுதலில் வெளிப்படையாய் ஞானத்தைத் தேடினேன். கோவில் முன் அதற்காக மன்றாடினேன்; இறுதிவரை அதைத் தேடிக் கொண்டேயிருப்பேன். திராட்சை மலரும் காலத்திலிருந்து கனியும் காலம் வரை என் உள்ளம் ஞானத்தில் இன்புற்றிருந்தது.

என் காலடிகள் நேரிய வழியில் சென்றன. என் இளமையிலிருந்தே ஞானத்தைப் பின்தொடர்ந்தேன். சிறிது நேரமே செவிசாய்த்து அதைப் பெற்றுக் கொண்டேன்; மிகுந்த நற்பயிற்சியை எனக்கெனக் கண்டடைந்தேன். ஞானத்தில் நான் வளர்ச்சி அடைந்தேன்.

எனக்கு ஞானம் புகட்டுகிறவர்களுக்கு நான் மாட்சி அளிப்பேன். ஞானத்தைக் கடைப்பிடிக்க முடிவு செய்தேன்; நன்மை மீது பேரார்வம் கொண்டேன்; நான் ஒருபோதும் வெட்கமுறேன்.

நான் ஞானத்தை அடையப் போராடினேன்; திருச்சட்டத்தைக் கடைப்பிடிப்பதில் கண்டிப்புடன் இருந்தேன்; உயர் வானத்தை நோக்கி என் கைகளை உயர்த்தினேன்; ஞானத்தை நான் இதுவரை அறியாதிருந்தது பற்றிப் புலம்பினேன்.

அதன்பால் என் உள்ளத்தைச் செலுத்தினேன்; தூய்மையில் அதைக் கண்டுகொண்டேன்.

ஆண்டவரின் அருள்வாக்கு.

பதிலுரைப் பாடல்

திபா 19: 7. 8. 9. 10 (பல்லவி: 8a)

பல்லவி: ஆண்டவரின் நியமங்கள் சரியானவை; இதயத்தை மகிழ்விப்பவை.

7ஆண்டவரின் திருச்சட்டம் நிறைவானது; அது புத்துயிர் அளிக்கின்றது. ஆண்டவரின் ஒழுங்குமுறை நம்பத்தக்கது; எளியவருக்கு அது ஞானம் அளிக்கின்றது. – பல்லவி

8ஆண்டவரின் நியமங்கள் சரியானவை; அவை இதயத்தை மகிழ்விக்கின்றன. ஆண்டவரின் கட்டளைகள் ஒளிமயமானவை; அவை கண்களை ஒளிர்விக்கின்றன. – பல்லவி

9ஆண்டவரைப் பற்றிய அச்சம் தூயது; அது எந்நாளும் நிலைத்திருக்கும். ஆண்டவரின் நீதி நெறிகள் உண்மையானவை; அவை முற்றிலும் நீதியானவை. – பல்லவி

10பொன்னினும், பசும் பொன்னினும் மேலாக விலைமிக்கவை; தேனினும், தேனைடையினின்று சிந்தும் தெளிதேனினும் இனிமையானவை. – பல்லவி

நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

கொலோ 3: 16a, 17c

அல்லேலூயா, அல்லேலூயா! கிறிஸ்துவைப் பற்றிய நற்செய்தி உங்களுக்குள் நிறைவாகக் குடிகொள்வதாக! அவர் வழியாய்த் தந்தையாம் கடவுளுக்கு நன்றி செலுத்துங்கள். அல்லேலூயா.

நற்செய்தி வாசகம்

எந்த அதிகாரத்தால் நீர் இவற்றைச் செய்கிறீர்?

மாற்கு எழுதிய தூய நற்செய்தியிலிருந்து வாசகம் 11: 27-33

அக்காலத்தில்

இயேசுவும் அவருடைய சீடர்களும் மீண்டும் எருசலேமுக்கு வந்தார்கள். இயேசு கோவிலில் நடந்துகொண்டிருந்தபோது தலைமைக் குருக்கள், மறைநூல் அறிஞர்கள், மூப்பர்கள் ஆகியோர் அவரிடம் வந்து, “எந்த அதிகாரத்தால் நீர் இவற்றைச் செய்கிறீர்? இவற்றைச் செய்ய உமக்கு அதிகாரம் கொடுத்தவர் யார்?” என்று கேட்டனர். இயேசு அவர்களுக்கு மறுமொழியாக, “நானும் உங்களிடம் ஒரு கேள்வி கேட்கிறேன்; நீங்கள் மறுமொழி கூறுங்கள். அப்போது எந்த அதிகாரத்தால் இவற்றைச் செய்கிறேன் என நான் உங்களுக்குச் சொல்வேன். திருமுழுக்கு அளிக்கும் அதிகாரம் யோவானுக்கு விண்ணகத்திலிருந்து வந்ததா? அல்லது மனிதரிடமிருந்து வந்ததா? எனக்குப் பதில் சொல்லுங்கள்” என்றார். அவர்கள், “ ‘விண்ணகத்திலிருந்து வந்தது’ என்போமானால், ‘பின் ஏன் அவரை நம்பவில்லை’ எனக் கேட்பார். எனவே ‘மனிதரிடமிருந்து வந்தது’ என்போமா?” என்று தங்களிடையே பேசிக்கொண்டிருந்தார்கள். ஆனால் மக்கள் அனைவரும் யோவானை ஓர் இறைவாக்கினராகக் கருதியதால் அவர்கள் அவர்களுக்கு அஞ்சினார்கள். எனவே, அவர்கள் இயேசுவிடம், “எங்களுக்குத் தெரியாது” என்று பதிலுரைத்தார்கள். இயேசுவும் அவர்களிடம், “எந்த அதிகாரத்தால் இவற்றைச் செய்கிறேன் என்று நானும் உங்களுக்குக் கூறமாட்டேன்” என்றார்.

ஆண்டவரின் அருள்வாக்கு.

ஜூன்-2023 ஜூலை ►
ஞா 4 11 18 25
தி 5 12 19 26
செ 6 13 20 27
பு 7 14 21 28
வி 1 8 15 22 29
வெ 2 9 16 23 30
3 10 17 24
Archive 2023 2024
Pradeep Augustine Avatar

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Stay Connected

Recently added Bibles

Download our App

Get our official Catholic Gallery app for daily Mass readings, prayers & more

Your Faith. Your Way.
Download the Catholic Gallery app for offline Mass readings, daily prayers, and audio Bible — all in one place.
Available on:
No Thanks