Home » எண்ணிக்கை அதிகாரம் – 3 – திருவிவிலியம்

எண்ணிக்கை அதிகாரம் – 3 – திருவிவிலியம்

எண்ணிக்கை அதிகாரங்கள் (Tamil Bible: Ecumenical Tamil Translation – ETB)

Click the play button to listen or click the Download button to save a copy.

ஆரோனின் புதல்வர்

1ஆண்டவர் சீனாய் மலையில் மோசேயுடன் பேசிய காலத்தில் ஆரோன், மோசே ஆகியோரின் வழிமரபினர் இவர்களே;

2ஆரோனின் புதல்வர் பெயர்கள் இவையே; தலைமகன் நாதாபு, அபிகூ, எலயாசர், இத்தாமர்.

3இவை குருத்துவப் பணிக்கென அருள்பொழிவு பெற்றுத் திருநிலைப்படுத்தப்பட்ட குரு ஆரோனின் புதல்வர் பெயர்கள்;

4ஆனால், நாதாபும் அபிகூவும் சீனாய்ப் பாலைநிலத்தில் ஆண்டவர் திருமுன் வேற்று நெருப்பைக் கொண்டு வந்ததால் ஆண்டவர் முன்னிலையிலேயே கொல்லப்பட்டனர்; அவர்களுக்குப் பிள்ளைகள் இல்லை. எனவே, எலயாசரும் இத்தாமரும் தங்கள் தந்தை ஆரோன் முன்னிலையில் குருக்களாகப் பணியாற்றினர்.

குருவுக்குப் பணிவிடை செய்ய லேவியர் ஏற்படுத்தப்படல்

5மேலும், ஆண்டவர் மோசேயிடம் கூறியது:

6லேவிக் குலத்தை அழைத்து வந்து குரு ஆரோன் முன் அவர்களை நிறுத்து; அவர்கள் அவனுக்குப் பணிவிடை செய்யட்டும்.

7திருஉறைவிடத்தில் அவர்கள் பணிசெய்யும்போது, சந்திப்புக் கூடாரத்தின் முன் அவனுக்காகவும் அனைத்து மக்கள் கூட்டமைப்புக்காகவும் தங்களுக்குரிய பொறுப்பை நிறைவேற்றுவர்.

8சந்திப்புக் கூடாரத்தின் அனைத்துப் பணிப் பொருட்களுக்கும் பொறுப்பு அவர்களே; திருஉறைவிடத்தில் அவர்கள் பணி செய்கையில் இஸ்ரயேல் மக்களுக்கானத் தங்கள் பொறுப்பை நிறைவேற்றுவர்.

9லேவியரை ஆரோனுக்கும் அவன் புதல்வருக்கும் ஒப்படைத்துவிடு; இஸ்ரயேல் மக்களுள் அவர்கள் முற்றிலும் அவனுக்குக் கொடுக்கப்பட்டடிருக்கிறார்கள்.

10நீ ஆரோனையும் அவன் புதல்வரையும் அவர்கள் குருத்துவப் பொறுப்புகளை நிறைவேற்றுமாறு நியமனம் செய். ஆனால், வேறு எவனும் நெருங்கி வந்தால் அவன் கொல்லப்படுவான்.

11மீண்டும் ஆண்டவர் மோசேயிடம் கூறியது:

12இதோ! நான் இஸ்ரயேல் மக்களிலிருந்து லேவியரைப் பிரித்தெடுத்துள்ளேன்; இஸ்ரயேல் மக்களில் கருப்பையைத் திறக்கும் தலைப்பேறனைத்திற்கும் இவர்கள் ஈடாக இருப்பார்கள். லேவியர் எனக்கே உரியவர்.

13ஏனெனில், எல்லாத் தலைப்பேறும் என்னுடையது. எகிப்து நாட்டில் தலைப் பேறனைத்தையும் நான் சாகடித்த நாளில் இஸ்ரயேலின் தலைப்பேறனைத்தையும் மனிதரையும் விலங்கையும், எனக்கெனப் புனிதப்படுத்தினேன்; அவர்கள் எனக்கே உரியவர்கள்; நானே ஆண்டவர்.

லேவியரைக் கணக்கெடுத்தல்

14பின்னர், சீனாய்ப் பாலைநிலத்தில் ஆண்டவர் மோசேயிடம் கூறியது:

15மூதாதையர் வீடுகள், குடும்பங்கள் வாரியாக லேவியின் புதல்வரைக் கணக்கெடு; ஒரு மாதமும் அதற்கு மேலுமான ஒவ்வோர் ஆண்பிள்ளையையும் நீ எண்ண வேண்டும்.

16ஆண்டவர் கட்டளையிட்டுக் கூறிய அவர் வார்த்தையின்படி மோசே அவர்களை எண்ணினார்.

17பெயர் வாரியாக லேவியின் புதல்வர் இவர்களே; கேர்சோன், கோகாத்து, மொராரி ஆகியோர்.

18குடும்ப வாரியாகக் கேர்சேன் புதல்வர் பெயர்களாவன; லிப்னி, சிமயி.

19குடும்ப வாரியாக கோகாத்தின் புதல்வர்; அம்ராம், இட்சகார், எபிரோன், உசியேல் ஆகியோர்.

20குடும்ப வாரியாக மெராரியின் புதல்வர்; மக்லி, மூசி ஆகியோர். மூதாதையர் வீடு வாரியாக லேவியர் குடும்பங்கள் இவைகளே.

21கேர்சோனிலிருந்து லிப்னியர், சிமயியர் ஆகிய குடும்பங்கள் தோன்றின; இவை கேர்சோனியக் குடும்பங்கள்.

22எண்ணிக்கைப்படி ஒரு மாதமும் அதற்கு மேலுமான ஆண்கள் அனைவரின் தொகை ஏழாயிரத்து ஐந்நூறு.

23திருஉறைவிடத்துக்குப் பின்னால் மேற்கே பாளையமிறங்க வேண்டியவர்கள் கேர்சோனியக் குடும்பங்கள்.

24இவர்களோடிருக்கும் எல்யாசாபு கேர்சோனிய மூதாதையர் வீட்டுக் குடும்பங்களின் தலைவன், இவன் இலாவேலின் மகன்.

25சந்திப்புக் கூடாரத்தில் கேர்சோன் புதல்வரின் பொறுப்பில் உள்ளவை; திருஉறைவிடம், கூடாரத்துடன் அதன் அடைப்பு, சந்திப்புக் கூடாரத்தின் வாயில் திரை,

26தளத்திலுள்ள தொங்கு திரைகள், திருஉறைவிடத்தையும் பலிபீடத்தையும் சுற்றியுள்ள வாயில்திரை, அதன் கயிறுகள் ஆகியவையும் அவை தொடர்பான அனைத்துப் பணிகளுமே.

27கோகாத்திலிருந்து தோன்றியவை அம்ராமியர் குடும்பம், எபிரோனியர் குடும்பம், உசியேலியர் குடும்பம் ஆகியவை. இவை கோகாத்தியர் குடும்பங்கள்.

28எண்ணிக்கைப்படி ஒரு மாதமும் அதற்கு மேலுமான ஆண்கள் எண்ணாயிரத்து அறுநூறு பேர்; இவர்கள் தூயகத்திற்குரிய பொறுப்புகளை நிறைவேற்றி வந்தனர்.

29திருஉறைவிடத்துக்குத் தெற்கே பாளையமிறங்க வேண்டியவர்கள் கோகாத்துப் புதல்வர் குடும்பங்கள்.

30இவர்களோடிருக்கும் எலிட்சாபான் கோகாத்தியக் குடும்பங்களின் மூதாதையர் வீட்டுத் தலைவன்; இவன் உசியேலின் மகன்.

31அவர்களின் பொறுப்பில் உள்ளவை பேழை, மேசை, விளக்குத் தண்டு, பலிபீடங்கள், குரு தூயகப் பணிகளுக்குப் பயன்படுத்தும் பாத்திரங்கள், திரை ஆகியவையும் அவை தொடர்பான அனைத்துப் பணிகளுமே.

32மேலும், குரு ஆரோன் புதல்வன் எலயாசர் லேவியர் தலைவர்களுக்கெல்லாம் தலைவன்; தூயகத்துக்குப் பொறுப்பானவர்களை மேற்பார்வை செய்ய வேண்டியவன் இவனே.

33மெராரியிடமிருந்து தோன்றியவை மக்லியர் குடும்பமும் மூசியர் குடும்பமுமாகும். இவை மெராரியின் குடும்பங்கள்.

34எண்ணிக்கைப்படி ஒரு மாதமும் அதற்கு மேலுமான ஆண்கள் அனைவரின் தொகை ஆறாயிரத்து இருநூறு.

35மொராரி குடும்பங்களின் மூதாதையர் வீட்டுத் தலைவன் சூரியேல்; இவன் அபிகயிலின் மகன்; இவர்கள் திருஉறைவிடத்துக்கு வடக்கே பாளையமிறங்க வேண்டியவர்கள்.

36மெராரி புதல்வரின் பொறுப்பில் ஒப்புவிக்கப்பட்டவை; திருஉறைவிடத்தின் சட்டங்கள், குறுக்குச் சட்டங்கள், தூண்கள், பாதங்கள், அனைத்துத் துணைக்கலன்கள் ஆகியவையும் அவை தொடர்பான அனைத்துப் பணிகளுமே.

37சுற்றுத்தளத் தூண்கள், அவற்றின் பாதங்கள், முளைகள், கயிறுகள் ஆகியவையும் அவர்கள் பொறுப்பே.

38திருஉறைவிடத்தின் கிழக்கே சந்திப்புக் கூடாரத்தின் முன் கதிரவன் உதிக்கும் திசையில் பாளையமிறங்க வேண்டியோர் மோசே, ஆரோன், அவன் புதல்வர், திருஉறைவிடத்தில் இஸ்ரயேல் மக்களுக்காக நிறைவேற்றப்பட வேண்டிய அனைத்திற்கும் பொறுப்பும் உரிமையும் இவர்களுக்கே உண்டு. வேறு எவனும் நெருங்கி வந்தால் அவன் கொல்லப்படுவான்.

39ஆண்டவர் வார்த்தைப்படி மோசேயும் ஆரோனும் லேவியரைக் குடும்பங்கள் வாரியாக எண்ணியபோது அவர்களில் ஒரு மாதமும் அதற்கு மேலுமான ஆண்பிள்ளைகள் அனைவரின் தொகை இருபத்தீராயிரம்.

தலைப்புதல்வரின் இடத்தை லேவியர் எடுத்துக்கொள்ளல்

40மேலும், ஆண்டவர் மோசேயிடம் கூறியது: இஸ்ரயேல் மக்களில் ஒரு மாதமும் அதற்கு மேலுமான தலைப்பேறான ஆண்கள் அனைவரையும் அவர்கள் பெயர்கள் வாரியாகக் கணக்கெடு.

41இஸ்ரயேல் மக்களுள் தலைப்பேறான ஆண்கள் அனைவருக்கும் பதிலாக லேவியரையும் இஸ்ரயேல் மக்களுடைய கால்நடைகளின் தலையீற்றுகள் அனைத்துக்கும் பதிலாக லேவியரின் கால்நடைகளையும் எனக்கென்று பிரித்தெடு; நானே ஆண்டவர்.

42ஆண்டவர் கட்டளையிட்டபடியே மோசே இஸ்ரயேல் மக்களில் தலைப்பேறுகள் அனைத்தையும் எண்ணினார்.

43பெயர்களின் எண்ணப்படி ஒரு மாதமும் அதற்கு மேலுமான தலைப்பேறான ஆண்கள் அனைவரின் தொகை இருபத்தீராயிரத்து இருநூற்று எழுபத்து மூன்று.

44பின் ஆண்டவர் மோசேயிடம் கூறியது:

45இஸ்ரயேல் மக்களுள் எல்லாத் தலைப்பேறுகளுக்கும் பதிலாக லேவியரையும் அவர்கள் கால்நடைகளுக்குப் பதிலாக லேவியரின் கால்நடைகளையும் பிரித்தெடு; லேவியர் எனக்கே உரியவர்; நானே ஆண்டவர்.

46இஸ்ரயேல் மக்களின் தலைப்பேறுகளில் எண்ணிக்கைக்கு மேலாக, மீட்கப்பட வேண்டியவர் இருநூற்று எழுபத்து மூன்றுபேர்.

47இருபது கேரா மதிப்புடைய தூயகத்து செக்கேலில் தலைக்கு ஐந்து செக்கேல் வீதம் வாங்கிக்கொள்.

48எண்ணிக்கைக்கு மேலாக இருப்போர் மீட்கப்படுவதற்காக வரும் இப்பணத்தை நீ ஆரோனுக்கும் அவன் புதல்வருக்கும் கொடுக்க வேண்டும்.

49லேவியரால் மீட்கப்பட்ட எண்ணிக்கைக்கு மேலாயிருந்தோரிடமிருந்து வந்த மீட்புப் பணத்தை மோசே எடுத்துக் கொண்டார்.

50இஸ்ரயேல் மக்களுள் தலைப்பேறாயிருந்தோரிடமிருந்து அவர் எடுத்த பணம் தூயகத்து செக்கேல் கணக்குப்படி ஆயிரத்து முந்நூற்று அறுபத்தைந்து செக்கேல்.

51ஆண்டவர் மோசேக்குக் கட்டளையிட்டுக் கூறியபடியே மோசே மீட்புப் பணத்தை ஆரோனுக்கும் அவர் புதல்வருக்கும் கொடுத்தார்.


3:2 எண் 26:60.
3:4 லேவி 10:1-2; எண் 26:61.
3:13 விப 13:2.
Pradeep Augustine Avatar

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Stay Connected

Recently added Bibles

Download our App

Get our official Catholic Gallery app for daily Mass readings, prayers & more

Your Faith. Your Way.
Download the Catholic Gallery app for offline Mass readings, daily prayers, and audio Bible — all in one place.
Available on:
No Thanks