back to top
HomeTamilலூக்கா நற்செய்தி அதிகாரம் - 20 - திருவிவிலியம்

லூக்கா நற்செய்தி அதிகாரம் – 20 – திருவிவிலியம்

லூக்கா நற்செய்தி அதிகாரங்கள் (Tamil Bible: Ecumenical Tamil Translation – ETB)

Click the play button to listen or click the Download button to save a copy.
Audio Bible by Rev. Fr. Arulselvam Rayappan. Know more about him here

இயேசுவின் அதிகாரத்திற்குச் சவால்
(மத் 21:23-27; மாற் 11:27-33)

1ஒருநாள் இயேசு கோவிலில் மக்களுக்குக் கற்பித்துக்கொண்டிருந்தார். அவர் நற்செய்தியை அறிவித்துக்கொண்டு இருந்தபோது தலைமைக் குருக்களும் மறைநூல் அறிஞர்களும் மூப்பர்களும் அங்கு வந்தார்கள்.

2அவர்கள் அவரை நோக்கி, “எந்த அதிகாரத்தால் நீர் இவற்றைச் செய்கிறீர்? இந்த அதிகாரத்தை உமக்குக் கொடுத்தவர் யார்? எங்களுக்குச் சொல்லும்” என்றார்கள்.

3அவர் அவர்களுக்கு மறுமொழியாக,

“நானும் உங்களிடம் ஒரு கேள்வி கேட்கிறேன்; நீங்கள் மறுமொழி கூறுங்கள்.

4

திருமுழுக்குக் கொடுக்கும் அதிகாரம் யோவானுக்கு விண்ணகத்திலிருந்து வந்ததா, அல்லது மனிதரிடமிருந்து வந்ததா?”

என்று கேட்டார்.

5அவர்கள் ‘விண்ணகத்திலிருந்து வந்தது’ என்போமானால், ‘ஏன் நீங்கள் அவரை நம்பவில்லை?’ எனக் கேட்பார்;

6‘மனிதரிடமிருந்து வந்தது’ என்போமானால் மக்கள் அனைவரும் நம்மீது கல் எறிவர்” என்று தங்களிடையே சொல்லிக் கொண்டார்கள். ஏனெனில், மக்கள் யோவானை இறைவாக்கினர் என்று உறுதியாய் நம்பியிருந்தனர்.

7எனவே அவர்கள், “எங்கிருந்து வந்தது எனத் தெரியாது” என்று பதிலுரைத்தார்கள்.

8இயேசுவும் அவர்களிடம்,

“எந்த அதிகாரத்தால் இவற்றைச் செய்கிறேன் என நானும் உங்களுக்குக் கூறமாட்டேன்”

என்றார்.

கொடிய குத்தகைக்காரர் உவமை
(மத் 21:33-46; மாற் 12:1-12)

9பின்பு இயேசு மக்களை நோக்கி இந்த உவமையைச் சொல்லத் தொடங்கினார்:

“ஒருவர் ஒரு திராட்சைத் தோட்டம் போட்டுத் தோட்டத் தொழிலாளர்களிடம் அதைக் குத்தகைக்கு விட்டு விட்டு நீண்ட காலம் நெடும் பயணம் மேற்கொண்டார்.

10பருவகாலம் வந்ததும் ஒரு பணியாளரை அவர் அனுப்பினார். ஆனால், தோட்டத் தொழிலாளர்கள் அவரை நையப்புடைத்து வெறுங்கையராய் அனுப்பினார்கள்.

11மீண்டும் அவர் வேறு ஒரு பணியாளரை அனுப்பி வைத்தார். அவர்கள் அவரையும் நையப்புடைத்து அவமதித்து வெறுங்கையராய் அனுப்பினார்கள்.

12மூன்றாம் முறையாக அவர் ஒருவரை அனுப்பினார். அவரையும் அவர்கள் காயப்படுத்தி வெளியே தள்ளினர்.

13பின்பு திராட்சைத் தோட்ட உரிமையாளர், ‘நான் என்ன செய்வேன்? என் அன்பு மகனை அனுப்புவேன். ஒருவேளை அவனை அவர்கள் மதிப்பார்கள்’ என்று சொல்லிக்கொண்டார்.

14தோட்டத் தொழிலாளர்கள் அவருடைய மகனைக் கண்டதும், ‘இவன்தான் சொத்துக்கு உரியவன்; நாம் இவனைக் கொன்றுபோடுவோம். அப்போது சொத்து நம்முடையதாகும்’ என்று ஒருவரோடு ஒருவர் பேசிக் கொண்டார்கள்.

15எனவே, அவர்கள் அவரைத் திராட்சைத் தோட்டத்திற்கு வெளியே தள்ளிக் கொன்று போட்டார்கள். அப்படியானால் திராட்சைத் தோட்ட உரிமையாளர் அவர்களை என்ன செய்வார்?

16அவர் வந்து அந்தத் தொழிலாளர்களை ஒழித்து விட்டு, திராட்சைத் தோட்டத்தை வேறு ஆள்களிடம் குத்தகைக்கு விடுவார்.”

அப்போது அதைக் கேட்டுக்கொண்டிருந்தவர்கள், “ஐயோ! அப்படி நடக்கக் கூடாது” என்றார்கள்.

17ஆனால், இயேசு அவர்களைக் கூர்ந்து நோக்கி,

“‘கட்டுவோர் புறக்கணித்த கல்லே கட்டடத்துக்கு மூலைக்கல் ஆயிற்று’

என்று மறைநூலில் எழுதியிருப்பதன் பொருள் என்ன?

18

அந்தக் கல்லின் மேல் விழுகிற எவரும் நொறுங்கிப் போவார்; அது யார்மேல் விழுமோ அவரும் நசுங்கிப்போவார்”

என்றார்.

19மறைநூல் அறிஞர்களும் தலைமைக் குருக்களும் தங்களைக் குறித்தே அவர் இந்த உவமையைச் சொன்னார் என்பதை உணர்ந்து கொண்டு, அந்நேரமே இயேசுவைப் பிடிக்க வழிதேடினார்கள்; ஆனால், மக்களுக்கு அஞ்சினார்கள்.

சீசருக்கு வரி செலுத்துதல்
(மத் 22:15-22; மாற் 12:13-17)

20ஆகவே, அவர்கள் இயேசுவைக் கூர்ந்து கவனித்துக்கொண்டே இருந்தார்கள்; நேர்மையாளர் போன்று நடித்து, அவரது பேச்சில் குற்றம் காண ஒற்றர்களை அனுப்பி வைத்தார்கள்; அவரை ஆளுநரின் ஆட்சி அதிகாரத்திற்கு ஒப்புவிப்பதே அவர்கள் நோக்கமாய் இருந்தது.

21ஒற்றர்கள் அவரிடம், “போதகரே, நீர் சொல்வதும் கற்பிப்பதும் சரியே. நீர் ஆள் பார்த்துச் செயல்படாதவர்; கடவுளின் நெறியை உண்மைக்கு ஏற்பக் கற்பிப்பவர் என்பது எங்களுக்குத் தெரியும்.

22சீசருக்கு நாம் கப்பம் கட்டுவது முறையா இல்லையா?” என்று கேட்டார்கள்;

23அவர்களுடைய சூழ்ச்சியை அவர் தெளிவாகப் புரிந்துகொண்டு அவர்களிடம்,

24

“ஒரு தெனாரியத்தை* எனக்குக் காட்டுங்கள்; இதில் பொறிக்கப்பட்டுள்ள உருவமும் எழுத்தும் யாருடையவை?”

என்று கேட்டார். அவர்கள், “சீசருடையவை” என்றார்கள்.

25அவர் அவர்களை நோக்கி,

“அப்படியானால், சீசருக்கு உரியவற்றைச் சீசருக்கும், கடவுளுக்கு உரியவற்றைக் கடவுளுக்கும் கொடுங்கள்”

என்று சொன்னார்.

26மக்கள் முன்னிலையில் இயேசுவின் பேச்சில் அவர்களால் குற்றம் காண இயலவில்லை; அவருடைய மறுமொழியைக் கண்டு அவர்கள் வியப்புற்றுப் பேசாதிருந்தார்கள்.

உயிர்த்தெழுதல் பற்றிய கேள்வி
(மத் 22:23-33; மாற் 12:18-27)

27உயிர்த்தெழுதலை மறுக்கும் சில சதுசேயர் இயேசுவை அணுகி,

28“போதகரே, மணமான ஒருவர் மகப்பேறின்றி இறந்துபோனால் அவர் மனைவியைக் கொழுந்தனே மனைவியாக ஏற்றுக் கொண்டு தம் சகோதரருக்கு வழிமரபு உருவாக்க வேண்டும் என்று மோசே எழுதி வைத்துள்ளார்.

29இங்குச் சகோதரர் எழுவர் இருந்தனர். மூத்தவர் ஒரு பெண்ணை மணந்து மகப்பேறின்றி இறந்தார்.

30இரண்டாம்,

31மூன்றாம், சகோதரர்களும் அவரை மணந்தனர். இவ்வாறே எழுவரும் மகப்பேறின்றி இறந்தனர்;

32கடைசியாக அப்பெண்ணும் இறந்தார்.

33அப்படியானால் உயிர்த்தெழும்போது அவர் அவர்களுள் யாருக்கு மனைவி ஆவார்? ஏனெனில், எழுவரும் அவரை மனைவியாகக் கொண்டிருந்தனரே?” என்று கேட்டனர்.

34அதற்கு இயேசு அவர்களிடம்,

“இக்கால வாழ்வில் மக்கள் திருமணம் செய்துகொள்கின்றனர்.

35ஆனால், வருங்கால வாழ்வைப் பெறத் தகுதி பெற்ற யாரும் இறந்து உயிர்த்தெழும்போது திருமணம் செய்து கொள்வதில்லை.

36இனி அவர்கள் சாகமுடியாது; அவர்கள் வானதூதரைப்போல் இருப்பார்கள். உயிர்த்தெழுந்த மக்களாய் இருப்பதால் அவர்கள் கடவுளின் மக்களே.

37இறந்தோர் உயிருடன் எழுப்பப்படுவதைப் பற்றி மோசே முட்புதர் பற்றிய பகுதியில் எடுத்துக் கூறியிருக்கிறாரே, அங்கு அவர் ஆண்டவரை,

‘ஆபிரகாமின் கடவுள், ஈசாக்கின் கடவுள், யாக்கோபின் கடவுள்’

என்று கூறியிருக்கிறார்.

38

அவர் இறந்தோரின் கடவுள் அல்ல; மாறாக, வாழ்வோரின் கடவுள். ஏனெனில், அவரைப் பொறுத்தமட்டில் அனைவரும் உயிருள்ளவர்களே”

என்றார்.

39மறைநூல் அறிஞருள் சிலர் அவரைப் பார்த்து, “போதகரே, நன்றாகச் சொன்னீர்” என்றனர்.

40அதன்பின் அவர்கள் அவரிடம் எதையும் கேட்கத் துணியவில்லை.

தாவீதின் மகன்பற்றிய விளக்கம்
(மத் 22:41-46; மாற் 12:35-37)

41அப்போது இயேசு அவர்களை நோக்கி,

“மெசியா தாவீதின் மகன் என்று கூறுவது எப்படி?

42-43ஏனென்றால் திருப்பாடல்கள் நூலில்,

‘ஆண்டவர், என் தலைவரிடம்,

“நான் உம் பகைவரை உமக்குக்கால் மணையாக்கும் வரை

நீர் என் வலப்பக்கம் வீற்றிரும்”

என்றுரைத்தார்’

எனத் தாவீதே கூறியுள்ளார் அல்லவா?

44

எனவே, தாவீது அவரைத் தலைவர் என அழைப்பதால் அவர் அவருக்கே மகனாய் இருப்பது எப்படி?”

என்று கேட்டார்.

மறைநூல் அறிஞரைக்குறித்து எச்சரிக்கை
(மத் 23:1-36; மாற் 12:38-40; லூக் 11:37-54)

45மக்கள் அனைவரும் கேட்டுக் கொண்டிருந்தபோது இயேசு தம் சீடர்களிடம்,

46“மறைநூல் அறிஞர்களைக் குறித்து எச்சரிக்கையாய் இருங்கள். ஏனென்றால், அவர்கள் தொங்கல் ஆடை அணிந்து நடமாடுவதை விரும்புகிறார்கள்; சந்தைவெளிகளில் மக்கள் தங்களுக்கு வணக்கம் செலுத்துவதை விரும்புகிறார்கள்; தொழுகைக்கூடங்களில் முதன்மையான இருக்கைகளையும் விருந்துகளில் முதன்மையான இடங்களையும் விரும்புகிறார்கள்;

47

கைம்பெண்களின் வீடுகளைப் பிடுங்கிக் கொள்கிறார்கள்; நீண்டநேரம் இறைவனிடம் வேண்டுவதுபோல நடிக்கிறார்கள். கடுந்தண்டனைத் தீர்ப்புக்கு ஆளாகவிருப்பவர்கள் அவர்களே”

என்றார்.


20:9 எசா 5:1.
20:17 திபா 118:22.
20:27 திப 23:8.
20:28 இச 25:5.
20:37 விப 3:6.
20:42-43 திபா 110:1.
20:46 லூக் 11:43.


20:24 ஒரு தெனாரியம் என்பது ஒரு தொழிலாளரின் ஒருநாள் கூலிக்கு இணையான உரோமை வெள்ளி நாணயம்.
Pradeep Augustine
Pradeep Augustinehttps://bible.catholicgallery.org/
Pradeep Augustine is the founder of Catholic Gallery. He is a passionate Writer, An Artist, a computer geek and a part-time Blogger who loves to write a lot of contents on Catholicism in his free time. He is the founder of the Technical Blog www.GetCoolTricks.com, where he shares a lot of technical Contents. Stay connected with him on his social profiles.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!
Access Catholic Videos
Subscribe to our YouTube channel to access Mass Readings and Prayers as videos.
No Thanks