Home » Tamil » சபை உரையாளர் அதிகாரம் – 12 – திருவிவிலியம்

சபை உரையாளர் அதிகாரம் – 12 – திருவிவிலியம்

சபை உரையாளர் அதிகாரங்கள் (Tamil Bible: Ecumenical Tamil Translation – ETB)
Click the play button to listen or click the Download button to save a copy.

1ஆகையால், உன்னைப் படைத்தவரை உன் இளமைப் பருவத்தில் மறவாதே. “வாழ்க்கை எனக்கு இன்பம் தரவில்லையே” என்று நீ சொல்லக்கூடிய துயர நாள்களும் ஆண்டுகளும் வருமுன் அவரை உள்ளத்திலே நினை.

2அதாவது, கதிரவன், பகலொளி, நிலா, விண்மீன்கள் ஆகியவை உனக்கு மங்கலாய்த் தெரியுமுன்னும், மழைக்குப்பின் மேகங்கள் இருண்டு வருவதுபோலத் தோன்றுமுன்னும்,

3வீட்டுக்காவலர்⒜ நடுக்கங்கொள்ள, வலியோர்⒝ தளர்வுறுமுன்னும், அரைப்போர்⒞ மிகச் சிலராகித் தம் வேலையை நிறுத்திக்கொள்ள, பலகணி வழியாகப் பார்ப்போர்⒟ ஒளி இழந்துபோகுமுன்னும்,

4தெருச்சந்தடி கேளாவண்ணம் கதவுகள்⒠ அடைத்துக்கொள்ள, சிட்டுக்குருவியின் கீச்சொலியும் உறக்கத்தைக் கலைக்க, இன்னிசைக் கருவி இசைக்கும் மகளிர்⒡ அனைவரும் ஓய்ந்துபோகுமுன்னும், உன்னைப் படைத்தவரை உள்ளத்தில் நினை.

5மேட்டைக் கண்டு அச்சங்கொண்டு தெருவில் நடப்பதை நினைத்துத் திகில் கொள்ளுமுன்னும், வாதுமை மரம் பூப்பூக்குமுன்னும்⒢, வெட்டுக்கிளியைப்போல நடை தட்டுத்தடுமாற, ஆசையெல்லாம் அற்றுப்போகுமுன்னும், உற்றார் வீதியில் அழுது புலம்ப நீ முடிவற்ற ஓய்வுக்குச் செல்லுமுன்னும், உன்னைப் படைத்தவரை உள்ளத்தில் நினை;

6வெள்ளிக் கயிறு அறுந்து, பொன் விளக்கு கீழே விழுந்து உடைவதற்கு முன்னும், குளத்தருகில் குடம் உடைந்து நொறுங்க, கிணற்றருகில் உருளை உடைந்து விழுமுன்னும்,

7மண்ணினின்று வந்த உடல் மண்ணுக்கே திரும்புமுன்னும், கடவுள் தந்த உயிர் அவரிடமே திரும்பு முன்னும் உன்னைப் படைத்தவரை உள்ளத்தில் நினை.

8வீண், முற்றிலும் வீண் என்கிறார் சபை உரையாளர்; எல்லாமே வீண்.

தொகுப்புரை

9சபை உரையாளர் ஞானமுள்ளவராயிருந்ததோடு தாம் அறிந்தவற்றைத் தொகுத்துத் தந்தார்.

10சபை உரையாளர் இனிய நடையில் எழுத முயன்றுள்ளார். உண்மையை ஒளிவு மறைவில்லாமல் எழுதிவைத்திருக்கிறார்.

11ஞானமுற்றவர்களின் சொற்கள் ஆயரின் கோல்போல் வழிநடத்தும். தொகுத்து வைத்த முதுமொழிகள் பசுமரத்தாணிபோல உள்ளத்தில் பதியும். அவை ஒரே ஆயரால் அளிக்கப்பட்டவை.

12பிள்ளாய்! மேலும் ஓர் எச்சரிக்கை; நூல்கள் பல எழுதுவதால் பயன் ஒன்றுமில்லை. மிகுதியான படிப்பு உடலுக்கு இளைப்பு.{ப்ப்}

13இவையனைத்திற்கும் முடிவுரையாக ஒன்று கூறுகிறேன்; கடவுளுக்கு அஞ்சி நட; அவருடைய கட்டளைகளுக்குக் கீழ்ப்படி. இதற்காகவே மனிதர் படைக்கப்பட்டனர்.

14நாம் செய்யும் ஒவ்வொரு செயலுக்கும், மறைவான செயலுக்குங்கூட, அது நல்லதோ தீயதோ எதுவாயினும், அனைத்திற்கும் கடவுளே தீர்ப்பு வழங்குவார்.


12:3-7 இப்பகுதி மனிதர் முதுமைப் பருவம் எய்தி, அவரது உடல் தளர்வுறுவதைக் குறிப்பதாக்க் கொள்ளப்படுகிறது: ⒜கைகள், ⒝கால்கள், ⒞பற்கள், ⒟கண்கள், ⒠காதுகள், ⒡குரல்வளை நரம்புகள், ⒢தலைமுடி.
Pradeep Augustine Avatar

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recently added Bibles

Download our App

Get our official Catholic Gallery app for daily Mass readings, prayers & more