back to top
HomeTamilஎபிரேயர் அதிகாரம் - 10 - திருவிவிலியம்

எபிரேயர் அதிகாரம் – 10 – திருவிவிலியம்

எபிரேயர் அதிகாரங்கள் (Tamil Bible: Ecumenical Tamil Translation – ETB)

Click the play button to listen or click the Download button to save a copy.
Audio Bible by Rev. Fr. Arulselvam Rayappan. Know more about him here

6. இயேசு கிறிஸ்துவின் பலியின் மேன்மை

1வரப்போகும் நலன்களின் உண்மை உருவைத் திருச்சட்டம் எடுத்துக்காட்டவில்லை; அது அவற்றின் நிழலாக மட்டுமே உள்ளது. எனவேதான், ஆண்டுதோறும் இடைவிடாமல் செலுத்தப்படும் அதே பலிகளால் வழிபட வருபவர்களை நிறைவுள்ளவர்களாக்க அதற்கு வலிமையில்லை.

2அவ்வாறு இருந்திருந்தால், பலி செலுத்துவது நின்றிருக்கும் அல்லவா? ஏனெனில், வழிபடுபவர்கள் ஒரே முறையில் தூய்மை அடைந்திருந்தால், பாவத்தைப்பற்றிய உணர்வே அவர்களிடம் இராதே!

3மாறாக, பாவங்கள் நீங்கவில்லை என்பதை அந்தப் பலிகள் ஆண்டுதோறும் நினைவுபடுத்திக்கொண்டேயிருக்கின்றன.

4ஆம், காளைகள், வெள்ளாட்டுக் கடாக்கள் இவற்றின் இரத்தம் பாவங்களைப் போக்க முடியாது.

5அதனால்தான் கிறிஸ்து உலகிற்கு வந்தபோது,

“பலியையும் காணிக்கையையும்

நீர் விரும்பவில்லை, ஆனால்

ஓர் உடலை எனக்கு அமைத்துத் தந்தீர்.

6எரிபலிகளும் பாவம் போக்கும்

பலிகளும் உமக்கு உகந்தவையல்ல.

7எனவே நான் கூறியது:

என் கடவுளே,

உமது திருவுளத்தை நிறைவேற்ற,

இதோ வருகின்றேன்.

என்னைக் குறித்துத் திருநூல் சுருளில்

எழுதப்பட்டுள்ளது”

என்கிறார்.

8திருச்சட்டப்படி செலுத்தப்பட்ட போதிலும்,

“நீர் பலிகளையும் காணிக்கைகளையும்

எரிபலிகளையும் பாவம்போக்கும்

பலிகளையும் விரும்பவில்லை;

இவை உமக்கு உகந்தவையல்ல”

என்று அவர் முதலில் கூறுகிறார்.

9பின்னர்,

“உமது திருவுளத்தை நிறைவேற்ற,

இதோ வருகின்றேன்”

என்கிறார். பின்னையதை நிலைக்கச் செய்ய முன்னையதை நீக்கிவிடுகிறார்.

10இந்தத் திருவுளத்தால்தான் இயேசு கிறிஸ்து ஒரே ஒரு முறை தம் உடலைப் பலியாகச் செலுத்தியதின் மூலம் நாம் தூயவராக்கப்பட்டிருக்கிறோம்.

11ஒவ்வொரு குருவும் நாள்தோறும் இறை ஊழியம் புரியும்போது மீண்டும் மீண்டும் அதே பலிகளைச் செலுத்தி வருகிறார். அவையோ பாவங்களை ஒருபோதும் போக்க இயலாதவை.

12ஆனால், இவர் ஒரே பலியைப் பாவங்களுக்காக என்றென்றைக்கும் எனச் செலுத்திவிட்டு, கடவுளின் வலப்பக்கத்தில் அமர்ந்துள்ளார்.

13அங்கே தம் பகைவர் தமக்குக் கால்மணை ஆக்கப்படும்வரை காத்திருக்கிறார்.

14தாம் தூயவராக்கியவர்களை ஒரே பலியினால் என்றென்றைக்கும் நிறைவுள்ளவராக்கினார்.

15-16இதுபற்றித் தூய ஆவியாரும்,

“அந்நாள்களுக்குப் பிறகு

அவர்களோடு நான் செய்யவிருக்கும்

உடன்படிக்கை இதுவே:

என் சட்டத்தை

அவர்கள் உள்ளத்தில் பதிப்பேன்;

அதை அவர்களது இதயத்தில்

எழுதி வைப்பேன்”

என்று நமக்குச் சான்று பகர்கிறார். இவ்வாறு சொன்ன பின்,

17“அவர்களது தீச்செயலையும்

அவர்களுடைய பாவங்களையும்

இனிமேல் நினைவுகூர மாட்டேன்”

என்றும் கூறுகிறார்.

18எனவே, பாவமன்னிப்பு கிடைத்தபின் பாவத்திற்குக் கழுவாயாகச் செலுத்தும் பலிக்கு இடமேயில்லை.

கடவுளிடம் நெருங்கி வருதல்

19-20சகோதர சகோதரிகளே, இயேசுவின் உடலைக் கோவிலின் திரைச்சீலைக்கு ஒப்பிடலாம். இத்திரைச்சீலை வழியாகத் திருத்தூயகத்துக்குள் நுழைய நமக்குத் துணிவு உண்டு. ஏனெனில், அவர் இரத்தம் சிந்தி நமக்கெனப் புதியதொரு வழியைத் திறந்து வைத்துள்ளார். இதுவே வாழ்வுக்கு அழைத்துச் செல்லும் வழி.

21மேலும், கடவுளுடைய இல்லத்தின்மீது அதிகாரம் பெற்ற பெரிய குரு ஒருவர் நமக்கு உண்டு.

22ஆதலால், தீய மனச் சான்றிலிருந்து விடுவிக்கப்பட்ட உள்ளமும் தூய நீரில் கழுவப்பட்ட உடலும் உடையவர்களாய், நேரிய உள்ளத்தோடும் மிகு உறுதியான நம்பிக்கையோடும் அவரை அணுகிச் செல்வோமாக.

23நமக்கு வாக்களித்தவர் நம்பிக்கைக்கு உரியவர். எனவே, நாம் எதிர்நோக்கியிருப்பதைப்பற்றித் தயக்கமின்றி அறிக்கையிடுவதில் நிலையாய் இருப்போமாக.

24அன்பு செலுத்தவும் நற்செயல்கள் புரியவும் ஒருவரையொருவர் தூண்டியெழுப்பக் கருத்தாயிருப்போமாக.

25சிலர் வழக்கமாகவே நம் சபைக் கூட்டங்களில் கலந்துகொள்வதில்லை. நாம் அவ்வாறு செய்யலாகாது; ஒன்றுகூடி ஒருவருக்கொருவர் ஊக்கமூட்டுவோமாக. இறுதிநாள் நெருங்கி வருகிறதைக் காண்கிறோம்; எனவே, இன்னும் அதிகமாய் ஊக்கமூட்டுவோம்.

26உண்மையை அறிந்தபின்னரும், வேண்டுமென்றே நாம் பாவத்தில் நிலைத்திருந்தால், இனி நமக்கு வேறு எந்தப் பாவம்போக்கும் பலியும் இராது.

27மாறாக, அச்சத்தோடும் நாம் எதிர்பார்த்திருக்கும் தீர்ப்பும், பகைவர்களைச் சுட்டெரிக்கும் கடவுளது சீற்றமுமே எஞ்சியிருக்கும்.

28மோசேயின் சட்டத்தைப் புறக்கணித்தவர், இரக்கம் பெறாமல், இரண்டு அல்லது மூன்று சாட்சிகளின் வாக்கு மூலத்தின்படி சாக வேண்டியிருந்தது.

29அப்படியென்றால், கடவுளுடைய மகனையே காலால் மிதித்தவர், தம்மைத் தூய்மைப்படுத்திய உடன்படிக்கையின் இரத்தத்தையே தீட்டு என்று கருதியவர், அருள்தரும் ஆவியாரையே பழித்தவர் எத்துணைக் கொடிய தண்டனையைப் பெற வேண்டியவர் என்பதை எண்ணிப் பாருங்கள்.

30“பழி வாங்குவதும்

கைம்மாறளிப்பதும்

எனக்கு உரியன”

என்றும்

“ஆண்டவரே தம் மக்களுக்குத்

தீர்ப்பு அளிப்பார்”

என்றும் உரைத்தவர் யார் என்பது நமக்குத் தெரியுமன்றோ?

31வாழும் கடவுளின் கைகளில் அகப்படுவது அஞ்சத்தக்கது அல்லவா?

32முன்னைய நாள்களை நினைவு கூருங்கள். நீங்கள் ஒளி பெற்றபின் உங்களுக்கு நேரிட்ட துன்பம் நிறைந்த போராட்டத்தை மனஉறுதியோடு ஏற்றுக்கொண்டீர்கள்.

33சில வேளைகளில், நீங்கள் இகழ்ச்சிக்கும் வேதனைகளுக்கும் ஆளாகி, வேடிக்கைப் பொருளானீர்கள். வேறு சில வேளைகளில், இந்நிலைக்கு ஆளானோரின் துன்பங்களில் பங்கு பெற்றீர்கள்.

34கைதிகளுக்குப் பரிவிரக்கம் காட்டினீர்கள். உங்கள் உடைமைகள் பறிமுதல் செய்யப்பட்டபோதும், மகிழ்ச்சியுடன் ஏற்றுக்கொண்டீர்கள். ஏனெனில், சிறந்த, நிலையான உடைமைகள் உங்களுக்கு உள்ளன என்பதை அறிவீர்கள்.

35உங்களிடம் இருக்கும் துணிவைக் கைவிட்டுவிடாதீர்கள். இதற்கு மிகுந்த கைம்மாறு உண்டு.

36கடவுளின் திருவுளத்தை நிறைவேற்றி, அவர் வாக்களித்ததை நீங்கள் பெற்றுக்கொள்ள உங்களுக்கு மனஉறுதி தேவை.

37இன்னும்,

“மிக மிகக் குறுகிய

காலமே இருக்கிறது;

வரவிருக்கிறவர் வந்து விடுவார்,

காலம் தாழ்த்தமாட்டார்.

38நேர்மையுடன் நடக்கும் என் அடியார்,

நம்பிக்கையினால் வாழ்வு அடைவார்.

எவராவது பின்வாங்கிச்

செல்வார் என்றால்

அவரில் நான் மகிழ்ச்சியுறேன்.”

39நாமோ பின்வாங்கிச் சென்று அழிவுறுவோர் அல்ல. மாறாக, நம்பிக்கையையும் வாழ்வையும் காத்துக்கொள்வோர் ஆவோம்.


10:5-7 திபா 40:6-8.
10:11 விப 29:38.
10:12-13 திபா 110:1.
10:16 எரே 31:33.
10:22 லேவி 8:30; எசே 36:25.
10:27 எசா 26:11.
10:28 இச 17:6; 19:15.
10:29 விப 24:8.
10:30 இச 32:35,36.
10:37-38 அப 2:3,4.
Pradeep Augustine
Pradeep Augustinehttps://bible.catholicgallery.org/
Pradeep Augustine is the founder of Catholic Gallery. He is a passionate Writer, An Artist, a computer geek and a part-time Blogger who loves to write a lot of contents on Catholicism in his free time. He is the founder of the Technical Blog www.GetCoolTricks.com, where he shares a lot of technical Contents. Stay connected with him on his social profiles.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!
Access Catholic Videos
Subscribe to our YouTube channel to access Mass Readings and Prayers as videos.
No Thanks