Home » நீதிமொழிகள் அதிகாரம் – 25 – திருவிவிலியம்

நீதிமொழிகள் அதிகாரம் – 25 – திருவிவிலியம்

நீதிமொழிகள் அதிகாரங்கள் (Tamil Bible: Ecumenical Tamil Translation – ETB)

Click the play button to listen or click the Download button to save a copy.

சாலமோனின் வேறு சில நீதிமொழிகள்

1இவையும் சாலமோனின் நீதி மொழிகளே. இவை யூதாவின் அரசராகிய எசேக்கியாவின் அவையினர் தொகுத்து எழுதியவை.

2மறைபொருள் கடவுளுக்கு மாட்சியாம்; ஆய்ந்தறிதல் அரசருக்குப் பெருமையாம்.

3அரசரின் உள்ளக் கிடக்கையை ஆராய்ந் தறிய மனிதரால் இயலாது; அது வானத்தின் உயரத்தையும் கடலின் ஆழத்தையும் போன்றது.

4வெள்ளியினின்று மாசை நீக்கி விடு; அப்பொழுது தட்டார் அதிலிருந்து அழகிய பொருளென்றை உருவாக்குவார்.

5அரசரின் அவையினின்று கெடுமதி உரைக்கும் பொல்லாரை அகற்றி விடு; அப் பொழுது அவரது ஆட்சி நீதிவழுவா நெறியில் நிலைக்கும்.

6அரசர் முன்னிலையில் உன்னைப் பெரியவரென்று காட்டிக் கொள்ளாதே; பெரியோ ருக்குரிய இடத்தில் நில்லாதே.

7பெரியவர் ஒருவருக்கு இடமுண்டாகும்படி நீ கீழிடத்திற்கு அனுப்பப்படுவதைவிட, “நீ மேலிடத்திற்கு வா” என்று அழைக்கப்படுவதே உனக்கு மேன்மை.

8ஏதோ ஒன்றைப் பார்த்தவுடன் உடனே வழக்கு மன்றத்திற்குப் போகாதே; நீ கூறுவது தவறென்று வேறொருவர் காட்டிவிட்டால் அப்பொழுது நீ என்ன செய்வாய்?

9அடுத்திருப்பாரோடு உனக்குள்ள வழக்கை அவருடனேயே பேசித் தீர்த்துக்கொள்; வேறொருவரைப் பற்றிய மறைசெய்தியை வெளிப்படுத்தாதே.

10வெளிப்படுத்தினால் அதைக் கேட்பவர் உன்னை இகழுவார்; உனக்கு வரும் மானக்கேடு நீங்காது.

11தக்க வேளையில் சொன்ன சொல் வெள்ளித் தட்டில் வைத்த பொற்கனிக்குச் சமம்.

12தங்கச் சங்கிலியும் பொற்கடுக்கனும் ஓர் இணையாக அமைவது போல, எச்சரிக்கை கூறும் ஞானியும் அதை விருப்புடன் கேட்பவரும் ஓர் இணையாக அமைவர்.

13குளிர்ந்த பானம் கோடைக் காலத்தில் எப்படி இருக்குமோ அப்படியே உண்மையான தூதர் தம்மை அனுப்பினவருக்கு இருப்பார்; அவர் தம் தலைவருக்குப் புத்துயிரளிப்பார்.

14கருமுகிலும் காற்றும் உண்டு; ஆனால் மழை இல்லை; கொடாமலே தன்னைக் கொடைவள்ளல் என்பவனும் இவ்வாறே.

15பொறுமை ஆட்சியாளரையும் இணங்கச் செய்யும்; இனிய நா எலும்பையும் நொறுக்கும்.

16தேன் கிடைத்தால் அளவோடு சாப்பிடு; அளவை மீறினால் தெவிட்டிப்போகும்; நீ வாந்தியெடுப்பாய்.

17அடுத்திருப்பார் வீட்டுக்கு அடிக்கடி போகாதே; போனால் சலிப்பு ஏற்பட்டு, அவர் உன்னை வெறுப்பார்.

18அடுத்திருப்பாருக்கு எதிராகப் பொய்ச் சான்று சொல்பவர், குறுந்தடியையும் வாளையும் கூரிய அம்பையும் ஒத்தவர்.

19இக்கட்டுக் காலத்தில் ஒரு துரோகியை நம்புவது, சொத்தைப் பல்லையும் நொண்டிக் காலையும் நம்புவதற்குச் சமம்.

20மனத்துயரமுள்ளவரைப் பாட்டுப் பாடச் செய்தல், குளிரில் உடைகளைக் களைவது போலவும், புண்ணில் காடியை வார்ப்பது போலவும் இருக்கும்.

21உன் எதிரி பசியோடிருந்தால் அவனுக்கு உணவு கொடு; அவன் தாகத்தோடிருந்தால் குடிக்கத் தண்ணீர் கொடு.

22இவ்வாறு செய்வதால் அவன் தலைமேல் எரிதழலைக் குவிப்பாய்; ஆண்டவரும் உனக்குக் கைம்மாறு அளிப்பார்.

23வட காற்று மழையைத் தோற்றுவிக்கும்; புறங்கூறுதல் சீற்றப் பார்வையைத் தோற்று விக்கும்.

24மாடி வீட்டில் நச்சரிக்கும் மனைவியோடு வாழ்வதைவிட குடிசை வாழ்க்கையே மேல்.

25தொலைவிடத்திலிருந்து வரும் நற்செய்தி, வறண்ட தொண்டைக்குக் கிடைக்கும் குளிர்ந்த நீரை ஒக்கும்.

26பொல்லாருக்கு இணங்கிவிடும் நேர்மையானவர் கலங்கிய ஊற்றை அல்லது பாழடைந்த கிணற்றை ஒத்திருக்கிறார்.

27தேனை மிகுதியாகச் சாப்பிடுவது நன்றன்று; புகழ்ச்சியை மிகுதியாக விரும்பவதும் நன்றன்று.

28தன்னடக்கமில்லா மனிதர் அரண் அழிந்த காவல் இல்லாப் பட்டணம்.


25:6-7 லூக் 14:8-10.
25:21-22 உரோ 12:20.
Pradeep Augustine Avatar

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Stay Connected

Recently added Bibles

Download our App

Get our official Catholic Gallery app for daily Mass readings, prayers & more

Your Faith. Your Way.
Download the Catholic Gallery app for offline Mass readings, daily prayers, and audio Bible — all in one place.
Available on:
No Thanks