back to top
HomeTamilநீதிமொழிகள் அதிகாரம் - 16 - திருவிவிலியம்

நீதிமொழிகள் அதிகாரம் – 16 – திருவிவிலியம்

நீதிமொழிகள் அதிகாரங்கள் (Tamil Bible: Ecumenical Tamil Translation – ETB)

Click the play button to listen or click the Download button to save a copy.
Audio Bible by Rev. Fr. Arulselvam Rayappan. Know more about him here

1எண்ணங்களை மனிதர் எண்ணலாம்; ஆனால், எதற்கும் முடிவு கூறுபவர் ஆண்டவர்.

2மனிதருடைய நடத்தையெல்லாம் அவர் பார்வையில் களங்கமற்றதாய்த் தோன்றலாம்; ஆனால், ஆண்டவர் அவர் உள்ளெண்ணத்தைச் சீர்தூக்கிப் பார்க்கிறார்.

3உன் செயல்களை ஆண்டவரிடம் ஒப்படை; அவற்றை வெற்றியுடன் நிறைவேற்றுவாய்.

4ஆண்டவர் படைத்த ஒவ்வொன்றிற்கும் குறிக்கப்பட்ட ஒரு முடிவு உண்டு; பொல்லாத மனிதரை அழிவு நாளுக்கென்று குறித்து வைத்திருக்கிறார்.

5இறுமாப்புள்ளவர் யாராயிருந்தாலும் அவரை ஆண்டவர் அருவருக்கிறார்; அவர் தண்டனைக்குத் தப்பவேமாட்டார்; இது உறுதி.

6அன்பும் வாய்மையும் தீவினையைப் போக்கும். ஆண்டவரிடம் கொள்ளும் அச்சம் ஒருவரைத் தீமையினின்று விலகச் செய்யும்.

7ஒருவருடைய செயல்கள் ஆண்டவருக்கு உகந்தவையாயிருக்குமானால், அவர் அவருடைய எதிரிகளையும் அவருக்கு நண்பராக்குவார்.

8தீய வழியில் சம்பாதிக்கும் பெரும் பொருளைவிட, நேர்மையோடு ஈட்டும் சிறு தொகையே மேல்.

9மனிதர் தம் வழியை வகுத்தமைக்கின்றார்; ஆனால் அதில் அவரை வழிநடத்துபவரோ ஆண்டவர்.

10அரசன் வாயினின்று பிறக்கும் வாக்குப் பொய்க்காது; தீர்ப்பு வழங்கும் போது அவன் தவறு செய்யமாட்டான்.

11நிறைகோலும் துலாக்கோலும் ஆண்ட வருக்கே உரியன; பையிலுள்ள எடைக்கற்க ளெல்லாம் அவரால் உண்டானவை.

12தீச்செலை அரசர்கள் அருவருப்பார்கள்; ஏனெனில், நீதியே அரியணையின் உறுதியான அடிப்படையாகும்.

13நேர்மையான பேச்சே அரசர் வரவேற்பார்; நேரியவற்றைச் சொல்லுகிறவரிடம் அவர் அன்புசெலுத்துவார்.

14அரசரின் சீற்றம் மரண தூதன் போன்றது; ஆனால் ஞானமுள்ளவர் அதைத் தணித்துவிடுவார்.

15அரசரின் முகமலர்ச்சி வாழ்வளிக்கும்; அவரது கருணை பருவமழை பொழியும் மேகம் போன்றது.

16பொன்னைவிட ஞானத்தைப் பெறுவதே மேல்; வெள்ளியைவிட உணர்வைப் பெறுவதே மேல்.

17நேர்மையானவர்கள் செல்லும் பாதை தீமையை விட்டு விலகிச் செல்லும்; தன் நடையைக் குறித்து அவ்வாறு விழிப்புட னிருப்பவன் உயிரைக் காப்பாற்றிக்கொள்வான்.

18அழிவுக்கு முந்தியது அகந்தை; வீழ்ச்சிக்கு முந்தியது வீண்பெருமை.

19மேட்டிமையானவர்களோடு கொள்ளை யடித்த பொருளைத் பகிர்ந்து மகிழ்வதைவிட, மனத்தாழ்மையுடன் சிறுமைப்படுகிறவர்களோடு கூடியிருப்பது நலம்.

20போதனைக்குச் செவிகொடுப்பவன் வாழ்வடைவான்; ஆண்டவரை நம்புகிறவன் நற்பேறு பெற்றவன்.

21ஞானமுள்ளவர் பகுத்துணரும் ஆற்றல் பெற்றவர் என்று கொள்ளப்படுவார்; இனிமை யாகப் பேசினால் சொல்வதை எவரும் ஏற்பர்.

22விவேகமுள்ளவர்களுக்கு அவர்களது விவேகமே வாழ்வளிக்கும் ஊற்றாகும்; மூடருக்கு அவரது மடமையே போதிய தண்டனையாகும்.

23ஞானமுள்ளவரின் மனம் அவரது பேச்சை விவேகமுள்ளதாக்கும்; அவருடைய சொற்களை எவரும் ஏற்பர்.

24இன்சொற்கள் தேன்கூடு போன்றவை; மனத்திற்கு இனிமையானவை, உடலுக்கு நலம் தருபவை.

25ஒரு பாதை ஒருவருக்கு நல்ல வழிபோலத் தோன்றலாம்; முடிவிலோ அது சாவுக்கு நடத்தும் பாதையாகிவிடும்.

26உழைப்பவர் பசி அவரை மேலும் உழைக்கச் செய்கிறது; உண்ண விரும்பும் அவரது வயிற்றுப்பசி அவரை அதற்குத் தூண்டுகிறது.

27பிறர் குற்றங்களைக் கிண்டிக் கிளறித் தூற்றுபவர் கயவர்; எரிக்கும் நெருப்புப் போன்றது அவரது நாக்கு.

28கோணல் புத்திக்காரர் சண்டையை மூட்டிவிடுவர்; புறங்கூறுவோர் நண்பரைப் பிரித்துவிடுவர்.

29வன்முறையாளர் அடுத்தவரை ஏமாற்றி, கெட்ட வழியில் அவரை நடக்கச் செய்வார்.

30கண்ணை மூடிக்கொண்டிருப்போர் முறைகேடானதைச் சிந்திப்பர்; வாயை மூடிக் கொண்ருப்போர் தீமை செய்யத் திட்டமிடுவர்.

31நரைமுடி மதிப்பிற்குரிய மணிமுடி; அது நேர்மையான நடத்தையால் வரும் பயன்.

32வலிமை உடையவரைவிடப் பொறுமை உடையவரே மேலானவர்; நகரை அடக்குகிற வரைவிடத் தன்னை அடக்குகிறவரே சிறந்தவர்.

33மடியிலுள்ள திருவுளச் சீட்டை ஒருவர் குலுக்கிப் போடலாம்; ஆனால், திருவுளத் தீர்ப்பை வெளிப்படுத்துபவர் ஆண்டவரே.


16:25 நீமொ 14:12.
Pradeep Augustine
Pradeep Augustinehttps://bible.catholicgallery.org/
Pradeep Augustine is the founder of Catholic Gallery. He is a passionate Writer, An Artist, a computer geek and a part-time Blogger who loves to write a lot of contents on Catholicism in his free time. He is the founder of the Technical Blog www.GetCoolTricks.com, where he shares a lot of technical Contents. Stay connected with him on his social profiles.
Access Catholic Videos
Subscribe to our YouTube channel to access Mass Readings and Prayers as videos.
No Thanks