Home » நீதித் தலைவர்கள் அதிகாரம் – 20 – திருவிவிலியம்

நீதித் தலைவர்கள் அதிகாரம் – 20 – திருவிவிலியம்

நீதித் தலைவர்கள் அதிகாரங்கள் (Tamil Bible: Ecumenical Tamil Translation – ETB)

Click the play button to listen or click the Download button to save a copy.

இஸ்ரயேல் மக்கள் போருக்குப் புறப்படல்

1தாண் தொடங்கிப் பெயேர்செபா வரையிலும், கிலயாது நாட்டிலும் இருந்த இஸ்ரயேல் மக்கள் அனைவரும் ஒரே கூட்டமைப்பாக ஆண்டவர் திருமுன் மிஸ்பாவில் ஒன்று கூடினர்.

2இஸ்ரயேலின் அனைத்துக் குலங்களைச் சார்ந்த எல்லா மக்களின் தலைவர்களும் கடவுளின் மக்களது சபையாக வந்து நின்றனர். அவர்கள் வாளேந்திய நான்கு இலட்சம் போர் வீரர்கள்.

3இஸ்ரயேல் மக்கள் மிஸ்பாவுக்குச் சென்றனர் என்பதை பென்யமின் மக்கள் கேள்வியுற்றனர். இஸ்ரயேல் மக்கள்,“இந்தக் கொடிய நிகழ்ச்சி எவ்வாறு நடந்தது என்பதைக் கூறுங்கள்” என்று கேட்டனர்.

4கொலை செய்யப்பட்ட பெண்ணின் கணவனான லேவியர் பதிலளித்துக் கூறியது: “நானும் என் மறுமனைவியும் இரவில் தங்குவதற்குப் பென்யமினுக்குச் சொந்தமான கிபயாவுக்கு வந்தோம்.

5கிபயா ஆள்கள் எனக்கெதிராகப் புறப்பட்டு வந்து இரவில் என்னையும் வீட்டையும் சூழ்ந்துகொண்டு என்னைக் கொல்ல முயற்சி செய்தனர். அவர்கள் என் மறுமனைவியை இழிவுபடுத்தவே, அவள் இறந்து போனாள்.

6என் மறுமனைவியின் சடலத்தை எடுத்து வந்து அதைத் துண்டு துண்டாக வெட்டி இஸ்ரயேலின் உரிமைச் சொத்தான அனைத்துப்பகுதிகளுக்கும் அனுப்பினேன். ஏனெனில், அவர்கள் இஸ்ரயேலுக்கு எதிராக ஒழுக்கக் கேடான அருவருக்கத்தக்க செயலைச் செய்தனர்.

7இதோ! இஸ்ரயேல் மக்களாகிய நீங்கள் அனைவரும் கலந்து பேசி உங்கள் முடிவைத் தெரிவியுங்கள்.”

8எல்லா மக்களும் ஒரே மனத்தவராயக் கூறியது: நம்மில் எவனும் — அவன் கூடாரத்தில் தங்கியிருந்தாலும், வீட்டில் வாழ்ந்தாலும் — திரும்பிச் செல்லமாட்டான்.

9இப்பொழுது நாம் கிபயாவுக்குச் செய்யப்போவது இதுதான்; நம்மில் சீட்டு விழுந்தவர்கள் அதற்கு எதிராகச் செல்வர்.

10இஸ்ரயேலின் எல்லாக் குலங்களிலிருந்தும் நூற்றுக்குப் பத்துப்பேரையும், ஆயிரத்துக்கு நூறுபேரையும், பத்தாயிரத்துக்கு ஆயிரம் பேரையும் தேர்ந்தெடுப்போம். இவர்கள் சென்று பென்யமினுக்குச் சொந்தமான கிபயாவின் ஆள்கள் இஸ்ரயேலுக்கு எதிராகச் செய்த அருவருக்கத்தக்க செயலுக்குப் பழிவாங்கச் செல்பவர்களுக்கு உணவுப் பொருள்களைக் கொண்டு வரட்டும்.

11இஸ்ரயேலின் எல்லா ஆள்களும் ஒன்றிணைந்து நகரை நோக்கிச் சென்றனர்.

12இஸ்ரயேலின் குலங்களைச் சார்ந்தவர்கள் பென்யமின் குலம் முழுவதற்கும் ஆளனுப்பி, “இந்தத் தீய செயல் உங்கள் நடுவில் நடை பெற்றது ஏன்?

13இப்பொழுது கிபயாவில் உள்ள இழிமனிதரை எங்களிடம் ஒப்படையுங்கள். நாங்கள் அவர்களைக் கொன்று இஸ்ரயேல் நடுவிலிருந்து தீயதை அழிப்போம்” என்றனர். தங்கள் சகோதரரான இஸ்ரயேல் மக்கள் சொன்னதைப் பென்யமின் மக்கள் ஏற்கவில்லை.

14பென்யமின் மக்கள் இஸ்ரயேல் மக்களுடன் போரிடுமாறு தங்கள் நகர்களிலிருந்து புறப்பட்டுக் கிபயாவில் வந்து கூடினர்.

15தேர்ந்தெடுக்கப்பட்ட எழுநூறு கிபயா வாழ் மக்கள் போருக்கு தயாராக இருந்ததுபோக, அன்று பென்யமின் மக்களுள் அதன் நகர்களிலிருந்து வாளேந்திப் போருக்கென ஒன்று திரண்டவர் இருபத்தாறாயிரம் பேர்.

16இவர்களைத் தவிர கிபயா வாழ் மக்கள் எழுநூறு பேர் தலைமுடி இழையளவும் குறி தவறாது இடக்கையால் கவண் எறிவர்.

17இந்தப் பென்யமின் ஆள்களைத் தவிர இஸ்ரயேல் மக்களுள் நான்கு இலட்சம் பேர் ஒன்று திரண்டிருந்தனர். இவர்கள் அனைவரும் போர் வீரர்கள்.

பென்யமின் மக்களுடன் போர்

18அவர்கள் எழுந்து பெத்தேலுக்குச் சென்றனர். இஸ்ரயேல் மக்கள், “யார் எங்களுக்காக முதலில் பென்யமின் மக்களுடன் போருக்குச் செல்வர்?” என்று கடவுளிடம் கேட்டனர். ஆண்டவர், “முதலில் யூதா செல்லட்டும்” என்றார்.

19இஸ்ரயேல் மக்கள் காலையில் எழுந்து, கிபயாவுக்கு எதிரில் பாளையம் இறங்கினர்.

20இஸ்ரயேல் ஆள்கள் பென்யமின் மக்களுடன் போர்புரியச் சென்றனர். கிபயாவை நோக்கி அணிவகுத்து நின்றனர்.

21பென்யமின் மக்கள் கிபயாவிலிருந்து வெளியே வந்து, அந்நாளில் இருபதாயிரம் இஸ்ரயேல் மக்களை வெட்டி வீழ்த்தினர்.

22இஸ்ரயேல் வீரர்கள் தங்களைத் தேற்றிக்கொண்டு முதல் நாள் கூடிய அதே இடத்தில் மீண்டும் போருக்கு அணி வகுத்து நின்றனர்.

23இஸ்ரயேல் மக்கள் ஆண்டவர் திருமுன் மாலைவரை அழுதனர். இஸ்ரயேல் மக்கள், “தம் சகோதரர்களாகிய் பென்யமின் மக்களுடன் மீண்டும் போரிடச் செல்லலாமா” என்று ஆண்டவரிடம் கேட்டனர். ஆண்டவர், “அவர்களுக்கு எதிராகச் செல்லுங்கள்” என்றார்.

24இரண்டாம் நாள் இஸ்ரயேல் மக்கள் பென்யமின் மக்களை நெருங்கினர்.

25அன்று பென்யமின் மக்களும் அவர்களுக்கு எதிராகக் கிபயாவிலிருந்து புறப்பட்டு வந்தனர். அவர்கள் மீண்டும் இஸ்ரயேல் மக்களுள் பதினெட்டாயிரம் பேரை வெட்டி வீழ்த்தினர். இவர்கள் அனைவரும் போர்வீரர்.

26இஸ்ரயேல் மக்கள் அனைவரும் பெத்தேலுக்கு வந்து அழுதனர். அங்கே ஆண்டவர் திருமுன் அமர்ந்து அன்று மாலைவரை உண்ணாநோன்பு இருந்தனர். மேலும், அவர்கள் எரிபலிகளையும் நல்லுறவுப் பலிகளையும் ஒப்புக்கொடுத்தனர்.

27இஸ்ரயேல் மக்கள் ஆண்டவரிடம் அறிவுரை கேட்டனர். ஏனெனில், அந்நாள்களில் கடவுளின் உடன்படிக்கையின் பேழை அங்கு இருந்தது.

28ஆரோனின் புதல்வன் எலயாசரின் மகன் பினகாசு அன்று அதற்குமுன் நின்று, “என் சகோதரர்களாகிய பென்யமின் மக்களுடன் போரிட நான் மீண்டும் செல்ல வேண்டாமா?” என்று கேட்டான். ஆண்டவர், “செல்லுங்கள், நாளைக்கு அவர்களை உங்கள் கையில் ஒப்படைப்பேன்” என்றார்.

29இஸ்ரயேல் மக்கள் கிபயாவைச் சுற்றி பதுங்கிடம் அமைத்தனர்.

30மூன்றாம் நாள் இஸ்ரயேல் மக்கள் பென்யமின் மக்களுக்கு எதிராகச் சென்றனர். இம்முறையும் முன்புபோல் கிபயாவுக்கு எதிராக அணிவகுத்து நின்றனர்.

31பென்யமின் மக்கள் இஸ்ரயேல் மக்களை எதிர்க்க வெளியே வந்தனர். அவர்கள் நகரிலிருந்து வெகு தொலைவுக்கு வந்து விட்டனர். முன்புபோல் இம்முறையும் அவர்கள் பெத்தேலுக்கு செல்லும் நெடுஞ்சாலையிலும், கிபயாவுக்குச் செல்லும் நெடுஞ்சாலையிலும் தாக்கத் துவங்கித் திறந்த வெளியில் ஏறக்குறைய முப்பது பேரைக் கொன்றனர்.

32எனவே, பென்யமின் மக்கள் முன்பு போலவே ‘நம் முன்னிலையில் இஸ்ரயேல் மக்கள் விரட்டியடிக்கப்பட்டனர்’ என்று கூறிக்கொண்டனர். இஸ்ரயேல் மக்களோ ‘நாம் தப்பி ஓடுவதுபோல நடித்து அவர்களை நகரிலிருந்து நெடுஞ்சாலைக்கு இழுப்போம்’ என்று திட்டமிட்டிருந்தனர்.

33எனவே, இஸ்ரயேல் வீரர்கள் அனைவரும் தாங்கள் இருந்த இடத்திலிருந்து பின்வாங்கிப் பால்தாமாரில் அணிவகுத்து நின்றனர். இஸ்ரயேல் முழுவதிலுமிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட பத்தாயிரம் பேர் கிபயாவுக்கு அருகில் தங்கள் பதுங்கிடங்களிலிருந்து வெளிவந்து நகரைக் கிழக்கிலிருந்து தாக்கினர்.

34போர் கடுமையாக இருந்தது. ஆனால், பென்யமின் மக்கள் தங்களுக்குத் தீமை வரப்போகிறது என்பதை உணரவில்லை.

35ஆண்டவர் இஸ்ரயேலின் பொருட்டுப் பென்யமினைத் தோற்கடித்தார். அன்று இஸ்ரயேலர் பென்யமின் மக்களுள் இருபத்தையாயிரம் பேரைக் கொன்றனர். அவர்கள் அனைவரும் போர்வீரர்கள்.

இஸ்ரயேலர் வெற்றி கொள்ளல்

36பென்யமின் மக்கள் தாங்கள் தோல்வியுற்றதைக் கண்டனர். இஸ்ரயேல் மக்கள் தாங்கள் அமைத்திருந்த பதுங்கிடங்களில் நம்பிக்கை வைத்திருந்ததால் பென்யமின் மக்கள் முன்னேற இடம் அளித்தனர்.

37பதுங்கியிருந்தோர் திடீரென கிபயாமீது பாய்ந்தனர். அவர்கள் அணிவகுத்துச் சென்று நகரத்தவர் அனைவரையும் வாளுக்கு இரையாக்கினர்.

38பதுங்கியிருந்தோர் இஸ்ரயேல் மக்களுக்கு அடையாளமாக பெரும்புகைப் படலத்தை நகரிலிருந்து மேல் எழச்செய்ய வேண்டும் என்பது அவர்களுடைய முன்னேற்பாடு.

39இஸ்ரயேல் மக்கள் போரில் பின்வாங்கியபோது, அவர்களுள் ஏறக்குறைய முப்பது பேரைப் பென்யமின் மக்கள் கொன்றுவிட்டனர். முன்புபோல், அவர்கள் நம் முன்னிலையில் விரட்டியடிக்கப்பட்டனர் என்று கூறிக்கொண்டனர்.

40நகரிலிருந்து பெரும் புகைப்படலம் அடையாளமாக மேல் எழும்பத் தொடங்கியபொழுது, பென்யமின் மக்கள் பின்புறம் திரும்பிப்பார்த்தனர். அந்தோ! நகர் முழுவதும் புகை விண்ணை நோக்கி எழும்பிக் கொண்டிருந்தது.

41இஸ்ரயேல் வீரர்கள் திரும்பித் தாக்கவே பென்யமின் வீரர் தங்களுக்கு அழிவு நெருங்குவதைக் கண்டு அஞ்சி நடுங்கினர்.

42அவர்கள் இஸ்ரயேல் வீரர் முன்னிலையில் பாலைநிலப்பாதையில் புறமுதுகிட்டு ஓடினர். போரினின்று அவர்களால் தப்ப முடியவில்லை. இஸ்ரயேல் நகர்களிலிருந்து வந்தோர் அவர்களை வெட்டி வீழ்த்தினர்.

43அவர்கள் பென்யமின் மக்களை அடித்து நொறுக்கி, அவர்களைத் துரத்திச் சென்று கதிரவன் உதிக்கும் திசையில் கிபயாவின் எதிர்ப்புறம் வரை விடாது துரத்திச் சென்று அழித்தனர்.

44பென்யமின் மக்களுள் பதினெட்டாயிரம்பேர் மடிந்தனர். இவர்கள் அனைவரும் ஆற்றல்மிகு வீரர்கள்.

45ஏனையோர் பாலைநிலம் நோக்கித் திரும்பி ரிம்மோன் பாறைக்கு ஓடிவந்தனர். இஸ்ரயேலர் பென்யமின் மக்களுள் ஐயாயிரம் பேரை நெடுஞ்சாலைகளில் கொன்றனர். தொடர்ந்து கிதாம்வரை துரத்திச் சென்று அவர்களுள் இரண்டாயிரம் பேரைக் கொன்றனர்.

46அந்நாள்களில் பென்யமின் மக்களுள் மடிந்தோரின் எண்ணிக்கை மொத்தம் இருபத்தையாயிரம். இவர்கள் அனைவரும் ஆற்றல்மிகு வாளேந்திய வீரர்கள்.

47எஞ்சியிருந்த அறுநூறு பேர் பாலைநிலம் நோக்கித் திரும்பி ரிம்மோன் பாறைக்குத் தப்பி ஓடி அங்கே நான்கு மாதங்கள் வாழ்ந்தனர்.

48இஸ்ரயேல் மக்கள் பென்யமின் மக்களை நோக்கித் திரும்பி, நகரில் கண்ட அனைவரையும் கால்நடைகளையும் வாளுக்கு இரையாக்கினர். தாங்கள் கண்ட நகர்கள் அனைத்தையும் நெருப்பில் எரித்தனர்.

Pradeep Augustine Avatar

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Stay Connected

Recently added Bibles

Download our App

Get our official Catholic Gallery app for daily Mass readings, prayers & more

Your Faith. Your Way.
Download the Catholic Gallery app for offline Mass readings, daily prayers, and audio Bible — all in one place.
Available on:
No Thanks