back to top
HomeTamilஎரேமியா அதிகாரம் - 3 - திருவிவிலியம்

எரேமியா அதிகாரம் – 3 – திருவிவிலியம்

எரேமியா அதிகாரங்கள் (Tamil Bible: Ecumenical Tamil Translation – ETB)

Click the play button to listen or click the Download button to save a copy.
Audio Bible by Rev. Fr. Arulselvam Rayappan. Know more about him here

மனம் மாற அழைப்பு

1“கணவன் தன் மனைவியைத் தள்ளிவிட,

அவள் அவனை விட்டகன்று

வேறு ஒருவனோடு வாழ்கையில்,

அக்கணவன் அவளிடம்

மீண்டும் திரும்பிச் செல்வானா?

அந்நாடு தீட்டுப்படுவது உறுதியல்லவா?

நீ பல காதலர்களோடு

விபசாரம் செய்தாய்;

உன்னால் என்னிடம் திரும்பிவர

முடியுமா?” என்கிறார் ஆண்டவர்.

2உன் கண்களை உயர்த்தி

மொட்டை மேடுகளைப்பார்;

நீ படுத்துக்கிடக்காத இடம் உண்டோ?

பாலை நிலத்தில் அராபியனைப்போல,

பாதையோரங்களில் நீயும்

காதலர்களுக்காகக் காத்திருந்தாய்;

உன் விபசாரங்களாலும்

தீச்செயல்களாலும்

நாட்டைத் தீட்டுப்படுத்தினாய்.

3ஆகையால், நாட்டில்

மழை பெய்யாது நின்று விட்டது;

இளவேனிற் கால மழையும் வரவில்லை;

உனது நெற்றி ஒரு விலைமாதின் நெற்றி;

நீ மானங்கெட்டவள்.

4இப்போது கூட ‘என் தந்தையே!

என் இளமையின் நண்பரே!’ என

என்னை நீ அழைக்கவில்லையா?

5‘என்றென்றும் அவர்

சினம் அடைவாரோ?

இறுதிவரை அவர்

சினம் கொண்டிருப்பாரோ?’ என்கிறாய்.

இவ்வாறு சொல்லிவிட்டு

உன்னால் இயன்றவரை

தீச்செயல்களையே செய்கிறாய்.

6யோசியா அரசன் காலத்தில் ஆண்டவர் என்னிடம் கூறியது: “நம்பிக்கையற்ற இஸ்ரயேல் செய்ததைக் கண்டாயா? அவள் சென்று உயர்ந்த குன்றுகள் அனைத்தின் மீதும், பசுமையான மரங்கள் அனைத்தின் கீழும் விபசாரம் செய்தாள்.

7இவை அனைத்தையும் செய்தபின் என்னிடம் திரும்பி வருவாள் என எண்ணினேன். அவளோ திரும்பி வரவில்லை. நம்பிக்கைத் துரோகம் செய்த சகோதரி யூதா இதைக் கண்டாள்.

8நம்பிக்கையற்ற இஸ்ரயேலுடைய விபசாரத்தின் காரணமாக, நான் அவளைத் தள்ளிவிட்டு அவளுக்கு மணமுறிவுச் சீட்டு கொடுத்ததை நம்பிக்கைத் துரோகம் செய்த *அவளுடைய சகோதரி யூதா கண்டாள்.* எனினும், அவளும் அஞ்சாது சென்று விபசாரம் செய்தாள்.

9விபசாரம் செய்வது அவளுக்கு வெகு எளிதாக இருந்ததால், கல்லோடும் மரத்தோடும் வேசித்தனம் செய்து நாட்டைத் தீட்டுப்படுத்தினாள்.

10இவை அனைத்திற்கும் பிறகு கூட நம்பிக்கைத் துரோகம் செய்த அவளுடைய சகோதரி யூதா முழு உள்ளத்தோடு என்னிடம் திரும்பி வரவில்லை; பொய் வேடம் போடுகிறாள்” என்கிறார் ஆண்டவர்.

11ஆண்டவர் என்னிடம் கூறியது: நம்பிக்கையற்ற இஸ்ரயேல் நம்பிக்கைத் துரோகம் செய்த யூதாவைவிட நேர்மையானவள்.

12நீ சென்று வடக்கே திரும்பி இச்சொற்களை உரக்கக் கூறு:

நம்பிக்கையற்ற இஸ்ரயேலே,

என்னிடம் திரும்பிவா,

என்கிறார் ஆண்டவர்.

நான் உன்மீது சினம் கொள்ளமாட்டேன்;

ஏனெனில், நான் பேரன்பு கொண்டவன்,

என்கிறார் ஆண்டவர்.

நான் என்றென்றும் சினம் கொள்ளேன்.

13உன் குற்றத்தை

நீ ஏற்றுக்கொண்டால் போதும்;

உன் கடவுளாகிய ஆண்டவருக்கு

எதிராகக் கலகம் செய்தாய்;

பசுமையான மரங்கள்

அனைத்தின் கீழும்

அன்னியரை நாடி

அங்குமிங்கும் ஓடினாய்;

என் குரலுக்கோ

நீ செவிசாய்க்கவில்லை,

என்கிறார் ஆண்டவர்.

14மக்களே! என்னிடம்

திரும்பி வாருங்கள்; ஏனெனில்,

நானே உங்கள் தலைவன்;

நகருக்கு ஒருவனையும்

குடும்பத்திற்கு இருவரையுமாகத்

தெரிந்தெடுத்து உங்களைச்

சீயோனுக்குக் கூட்டி வருவேன்.

15என் இதயத்திற்கேற்ற மேய்ப்பர்களை உங்களுக்குக் கொடுப்பேன். அவர்கள் உங்களை அறிவுடனும், முன்மதியுடனும் வழிநடத்துவார்கள்.

16நீங்கள் நாட்டில் பல்கிப் பெருகும் அக்காலத்தில் யாரும் ஆண்டவரின் உடன்படிக்கைப் பேழைபற்றியே பேசமாட்டார்கள். அது அவர்கள் எண்ணத்திலோ நினைவிலோ இராது. அது இல்லை என்று வருந்தி இனி ஒன்றும் செய்யமாட்டார்கள், என்கிறார் ஆண்டவர்.

17அக்காலத்தில் எருசலேம ‘ஆண்டவரின் அரியணை’ என அழைப்பார்கள். ஆண்டவரின் பெயரை முன்னிட்டு எல்லா மக்களினத்தாரும் எருசலேமில் வந்து கூடுவர். தங்கள் தீய இதயப் பிடிவாதத்தின்படி இனி நடக்க மாட்டார்கள்.

18அந்நாள்களில் யூதா வீட்டார் இஸ்ரயேல் வீட்டாரோடு சேர்ந்து கொள்வர்; நான் அவர்கள் மூதாதையருக்கு உரிமைச் சொத்தாகக் கொடுத்த நாட்டுக்கு வட நாட்டிலிருந்து ஒன்றாக வந்து சேர்வர்.

19உன்னை என் மக்களின் வரிசையிலே

எவ்விதம் சேர்த்துக்கொள்வேன் என்றும்

திரளான மக்களினங்களுக்கிடையே

அழகான உரிமைச்சொத்தாகிய

இனிய நாட்டை உனக்கு

எவ்விதம் தருவேன் என்றும்

எண்ணிக்கொண்டிருந்தேன்.

‘என் தந்தை’ என

என்னை அழைப்பாய் என்றும்,

என்னிடமிருந்து

விலகிச் செல்லமாட்டாய் என்றும்

எண்ணியிருந்தேன்.

20நம்பிக்கைத் துரோகம் செய்த ஒரு பெண்

தன் காதலனைக் கைவிடுவது போல,

இஸ்ரயேல் வீடே! நீயும் எனக்கு

நம்பிக்கைத் துரோகம் செய்கிறாய்,

என்கிறார் ஆண்டவர்.

21மொட்டை மேடுகளில்

கூக்குரல் கேட்கிறது;

அது இஸ்ரயேல் மக்களின்

அழுகையும் வேண்டலுமாம்;

ஏனெனில், அவர்கள் நெறிதவறித்

தங்கள் கடவுளாகிய ஆண்டவரை

மறந்தார்கள்.

22என்னைவிட்டு விலகிய மக்களே!

திரும்பி வாருங்கள்;

உங்கள் நம்பிக்கையின்மையிலிருந்து

உங்களைக் குணமாக்குவேன்;

“இதோ நாங்கள் உம்மிடம் வருகிறோம்.

நீரே எங்கள் கடவுளாகிய ஆண்டவர்.

23குன்றுகளிலிருந்தும் மலைகளில்

செய்யப்படும் அமளிகளிலிருந்தும்

கிடைப்பது ஏமாற்றமே;

இஸ்ரயேலின் விடுதலை

எங்கள் கடவுளாகிய

ஆண்டவரிடம் மட்டுமே உள்ளது.

24எங்கள் இளமை முதல், எங்கள் மூதாதையர் உழைப்பின் பயனாகப் பெற்ற ஆடுமாடுகளையும், புதல்வர் புதல்வியரையும் வெட்கங்கெட்ட பாகால் விழுங்கிவிட்டது.

25மானக்கேடே எங்கள் படுக்கை; அவமானமே எங்கள் போர்வை. ஏனெனில் எங்கள் இளமை முதல் இன்றுவரை நாங்களும் எங்கள் மூதாதையரும் எங்கள் கடவுளாகிய ஆண்டவருக்கு எதிராகப் பாவம் செய்தோம்; அவரது குரலுக்கு நாங்கள் செவிசாய்க்கவில்லை.’


3:6 2 அர 22:1-23:30; 2 குறி 34:1-35:27.


3:8 “அவளுடைய சகோதரி யூதா கண்டாள்” என்பது “நான்…கண்டேன்” என்று எபிரேய பாடத்தில் உள்ளது.
Pradeep Augustine
Pradeep Augustinehttps://bible.catholicgallery.org/
Pradeep Augustine is the founder of Catholic Gallery. He is a passionate Writer, An Artist, a computer geek and a part-time Blogger who loves to write a lot of contents on Catholicism in his free time. He is the founder of the Technical Blog www.GetCoolTricks.com, where he shares a lot of technical Contents. Stay connected with him on his social profiles.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!
Access Catholic Videos
Subscribe to our YouTube channel to access Mass Readings and Prayers as videos.
No Thanks