Home » எரேமியா அதிகாரம் – 17 – திருவிவிலியம்

எரேமியா அதிகாரம் – 17 – திருவிவிலியம்

எரேமியா அதிகாரங்கள் (Tamil Bible: Ecumenical Tamil Translation – ETB)

Click the play button to listen or click the Download button to save a copy.

யூதாவின் பாவமும் தண்டனையும்

1யூதாவின் பாவம் இரும்பு எழுத்தாணியாலும் வைர நுனியாலும் எழுதப்பட்டுள்ளது. அது அவர்கள் இதயப் பலகையிலும் பலிபீடக் கொம்புகளிலும் பொறிக்கப்பட்டுள்ளது.

2தழைத்த மரங்களின் கீழும், உயர்ந்த குன்றுகளின் மேலும், திறந்த வெளி மலைகள் மீதும் உள்ள அவர்கள் பலிபீடங்களையும் அசேராக் கம்பங்களையும் அவர்களின் பிள்ளைகளே நினைவுகூருகின்றார்கள்.

3ஆகவே, நாடெங்கும் செய்யப்படும் பாவங்களுக்கு ஈடாக உன் செல்வங்களையும் கருவூலங்களையும் தொழுகைமேடுகளையும் கொள்ளைப்பொருள் ஆக்குவேன்.

4நான் உனக்கு உரிமைச் சொத்தாகக் கொடுத்துள்ள நாட்டின்மேல் உனக்குள்ள பிடி தளரும். முன்பின் தெரியாத ஒரு நாட்டில், உன் எதிரிகளுக்கு நீ அடிபணியச் செய்வேன். ஏனெனில், நீ என்னில் மூட்டியுள்ள கோபக்கனல் என்றென்றும் கொழுந்துவிட்டு எரியும்.

அறிவுரைகள்

5ஆண்டவர் கூறுவது இதுவே:

மனிதரில் நம்பிக்கை வைப்போரும்

வலுவற்ற மனிதரில் தம் வலிமையைக்

காண்போரும் சபிக்கப்படுவர்.

6அவர்கள் பாலைநிலத்துப்

புதர்ச்செடிக்கு ஒப்பாவர்.

பருவ காலத்திலும்

அவர்கள் பயனடையார்;

பாலை நிலத்தின்

வறண்ட பகுதிகளிலும்

யாரும் வாழா உவர் நிலத்திலுமே

அவர்கள் குடியிருப்பர்.

7ஆண்டவரில் நம்பிக்கை வைப்போர்

பேறுபெற்றோர்;

ஆண்டவரே அவர்களது நம்பிக்கை.

8அவர்கள் நீர் அருகில் நடப்பட்ட

மரத்துக்கு ஒப்பாவர்;

அது நீரோடையை நோக்கி

வேர் விடுகின்றது.

வெப்பமிகு நேரத்தில்

அதற்கு அச்சமில்லை;

அதன் இலைகள்

பசுமையாய் இருக்கும்;

வறட்சிமிகு ஆண்டிலும்

அதற்குக் கவலை இராது;

அது எப்போதும் கனி கொடுக்கும்.

9இதயமே அனைத்திலும்

வஞ்சகம் மிக்கது;

அதனை நலமாக்க முடியாது.

அதனை யார்தான் புரிந்துகொள்வர்?

10ஆண்டவராகிய நானே

இதயச் சிந்தனைகளை ஆய்பவர்;

உள்ளுணர்வுகளைச்

சோதித்து அறிபவர்.

ஒவ்வொருவரின் வழிகளுக்கும்

செயல்களின் விளைவுக்கும் ஏற்றவாறு

நடத்துபவர்.

11நேர்மையற்ற வழிகளில்

செல்வம் சேர்ப்போர்

தாம் இடாத முட்டைகளை அடைகாக்கும்

கௌதாரி போன்றோர்;

தம் வாழ்நாள்களின் நடுவிலேயே

அவர்கள் அச்செல்வத்தை

இழந்துவிடுவர்;

இறுதியில் அவமதிப்புக்கு உள்ளாவர்.

12“நம் திருத்தூயகம்

தொடக்கத்திலிருந்தே

உயர்ந்த இடத்தில் அமைந்த,

மாட்சிமிகு அரியணையாய் உள்ளது.”

13ஆண்டவரே!

இஸ்ரயேலின் நம்பிக்கையே!

உம்மைப் புறக்கணித்தோர் யாவரும்

வெட்கமுறுவர்;

உம்மைவிட்டு அகன்றோர்

தரையில் எழுதப்பட்டோர் ஆவர்;

ஏனெனில், அவர்கள்

வாழ்வளிக்கும் நீரூற்றாகிய

ஆண்டவரைப் புறக்கணித்தார்கள்.

எரேமியாவின் மன்றாட்டு

14ஆண்டவரே, என்னை நலமாக்கும்;

நானும் நலமடைவேன்.

என்னை விடுவியும்;

நானும் விடுதலை அடைவேன்;

ஏனெனில், நீரே என் புகழ்ச்சிக்குரியவர்.

15இதோ அவர்கள் என்னிடம்,

“ஆண்டவரின் வாக்கு எங்கே?

அது நிறைவேறட்டுமே” என்கிறார்கள்.

16அவர்கள்மேல்

தீமையை அனுப்ப வேண்டும் என்று

நான் உம்மை நெருக்கவில்லை;

கொடுமையின் நாளை

நான் விரும்பவில்லை;

நான் கூறியவைதாம்

உமக்குத் தெரியமே;

அவை உம்முன்தாமே கூறப்பட்டன.

17நீ எனக்குத் திகிலாய் இராதீர்;

தீமையின் நாளில் நீரே என் புகலிடம்.

18என்னைத் துன்புறுத்துவோர்

வெட்கம் அடையட்டும்;

நானோ வெட்கம் அடையாதிருப்பேனாக!

அவர்கள் திகிலுறட்டும்;

நானோ திகிலுறாதிருப்பேனாக.

தீமையின் நாளை

அவர்கள்மேல் வரச்செய்யும்;

இரட்டிப்பான அழிவு

அவர்கள்மேல் வரட்டும்;

அவர்கள் அடியோடு ஒழியட்டும்.

ஓய்வுநாளை அனுசரித்தல்

19ஆண்டவர் கூறியது இதுவே: நீ போய் யூதாவின் அரசர்களின் உள்ளே வருவதற்கும் வெளியே செல்வதற்கும் பயன்படும் பொதுமக்கள் வாயிலிலும் எருசலேமின் வாயில்கள் அனைத்திலும் நின்றுகொள்.

20நீ அவர்களுக்கு அறிவிக்க வேண்டியது; இவ்வாயில்கள் வழியாகச் செல்லும் யூதாவின் அரசர்களே, யூதாவின் அனைத்து மக்களே, எருசலேமில் வாழ்வோரே, ஆண்டவரின் வாக்கைக் கேளுங்கள்.

21ஆண்டவர் கூறுவது இதுவே; உங்கள் உயிரை முன்னிட்டு ஓய்வுநாளில் சுமை தூக்க வேண்டாம்; அவற்றை எருசலேமின் வாயில்கள் வழியாகக் கொண்டு செல்லவும் வேண்டாம்.

22ஓய்வுநாளில் உங்கள் வீடுகளிலிருந்தும் சுமைகள் தூக்கிச் செல்லவேண்டாம். அன்று எந்த வேலையும் செய்யவேண்டாம். உங்கள் மூதாதையருக்கு நான் கொடுத்த கட்டளைப்படி ஓய்வுநாளைத் தூய்மையாகக் கடைப்பிடியுங்கள்.

23அவர்களோ எனக்குச் செவி சாய்க்கவில்லை; நான் சொன்னதைக் கவனிக்கவில்லை; கேட்டுக் கற்றுக்கொள்ளாதபடி முரட்டுப் பிடிவாதம் செய்தனர்.

24ஆண்டவர் கூறுவது; நீங்கள் எனக்குச் செவிகொடுத்து ஓய்வு நாளில் இந்நகரின் வாயில்கள் வழியாகச் சுமை தூக்கிச் செல்லாது, வேலை எதுவும் செய்யாது, ஓய்வுநாளைத் தூய்மையாகக் கடைப்பிடிப்பீர்களாகில்,

25தாவீதின் அரியணையில் அமரும் அரசர்களும் இளவரசர்களும் இந்நகரின் வாயில் வழியாகச் செல்வார்கள்; குதிரைகளிலும் தேர்களிலும் ஏறிச் செல்வார்கள். அவர்களோடு தலைவர்களும் யூதா நாட்டினரும் எருசலேம்வாழ் மக்களும் செல்வார்கள். இந்நகரில் என்றுமே மக்கள் குடியிருப்பார்கள்.

26அப்போது யூதாவின் நகர்களிலிருந்தும் எருசலேமின் சுற்றுப்புறங்களிலிருந்தும் பென்யமின் நாட்டிலிருந்தும் செபேலா சமவெளியிலிருந்தும் மலை நாட்டிலிருந்தும் நெகேபிலிருந்தும் வருபவர்கள் எரி பலிகளையும் மற்றப் பலிகளையும் உணவுப் படையலையும் தூபத்தையும் நன்றிப் பலிகளையும் ஆண்டவர் இல்லத்துக்குக் கொண்டுவருவார்கள்.

27ஆனால், நீங்கள் ஓய்வுநாளைத் தூய்மையாகக் கடைப்பிடிக்கவேண்டும்; அன்று எருசலேமின் வாயில்கள் வழியாகச் சுமை தூக்கிச் செல்லக் கூடாது; எனினும் என்னுடைய சொல்லுக்கு நீங்கள் செவி கொடுக்காமல் இருந்தால், நான் எருசலேமின் வாயில்களில் தீப்பற்றியெரியச் செய்வேன்; அது நகரின் அரண்மனைகளை அழித்துவிடும்; அத்தீயோ அணையாது.


17:8 திபா 1:3.
17:10 திபா 62:12; திவெ 2:23.
17:21 நெகே 13:15-22.
17:22 விப 20:8-10; இச 5:12-14.
Pradeep Augustine Avatar

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Stay Connected

Recently added Bibles

Download our App

Get our official Catholic Gallery app for daily Mass readings, prayers & more

Your Faith. Your Way.
Download the Catholic Gallery app for offline Mass readings, daily prayers, and audio Bible — all in one place.
Available on:
No Thanks