Home » எரேமியா அதிகாரம் – 13 – திருவிவிலியம்

எரேமியா அதிகாரம் – 13 – திருவிவிலியம்

எரேமியா அதிகாரங்கள் (Tamil Bible: Ecumenical Tamil Translation – ETB)

Click the play button to listen or click the Download button to save a copy.

நார்ப்பட்டுக் கச்சையின் அடையாளம்

1ஆண்டவர் என்னிடம் கூறியது இதுவே: “நீ உனக்காக நார்ப்பட்டாலான ஒரு கச்சையை வாங்கி அதை உன் இடையில் கட்டிக் கொள். அதைத் தண்ணீரில் நனைக்காதே.”

2ஆண்டவர் சொற்படி நான் கச்சையை வாங்கி அதை என் இடையில் கட்டிக்கொண்டேன்.

3எனக்கு ஆண்டவர் வாக்கு இரண்டாம் முறை அருளப்பட்டது:

4“நீ வாங்கி உன் இடையில் கட்டிக்கொண்டுள்ள கச்சையை எடுத்துக் கொள்; எழுந்து பேராத்து* ஆற்றுக்குச் செல். அங்கு அதனைப் பாறை இடுக்கில் மறைத்துவை.”

5ஆண்டவர் எனக்குக் கட்டளையிட்டபடி நான் சென்று பேராத்தில் அதனை மறைத்துவைத்தேன்.

6பல நாள்களுக்குப் பின்னர் ஆண்டவர் என்னிடம் கூறியது: “எழுந்து பேராத்துக்குச் சென்று நான் உன்னிடம் மறைத்து வைக்கக் கட்டளையிட்ட கச்சையை அங்கிருந்து எடுத்துவா.”

7அவ்வாறே நான் பேராத்திற்குச் சென்று, அங்கு மறைத்துவைத்திருந்த இடத்திலிருந்து கச்சையைத் தோண்டி எடுத்தேன். அந்தக் கச்சையோ எதற்கும் பயன்படாத அளவில் இற்றுப் போயிருந்தது.

8அப்போது ஆண்டவரின் வாக்கு எனக்கு அருளப்பட்டது:

9“ஆண்டவர் கூறுவது இதுவே: இவ்வாறே யூதா, எருசலேமின் ஆணவத்தை அழிப்பேன்.

10என் சொற்களுக்குச் செவிகொடுக்க மறுத்து, தங்கள் இதயப்பிடிவாதத்தின்படி நடந்து, வேற்றுத் தெய்வங்களைப் பின்பற்றி, அவற்றிற்கு ஊழியம் செய்து வழிபட்டுவரும் இத்தீய மக்கள் எதற்கும் பயன்படாத இந்தக் கச்சையைப் போல் ஆவார்கள்.

11கச்சை ஒருவரது இடையோடு ஒட்டியிருப்பதுபோல, இஸ்ரயேல், யூதா வீட்டார் யாவரும் என்னோடு ஒன்றித்திருக்கச் செய்தேன். அவர்கள் எனக்கு மக்களாகவும் பெயராகவும் புகழாகவும் மாட்சியாகவும் இருக்கச் செய்தேன். அவர்களோ எனக்குச் செவி சாய்க்கவில்லை,” என்கிறார் ஆண்டவர்.

திராட்சை இரசச் சாடியின் அடையாளம்

12நீ அவர்களுக்கு இந்த வாக்கைச் சொல்: “இஸ்ரயேலின் கடவுளாகிய ஆண்டவர் கூறுவது இதுவே: சித்தைகள் யாவும் இரசத்தால் நிரப்பப்படும்,” அவர்களோ ‘சித்தைகள் யாவும் இரசத்தால் நிரப்பப்படும் என்பது எங்களுக்கு உறுதியாகத் தெரியாதா?’ என்று உன்னிடம் கூறுவார்கள்.

13அப்போது நீ அவர்களுக்குக் கூற வேண்டியது; “ஆண்டவர் கூறுவது இதுவே; இதோ தாவீதின் அரியணையில் அமர்ந்திருக்கும் அரசர், குருக்கள், இறைவாக்கினர், எருசலேம் வாழ் மக்கள் ஆகிய இந்நாட்டுக் குடிமக்கள் யாவரையும் போதையில் ஆழ்த்துவேன்.

14அவர்களை ஒருவரோடு ஒருவர் மோதச் செய்வேன். தந்தையரும் புதல்வரும் தங்களுக்குள் மோதிக்கொள்வர். அவர்களின் அழிவை முன்னிட்டு நான் அவர்களுக்கு இரக்கம் காட்டவோ அவர்களைக் காப்பாற்றவோ அவர்களுக்குப் பரிவு காட்டவோ மாட்டேன், என்கிறார் ஆண்டவர்.

அச்சுறுத்தலும் எச்சரிக்கையும்

15செவிகொடுத்துக் கேளுங்கள்!

செருக்குறாதீர்கள்;

ஏனெனில், ஆண்டவர் பேசிவிட்டார்.

16உங்கள் கடவுளாகிய ஆண்டவரை

பெருமைப்படுத்துங்கள்;

உங்கள் கடவுளாகிய ஆண்டவர்

இருள்படரச் செய்யுமுன்பும்,

உங்கள் பாதங்கள் இருளடைந்த

மலைகளில் இடறுமுன்பும்

அவரை மாட்சிமைப் படுத்துங்கள்.

நீங்கள் ஒளியை எதிர்பார்த்து

நிற்கும் போதே

இருளின் நிழல்கள் சூழச்செய்வார்;

இருண்ட மேகங்கள் எழச்செய்வார்.

17ஆனால் நீங்கள் இதற்குச்

செவி கொடுக்காவிட்டால்,

உங்கள் செருக்கை முன்னிட்டு

என் உள்ளம் மறைவில் அழும்;

அழுகை மிகுதியால் கண்களிலிருந்து

கண்ணீர் வழிந்தோடும்;

எனெனில், ஆண்டவரின் மந்தை

கைப்பற்றப்பட்டுள்ளது.

18அரசனுக்கும் அரசனின்

அன்னைக்கும் சொல்லுங்கள்;

கீழே அமருங்கள். ஏனெனில்

உங்கள் மேன்மையின் மணிமுடி

உங்கள் தலைகளிலிருந்து

வீழ்ந்துவிட்டது.

19நெகேபைச் சார்ந்த நகர்கள் எல்லாம்

அடைபட்டுவிட்டன;

அவற்றைத் திறப்பார் யாருமில்லை;

யூதா முழுவதும்

நாடுகடத்தப்பட்டுள்ளது.

அது முற்றிலுமாய்

நாடு கடத்தப்பட்டுள்ளது.

ஐயகோ எருசலேமே!

20உன் கண்களை உயர்த்தி

வடக்கிலிருந்து வருபவர்களைப் பார்;

உனக்குத் தரப்பட்ட மந்தை — உன்

பெருமைக்குரிய மந்தை — எங்கே?

21உன் நண்பர்களாக நீ

வளர்த்து விட்டவர்களே உன்

தலைவர்களாக ஏற்படுத்தப்படும்போது

நீ என்ன சொல்வாய்?

பேறுகாலப் பெண்ணின் வேதனை

உன்னைப் பற்றிக் கொள்ளாமல் போகுமா?

22இவையெல்லாம் எனக்கு

ஏன் நிகழ வேண்டும் என

நீ உன் உள்ளத்தில் சிந்திக்கலாம்;

உன் குற்றம் பெரிது! அதனால்தான்

உன் ஆடை அகற்றப்பட்டுள்ளது!

உன் கால்கள் புண்படுத்தப்பட்டன.

23எத்தியோப்பியர் தம் நிறத்தை

மாற்றிக் கொள்ள முடியுமா?

சிறுத்தைகள் தம் புள்ளிகளை

அகற்றிக்கொள்ள முடியுமா?

அப்படி முடியுமானால்,

தீமையே செய்து பழகிவிட்ட

நீங்களும் நன்மை செய்ய முடியும்.

24பாலைநிலக் காற்றில்

பறந்து போகும் பதர்போல்

நான் உங்களைச்* சிதறடிப்பேன்.

25இதுவே உன் கதி!

நான் அளந்து கொடுக்கும் உன் பங்கு!

ஏனெனில், நீ என்னை மறந்து

பொய்யை நம்பினாய்,

என்கிறார் ஆண்டவர்.

26உன் ஆடைகளை

உன் முகத்துக்கு மேல் தூக்கிக்

கழற்றிவிடுவேன்;

உன் அவமானம் காணப்படும்.

27உன் அருவருக்கத்தக்க செயல்களாகிய

விபசாரங்களையும்

காமக் கனைப்புகளையும்

பரந்த வெளியில் குன்றுகளின்மேல்

நீ செய்த கீழ்த்தரமான

வேசித்தனத்தையும் நான் கண்டேன்;

ஐயகோ! எருசலேமே!

நீ தூய்மை பெறுவது எந்நாளோ?


13:4 ‘யூப்பிரத்தீசு’ என்பது மறுபெயர்.
13:24 ‘அவர்களை’ என்பது எபிரேய பாடம்.
Pradeep Augustine Avatar

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Stay Connected

Recently added Bibles

Download our App

Get our official Catholic Gallery app for daily Mass readings, prayers & more

Your Faith. Your Way.
Download the Catholic Gallery app for offline Mass readings, daily prayers, and audio Bible — all in one place.
Available on:
No Thanks