Home » தொடக்கநூல் அதிகாரம் – 14 – திருவிவிலியம்

தொடக்கநூல் அதிகாரம் – 14 – திருவிவிலியம்

தொடக்கநூல் அதிகாரங்கள் (Tamil Bible: Ecumenical Tamil Translation – ETB)

Click the play button to listen or click the Download button to save a copy.

ஆபிராம் லோத்தை மீட்டல்

1அம்ராபல் சினயார் அரசனாகவும் அரியோக்கு எல்லாசரின் அரசனாகவும் கெதர்லகோமர் ஏலாமின் அரசனாகவும் திதால் கோயிமின் அரசனாகவும் இருந்தபொழுது,

2அவர்கள் சோதோம் அரசன் பெரா, கொமோரா அரசன் பிர்சா, அதிமா அரசன் சினாபு, செபோயிம் அரசன் செமேபர், பேலா அரசன் சோவார் ஆகியோருக்கு எதிராகப் போர் தொடுத்தனர்.

3அவர்கள் அனைவரும் இப்பொழுது உப்புக்கடலாக இருக்கும் சித்திம் பள்ளத்தாக்கில் ஒன்று திரண்டனர்.

4பன்னிரண்டு ஆண்டுகள் அவர்கள் கெதர்லகோமருக்குப் பணிந்திருந்தனர். ஆனால், பதின்மூன்றாம் ஆண்டில் அவனுக்கு எதிராகக் கிளர்ச்சி செய்தனர்.

5ஆனால், பதினான்காம் ஆண்டில் கெதர்லகோமரும் அவனுடன் இருந்த அரசர்களும் வந்து அஸ்தரோத்து கர்னயிமிலிருந்த இரபாயியரையும், காமிலிருந்த சூசியரையும், சாவே கிரியாத்தயிமிலிருந்த ஏமியரையும்

6சேயிர் மலைப்பகுதியில் இருந்த ஓரியரையும் பாலை நிலத்தின் எல்லையில் இருந்த ஏல்பாரான்வரை துரத்திச் சென்று முறியடித்தனர்.

7அவர்கள் திரும்பும் வழியில் காதேசு என்ற ஏன் மிட்சுபாற்றுக்கு வந்து அமலேக்கியரின் நாடு முழுவதையும் அச்சோன் தாமாரில் வாழ்ந்த எமோரியரையும் அழித்தனர்.

8அப்பொழுது சோதோம் அரசனும் கொமோரா அரசனும் அதிமா அரசனும் செபோயிம் அரசனும் பேலா அரசன் சோவாரும் சென்று,

9ஏலாம் அரசன் கெதர்லகோமருடனும் கோயிம் அரசன் திதாலுடனும் சினயார் அரசன் அம்ராபலுடனும் எல்லாசர் அரசன் அரியோக்குடனும்-ஆக, நான்கு அரசர்கள் ஐந்து அரசர்களுக்கு எதிராக சித்திம் பள்ளத்தாக்கில் போர்தொடுத்தனர்.

10இந்தச் சித்திம் பள்ளத்தாக்கில் கீல் குழிகள் மிகப்பல இருந்தன. சோதோம் அரசனும் கொமோரா அரசனும் தப்பி ஓடியபொழுது அவற்றினுள் விழுந்தனர். மற்றவர்கள் தப்பிப் பிழைப்பதற்கு மலையை நோக்கி ஓடினர்.

11வெற்றி பெற்றவர்கள் சோதோம், கொமோராவில் இருந்த செல்வங்கள், உணவுப் பண்டங்கள் அனைத்தையும் கவர்ந்து கொண்டு அங்கிருந்து வெளியேறினர்.

12அவர்கள் சோதோமில் வாழ்ந்த ஆபிராமின் சகோதரன் மகனான லோத்தையும் அவர் செல்வங்களையும் கவர்ந்து கொண்டு சென்றனர்.

13தப்பிவந்த ஒருவன் எபிரேயரான ஆபிராமிடம் இச்செய்தியை அறிவித்தான். அப்பொழுது ஆபிராம் எசுக்கோல், ஆனேர் ஆகியோரின் சகோதரனான மம்ரே என்ற எமோரியனின் கருவாலி மரத்தோப்பில் வாழ்ந்து வந்தார். அவர்கள் ஆபிராமுடன் உடன்படிக்கை செய்து கொண்டவர்கள்.

14தம் உறவினர் கைதியாகக் கொண்டு செல்லப்பட்டார் என்பதைக் கேள்வியுற்றதும், ஆபிராம் தம் வீட்டில் பிறந்து வளர்ந்து பயிற்சி பெற்ற முந்நூற்றுப் பதினெட்டுப் பேரைத் திரட்டிக் கொண்டு தாண்வரை அவர்களைத் துரத்திச் சென்றார்.

15அவரும் அவர் ஆள்களும் அணிஅணியாகப் பிரிந்து இரவில் அவர்களைத் தாக்கித் தோற்கடித்தனர். தமஸ்குக்கு வடக்கே இருக்கும் ஓபாவரை அவர்களைத் துரத்திச் சென்றனர்.

16அவர் எல்லாச் செல்வங்களையும் மீட்டுக் கொண்டு வந்தார். தம் உறவினரான லோத்தையும் அவர் செல்வங்களையும் பெண்களையும் ஆள்களையும் மீட்டுக் கொண்டு வந்தார்.

ஆபிராமுக்கு மெல்கிசெதேக்கின் ஆசி

17ஆபிராம் கெதர்லகோமரையும் அவனுடன் இருந்த அரசர்களையும் முறியடித்துத் திரும்பியபொழுது ‘அரசர் பள்ளத்தாக்கு’ என்ற சாவே பள்ளத்தாக்கில் அவரைச் சந்திக்கச் சோதோம் அரசன் வந்தான்.

18அப்பொழுது சாலேம் அரசர் மெல்கிசெதேக்கு அப்பமும் திராட்சை இரசமும் கொண்டு வந்தார். அவர் ‘உன்னத கடவுளின்’ அர்ச்சகராக இருந்தார்.

19அவர் ஆபிராமை வாழ்த்தி,

“விண்ணுலகையும் மண்ணுலகையும்

தோற்றுவித்த உன்னத கடவுள்

ஆபிராமிற்கு ஆசி வழங்குவாராக!

20உன் எதிரிகளை உன்னிடம்

ஒப்புவித்த உன்னத கடவுள்

போற்றி! போற்றி!” என்றார்.

அப்பொழுது ஆபிராம் எல்லாவற்றிலிருந்தும் அவருக்குப் பத்தில் ஒரு பங்கைக் கொடுத்தார்.

21சோதோம் அரசன் ஆபிராமிடம், “ஆள்களை என்னிடம் ஒப்படைத்துவிடும். ஆனால், செல்வங்களை நீரே வைத்துக் கொள்ளும்” என்றான்.

22அதற்கு ஆபிராம் சோதோம் அரசனிடம், “விண்ணுலகையும் மண்ணுலகையும் தோற்றுவித்த உன்னத கடவுளாகிய ஆண்டவருக்கு ஆணையிட்டுக் கூறுகிறேன்;

23‘நான்தான் ஆபிராமைச் செல்வன் ஆக்கினேன்’ என்று நீர் சொல்லாதபடி, உமக்குரிய அனைத்திலிருந்தும் ஒரு நூல் துண்டையோ, காலணி வாரையோ, நான் எடுத்துக் கொள்ளமாட்டேன்.

24இளைஞர்கள் உண்டதைத் தவிர எனக்கு எதுவும் வேண்டாம். ஆனால், என்னுடன் வந்த ஆனேர், சுக்கோல், மம்ரே ஆகியோர் அவர்கள் பங்கை எடுத்துக் கொள்ளட்டும்” என்றார்.


14:18-20 எபி 7:1-10.
Pradeep Augustine Avatar

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Stay Connected

Recently added Bibles

Download our App

Get our official Catholic Gallery app for daily Mass readings, prayers & more

Your Faith. Your Way.
Download the Catholic Gallery app for offline Mass readings, daily prayers, and audio Bible — all in one place.
Available on:
No Thanks