Home » 1 மக்கபேயர் அதிகாரம் – 13 – திருவிவிலியம்

1 மக்கபேயர் அதிகாரம் – 13 – திருவிவிலியம்

1 மக்கபேயர் அதிகாரங்கள் (Tamil Bible: Ecumenical Tamil Translation – ETB)

Click the play button to listen or click the Download button to save a copy.

5. சீமோனின் தலைமை

சீமோன் தலைவராதல்

1யூதேயா நாட்டின்மீது படையெடுத்து அதை அழித்தொழிக்கும்படி திரிபோ பெரும் படை திரட்டியிருந்தான் என்று சீமோன் கேள்விப்பட்டார்;

2மக்கள் அஞ்சி நடுங்கியிருப்பதைக் கண்டு அவர் எருசலேம் சென்று மக்களை ஒன்றுசேர்த்தார்.

3அவர்களுக்கு அவர் ஊக்கமளித்து, “நானும் என் சகோதரர்களும் என் தந்தையின் குடும்பமும் திருச்சட்டத்துக்காகவும் திருஉறைவிடத்துக்காகவும் செய்துள்ள அனைத்தையும் நீங்கள் அறிவீர்கள்; நாங்கள் புரிந்துள்ள போர்களையும் எதிர்கொண்ட இடுக்கண்களையும் அறிவீர்கள்.

4இதைமுன்னிட்டே என் சகோதரர்கள் அனைவரும் இஸ்ரயேலுக்காக மடிந்தார்கள். இப்பொது நான் மட்டுமே எஞ்சியிருக்கிறேன்.

5எந்தத் துன்பம் நேர்ந்தாலும் என் உயிரை நான் காப்பாற்றிக்கொள்ள முனைவேன் எனச் சிறிதும் எண்ண வேண்டாம்; ஏனென்றால் என் சகோதரர்களைவிட நான் சிறந்தவன் அல்லேன்.

6ஆதலால் என் இனத்தார், திருஉறைவிடம், உங்கள் மனைவி மக்கள் ஆகியோருக்காக வேற்றினத்தார் எல்லாரையும் பழிவாங்குவேன்; ஏனெனில் அவர்கள் நம்மீது கொண்ட பகைமையினால் நம்மை அழித்தொழிக்கக் கூடியிருக்கிறார்கள்” என்றார்.

7இச்சொற்களைக் கேட்டதும் மக்கள் புத்துணர்வு பெற்றார்கள்;

8எல்லோரும் உரத்த குரலில், “உம் சகோதரர்களாகிய யூதாவுக்கும் யோனத்தானுக்கும் பதிலாக நீரே எங்கள் தலைவர்.

9நீர் எங்கள் போர்களை நடத்தும்; நீர் சொல்வதெல்லாம் நாங்கள் செய்வோம்” என்றார்கள்.

10ஆகவே சீமோன் எல்லாப் போர்வீரர்களையும் ஒன்றுசேர்த்து எருசலேமின் மதில்களைக் கட்டி முடிக்க விரைந்தார்; சுற்றிலும் அதை வலுப்படுத்தினார்;

11அப்சலோமின் மகன் யோனத்தானையும் அவருடன் திரளான படையையும் யாப்பாவுக்கு அனுப்பினார். யோனத்தான் அங்கு இருந்தவர்களை வெளியே துரத்திவிட்டு அவ்விடத்தில் தங்கியிருந்தார்.

12திரிபோ தாலமாயை விட்டுப் புறப்பட்டுத் திரளான படையோடு யூதேயா நாட்டின்மீது படையெடுத்தான்; சிறைப்பட்டிருந்த யோனத்தானைத் தன்னுடன் அழைத்துச் சென்றான்.

13சமவெளிக்கு எதிரில் அதிதாவில் சீமோன் பாசறை அமைத்தார்.

14அவர்தம் சகோதரரான யோனத்தானுக்குப் பதிலாகத் தலைவரானார் என்றும் தன்னுடன் போர்செய்யவிருக்கிறார் என்றும் திரிபோ அறிந்தான்; ஆகவே அவரிடம் தூதர்களை அனுப்பி,

15“உம் சகோதரரான யோனத்தான் வகித்திருந்த பொறுப்புகள் தொடர்பாக அரசு கருவூலத்துக்கு அவர் செலுத்தவேண்டிய பணத்தை முன்னிட்டு, அவரை நாங்கள் சிறைப்படுத்தியிருக்கிறோம்.

16அவர் விடுதலை பெற்றபின் எங்களுக்கு எதிராகக் கிளர்ச்சி செய்யமாட்டார் என்பதை உறுதிப்படுத்துவதற்காக, நீர் நான்கு டன்* வெள்ளியோடு அவருடைய மைந்தர்களுள் இருவரைப் பிணையாக இப்போது அனுப்பும்; நாங்கள் அவரை விடுவிக்கிறோம்” என்று சொல்லச் சொன்னான்.

17அவர்கள் வஞ்சகமாய்ப் பேசுகிறார்கள் என்று சீமோன் அறிந்திருந்தும் இஸ்ரயேல் மக்களின் கடும் பகைக்குத் தாம் ஆளாகாதபடி பணத்தையும் பிள்ளைகளையும் கொண்டுவரக் கட்டளையிட்டார்.

18ஏனெனில், “சீமோன் பணத்தையும் பிள்ளைகளையும் திரிபோவுக்கு அனுப்பாததால்தானே யொனத்தான் மடிந்தார்” என மக்கள் சொல்லக்கூடும் என்று அஞ்சினார்.

19எனவே பிள்ளைகளையும் நான்கு டன் வெள்ளியையும் சீமோன் அனுப்பிவைத்தார். ஆனால் திரிபோ தான் சொன்ன சொல்லை மீறி யோனத்தானை விடுதலை செய்யவில்லை.

20பிறகு நாட்டின்மீது திரிபோ படையெடுத்து அழிப்பதற்கு அதனுள் புகுந்தான்; அதோராவுக்குப் போகும் வழியாகச் சுற்றிச் சென்றான். அவன் சென்ற இடமெல்லாம் சீமோனும் தம் படையோடு அவனுக்கு எதிராக அணிவகுத்துச் சென்றார்.

21எருசலேம் கோட்டைக்குள் இருந்த பகைவர்கள், பாலைநிலம் வழியாய்த் தங்களிடம் வருவதற்கும் உணவுப்பொருள்களைக் கொடுத்தனுப்புவதற்கும் திரிபோவிடம் தூதர்களை அனுப்பிக்கொண்டிருந்தார்கள்.

22ஆகவே திரிபோ தன் குதிரைவீர்களை அனுப்பிவைக்க ஏற்பாடு செய்தான்; ஆனால் அன்று இரவு பனிமிகுதியாய்ப் பெய்ததால் அவனால் போகமுடியவில்லை; எனவே அவன் புறப்பட்டுக் கிலயாதுக்குச் சென்றான்.

23பாஸ்காமா அருகே வந்தபோது அவன் யோனத்தானைக் கொன்றான். அவ்விடத்திலேயே அவர் அடக்கம் செய்யப்பட்டார்.

24பிறகு திரிபோ தன் நாட்டுக்குத் திரும்பிச் சென்றான்.

25சீமோன் தம் சகோதரரான யோனத்தானின் எலும்புகளை எடுத்துவரச் செய்து, தம் மூதாதையரின் நகரமாகிய மோதயினில் அவற்றை அடக்கம் செய்தார்.

26இஸ்ரயேலர் எல்லாரும் பெரிதும் துயரம் கொண்டாடினர்; அவருக்காகப் பல நாள் அழுது புலம்பினர்.

27சீமோன் தம் தந்தையினுடையவும் சகோதரர்களுடையவும் கல்லறைக்குமேல் முன்னும் பின்னும் பளபளப்பான கற்கள் பதிக்கப்பட்ட நினைவுமண்டபம் ஒன்றை எழுப்பினார். தொலையிலிருந்து பார்க்கக்கூடிய அளவு அது உயர்ந்திருந்தது.

28தம் தாய் தந்தைக்கும் நான்கு சகோதரர்களுக்கும் எதிர் எதிராக ஏழு கூர்ங்கோபுரங்களை அவர் எழுப்பினார்;

29இந்தக் கூர்ங்கோபுரங்களுக்குவேலைப்பாடுகள் கொண்ட பின்னணி அமைப்பு ஒன்றை நிறுவினார்; உயர்ந்த தூண்களை எழுப்பி அவற்றின்மேல் நிலையான நினைவுச் சின்னமாக இருக்கும்படி படைக்கலங்களைப் பொறித்தார்; கடற்பயணம் செய்யும் யாவரும் காணும்படி படைக்கலங்களுக்கு அருகே கப்பல்களைச் செதுக்கிவைத்தார்.

30அவர் மோதயின் நகரில் கட்டிய இந்தக் கல்லறை இந்நாள்வரை இருக்கிறது.

31இளைஞனான அந்தியோக்கு மன்னனுக்கு எதிராயத் திரிபோ சூழ்ச்சி செய்து அவனைக் கொன்றான்;

32அவனுக்குப் பதிலாக ஆசியாவின் அரசனாகி முடி புனைந்து நாட்டுக்குப் பேரிடர் விளைவித்தான்.

33சீமோன் யூதேயாவின் கோட்டைகளைக் கட்டி, சுற்றிலும் உயர்ந்த காவல்மாடங்கள், பெரிய மதில்கள், கதவுகள், தாழ்ப்பாள்கள் ஆகியவற்றை அமைத்துக் கோட்டைகளை வலுப்படுத்தினார்; கோட்டைகளுக்குள் உணவுப் பொருள்களைச் சேர்த்துவைத்தார்.

34பின்பு சிலரைத் தேர்ந்தெடுத்து நாட்டுக்கு வரிவிலக்குக் கோரும்படி அவர்களைத் தெமேத்திரியு மன்னனிடம் அனுப்பினார்; ஏனென்றால் திரிபோ கொள்ளையடிப்பது ஒன்றையே தன் தொழிலாகக் கொண்டிருந்தான்.

35தெமேத்திரி மன்னன் அதற்கு இணக்கம் தெரிவித்துப் பின்வரும் மடலைச் சீமோனுக்கு எழுதி அனுப்பினான்:

36“தலைமைக் குருவும் மன்னர்களின் நண்பருமான சீமோனுக்கும் மூப்பர்களுக்கும் யூத இனத்தாருக்கும் தெமேத்திரி மன்னர் வாழ்த்துக் கூறி எழுதுவது:

37நீங்கள் அனுப்பிவைத்த பொன்முடியையும் பொன் குருத்தோலையையும் பெற்றுக்கொண்டோம்; உங்களுடன் நிலைத்த சமாதானம் செய்துகொள்ளவும் உங்களுக்கு வரிவிலக்கு அளிக்குமாறு எம் அலுவலர்களுக்கு எழுதவும் ஆயத்தமாய் இருக்கிறோம்.

38நாம் உங்களோடு செய்துகொண்ட ஒப்பந்தங்களை உறுதிப்படுத்துகிறோம். நீங்கள் கட்டிய கோட்டைகள் உங்களுக்கே சொந்தமாகும்.

39இந்நாள்வரை நீங்கள் செய்துள்ள தவறுகளையும் குறைகளையும் மன்னிக்கிறோம்; நீங்கள் அரசருக்குச் செலுத்தவேண்டிய சிறப்பு வரியிலிருந்து விலக்கு வழங்குகிறோம். எருசலேமில் வேறு வரிகள் இதுவரை விதிக்கப்பட்டிருந்தால் அவையும் இனிமேல் தண்டப்படமாட்டா.

40உங்களிடையே தகுதியுள்ளவர்கள் அரசுப் பணிகளில் சேர்த்துக்கொள்ளப்படுவார்கள். நம்மிடையே அமைதி நிலவட்டும்.”

41நூற்று எழுபதாம் ஆண்டு* பிற இனத்தாரின் அடிமை நுகத்திலிருந்து இஸ்ரயேல் மக்கள் விடுதலை அடைந்தார்கள்.

42“பெரும் தலைமைக் குருவும், படைத்தளபதியும் யூதர்களின் தலைவருமான சீமோன் ஆட்சிசெலுத்தும் முதல் ஆண்டு” என்று இஸ்ரயேல் மக்கள் தங்கள் ஆவணங்களிலும் ஒப்பந்தங்களிலும் எழுதத் தொடங்கினார்கள்.

43அக்காலத்தில் சீமோன் கசாரா நகரை முற்றுகையிட்டுப் படைகளால் அதைச் சூழ்ந்துகொண்டார்; நகரக்கூடிய மரக்கோபுரம் ஒன்று செய்து அதை நகருக்குக் கொண்டுவந்து, காவல்மாடம் ஒன்றைத் தாக்கிக் கைப்பற்றினார்.

44அந்த மரக்கோபுரத்துக்குள் இருந்தவர்கள் நகரினுள் நுழைந்ததும் அங்குப் பெருங் குழப்பம் உண்டாயிற்று.

45நகரில் இருந்தவர்கள் துயரின் அடையாளமாகத் தங்களின் ஆடைகளைக் கிழித்துக்கொண்டு, தங்களை மனைவி மக்களோடு மதில் மேல் ஏறினார்கள்; உரத்த குரல் எழுப்பித் தங்களோடு சமாதானம் செய்து கொள்ளுமாறு சீமோனை வேண்டிக் கொண்டார்கள்;

46“நாங்கள் செய்த தீமைகளுக்கு ஏற்ப எங்களைத் தண்டியாது எங்கள்மீது மனமிரங்கும்” என்று கெஞ்சினார்கள்.

47சீமோனும் அவர்களோடு ஒப்பந்தம் செய்து போர்புரிவதை நிறுத்தினார்; ஆனால் அவர்களை நகருக்கு வெளியே துரத்திவிட்டுச் சிலைகள் இருந்த வீடுகளைத் தூய்மைப்படுத்திய பின்பு புகழ்ப்பாக்களைப் பாடி இறைவனைப் போற்றியவண்ணம் நகருக்குள் நுழைந்தார்;

48அதனின்று எல்லாத் தீட்டுகளையும் நீக்கி, திருச்சட்டப்படி ஒழுகிவந்தோரை அவ்விடம் குடியேற்றினார்; அதை மேலும் வலுப்படுத்தி அதில் தமக்கென ஓர் இல்லத்தையும் அமைத்துக்கொண்டார்.

49ஆனால் எருசலேம் கோட்டைக்குள் இருந்தவர்கள் வெளியே நாட்டுப்புறம் போகவும் நகருக்குள் வரவும், வாங்கவும் விற்கவும் தடைசெய்யப்பட்டிருந்தார்கள்; ஆதலால் அவர்கள் பசியால் வருந்தினார்கள்; பலர் பட்டினியால் மடிந்தனர்.

50இறுதியில் அவர்கள் சீமோனிடம் கதறியழுது தங்களுக்கு அமைதி அளிக்குமாறு அவரை வேண்டிக்கொண்டார்கள். அவரும் அவ்வாறே செய்தார்; ஆனால் அவர்களை அவ்விடத்தினின்று துரத்திவிட்டுக் கோட்டையைத் தீட்டுகளினின்று தூய்மைப்படுத்தினார்.

51இஸ்ரயேலின் பெரும் பகைவன் அழிக்கப்பட்டதால், நூற்று எழுபத்தோராம் ஆண்டு* இரண்டாம் மாதம் இருபத்துமூன்றாம் நாள் புகழ்ப்பாக்களையும் நன்றிப்பாக்களையும் பாடிக்கொண்டும் குருத்தோலைகளைப் பிடித்துக்கொண்டும், யாழ், கைத்தாளம், சுரமண்டலம் ஆகிய இசைக்கருவிகளை மீட்டிக்கொண்டும் கோட்டைக்குள் யூதர்கள் நுழைந்தார்கள்.

52அந்த நாளை ஆண்டுதோறும் அவர்கள் மகிழ்ச்சியாய்க் கொண்டாட வேண்டும் என்று சீமோன் கட்டளையிட்டார். கோட்டைக்கு அருகில் இருந்த கோவில் மலையை மேலும் வலுப்படுத்தி, அதில் அவரும் அவருடன் இருந்தவர்களும் வாழ்ந்தார்கள்.

53தம் மகன் யோவான் ஆண்மை கொண்டவராய் இருக்கக் கண்ட சீமோன் அவரைப் படைகளுக்கெல்லாம் தலைவராக ஏற்படுத்தினார். யோவான் கசாராவில் வாழ்ந்துவந்தார்.


13:37 2 மக் 14:4.
13:43 2 மக் 10:32-38.


13:16 ‘நூறு தாலந்து’ என்பது கிரேக்க பாடம்.
13:41 கி.மு. 142.
13:51 கி.மு. 141.
Pradeep Augustine Avatar

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Stay Connected

Recently added Bibles

Download our App

Get our official Catholic Gallery app for daily Mass readings, prayers & more

Your Faith. Your Way.
Download the Catholic Gallery app for offline Mass readings, daily prayers, and audio Bible — all in one place.
Available on:
No Thanks