Home » 1 குறிப்பேடு அதிகாரம் – 12 – திருவிவிலியம்

1 குறிப்பேடு அதிகாரம் – 12 – திருவிவிலியம்

1 குறிப்பேடு அதிகாரங்கள் (Tamil Bible: Ecumenical Tamil Translation – ETB)

Click the play button to listen or click the Download button to save a copy.

அரசர் தாவீதின் பென்யமின் குல ஆதரவாளர்

1தாவீது, கீசின் புதல்வர் சவுலிடமிருந்து தப்பித் தலைமறைவாய் சிக்லாகு என்னுமிடத்தில் தங்கியிருக்கையில், அவரிடம் வந்தவர்கள் இவர்களே; அவர்கள் போரில் தோள் கொடுத்த ஆற்றல்மிகு படை வீரர்.

2அவர்கள், வில்வீரர்; கவண்கல் எறிதற்கும், வில்லினால் அம்பு எய்தற்கும், வலக்கை இடக்கைப் பழக்கமானவர்களாயும் இருந்தனர். அவர்கள் பென்யமின் குலத்தவரான சவுலின் குடும்பத்தவர்கள்.

3அவர்களுள் முதன்மையானவரான அகியேசர், யோவாசு இருவரும் கிபயாவைச் சார்ந்த செமாயாவின் புதல்வர்கள். அஸ்மவேத்தின் புதல்வர்களான எசியேல், பெலலேற்று, பெராக்கா, அனதோத்தியரான எகூ;

4முப்பத்தின்மருள் ஆற்றல்மிக்கவரும் முப்பதின்மருக்குத் தலைவருமான கிபயோனியர் இஸ்மாயா, எரேமியா, யகசியேல், யோகனான், கெதேராவியரான யோசபாத்து,

5எலூசாய், எரிமோத்து, பெயேலியா, செமாரியா, அருப்பியரான செபத்தியா;

6எல்கானா, எஸ்யா, அசரியேல், யோவேசர், கோராகியரான யாசொபெயாம்;

7கெதோரியரான எரொகாமின் புதல்வர்கள் யோவேலா, செப்தியா.

காத்து குல ஆதரவாளர்

8போராற்றலும் படைத்திறனும் கேடயம், ஈட்டி கையாவதில் தேர்சியும், சிங்கத்தின் முகமும், மலைவாழ் கலைமானின் வேகமும் உடைய காத்தியர் சிலர் பாலைநில அரணில் இருந்த தாவீதிடம் வந்து சேர்ந்துகொண்டார்கள்.

9அவர்கள் யாரெனில்; தலைவரான ஏட்சேர், இரண்டாவது ஒபதியா, மூன்றாவது எலியாபு,

10நான்காவது மிஸ்மன்னா, ஐந்தாவது எரேமியா,

11ஆறாவது அத்தாய், ஏழாவது எலியேல்,

12எட்டாவது யோகனான், ஒன்பதாவது எல்சாபாது,

13பத்தாவது எரேமியா, பதினொன்றாவது மக்பன்னாய்.

14இவர்களே காத்தின் புதல்வர்களான படைத்தலைவர்கள். இவர்களில் சிறியவர் நூறுபேருக்கும், பெரியவர் ஆயிரம் பேருக்கும் சமம்.

15யோர்தான் நதி கரைபுரண்டு ஓடும் முதல் மாதத்தில் அதைக் கடந்து, பள்ளத்தாக்குகளில் வாழ்ந்துவந்த யாவரையும் கிழக்கேயும் மேற்கேயும் துரத்தி அடித்தவர்கள் இவர்களே.

பென்யமின், யூதா குல ஆதரவாளர்

16பென்யமின், யூதா புதல்வர்களில் சிலர் அரணில் இருந்த தாவீதிடம் வந்தனர்.

17தாவீது அவர்களைச் சந்திக்க வெளியே வந்து அவர்களை நோக்கி; “நீங்கள் சமாதான நோக்குடன் எனக்கு உதவி செய்ய வந்துள்ளீர்களென்றால், நான் உங்களை இதயப் பூர்வமாக ஏற்றுக்கொள்கிறேன். மாறாக, குற்றமற்றவனான என்னை என் எதிரிகள் கையில் ஒப்புவிக்கும் பொருட்டு வந்துள்ளீர்களென்றால் நம் முன்னோரின் கடவுள் அதைக் கண்டு தீர்ப்புக் கூறட்டும்” என்றார்.

18அப்போது முப்பதின்மர் தலைவராகிய அமாசாயை ஆவி ஆட்கொள்ளவே, அவர்; “தாவீதே, நாங்கள் உம்முடையவர்கள்; ஈசாயின் மகனே! நாங்கள் உம்மோடிருப்போம்; வெற்றி உமக்கே வெற்றி! ஏனெனில், உம் கடவுள் உமக்குத் துணைநிற்கிறார்” என்றார். அப்போது தாவீது அவர்களைச் சேர்த்துக்கொண்டு தம் படைக்குத் தலைவர்கள் ஆக்கினார்.

மனாசே குல ஆதரவாளர்

19தாவீது, பெலிஸ்தியரோடு சேர்ந்து சவுலுக்கு எதிராகப் போரிடச் செல்கையில், மனாசேயருள் சிலர் அவரோடு சேர்ந்து கொண்டனர். பெலிஸ்தியத் தலைவர்கள் தங்களுக்குள் ஆலோசனை செய்து, தாவிது தன் தலைவன் சவுலோடு சேர்ந்து கொண்டால், நம் தலை உருளும், என்று சொல்லி அவர் உதவி பெறாமல் அவரை அனுப்பிவிட்டார்கள்.

20தாவீது சீக்லாகுக்குத் திரும்பி வந்தபோது மனாசேயருள் ஆயிரத்தவர்க்குத் தலைவர்களான யோசபாத்து, எதியவேல், மிக்கேல், யோசபாத்து, எலிகூ, சில்தாய் ஆகியோர் மனாசேயைவிட்டு அவரோடு சேர்ந்து கொண்டனர்.

21அங்கே வந்த கொள்ளைக்காரரை முறியடிக்க இவர்கள் தாவீதுக்குத் துணை நின்றனர். ஏனெனில், இவர்கள் அனைவரும் வலிமைமிகு வீரர்கள்; ஆற்றல்மிக்க படைத்தலைவர்கள்.

22இவ்விதமாகத் தாவீதுக்கு உதவிசெய்வோர் ஒவ்வொரு நாளும் அவரிடம் வந்துசேர்ந்துகொண்டே இருந்தனர். எனவே, அவர்கள் கடவுளின் படையெனப் பெரும்படை ஆயினர்.

தாவீதின் படைத்திரள் அட்டவணை

23ஆண்டவரின் வாக்குறுதிப்படி சவுலின் அரசைத் தாவீதிடம் ஒப்படைக்குமாறு, எபிரோனில் இருந்த தாவீதிடம் வந்த படைக்கலன் தாங்கிய தலைவர்களின் எண்ணிக்கை இதுவே;

24யூதா புதல்வரில், கேடயமும் ஈட்டியும் தாங்கிப் போர்க்கோலம் பூண்ட ஆராயிரத்து எண்ணுறு பேர்;

25சிமியோன் புதல்வரில் போரிடத் தயாரான ஆற்றல் மிகு வீரர் ஏழாயிரத்து நூறு பேர்.

26லேவி புதல்வர்களில் நாலாயிரத்து அறுநூறு பேர்.

27ஆரோன் வழிவந்த தலைவரான யோயாதா மற்றும் அவரோடிருந்த மூவாயிரத்து எழுநூறு பேர்;

28ஆற்றல்மிகு இளைஞரான சாதோக்கு மற்றும் அவர் மூதாதை வீட்டைச் சார்ந்த அதிகாரிகள் இருபத்திரண்டு பேர்.

29பென்யமின் புதல்வரில், சவுலின் உறவினர் மூவாயிரம் பேர்; அவர்களில் பெரும்பான்மையோர் அதுவரை சவுலின் குடும்பத்திற்குச் சார்பாய் இருந்தவர்கள்;

30எப்ராயிம் புதல்வரில், ஆற்றல் மிகு வீரர் இருபதினாயிரத்து எண்ணூறு பேர், அவர்கள் தங்கள் மூதாதை வீட்டில் புகழ்பெற்றவர்கள்.

31மனாசேயின் பாதி குலத்தில், பதினெட்டாயிரம் பேர்; அவர்கள் பெயர்ப் பட்டியலின்படி தாவீதை அரசராக்குவதற்கு வந்தனர்.

32இசக்கார் புதல்வரில், இஸ்ரயேலர் செய்யவேண்டியது இன்னதென்று குறித்த காலத்தில் அறிவுரை வழங்கி வந்த நுண்ணறிவுடைய இரு நூறு தலைவர்கள் மற்றும் இவர்கள் ஆணைக்குக் கட்டுப்பட்டிருந்த இவர்களின் எல்லா உறவினர்;

33செபுலோன் புதல்வரில், அனைத்துப் போர்க்கலன்களுடன் ஒரே மனத்தோராய்ப் போருக்குத் தயார் நிலையில் அணிவகுத்து நின்ற வீரர் ஐம்பதாயிரம் பேர்.

34நப்தலியைச் சார்ந்த ஆயிரம் அதிகாரிகளும் மற்றும் கேடயமும் ஈட்டியும் தாங்கிய முப்பத்தேழாயிரம் பேர்.

35தாணைச் சார்ந்த போருக்கு அணிவகுத்து நின்ற இருபத்து எட்டாயிரத்து அறுநூறு பேர்.

36ஆசேரைச் சார்ந்த போருக்குத் தயார் நிலையில் அணிவகுத்து நின்ற நாற்பதாயிரம் பேர்.

37யோர்தானுக்கு அப்பால் ரூபன், காத்து, மனாசேயின் பாதிக்குலம் இவற்றைச் சார்ந்த அனைத்துப் போர்க்கோலம் பூண்ட ஓர் இலட்சத்து இருபதினாயிரம் பேர்.

38இந்தப் போர்வீரர் அனைவரும் போர்க்கள அணி வகுப்பில், தாவீதை இஸ்ரயேல் அனைத்துக்கும் அரசராக ஏற்படுத்துமாறு உறுதிபூண்டவராய் எபிரோனுக்கு வந்தனர். மேலும், எஞ்சியிருந்த இஸ்ரயேல் மக்கள் அனைவரும் ஒரே மனதாய் தாவீதையே அரசராக்க விரும்பினர்.

39அவர்கள் அங்கே தாவீதோடு உண்டு குடித்து மூன்று நாள் தங்கினார்கள். அவர்கள் உறவினர் அவர்களுக்காக எல்லாவற்றையும் தயார் செய்திருந்தனர்.

40மேலும், இசக்கார், செபுலோன், நப்தலி நிலப்பகுதிகளில் அவர்களுக்கு அருகே இருந்தவர்கள், கழுதைகள், ஒட்டகங்கள், கோவேறு கழுதைகள், மாடுகள் ஆகியவற்றின் மீது ஏராளமான அப்பங்கள், உணவுக்கான மாவு, அத்திப்பழ அடைகள், திராட்சைப் பழ அடைகள், திராட்சை இரசம், எண்ணெய் ஆகியவற்றையும் மேலும் ஆடு மாடுகளையும் கொண்டு வந்தார்கள். இஸ்ரயேல் மகிழ்ச்சியில் திளைத்தது.

Pradeep Augustine Avatar

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Stay Connected

Recently added Bibles

Download our App

Get our official Catholic Gallery app for daily Mass readings, prayers & more

Your Faith. Your Way.
Download the Catholic Gallery app for offline Mass readings, daily prayers, and audio Bible — all in one place.
Available on:
No Thanks