பொதுக்காலம் 26ஆம் வாரம் – திங்கள்
முதல் வாசகம்
கீழ்த்திசை நாட்டினின்றும் மேற்றிசை நாட்டினின்றும் என் மக்களை விடுவிப்பேன்.
இறைவாக்கினர் செக்கரியா நூலிலிருந்து வாசகம் 8: 1-8
அந்நாள்களில்
படைகளின் ஆண்டவரது வாக்கு மீண்டும் எனக்கு அருளப்பட்டது: படைகளின் ஆண்டவர் கூறுவது இதுவே: “சீயோன்மீதுள்ள அன்பு வெறியால் நான் கனன்றுகொண்டிருக்கின்றேன்; அதன்மீதுள்ள அன்புவெறியால் நான் சினமுற்றிருக்கின்றேன்.”
ஆண்டவர் கூறுவது இதுவே: “சீயோனுக்கு நான் திரும்பி வரப்போகிறேன்; எருசலேம் நடுவில் குடியிருக்கப் போகிறேன்; எருசலேம் ‘உண்மையுள்ள நகர்’ என்றும், படைகளின் ஆண்டவரது மலை ‘திருமலை’ என்றும் பெயர்பெற்று விளங்கும்.”
படைகளின் ஆண்டவர் கூறுவது இதுவே: “எருசலேமின் தெருக்களில் கிழவரும் கிழவியரும் மீண்டும் அமர்ந்திருப்பார்கள்; வயது முதிர்ந்தவர்களானதால் ஒவ்வொருவரும் தம் கையில் கோல் வைத்திருப்பார்கள்; நகரின் தெருக்களில் சிறுவரும் சிறுமியரும் நிறைந்திருப்பார்கள்; அவர்கள் அதன் தெருக்களில் விளையாடிக் கொண்டிருப்பார்கள்.”
படைகளின் ஆண்டவர் கூறுவது இதுவே: “இம்மக்களில் எஞ்சியிருப் போரின் கண்களுக்கு இவையெல்லாம் அந்நாள்களில் விந்தையாய்த் தோன்றினாலும், என் கண்களுக்கு விந்தையாய்த் தோன்றுமோ?” என்கிறார் படைகளின் ஆண்டவர்.
படைகளின் ஆண்டவர் கூறுவது இதுவே: “இதோ, கீழ்த்திசை நாட்டினின்றும் மேற்றிசை நாட்டினின்றும் என் மக்களை விடுவிப்பேன்; அவர்களை அழைத்துக்கொண்டு வருவேன்; அவர்கள் எருசலேமில் குடியிருப்பார்கள்; அவர்கள் என் மக்களாய் இருப்பார்கள்; உண்மையிலும் நீதியிலும் நான் அவர்களுக்குக் கடவுளாய் இருப்பேன்.”
ஆண்டவரின் அருள்வாக்கு.
பதிலுரைப் பாடல்
திபா 102: 15-17. 18,20,19. 28,21-22 (பல்லவி: 16)
பல்லவி: ஆண்டவர் சீயோனைக் கட்டி எழுப்பி மாட்சியுடன் திகழ்ந்திடுவார்.
நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி
மாற் 10: 45
அல்லேலூயா, அல்லேலூயா! மானிட மகன் தொண்டு ஆற்றுவதற்கும் பலருடைய மீட்புக்கு ஈடாகத் தம் உயிரைக் கொடுப்பதற்கும் வந்தார். அல்லேலூயா.
நற்செய்தி வாசகம்
உங்கள் எல்லாரிலும் சிறியவரே பெரியவர் ஆவார்.
✠ லூக்கா எழுதிய தூய நற்செய்தியிலிருந்து வாசகம் 9: 46-50
அக்காலத்தில்
தங்களுக்குள் பெரியவர் யார் என்ற விவாதம் சீடர்களிடையே எழுந்தது. இயேசு அவர்களின் எண்ணங்களை அறிந்து ஒரு சிறுபிள்ளையை எடுத்து, தம் அருகே நிறுத்தி, அவர்களிடம், “இச்சிறு பிள்ளையை என் பெயரால் ஏற்றுக்கொள்பவர் எவரும் என்னையே ஏற்றுக்கொள்கிறார். என்னை ஏற்றுக்கொள்பவர் என்னை அனுப்பினவரையே ஏற்றுக்கொள்கிறார். உங்கள் எல்லாரிலும் சிறியவரே பெரியவர் ஆவார்” என்றார்.
யோவான் இயேசுவைப் பார்த்து, “ஆண்டவரே, ஒருவர் உமது பெயரால் பேய் ஓட்டுவதைக் கண்டு, நாங்கள் அவரைத் தடுக்கப்பார்த்தோம்; ஏனெனில் அவர் நம்மைச் சாராதவர்” என்றார்.
இயேசு அவரை நோக்கி, “தடுக்க வேண்டாம்; ஏனெனில் நமக்கு எதிராக இராதவர் நம் சார்பாக இருக்கிறார்” என்றார்.
ஆண்டவரின் அருள்வாக்கு.




Leave a Reply