back to top
HomeTamilரூத்து அதிகாரம் - 4 - திருவிவிலியம்

ரூத்து அதிகாரம் – 4 – திருவிவிலியம்

ரூத்து அதிகாரங்கள் (Tamil Bible: Ecumenical Tamil Translation – ETB)

Click the play button to listen or click the Download button to save a copy.
Audio Bible by Rev. Fr. Arulselvam Rayappan. Know more about him here

கைம்பெண்ணின் மறுமணம்

1இதற்கிடையில், போவாசு பொது மன்றம் கூடும் நகர வாயிலுக்குச் சென்று அங்கே அமர்ந்து கொண்டார். போவாசு முன்பு குறிப்பிட்ட எலிமலேக்கின் முறை உறவினர் அவ்வழியாக வந்தார். போவாசு அவரைப் பெயர் சொல்லி அழைத்து, “இங்கே வந்து சற்று உட்காரும்” என்றார். அவரும் அவ்வாறே அருகில் வந்து உட்கார்ந்தார்.

2பிறகு போவாசு ஊர்ப்பெரியோருள் பத்துப் பேரை வரவழைத்து, “இங்கே சற்று உட்காருங்கள்” என்றார்.

3அவர்கள் உட்கார்ந்தவுடன் போவாசு அந்த உறவினரை நோக்கி, “நம் நெருங்கிய உறவினரான எலிமலேக்கிற்குச் சொந்தமான துண்டு நிலம் ஒன்று இருப்பது உமக்கு தெரியும் அல்லவா? மோவாபு நாட்டிலிருந்து திரும்பி வந்திருக்கும் நகோமி இப்போது அதை விற்கப் போகிறார்.

4இதை உம் காதில் போட்டு வைக்க வேண்டும் என்று நினைத்தேன். இங்கு அமர்ந்திருப்பவர் முன்னிலையிலும் என் உறவின்முறைப் பெரியோர் முன்னிலையிலும் அந்த நிலத்தை நீர் வாங்கிக் கொள்ளும்; விருப்பமில்லையெனில் சொல்லிவிடும். ஏனெனில், அதை மீட்கும் உரிமை முதலில் உமக்கும் உமக்குப் பின் எனக்கும் உண்டு; வேறெவர்க்கும் இல்லை” என்றார். அதற்கு அவர், “சரி வேண்டுமானால் வாங்கிக் கொள்கிறேன்” என்றார்.

5போவாசு அவரிடம், “ஆனால், நகோமியிடமிருந்து* இந்த நிலத்தை நீர் வாங்கும் நாளில், இறந்தவனின் மனைவியான மோவாபியப் பெண் ரூத்தை உம் மனைவியாக ஏற்றுக்கொள்கின்றீர் என்பதைத் தெரிந்து கொள்ளும். இறந்துபோனவருக்கு வழிமரபு தோன்றுவதற்காகவும் அவரது குடும்பச் சொத்து அவர் பெயரிலேயே தொடர்ந்து இருப்பதற்காகவும் நீர் இதைச் செய்ய வேண்டும்” என்றார்.

6அவரோ, “என்னால் அந்த நிலத்தை வாங்க இயலாது. ஏனெனில், இதனால் என் குடும்பத்திற்குரிய உரிமைச் சொத்து குறைந்து போகும். நீரே அந்த உரிமையை எடுத்துக் கொள்ளும். என்னால் நிலத்தை வாங்கவே இயலாது” என்றார்.

7இஸ்ரயேலரிடையே பண்டைக் காலத்தில் ஒரு வழக்கம் இருந்தது. நிலவிற்பனை அல்லது கொடுக்கல் வாங்கல் நடைபெறும்போது எடுக்கும் முடிவை உறுதிப்படுத்துவதற்காக, ஒருவர் தம் காலணியைக் கழற்றி மற்றவரிடம் கொடுத்துவிடுவார். எடுக்கப்பட்ட முடிவை உறுதிப்படுத்தும் முறை இதுவே.

8அவ்வாறே அந்த முறை உறவினர் போவாசிடம், “நீரே வாங்கிக்கொள்ளும்” என்று சொன்னபோது, அவர் தம் காலணியைக் கழற்றி அவரிடம் கொடுத்தார்.

9அதன்பின், போவாசு அங்கிருந்த பெரியோரையும் மற்றெல்லாரையும் நோக்கி, “நான் எலிமலேக்கு, கிலியோன், மக்லோன் ஆகியோருக்கு உரிமையான அனைத்தையும் நகோமியிடமிருந்து வாங்கி விட்டேன்; இதற்கு இன்று நீங்களே சாட்சி.

10மேலும், மக்லோனின் மனைவியாயிருந்த மோவாபியப் பெண் ரூத்தை என் மனைவியாக ஏற்றுக்கொள்கிறேன். இறந்தவரின் உரிமைச் சொத்து அவர் பெயரிலேயே தொடர்ந்து இருக்கவும் அப்பெயர் அவருடைய உறவின் முறையிலும் ஊரிலும் நீடித்திருக்கவும் இதைச் செய்கிறேன். இதற்கும் நீங்கள் இன்று சாட்சி” என்றார்.

11அதற்கு நகர வாயிலில் இருந்த

பெரியோரும் மற்றெல்லாரும்,

“ஆம்; நாங்கள் சாட்சிகள்.

இஸ்ரயேலின் குடும்பம் பெருகச்

செய்த ராகேல் லேயாள்

இருவரைப் போல –

உமது இல்லம் புகுந்திடும் இந்தப்

பெண்ணும் இருக்கும் வண்ணம்

ஆண்டவர் அருள்க!

எப்ராத்தில் வளமுடன் நீர் வாழ்க!

பெத்லகேமில் புகழுடன் நீர் திகழ்க!

12ஆண்டவர் இந்தப் பெண் வழியாக

அருளும் பிள்ளைகளால்

உமது குடும்பம் யூதா தாமார்

மகனாம் பெரேட்சு குடும்பம்

போன்று விளங்குவதாக!”

என்று வாழ்த்தினர்.

13இவ்வாறு போவாசு தாம் சொன்னபடியே ரூத்தைத் தம் வீட்டுக்கு அழைத்துச் சென்று, அவரை மணந்து கொண்டார். அவர்கள் கூடி வாழ்ந்த போது, அவர் கருத்தரிக்க ஆண்டவர் அருள்கூர்ந்தார். ரூத்து ஓர் ஆண் மகவைப் பெற்றெடுத்தார்.

14ஊர்ப் பெண்கள்
நகோமியைப் பார்த்து,

“ஆண்டவர் திருப்பெயர்
போற்றி! போற்றி!

உன்னைக் காக்கும்

பொறுப்பினை உடையான்

ஒருவனை அவர்தாம்

அருளியுள்ளாரே;

இஸ்ரயேலில் அவனது பெயரும்

புகழுடன் ஓங்கித் திகழுவதாக!

15புதுவாழ்வுனக்கு அன்னவன்

தருவான்;

முதுமையில் உனக்கு அன்னமும்

அளிப்பான்;

உன்பால் கொண்ட அன்பால்,

உனக்கு மைந்தர் எழுவரின்

மேலாய் விளங்கும் மருமகள் அவனை

ஈன்றவள் அன்றோ!”

என்று வாழ்த்தினார்கள்.

16நகோமி குழந்தையைக் கையில் எடுத்து மார்போடணைத்துக் கொண்டார். அவரே, அதைப் பேணி வளர்க்கும் தாயானார்.

17சுற்றுப்புறப் பெண்கள், “நகோமிக்கு ஒரு மகன் பிறந்துள்ளான்” என்று சொல்லி, அவனுக்கு ‛ஓபேது’ என்று பெயரிட்டார்கள், அவனே தாவீதின் தந்தையான ஈசாயின் தந்தை.

18பெரேட்சின் வழித்தோன்றல்களின்

அட்டவணை இதுவே;

பெரேட்சுக்கு எட்சரோன் பிறந்தார்.

19எட்சரோனுக்கு இராம் பிறந்தார்;

இராமுக்கு அம்மினதாபு பிறந்தார்;

20அம்மினதாபுக்கு நகுசோன் பிறந்தார்;

நகுசோனுக்குச் சல்மோன் பிறந்தார்.

21சல்மோனுக்குப் போவாசு பிறந்தார்;

போவாசுக்கு ஓபேது பிறந்தார்.

22ஓபேதுக்கு ஈசாய் பிறந்தார்.

ஈசாய்க்குத் தாவீது பிறந்தார்.


4:7-8 இச 25:9.
4:10 இச 25:5-6.
4:11 தொநூ 29:31.
4:12 தொநூ 38:27-30.


4:5 ‘நகோமியிடமிருந்தும் ரூத்திடமிருந்தும்’ என்பது எபிரேய பாடம்.
Pradeep Augustine
Pradeep Augustinehttps://bible.catholicgallery.org/
Pradeep Augustine is the founder of Catholic Gallery. He is a passionate Writer, An Artist, a computer geek and a part-time Blogger who loves to write a lot of contents on Catholicism in his free time. He is the founder of the Technical Blog www.GetCoolTricks.com, where he shares a lot of technical Contents. Stay connected with him on his social profiles.
Access Catholic Videos
Subscribe to our YouTube channel to access Mass Readings and Prayers as videos.
No Thanks