உரோமையர் அதிகாரம் – 7 – திருவிவிலியம்

உரோமையர் அதிகாரங்கள் (Tamil Bible: Ecumenical Tamil Translation – ETB)

Click the play button to listen or click the Download button to save a copy.
Audio Bible by Rev. Fr. Arulselvam Rayappan. Know more about him here

மணவாழ்க்கை-ஓர் எடுத்துக்காட்டு

1சகோதர சகோதரிகளே, சட்டம் தெரிந்த உங்களைக் கேட்கிறேன்; உயிரோடு இருக்கும் காலம் வரையில்தான் சட்டம் ஒருவரைக் கட்டுப்படுத்தும் என்பது உங்களுக்குத் தெரியாதா?

2எடுத்துக்காட்டாக, மணமான பெண் ஒருவர் கணவன் உயிரோடு இருக்கும் வரையில்தான் திருமணச் சட்டத்திற்குக் கட்டுப்பட்டிருக்கிறார்; கணவன் இறந்துவிட்டால், கணவனோடு வாழ வேண்டும் என்கிற சட்டத்திலிருந்து விடுதலை பெறுகிறார்.

3ஆகையால், கணவன் உயிரோடு இருக்கும்போது ஒரு பெண் வேறொருவரோடு வாழ்ந்தால், விபசாரி என்னும் பெயர் கிடைக்கும். ஆனால், கணவன் இறந்து போனால், அவர் திருமணச் சட்டத்தினின்று விடுதலை பெற்றவர் ஆகிறார், ஆகவே, பின்பு அவர் வேறொருவருக்கு மனைவியானால், விபசாரி அல்ல.

4அவ்வாறே, என் அன்பர்களே, நீங்கள் கிறிஸ்துவின் உடலோடு ஒன்றித்திருப்பதால் திருச்சட்டத்தைப் பொறுத்தமட்டில் இறந்தவர்கள் ஆனீர்கள்; அதன் விளைவாக இறந்து உயிருடன் எழுப்பப்பட்ட கிறிஸ்துவோடு நீங்கள் இணைக்கப்பட்டிருக்கிறீர்கள்; இவ்வாறு, நீங்கள் கடவுளுக்கு ஏற்ற பயன் அளிக்க முடியும்.

5நாம் நமது ஊனியல்பின்படி வாழ்ந்தபோது, சட்டத்தை ஒரு வாய்ப்பாக்கிக் கொண்டு பாவ இச்சைகள் நம்முடைய உறுப்புகளில் செயலாற்றின; அதனால் விளைந்த பயன் சாவு.

6ஆனால், இப்பொழுது நம்மை ஒடுக்கி வைத்திருந்த சட்டத்தைப் பொறுத்த மட்டில் நாம் இறந்துவிட்டதால், அச்சட்டத்தினின்று விடுதலை பெற்றோம். ஆகையால், எழுதப்பட்ட சட்டத்திற்குரிய பழைய நெறியில் நாம் ஊழியம் செய்வதைவிட்டுத் தூய ஆவி அருளும் புதிய நெறியில் ஊழியம் செய்ய முடிகிறது.

திருச்சட்டமும் பாவமும்

7அப்படியானால் என்ன சொல்வோம்? திருச்சட்டமும் பாவமும் ஒன்றுதானா? ஒருபோதும் இல்லை. ஆயினும், திருச்சட்டம் வழியாய் அன்றிப் பாவம் என்ன என்று நான் அறிந்திருக்கமாட்டேன். எப்படியெனில், “பிறருக்குரியது எதையும் கவர்ந்திட விரும்பாதே” என்று சட்டம் சொல்லாமல் போயிருந்தால், அவ்விருப்பம் என்ன என்றே அறிந்திருக்க மாட்டேன்.

8ஆனால், கட்டளை தந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொண்டு பாவம் என்னுள் எல்லாவகை ஆசைகளையும் தூண்டிவிட்டது. ஏனெனில், சட்டம் இல்லையேல் பாவத்திற்கு உயிரில்லை.

9ஒரு காலத்தில் சட்டம் இல்லாதபோது நான் உயிர் உள்ளவனாயிருந்தேன். கட்டளை தரப்பட்டபோது பாவம் உயிர்பெற்றது;

10நான் உயிரிழந்தேன். வாழ்வுக்கு வழியாய் இருக்கவேண்டிய கட்டளை எனக்குச் சாவுக்கு வழியாயிற்று என்று கண்டேன்.

11கட்டளை தந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொண்டு பாவம் என்னை ஏமாற்றி அந்தக் கட்டளை வழியாகவே என்னைக் கொன்றும் விட்டது.

12திருச்சட்டம் தன்னிலே தூயதுதான்; அவ்வாறே கட்டளையும் தூயது, நேரியது, நல்லது.

13அவ்வாறாயின், நல்லது என் சாவுக்குக் காரணமாக மாறிவிட்டதா? ஒருபோதும் இல்லை. எல்லாம் பாவத்தின் வேலைதான்! பாவம் தன் இயல்பை வெளிப்படுத்துவதற்காக நல்லதொன்றைக் கொண்டு எனக்குச் சாவை விளைவித்து, இவ்வாறு கட்டளையின் வழியாகப் பாவம் தன் கொடிய இயல்பை அளவுகடந்த முறையில் வெளிப்படுத்தியது.

மனிதருக்குள்ளே போராட்டம்

14திருச்சட்டம் ஆவிக்குரியது என்பது நமக்குத் தெரிந்ததே; ஆனால், நான் ஊனியல்பினன்; பாவத்திற்கு அடிமையாக விற்கப்பட்டவன்.

15ஏனெனில், நான் செய்வது என்னவென்று எனக்கே தெரிவதில்லை; எதைச் செய்ய விரும்புகிறேனோ அதை நான் செய்வதில்லை; எதை வெறுக்கிறேனோ அதையே செய்கிறேன்.

16நான் விரும்பாததைச் செய்கிறேன் எனில் சட்டம் நல்லது என நான் ஏற்றுக் கொள்ளுகிறேன் என்றாகிறது.

17ஆனால், அவ்வாறு செய்வது என்னுள் குடிகொண்டிருக்கும் பாவமே; நான் அல்ல.

18ஏனெனில், என்னுள், அதாவது வலுவற்ற என் ஊனியல்பில், நல்லது எதுவும் குடிகொண்டிருக்கவில்லை என எனக்குத் தெரியும். நன்மை செய்யும் விருப்பம் என்னிடம் இல்லாமல் இல்லை; அதைச் செய்யத்தான் முடியவில்லை.

19நான் விரும்பும் நன்மையைச் செய்வதில்லை; விரும்பாத தீமையையே செய்கிறேன்.

20நான் விரும்பாததைச் செய்கிறேன் என்றால், அதை நானாகச் செய்யவில்லை; என்னில் குடிகொண்டிருக்கும் பாவமே செய்கிறது.

21நான் நன்மை செய்ய விரும்பினாலும், என்னால் தீமையைத்தான் செய்ய முடிகிறது. இத்தகையதொரு செயல் முறையை என்னுள் காண்கிறேன்,

22நான் கடவுளின் சட்டத்தைக்குறித்து உள்ளூர மகிழ்ச்சியடைகிறேன்.

23ஆனால், என் உறுப்புகளில் வேறொரு சட்டத்தைக் காண்கிறேன்; என் மனம் ஏற்றுக்கொள்ளும் சட்டத்தை அது எதிர்த்துப் போராடுகிறது; என் உறுப்புகளில் இருக்கும் அந்தப் பாவச் சட்டத்திற்கு என்னைக் கட்டுப்படுத்துகிறது.

24அந்தோ! இரங்கத்தக்க மனிதன் நான்! சாவுக்குள்ளாக்கும் இந்த உடலினின்று என்னை விடுவிப்பவர் யார்?

25நம் ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் வழியாய்க் கடவுள்தாம் விடுவிப்பார்; அவருக்கு நன்றி! சுருங்கச் சொல்லின், என் மனத்தால் கடவுளின் சட்டத்திற்குக் கட்டுப்பட்டிருக்கும் நானே என் ஊனியல்பினால் பாவத்தின் சட்டத்திற்கும் கட்டுப்பட்டிருக்கிறேன்.


7:2 1 கொரி 7:39.
7:7 கலா 3:19.
7:8 1 கொரி 15:56.
7:10 எசே 20:11.
7:12 1 திமொ 1:8.
7:15 கலா 5:17.
7:22 2 கொரி 4:16.
Pradeep Augustine: Pradeep Augustine is the founder of Catholic Gallery. He is a passionate Writer, An Artist, a computer geek and a part-time Blogger who loves to write a lot of contents on Catholicism in his free time. He is the founder of the Technical Blog www.GetCoolTricks.com, where he shares a lot of technical Contents. Stay connected with him on his social profiles.
Related Post