Home » நெகேமியா அதிகாரம் – 6 – திருவிவிலியம்

நெகேமியா அதிகாரம் – 6 – திருவிவிலியம்

நெகேமியா அதிகாரங்கள் (Tamil Bible: Ecumenical Tamil Translation – ETB)

Click the play button to listen or click the Download button to save a copy.

நெகேமியாவுக்கு எதிரான சதித் திட்டங்கள்

1நான் மதிலைக் கட்டி முடித்துவிட்டேன் என்றும், அதில் உடைப்பு ஒன்றுமில்லையென்றும், மேலும் இதுவரை நான் கோட்டை வாயில்களில் கதவுகள் அமைக்கவில்லை என்றும், சன்பலாற்று, தோபியா, கெசேம், அரேபியர், மற்றும் எங்கள் எதிரிகள் அறிய வந்தனர்.

2அப்பொழுது, சன்பலாற்று, தோபியா, கெசேம் ஆகியோர் என்னிடம் தூதனுப்பி,” நீர் புறப்பட்டு வாரும்; ஓனோ சமவெளியிலுள்ள ஊர் ஒன்றில் சந்திப்போம்” என்றனர். ஆனால் அவர்கள் எனக்குத் தீங்கிழைக்கவே எண்ணியிருந்தனர்.

3அப்பொழுது நான் அவர்களிடம் தூதனுப்பி, “முக்கியமான அலுவலில் நான் ஈடுபட்டுள்ளேன். எனவே நான் அங்குச் செல்ல இயலாத நிலையில் உள்ளேன். நான் இந்த வேலையை விட்டுவிட்டு உங்களிடம் வந்தால், இது முடங்கிவிடும் அன்றோ!” என்றேன்.

4இவ்வாறாக அவர்கள் எனக்கு நான்கு முறை தூதனுப்பினார்கள். நானும் இதேமுறையில் பதில் அனுப்பினேன்.

5ஐந்தாம் முறையும் சன்பலாற்று தன் அலுவலன் மூலம் இதே செய்தியை எனக்கு அனுப்பினான். அவனுடைய கையில் திறந்த மடல் ஒன்றிருந்தது.

6அதில் எழுதுப்பட்டிருந்தது பின்வருமாறு: “கெசேமின் கூற்றின்படி வேற்றினத்தாரிடையே ஒரு செய்தி பரவியுள்ளது. அதன்படி, நீரும் யூதர்களும் கலகம் ஏற்படுத்தச் சூழ்ச்சி செய்துள்ளீர்கள். இதற்காகவே நீர் மதிலைக் கட்டி எழுப்புகிறீர். நீர் அவர்களுக்கு அரசர் ஆக விரும்புகிறீர்.

7யூதாவில் ஓர் அரசர் உங்களுக்கு இருக்கிறார் என்று எருசலேமில் அறிவிக்க இறைவாக்கினர்களை நீர் ஏற்படுத்தியுள்ளீர். இச்செய்திகள் மன்னருக்கு எட்டிவிடும். எனவே நீர் வாரும். நாம் ஒன்றாக ஆலோசிக்கலாம்.”

8நான் அவனுக்குப் பதில் அனுப்பினேன்: “நீர் சொல்வதுபோல் எவையும் நடக்கவில்லை. இவையெல்லாம் நீர் செய்யும் கற்பனையே.”

9ஏனெனில் அவர்கள் அனைவரும் எங்களை அச்சுறுத்தினர், “அவர்கள் கைகள் வேலை செய்வதில் தளர்ந்துவிடும். வேலை நின்று விடும்” என்று சொல்லி வந்தனர். எனவே, கடவுளே! என் “கைளை வலிமைப்படுத்தும்.”

10நான், மெகேற்றபேலுக்குப் பிறந்த தெலாயாவின் மகன் செமாயாவின் வீட்டுக்குச் சென்றேன். அவன் அங்கு அடைபட்டுக்கிடந்தான். அவன், “நாம் கடவுளின் இல்லமான கோவிலின் உள்ளே சந்திப்போம். கோவிலின் கதவுகளை நாம் மூடிக்கொள்வோம். ஏனெனில் அவர்கள் உம்மைக் கொல்ல வருகிறார்கள். உம்மைக் கொல்ல இரவில் வருகிறார்கள்.”

11நான் மறுமொழியாக: “என்னைப்போன்ற மனிதன் ஓடி ஒளிவது முறையா? நான் பிழைத்துக் கொள்ளக் கோவிலுக்குள் செல்வதா? நான் செல்ல மாட்டேன்” என்றேன்.

12அப்பொழுது, கடவுள் அவனை அனுப்பவில்லை என்றும், தோபியாவும் சன்பலாற்றும் அவனுக்குக் கையூட்டுக் கொடுத்து எனக்கு எதிராக இறைவாக்கு உரைக்கச் செய்தனர் என்றும் நான் அறிந்து கொண்டேன்.

13அஞ்சியவாறு நான் இதைச் செய்யவும், இதனால் பாவம் கட்டிக்கொள்ளவும், என் பெயருக்கு இழிவு ஏற்படுத்தி என்னைச் சிறுமைப்படுத்தவும் அவர்கள் அவனுக்குக் கையூட்டுத் தந்திருந்தனர்.

14‘என் கடவுளே! தோபியா, சன்பலாற்று இவர்களின் இச்செயல்களையும் இறைவாக்கினனான நொவாதியாவையும் என்னை அச்சுறுத்த முயன்ற ஏனைய இறைவாக்கினர்களையும் மறந்து விடாதேயும்.’

மதில் கட்டும் பணி நிறைவுறுதல்

15மதில் ஐம்பத்திரண்டு நாள்களுள் கட்டப்பட்டு எலூல் மாதம் இருபத்தைந்தாம் நாளில் நிறைவடைந்தது.

16இதை எங்கள் எதிரிகள் அனைவரும் கேள்வியுற்றபோது, எங்களைச் சூழ்ந்திருந்த எல்லா நாட்டினரும் அஞ்சி, மனம் தளர்ந்து போயினர்; ஏனெனில் இவ்வேலை நம் கடவுளின் உதவியால் நிறைவேறியது என்று கண்டனர்.

17அக்காலத்தில் யூதாவின் தலைவர்கள் தோபியாவுக்குப் பல மடல்கள் அனுப்பி வந்தார்கள். தோபியாவின் மடல்களும் அவர்களுக்கு வந்து கொண்டிருந்தன.

18ஏனெனில், யூதாவில் பலர் அவனுக்கு வாக்குறுதி தந்திருந்தார்கள். ஏனென்றால் அவன், ஆரகின் மகனான செக்கனியாவுக்கு மருமகன். அவனுடைய யோகனான், பெரக்கியாவுக்குப் பிறந்த மெசுல்லாவின் மகளை மணந்திருந்தான்.

19எனவே அவர்கள் எனக்கு முன்பாக அவனது நற்செயல்களைப்பற்றிச் சொல்வார்கள். நான் சொன்னதை அவனிடம் சொல்வார்கள். என்னை அச்சுறுத்தும்படி தோபியா மடல்கள் அனுப்பிக் கொண்டிருந்தான்.

Pradeep Augustine Avatar

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Stay Connected

Recently added Bibles

Download our App

Get our official Catholic Gallery app for daily Mass readings, prayers & more

Your Faith. Your Way.
Download the Catholic Gallery app for offline Mass readings, daily prayers, and audio Bible — all in one place.
Available on:
No Thanks