back to top
HomeTamilநெகேமியா அதிகாரம் - 13 - திருவிவிலியம்

நெகேமியா அதிகாரம் – 13 – திருவிவிலியம்

நெகேமியா அதிகாரங்கள் (Tamil Bible: Ecumenical Tamil Translation – ETB)

Click the play button to listen or click the Download button to save a copy.
Audio Bible by Rev. Fr. Arulselvam Rayappan. Know more about him here

வேற்றினத்தார் விலக்கப்படல்

1அந்நாளில் மோசேயின் நூலை மக்கள் கேட்கும்படி உரக்கப் படித்தனர். அதில் பின்வருமாறு எழுதப்பட்டிருப்பதைக் கண்டனர்: “அம்மோனியரும் மோவாபியரும் என்றுமே கடவுளின் சபைக்குள் நுழையக் கூடாது.

2ஏனெனில் அவர்கள் இஸ்ரயேல் மக்களை அப்பத்தோடும் நீரோடும் சந்திக்காது, அவர்களைச் சபிக்குமாறு பிலயாமுக்குக் கையூட்டுக் கொடுத்தனர். ஆனால் எங்கள் கடவுள் சாபத்தை ஆசியாக மாற்றிவிட்டார்”.

3திருச்சட்டத்தைக் கேட்டவுடன் அவர்கள் எல்லா வேற்றினத்தாரையும் இஸ்ரயேல் மக்களிடமிருந்து பிரித்து விட்டனர்.

நெகேமியாவின் சீர்திருத்தங்கள்

4இதற்குமுன் தோபியாவுக்கு உறவினரான குரு எல்யாசிபிடம் எங்கள் கடவுளின் இல்லக் கருவூல அறைகள் ஒப்படைக்கப்பட்டிருந்தன.

5எனவே இவர் தோபியாவுக்குப் பெரியதோர் அறை ஒன்றைக் கொடுத்திருந்தார். அங்கே தான் முன்பு படையல்களும், சாம்பிராணியும், பாத்திரங்களும், லேவியர், பாடகர், வாயிற்காப்போர் ஆகியோருக்குக் கட்டளைப்படி கொடுக்கப்பட்ட பத்திலொரு பகுதியான தானியம், திராட்சை இரசம், எண்ணெய் முதலியவையும் குருக்களைச் சேரவேண்டிய காணிக்கைகளும் வைக்கப்பட்டிருந்தன.

6இவை எல்லாம் நடந்தபோது நான் எருசலேமில் இல்லை. ஏனெனில் பாபிலோனிய மன்னர் அர்த்தக்சஸ்தாவின் முப்பத்து இரண்டாம் ஆண்டில் நான் மன்னரிடம் சென்றேன். சில காலத்துக்குப் பின் மன்னரிடம் நான் விடைபெற்றுத் திரும்பி வந்தேன்.

7எல்யாசிபு தோபியாவுக்குக் கடவுளின் இல்ல முற்றத்தில் ஓர் அறை கொடுத்திருந்ததால் விளைந்த தீமையை நான் எருசலேமுக்கு வந்தபோது கண்டுபிடித்தேன்.

8நான் மிகவும் சீற்றமுற்று, தோபியாவின் வீட்டுப் பாத்திரங்களை அறைக்கு வெளியே எறிந்தேன்.

9பின்னர் நான் கட்டளையிட்டபடி அவர்கள் அறைகளைத் துப்புரவு செய்தார்கள். பிறகு நான் கடவுளின் இல்லத்துப் பாத்திரங்களையும், காணிக்கையையும், சாம்பிராணியையும் அங்குத் திரும்பக் கொண்டுவரச் செய்தேன்.

10மேலும் லேவியருக்குச் சேர வேண்டிய காணிக்கைகள் அவர்களுக்குக் கொடுக்கப்படவில்லை என்றும், இதனால் அங்குப் பணிபுரிந்து வந்த லேவியரும் பாடகரும் அவரவர் தம் நிலங்களுக்கு ஓடிப்போய் விட்டனர் என்றும் அறிந்தேன்.

11அப்பொழுது அலுவலர்களைக் கடிந்துகொண்டு, அவர்களிடம் “கடவுளின் கோவில் கைவிடப்பட்டுக் கிடப்பதேன்?” என்று கேட்டேன். பின்பு அவர்களை ஒன்றுகூட்டி, ஒவ்வொருவரும் தம் கடமையைச் செய்யுமாறு பணித்தேன்.

12அதன்பின் யூதாவின் மக்கள் அனைவரும் தானியத்தையும், திராட்சை இரசம், எண்ணெய் ஆகியவற்றில் பத்திலொரு பங்கையும் கருவூல அறைக்குக் கொண்டு வந்தனர்.

13குரு செலேமியாவையும், மறை நூல் வல்லுநர் சாதோக்கையும், லேவியர் பெதாயாவையும் கருவூலங்களுக்குப் பொருளாளராகவும், மத்தனியாவுக்குப் பிறந்த சக்கூரின் மகனான அனானை அவர்களுக்கு உதவியாளராகவும் நியமித்தேன். ஏனெனில் அவர்கள் நேர்மையானவர்கள் என்று கருதப்பட்டார்கள். தங்கள் சதோதரர்களுக்குப் பங்கிட்டு அளிப்பதே அவர்கள் கடமையாகும்.

14‘என் கடவுளே! இதன் பொருட்டு என்னைக் கண்ணோக்கும். என் கடவுளின் கோவிலுக்கும் அதன் திருப்பணிக்கும் அடியேன் உண்மையாய்ச் செய்துள்ளதை மறவாதேயும்’.

15அக்காலத்தில் யூதா மக்கள் ஓய்வு நாளில் திராட்சை ஆலைகளில் வேலை செய்வதையும், தானியப் பொதிகள் கொண்டு வந்து கழுதைகள் மீது சுமத்துவதையும், திராட்சை இரசம், திராட்சைப் பழங்கள், அத்திப் பழங்கள் இன்னும் பலவித சுமைகளை ஓய்வு நாளில் எருசலேமுக்குக் கொண்டு வருவதையும் கண்டேன். அன்று உணவுப் பொருள் விற்பதை நான் கண்டித்தேன்.

16மேலும், அங்கு வாழ்ந்து வந்த தீர் நகர மக்கள், மீன் மற்றும் வணிகப் பொருள்களை யூதா மக்களுக்கும் எருசலேமில் வாழ்வோருக்கும் ஓய்வுநாளில் விற்றார்கள்.

17எனவே யூதாவின் தலைவர்களைக் கடிந்து கொண்டு நான் அவர்களிடம் கூறியது: “எத்துணைத் தீமையான செயலை நீங்கள் செய்கிறீர்கள்? நீங்கள் ஓய்வு நாளைத் தீட்டுப்படுத்தலாமா?

18உங்கள் மூதாதையர் இவ்வாறு செய்ததால் அல்லவோ நம் கடவுள் நம் மீதும், இந்நகர் மீதும் இத்தீமையெல்லாம் வரச் செய்தார். இருப்பினும், ஒய்வு நாளை நீங்கள் மீறுகிறீர்கள். இஸ்ரயேல்மீது கடவுளின் கடுங்கோபத்தை வரவழைக்கிறீர்கள்.

19ஓய்வு நாளுக்குமுன் எருசலேம் வாயில்களில் இருள் படரும்போது, கதவுகள் மூடப்படவேண்டும் என்றும் ஓய்வுநாள் முடியும்வரை அவற்றைக் திறக்கக்கூடாது என்றும் கட்டளையிட்டேன். எச்சுமையும் உள்ளே வராதபடி எனது வேலையாள்களை வாயிலருகில் நிறுத்தினேன்.

20எனவே வணிகரும், பலசரக்குகளை விற்பவர்களும் ஓரிருமுறை எருசலேமுக்கு வெளியே தங்க வேண்டியிருந்தது.

21நான் அவர்களை எச்சரித்து, “ஏன் மதிலுக்கு எதிரில் நீங்கள் காத்திருக்கிறீர்கள்? மறுபடியும் இப்படிச் செய்வீர்களாகில் உங்களை நான் ஒரு கை பார்ப்பேன்’ என்று கூறினேன். அப்பொழுதிலிருந்து அவர்கள் ஒய்வு நாளில் வராமலிருந்தார்கள்.

22ஓய்வு நாளைக் கடைப்பிடிக்கும்படி உங்களைத் தூய்மைப்படுத்திக் கொள்ளுங்கள்; வாயிலைக் காக்க வாருங்கள்” என்று லேவியரிடம் கூறினேன். இதன் பொருட்டும் ‘என் கடவுளே, என்னைக் கண்ணோக்கும். உமது பேரிரக்கத்தினால் என்னை மீட்டருளும்’.

23அக்காலத்தில்கூட, அஸ்தோது, அம்மோன், மோவாபு ஆகிய நாடுகளின் பெண்களை மணந்திருந்த யூதர்களைக் கண்டேன்.

24அவர்கள் பிள்ளைகளில் பாதிப்பேர் அஸ்தோதிய மொழி பேசினார்கள்; அல்லது வேறு ஏதோ ஒரு மொழியை பேசினார்கள். யூத மொழியை அவர்களால் பேச இயலவில்லை.

25நான் அவர்களைக் கண்டித்துச் சபித்தேன். சில ஆள்களை அடித்து முடியைப் பிடித்து இழுத்தேன். “இனி நாங்கள் அவர்களின் புதல்வருக்குப் பெண் கொடுக்கவோ, அவர்களிடமிருந்து நாங்களும் எங்கள் புதல்வரும் பெண் கொள்ளவோமாட்டோம்” எனக் கடவுள்மேல் அவர்களை ஆணையிட்டுக் கூறச் செய்தேன்.

26நான் சொன்னது: “இஸ்ரயேலின் அரசர் சாலமோனின் பாவம் இதுதான் அல்லவோ! அவரைப் போன்ற மன்னர் பல நாடுகளிலும் இருந்ததில்லையே! அவருடைய கடவுள் அவருக்கு அன்பு காட்டினார். கடவுள் அவரை இஸ்ரயேலர் அனைவருக்கும் அரசராக ஏற்படுத்தியிருந்தார். இருப்பினும் வேற்றினப் பெண்கள் அவரையும் பாவம் செய்திடச் செய்தார்கள்.

27வேற்றினப் பெண்களை மணந்து கடவுளுக்கு எதிராக இப்பெரும் தீமை அனைத்தையும் நீங்கள் செய்து வருவதைப்போல் நாங்களும் செய்ய வேண்டுமா?”

28பெரிய குரு எல்யாசிபின் மகன் யோயாதாவின் மக்களில் ஒருவன் ஓரானியனான சன்பலாற்றுக்கு மருமகனாய் இருந்தான். அவனை என்னிடமிருந்து துரத்திவிட்டேன்.

29“என் கடவுளே, குருத்துவத்தையும், குருத்துவ உடன்படிக்கையையும், லேவியரையும் மாசுபடுத்தியவர்களாகிய அவர்களை மறந்து விடாதேயும்.”

30வேற்றினத்தார் அனைவரிடமிருந்தும் அவர்களைத் தூய்மைப்படுத்தினேன். குருக்களுக்கும் லேவியருக்கும் அவர் அவர்களுக்குரிய வேலையைக் கொடுத்து பணிமுறைமைகளை அமைத்தேன்.

31விறகுக் காணிக்கைகளையும் முதற் கனிகளையும் குறிப்பிட்ட காலங்களில் கொடுக்க ஆவன செய்தேன். “என் கடவுளே, என்னை நினைவு கூர்ந்து எனக்கு நன்மை செய்தருளும்.”


13:1-2 இச 23:3-5.
13:2 எண் 22:1-6.
13:23-25 விப 34:11-16; இச 7:1-5.
13:28 நெகே 4:1.
Pradeep Augustine
Pradeep Augustinehttps://bible.catholicgallery.org/
Pradeep Augustine is the founder of Catholic Gallery. He is a passionate Writer, An Artist, a computer geek and a part-time Blogger who loves to write a lot of contents on Catholicism in his free time. He is the founder of the Technical Blog www.GetCoolTricks.com, where he shares a lot of technical Contents. Stay connected with him on his social profiles.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!
Access Catholic Videos
Subscribe to our YouTube channel to access Mass Readings and Prayers as videos.
No Thanks