மீக்கா அதிகாரங்கள் (Tamil Bible: Ecumenical Tamil Translation – ETB)
1யூதாவின் அரசர்களான யோத்தாம், ஆகாசு, எசேக்கியா ஆகியவர்களின் காலத்தில் மோரசேத்தைச் சார்ந்த மீக்காவுக்கு அருளப்பட்ட ஆண்டவரின் வாக்கு: அவர் சமாரியாவையும் எருசலேமையும் குறித்துக் கண்ட காட்சி இதுவே:
சமாரியாவையும் எருசலேமையும் பற்றிய ஓலம்
2மக்களினங்களே,
நீங்கள் அனைவரும் கேளுங்கள்;
நிலவுலகே, அதில் உள்ளவையே,
செவிகொடுங்கள்.
தலைவராகிய ஆண்டவர்
தம் திருக்கோவிலிருந்து
உங்களுக்கு எதிராகச்
சான்றுபகரப் போகிறார்.
3இதோ! ஆண்டவர்
தாம் தங்குமிடத்திலிருந்து
புறப்பட்டு வருகின்றார்;
அவர் இறங்கிவந்து
நிலவுலகின் மலையுச்சிகள்
மிதிபட நடப்பார்.
4நெருப்பின்முன் வைக்கப்பட்ட
மெழுகுபோலவும்,
பள்ளத்தாக்கில் பாய்ந்தோடும்
வெள்ளம்போலவும்,
அவர் காலடியில்
மலைகள் உருகிப்போகும்;
பள்ளத்தாக்குகள் பிளந்துபோகும்.
5யாக்கோபின் குற்றத்தை முன்னிட்டும்
இஸ்ரயேல் குடும்பத்தாரின்
பாவங்களை முன்னிட்டுமே
இவை எல்லாம் நேரிடும்.
யாக்கோபின் குற்றத்திற்குக்
காரணம் யாது?
சமாரியா அன்றோ!
யூதாவின் தொழுகைமேடுகளுக்குக்
காரணம் யாது?
எருசலேம் அன்றோ!
6ஆதலால், சமாரியாவைப்
பாழடைந்த மண்மேடாகவும்
திராட்சை நடும் தோட்டமாகவும்
செய்திடுவேன்;
அதன் கற்களைப்
பள்ளத்தாக்கில் உருட்டிவிட்டு,
அதன் அடித்தளங்கள்
வெளியிலே தெரியும்படி செய்வேன்.
7அதன் செதுக்குப் படிமங்கள் எல்லாம்
துகள் துகளாக நொறுக்கப்படும்;
அதன் பணயங்கள் எல்லாம்
நெருப்பினால் சுட்டெரிக்கப்படும்;
அதன் சிலைகளை எல்லாம்
உடைத்து கற்குவியல் ஆக்குவேன்;
ஏனெனில், விலைமகளுக்குரிய
பணயமாக அவை சேர்க்கப்பட்டன;
விலைமகளுக்குரிய பணயமாகவே
அவை போய்விடும்.
8இதை முன்னிட்டே
நான் ஓலமிட்டுக் கதறி அழுவேன்;
வெறுங்காலோடு
ஆடையின்றித் திரிவேன்;
குள்ளநரிகளைப்போல்
ஊளையிடுவேன்;
நெருப்புக் கோழிபோல் கதறி அழுவேன்.
9ஏனெனில், சமாரியாவின்
புண் ஆறாது;
யூதாவரையிலும் அது படர்ந்துவிட்டது;
என் மக்களின் வாயிலாம்
எருசலேமையும் வந்து எட்டியுள்ளது.
எதிரி எருசலேமின் அருகில் வந்துள்ளான்
10காத்தில் இதை அறிவிக்கவேண்டாம்;
கதறியழவும் வேண்டாம்;
பெத்லயப்ராவில் புழுதியில்
விழுந்து புரளுங்கள்.
11சாபீரில் குடியிருப்போரே,
ஆடையின்றி மானக்கேடுற்று
அகன்று போங்கள்;
சானானில் குடியிருப்போரும்
வெளியே வருவதில்லை;
பெத்தேத்சலிலும் புலம்பல் எழும்பும்.
அங்கு உங்களுக்கு
அடைக்கலம் கிடைக்காது.
12மாரோத்தில் குடியிருப்போர்
நன்மை வரும் என
ஆவலோடு காத்திருக்கின்றனர்;
ஏனெனில், தீமை
ஆண்டவரிடம் இருந்து இறங்கி
எருசலேமின் வாயில்மேல் விழுந்தது.
13இலாக்கீசில் குடியிருப்போரே,
விரைந்தோடும் குதிரைகளைத்
தேரிலே பூட்டுங்கள்;
மகள் சீயோனின் பாவத்திற்கு
ஊற்று நீங்களே;
இஸ்ரயேலின் குற்றங்கள்
முதலில் காணப்பட்டது உங்களிடம்தான்.
14ஆதலால், மோரசேத்துகாத்துக்கு
நீ சீதனம் கொடுப்பாய்;
அக்சீபின் வீடுகள்
இஸ்ரயேல் அரசர்களை ஏமாற்றி விடும்.
15மாரேசாவில் குடியிருப்போரே,
கொள்ளைக்காரன் ஒருவன்
உங்கள்மேல்
திரும்பவும் வரும்படி செய்வேன்;
இஸ்ரயேலின் மேன்மை
அதுல்லாமில் ஒளிந்து கொள்ளும்.
16உங்கள் அருமைப்
பிள்ளைகளுக்காகத்
துக்கங் கொண்டாட
உங்கள் தலையை
மொட்டையடித்துக்கொள்ளுங்கள்;
கழுகைப்போல் முற்றிலும்
மொட்டையடித்துக் கொள்ளுங்கள்.
ஏனெனில், அவர்கள்
உங்களிடத்திலிருந்து பிரிக்கப்பட்டு
நாடுகடத்தப்படுவார்கள்.
Very useful
Nice
Super
I am studying
Nice
Super
Very use ful