Home » லூக்கா நற்செய்தி அதிகாரம் – 9 – திருவிவிலியம்

லூக்கா நற்செய்தி அதிகாரம் – 9 – திருவிவிலியம்

லூக்கா நற்செய்தி அதிகாரங்கள் (Tamil Bible: Ecumenical Tamil Translation – ETB)

Click the play button to listen or click the Download button to save a copy.

பன்னிரு திருத்தூதர் அனுப்பப்படுதல்
(மத் 10:5-15; மாற் 6:7-15)

1இயேசு பன்னிருவரையும் ஒன்றாக வரவழைத்து, பேய்களையெல்லாம் அடக்கவும் பிணிகளைப் போக்கவும் வல்லமையும் அதிகாரமும் அவர்களுக்குக் கொடுத்தார்.

2இறையாட்சிபற்றிப் பறைசாற்றவும் உடல் நலம் குன்றியோரின் பிணிதீர்க்கவும் அவர்களை அனுப்பினார்.

3அப்போது அவர்களை நோக்கி,

“பயணத்திற்குக் கைத்தடி, பை, உணவு, பணம் போன்ற எதையும் எடுத்துக்கொண்டு போகவேண்டாம். ஓர் அங்கி போதும்.

4நீங்கள் எந்த வீட்டிக்குள் சென்றாலும் அங்கேயே தங்கியிருங்கள்; அங்கிருந்தே புறப்படுங்கள்.

5

உங்களை ஏற்றுக் கொள்ளாதவர்களுடைய நகரைவிட்டுப் புறப்படும்போது உங்கள் கால்களில் படிந்துள்ள தூசியை உதறிவிடுங்கள். இதுவே அவர்களுக்கு எதிரான சான்றாகும்”

என்றார்.

6அவர்கள் ஊர் ஊராகச் சென்று எங்கும் நற்செய்தியை அறிவித்து நோயாளிகளைக் குணமாக்கினார்கள்.

ஏரோதுவின் குழப்பம்
(மத் 14:1-12; மாற் 6:14-29)

7நிகழ்ந்தவற்றையெல்லாம் குறுநில மன்னன் ஏரோது கேள்வியுற்று மனம் குழம்பினான். ஏனெனில், சிலர், “இறந்த யோவான் உயிருடன் எழுப்பப்பட்டார்” என்றனர்.

8வேறு சிலர், “எலியா தோன்றியிருக்கிறார்” என்றனர். மற்றும் சிலர், “முற்காலத்து இறைவாக்கினருள் ஒருவர் உயிர்த்தெழுந்துள்ளார்” என்றனர்.

9ஏரோது, “யோவானின் தலையை நான் வெட்டச் செய்தேனே! இவர் யாரோ? இவரைப் பற்றி இவ்வாறெல்லாம் கேள்விப்படுகிறேனே!” என்று சொல்லி இயேசுவைக் காண வாய்ப்புத் தேடிக்கொண்டிருந்தான்.

ஐயாயிரம் பேருக்கு உணவு அளித்தல்
(மத் 14:13-21; மாற் 6:30-44; யோவா 6:1-14)

10திருத்தூதர்கள் திரும்பி வந்து, தாங்கள் செய்த யாவற்றையும் இயேசுவிடம் எடுத்துக் கூறினார்கள். அவர்களை மட்டும் கூட்டிக்கொண்டு அவர் தனித்திருப்பதற்காகப் பெத்சாய்தா என்னும் நகருக்குச் சென்றார்.

11அதை அறிந்து திரளான மக்கள் அவரைப் பின் தொடர்ந்தனர். அவர்களை அவர் வரவேற்று இறையாட்சியைப் பற்றி அவர்களோடு பேசி, குணமாக வேண்டியவர்களைக் குணப்படுத்தினார்.

12பொழுது சாயத் தொடங்கவே பன்னிருவரும் அவரிடம் வந்து, “இவ்விடம் பாலைநிலம் ஆயிற்றே; சுற்றிலுமுள்ள ஊர்களுக்கும் பட்டிகளுக்கும் சென்று தங்கவும் உணவு வாங்கிக்கொள்ளவும் மக்கள் கூட்டத்தை அனுப்பிவிடும்” என்றனர்.

13இயேசு அவர்களிடம்,

“நீங்களே அவர்களுக்கு உணவு கொடுங்கள்”

என்றார். அவர்கள், “எங்களிடம் ஐந்து அப்பங்களும் இரண்டு மீன்களுமே உள்ளன. நாங்கள் போய் இத்தனை பேருக்கும் உணவு வாங்கி வந்தால்தான் முடியும்” என்றார்கள்.

14ஏனெனில், ஏறக்குறைய ஐயாயிரம் ஆண்கள் அங்கு இருந்தனர். இயேசு அவருடைய சீடர்களை நோக்கி,

“இவர்களை ஐம்பது ஐம்பது பேராகப் பந்தியில் அமரச் செய்யுங்கள்”

என்றார்.

15அவர் சொன்னபடியே அனைவரையும் அவர்கள் பந்தியில் அமரச் செய்தார்கள்.

16அவர் அந்த ஐந்து அப்பங்களையும் இரண்டு மீன்களையும் எடுத்து வானத்தை அண்ணாந்து பார்த்து, அவற்றின் மீது ஆசிகூறி, பிட்டு, மக்களுக்குப் பரிமாறுவதற்காகச் சீடரிடம் கொடுத்தார்.

17அனைவரும் வயிறார உண்டனர். எஞ்சிய துண்டுகளைப் பன்னிரண்டு கூடைகள் நிறைய எடுத்தனர்.

இயேசுவைப்பற்றிய பேதுருவின் அறிக்கை
(மத் 16:13-19; மாற் 8:27-29)

18இயேசு தனித்து இறைவனிடம் வேண்டிக்கொண்டிருந்தபோது சீடர் மட்டும் அவரோடு இருந்தனர். அப்போது அவர்களிடம்,

“நான் யார் என மக்கள் சொல்கிறார்கள்?”

என்று அவர் கேட்டார்.

19அவர்கள் மறுமொழியாக, “சிலர் திருமுழுக்கு யோவான் எனவும் வேறு சிலர் எலியா எனவும் மற்றும் சிலர் முற்காலத்து இறைவாக்கினருள் ஒருவர் உயிர்த்தெழுந்துள்ளார் எனவும் சொல்கின்றனர்” என்றார்கள்.

20

“ஆனால் நீங்கள் நான் யார் என சொல்கிறீர்கள்?”

என்று அவர்களிடம் அவர் கேட்டார். பேதுரு மறுமொழியாக, “நீர் கடவுளின் மெசியா” என்று உரைத்தார்.

21இதை யாரிடமும் சொல்ல வேண்டாம் என்று அவர்களிடம் அவர் கண்டிப்பாய்க் கூறினார்.

இயேசு தம் சாவை முதன் முறை முன்னறிவித்தல்
(மத் 16:20-28; மாற் 8:30; 9:1)

22மேலும் இயேசு,

“மானிட மகன் பலவாறு துன்பப்படவும் மூப்பர்கள், தலைமைக் குருக்கள், மறைநூல் அறிஞர் ஆகியோரால் உதறித் தள்ளப்பட்டுக் கொலைசெய்யப்படவும் மூன்றாம் நாளில் உயிருடன் எழுப்பப்படவும் வேண்டும்”

என்று சொன்னார்.

23பின்பு அவர் அனைவரையும் நோக்கி,

“என்னைப் பின்பற்ற விரும்பும் எவரும் தன்னலம் துறந்து தம் சிலுவையை நாள்தோறும் தூக்கிக் கொண்டு என்னைப் பின்பற்றட்டும்.

24ஏனெனில், தம் உயிரைக் காத்துக் கொள்ள விரும்பும் எவரும் அதை இழந்துவிடுவார். என்பொருட்டுத் தம் உயிரை இழக்கும் எவரும் அதைக் காத்துக்கொள்வார்.

25ஒருவர் உலகம் முழுவதையும் தமதாக்கிக் கொண்டாலும் வாழ்வையே இழப்பாரெனில் அவருக்குக் கிடைக்கும் பயன் என்ன?

26என்னைக் குறித்தும் என் வார்த்தைகளைக் குறித்தும் வெட்கப்படும் ஒவ்வொருவரைப் பற்றியும் மானிட மகன் தமக்கும் தந்தைக்கும் தூய வானதூதருக்கும் உரிய மாட்சியோடு வரும் போது வெட்கப்படுவார்.

27

இங்கு நிற்பவர்களுள் சிலர் இறையாட்சி வருவதைக் காண்பதற்குமுன் சாகமாட்டார்கள் என உண்மையாகவே உங்களுக்குச் சொல்கிறேன்”

என்றார்.

இயேசு தோற்றம் மாறுதல்
(மத் 17:1-8; மாற் 9:2-8)

28இவற்றையெல்லாம் சொல்லி ஏறக்குறைய எட்டுநாள்கள் ஆனபிறகு இயேசு பேதுருவையும் யோவானையும் யாக்கோபையும் கூட்டிக்கொண்டு இறைவனிடம் வேண்டுவதற்காக ஒரு மலைமீது ஏறினார்.

29அவர் வேண்டிக்கொண்டிருந்தபோது அவரது முகத்தோற்றம் மாறியது; அவருடைய ஆடையும் வெண்மையாய் மின்னியது.

30மோசே, எலியா என்னும் இருவர் அவரோடு பேசிக் கொண்டிருந்தனர்.

31மாட்சியுடன் தோன்றிய அவர்கள் எருசலேமில் நிறைவேறவிருந்த அவருடைய இறப்பைப் பற்றிப் பேசிக் கொண்டிருந்தார்கள்.

32பேதுருவும் அவரோடு இருந்தவர்களும் தூக்கக் கலக்கமாய் இருந்தார்கள். அவர்கள் விழித்தபோது மாட்சியோடு இலங்கிய அவரையும் அவரோடு நின்ற இருவரையும் கண்டார்கள்.

33அவ்விருவரும் அவரை விட்டுப் பிரிந்து சென்றபோது, பேதுரு இயேசுவை நோக்கி, “ஆண்டவரே, நாம் இங்கேயே இருப்பது நல்லது. உமக்கு ஒன்றும் மோசேக்கு ஒன்றும் எலியாவுக்கு ஒன்றுமாக மூன்று கூடாரங்களை அமைப்போம்” என்று தாம் சொல்வது இன்னதென்று தெரியாமலே சொன்னார்.

34இவற்றை அவர் சொல்லிக்கொண்டிருக்கும்போது ஒரு மேகம் வந்து அவர்கள்மேல் நிழலிட்டது. அம்மேகம் அவர்களைக் சூழ்ந்தபோது அவர்கள் அஞ்சினார்கள்.

35அந்த மேகத்தினின்று, “இவரே என் மைந்தர்; நான் தேர்ந்து கொண்டவர் இவரே. இவருக்குச் செவிசாயுங்கள்” என்று ஒரு குரல் ஒலித்தது.

36அந்தக் குரல் கேட்டபொழுது இயேசு மட்டும் இருந்தார். தாங்கள் கண்டவற்றில் எதையும் அவர்கள் அந்நாள்களில் யாருக்கும் சொல்லாமல் அமைதி காத்தார்கள்.

பேய் பிடித்த சிறுவனின் பிணி தீர்த்தல்
(மத் 17:14-18; மாற் 9:14-27)

37மறுநாள் அவர்கள் மலையிலிருந்து இறங்கியபொழுது, பெருந்திரளான மக்கள் அவரை எதிர்கொண்டு வந்தார்கள்.

38கூட்டத்திலிருந்து ஒருவர், “போதகரே, என் மகன்மீது அருள்கூர வேண்டும் என உம்மிடம் மன்றாடுகிறேன். அவன் எனக்கு ஒரே மகன்.

39ஓர் ஆவி அவனைப் பிடித்துக் கொள்கிறது; உடனே அவன் அலறுகிறான்; வலிப்பு உண்டாகி நுரை தள்ளுகிறான்; அது அவனை நொறுக்கிவிடுகிறது; அவனைவிட்டு எளிதாகப் போவதில்லை.

40அதை ஓட்டிவிடும்படி உம் சீடரிடம் மன்றாடினேன். ஆனால், அவர்களால் முடியவில்லை” என்று உரக்கக் கூறினார்.

41அதற்கு இயேசு,

“நம்பிக்கையற்ற சீரழிந்த தலைமுறையினரே, எவ்வளவு காலம் நான் உங்களோடு இருக்க இயலும்? எவ்வளவு காலம் நான் உங்களைப் பொறுத்துக்கொள்ள இயலும்?”

என்றார்.

“உம் மகனை இங்கே கொண்டுவாரும்”

என்று அம்மனிதரிடம் கூறினார்.

42அவன் அவரிடம் வந்தபோது பேய் அவனைக் கீழே தள்ளி வலிப்புண்டாக்கியது. இயேசு அத்தீய ஆவியை அதட்டி, சிறுவனின் பிணி தீர்த்து, அவனுடைய தந்தையிடம் அவனை ஒப்படைத்தார்.

43aஅப்பொழுது எல்லாரும் கடவுளின் மாண்பைக் கண்டு மலைத்து நின்றார்கள்.

இயேசு தம் சாவை இரண்டாம் முறை முன்னறிவித்தல்
(மத் 17:22-23; மாற் 9:30-32)

43bஇயேசு செய்த யாவற்றையும் பார்த்து அனைவரும் வியப்படைந்தனர். அவர் தம் சீடர்களிடம்,

44

“நான் சொல்வதைக் கேட்டு மனத்தில் வைத்துக் கொள்ளுங்கள். மானிடமகன் மக்களின் கையில் ஒப்புவிக்கப்படவிருக்கிறார்”

என்றார்.

45அவர்கள் அவர் சொன்னதைப் புரிந்துகொள்ளவில்லை. அவர்கள் அதை உணர்ந்துகொள்ளாதவாறு அது அவர்களுக்கு மறைவாயிருந்தது. ஆயினும் அவர் சொன்னதுபற்றி அவரிடம் விளக்கம் கேட்க அஞ்சினார்கள்.

யார் மிகப் பெரியவர்?
(மத் 18:1-5; மாற் 9:33-37)

46தங்களுக்குள் பெரியவர் யார் என்ற விவாதம் அவர்களிடையே எழுந்தது.

47இயேசு அவர்களின் எண்ணங்களை அறிந்து ஒரு சிறு பிள்ளையை எடுத்து, தம் அருகே நிறுத்தி,

48அவர்களிடம்,

“இச்சிறு பிள்ளையை என் பெயரால் ஏற்றுக் கொள்பவர் எவரும் என்னையே ஏற்றுக்கொள்கிறார். என்னை ஏற்றுக்கொள்பவர் என்னை அனுப்பினவரையே ஏற்றுக் கொள்கிறார். உங்கள் எல்லாரிலும் சிறியவரே பெரியவர் ஆவார்”

என்றார்.

இயேசுவின் பெயரால் பேய் ஓட்டியவர்
(மாற் 9:38-40)

49யோவான் இயேசுவைப் பார்த்து, “ஆண்டவரே, ஒருவர் உமது பெயரால் பேய் ஓட்டுவதைக் கண்டு, நாங்கள் அவரைத் தடுக்கப்பார்த்தோம்; ஏனெனில், அவர் நம்மைச் சாராதவர்” என்றார்.

50இயேசு அவரை நோக்கி,

“தடுக்க வேண்டாம்; ஏனெனில், நமக்கு எதிராக இராதவர் நம் சார்பாக இருக்கிறார்”

என்றார்.

5. எருசலேம் நோக்கிப் பயணம்

இயேசுவை ஏற்றுக்கொள்ள மறுத்த சமாரியர்

51இயேசு விண்ணேற்றம் அடையும் நாள் நெருங்கி வரவே எருசலேமை நோக்கிச் செல்லத் தீர்மானித்து,

52தமக்கு முன் தூதர்களை அனுப்பினார். அவருக்கு இடம் ஏற்பாடு செய்வதற்காக அவர்கள் சமாரியருடைய ஓர் ஊருக்குப் போய்ச் சேர்ந்தார்கள்.

53அவர் எருசலேம் செல்லும் நோக்கமாயிருந்ததால் அவர்கள் அவரை ஏற்றுக் கொள்ளவில்லை.

54அவருடைய சீடர்கள் யாக்கோபும் யோவானும் இதைக் கண்டு, “ஆண்டவரே, வானத்திலிருந்து தீ வந்து இவர்களை அழிக்குமாறு செய்யவா? இது உமக்கு விருப்பமா?” என்று கேட்டார்கள்.

55அவர் அவர்கள் பக்கம் திரும்பி, அவர்களைக் கடிந்து கொண்டார்.

56பின்பு, அவர்கள் வேறோர் ஊருக்குச் சென்றார்கள்.

இயேசுவைப் பின்பற்ற விரும்பியவர்கள்
(மத் 8:19-22)

57அவர்கள் வழி நடந்தபோது ஒருவர் அவரை நோக்கி, “நீர் எங்கே சென்றாலும் நானும் உம்மைப் பின்பற்றுவேன்” என்றார்.

58இயேசு அவரிடம்,

“நரிகளுக்குப் பதுங்குக் குழிகளும், வானத்துப் பறவைகளுக்குக் கூடுகளும் உண்டு, மானிடமகனுக்கோ தலை சாய்க்கக்கூட இடமில்லை”

என்றார்.

59இயேசு மற்றொருவரை நோக்கி,

“என்னைப் பின்பற்றிவாரும்”

என்றார். அவர், “முதலில் நான் போய் என் தந்தையை அடக்கம் செய்துவிட்டுவர அனுமதியும்” என்றார்.

60இயேசு அவரைப் பார்த்து,

“இறந்தோரைப் பற்றிக் கவலை வேண்டாம். அவர்கள் அடக்கம் செய்யப்படுவார்கள். நீர் போய் இறையாட்சியைப் பற்றி அறிவியும்”

என்றார்.

61வேறொருவரும், “ஐயா, உம்மைப் பின்பற்றுவேன்; ஆயினும் முதலில் நான் போய் என் வீட்டில் உள்ளவர்களிடம் விடைபெற்று வர அனுமதியும்” என்றார்.

62இயேசு அவரை நோக்கி,

“கலப்பையில் கை வைத்தபின் திரும்பிப் பார்ப்பவர் எவரும் இறையாட்சிக்கு உட்படத் தகுதியுள்ளவர் அல்ல”

என்றார்.


9:3-5 லூக் 10:4-11.
9:5 திப 13:51.
9:7-8 மத் 16:14; மாற் 8:28; லூக் 9:19.
9:19 மத் 14:1,2; மாற் 6:14,15; லூக் 9:7,8.
9:20 யோவா 6:68,69.
9:23 மத் 10:38; லூக் 14:27.
9:24 மத் 10:39; லூக் 17:33; யோவா 12:25.
9:28-35 2 பேது 1:17,18.
9:35 எசா 42:1; மத் 3:17; 12:18; மாற் 1:11; லூக் 3:22.
9:48 மத் 10:40; லூக் 10:16; யோவா 13:20.
9:54 2 அர 1:9-10.
9:61 1 அர 19:19-21.
Pradeep Augustine Avatar

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Stay Connected

Recently added Bibles

Download our App

Get our official Catholic Gallery app for daily Mass readings, prayers & more

Your Faith. Your Way.
Download the Catholic Gallery app for offline Mass readings, daily prayers, and audio Bible — all in one place.
Available on:
No Thanks