Home » லூக்கா நற்செய்தி அதிகாரம் – 18 – திருவிவிலியம்

லூக்கா நற்செய்தி அதிகாரம் – 18 – திருவிவிலியம்

லூக்கா நற்செய்தி அதிகாரங்கள் (Tamil Bible: Ecumenical Tamil Translation – ETB)

Click the play button to listen or click the Download button to save a copy.

நேர்மையற்ற நடுவரும் கைம்பெண்ணும் பற்றிய உவமை

1அவர்கள் மனந்தளராமல் எப்பொழுதும் இறைவனிடம் மன்றாட வேண்டும் என்பதற்கு இயேசு ஓர் உவமை சொன்னார்.

2“ஒரு நகரில் நடுவர் ஒருவர் இருந்தார். அவர் கடவுளுக்கு அஞ்சி நடப்பதில்லை; மக்களையும் மதிப்பதில்லை.

3அந்நகரில் கைம்பெண் ஒருவரும் இருந்தார். அவர் நடுவரிடம் போய், ‘என் எதிரியைத் தண்டித்து எனக்கு நீதி வழங்கும்’ என்று கேட்டுக் கொண்டேயிருந்தார்.

4நடுவரோ, நெடுங்காலமாய் எதுவும் செய்ய விரும்பவில்லை. பின்பு அவர், ‘நான் கடவுளுக்கு அஞ்சுவதில்லை; மக்களையும் மதிப்பதில்லை.

5என்றாலும் இக்கைம்பெண் எனக்குத் தொல்லை கொடுத்துக்கொண்டிருப்பதால் நான் இவருக்கு நீதி வழங்குவேன். இல்லையானால் இவர் என் உயிரை வாங்கிக் கொண்டேயிருப்பார்’ என்று தமக்குள்ளே சொல்லிக்கொண்டார்.”

6பின் ஆண்டவர் அவர்களிடம்,

“நேர்மையற்ற நடுவரே இப்படிச் சொன்னாரென்றால்,

7தாம் தேர்ந்துகொண்டவர்கள் அல்லும் பகலும் தம்மை நோக்கிக் கூக்குரலிடும்போது கடவுள் அவர்களுக்கு நீதி வழங்காமல் இருப்பாரா? அவர்களுக்குத் துணைசெய்யக் காலம் தாழ்த்துவாரா?

8

விரைவில் அவர்களுக்கு நீதி வழங்குவார் என நான் உங்களுக்குச் சொல்கிறேன். ஆயினும், மானிடமகன் வரும்போது மண்ணுலகில் நம்பிக்கையைக் காண்பாரோ?”

என்றார்.

பரிசேயரும் வரிதண்டுபவரும் பற்றிய உவமை

9தாங்கள் நேர்மையானவர் என்று நம்பி மற்றவர்களை இகழ்ந்து ஒதுக்கும் சிலரைப் பார்த்து இயேசு இந்த உவமையைச் சொன்னார்:

10“இருவர் இறைவனிடம் வேண்டக் கோவிலுக்குச் சென்றனர். ஒருவர் பரிசேயர், மற்றவர் வரிதண்டுபவர்.

11பரிசேயர் நின்று கொண்டு, இவ்வாறு இறைவனிடம் வேண்டினார்: ‘கடவுளே, நான் கொள்ளையர், நேர்மையற்றோர், விபசாரர் போன்ற மற்ற மக்களைப் போலவோ இந்த வரிதண்டுபவரை போலவோ இல்லாதது பற்றி உமக்கு நன்றி செலுத்துகிறேன்;

12வாரத்தில் இரு முறை நோன்பிருக்கிறேன்; என்வருவாயில் எல்லாம் பத்திலொரு பங்கைக் கொடுக்கிறேன்.’

13ஆனால், வரிதண்டுபவர் தொலையில் நின்று கொண்டு வானத்தை அண்ணாந்து பார்க்கக்கூடத் துணியாமல் தம் மார்பில் அடித்துக்கொண்டு, ‘கடவுளே, பாவியாகிய என்மீது இரங்கியருளும்’ என்றார்.”

14இயேசு,

“பரிசேயரல்ல, வரிதண்டுபவரே கடவுளுக்கு ஏற்புடையவராகி வீடு திரும்பினார். ஏனெனில், தம்மைத் தாமே உயர்த்துவோர் தாழ்த்தப்பெறுவர்; தம்மைத்தாமே தாழ்த்துவோர் உயர்த்தப் பெறுவர் என நான் உங்களுக்குச் சொல்கிறேன்”

என்றார்.

சிறு பிள்ளைகளுக்கு ஆசி வழங்குதல்
(மத் 19:13-15; மாற் 10:13-16)

15குழந்தைகளை இயேசு தொடவேண்டும் என்று அவர்களைச் சிலர் அவரிடம் கொண்டு வந்தனர். இதைக் கண்ட சீடர் அவர்களை அதட்டினர்.

16ஆனால், இயேசு அவர்களைத் தம்மிடம் வரழைத்து,

“சிறுபிள்ளைகளை என்னிடம் வரவிடுங்கள்; அவர்களைத் தடுக்காதீர்கள்; ஏனெனில், இறையாட்சி இத்தகையோருக்கே உரியது.

17

இறையாட்சியைச் சிறு பிள்ளையைப் போல் ஏற்றுக்கொள்ளாதோர் அதற்கு உட்பட மாட்டார் என நான் உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன்”

என்று சீடர்களிடம் கூறினார்.

இயேசுவைப் பின்பற்ற விரும்பிய செல்வரான தலைவர்
(மத் 19:16-30; மாற் 10:17-31)

18அப்பொழுது தலைவர் ஒருவர் அவரிடம், “நல்ல போதகரே, நிலை வாழ்வை உரிமையாக்கிக் கொள்ள நான் என்ன செய்ய வேண்டும்?” என்று கேட்டார்.

19அதற்கு இயேசு அவரிடம்,

“நான் நல்லவன் என ஏன் சொல்கிறீர்? கடவுள் ஒருவரைத் தவிர நல்லவர் எவருமில்லையே!

20

உமக்குக் கட்டளைகள் தெரியும் அல்லவா?

விபசாரம் செய்யாதே.

கொலை செய்யாதே.

களவு செய்யாதே.

பொய்ச்சான்று சொல்லாதே.

உன் தாய் தந்தையை மதித்து நட”

என்றார்.

21அவர், “இவை அனைத்தையும் நான் இளமையிலிருந்தே கடைப்பிடித்து வருகிறேன்” என்றார்.

22இதைக் கேட்ட இயேசு அவரிடம்,

“உமக்கு இன்னும் ஒன்று குறைபடுகிறது. உமக்குள்ள யாவற்றையும் விற்று ஏழைகளுக்குக் கொடும். அப்போது விண்ணகத்தில் நீர் செல்வராய் இருப்பீர். பின்பு வந்து என்னைப் பின்பற்றும்”

என்றார்.

23இவற்றைக் கேட்டு அவர் மிகவும் வருத்தமுற்றார். ஏனெனில், அவர் மிகுந்த செல்வம் உடையராய் இருந்தார்.

24அவர் மிகவும் வருத்தமுற்றதைப் பார்த்த இயேசு,

“செல்வர் இறையாட்சிக்கு உட்படுவது எவ்வளவு கடினம்!

25

செல்வர் ஒருவர் இறையாட்சிக்கு உட்படுவதைவிட ஊசியின் காதில் ஒட்டகம் நுழைவது எளிது”

என்றார்.

26இதைக் கேட்டவர்கள், “பின் யார்தான் மீட்புப் பெற முடியும்?” என்று கேட்டார்கள்.

27இயேசு,

“மனிதரால் இயலாதவற்றைக் கடவுளால் செய்ய இயலும்”

என்றார்.

28பேதுரு அவரிடம், “பாரும், எங்கள் உடைமைகளை விட்டுவிட்டு நாங்கள் உம்மைப் பின்பற்றினோமே” என்றார்.

29அதற்கு அவர் அவர்களிடம்,

“உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன்: இறையாட்சியின் பொருட்டு வீட்டையோ மனைவியையோ சகோதரர் சகோதரிகளையோ பெற்றோரையோ பிள்ளைகளையோ விட்டுவிட்டவர் எவரும்

30

இம்மையில் பன்மடங்கும் மறுமையில் நிலைவாழ்வும் பெறாமல் போகார்”

என்றார்.

இயேசு தம் சாவை மூன்றாம் முறை முன்னறிவித்தல்
(மத் 20:17-19; மாற் 10:32-34)

31இயேசு பன்னிருவரையும் தம் அருகில் அழைத்து, அவர்களிடம்,

“இப்பொழுது நாம் எருசலேமுக்குச் செல்கிறோம்; மானிடமகனைப் பற்றி இறைவாக்கினர் வாயிலாக எழுதப்பட்டவை யாவும் நிறைவேறும்.

32அவர் பிற இனத்தவரிடம் ஒப்புவிக்கப்படுவார். அவர்கள் அவரை ஏளனம் செய்து அவமானப்படுத்தி அவர்மீது துப்புவார்கள்.

33

அவர்கள் அவரைச் சாட்டையால் அடித்துக்கொலை செய்வார்கள். ஆனால், மூன்றாம் நாளில் அவர் உயிர்த்தெழுவார்”

என்றார்.

34இவற்றில் எதையும் அவர்கள் புரிந்து கொள்ளவில்லை. அவர் கூறியது அவர்களுக்கு மறைபொருளாக இருந்தது. ஏனெனில், அவர் சொன்னது என்னவென்று அவர்களுக்குத் தெரியவில்லை.

பார்வையற்ற ஒருவர் பார்வை பெறுதல்
(மத் 20:29-34; மாற் 10:46-52)

35இயேசு எரிகோவை நெருங்கி வந்தபோது, பார்வையற்ற ஒருவர் வழியோரமாய் உட்கார்ந்து பிச்சையெடுத்துக் கொண்டிருந்தார்.

36மக்கள் கூட்டம் கடந்து போய்க்கொண்டிருந்ததைக் கவனித்த அவர், “இது என்ன?” என்று வினவினார்.

37நாசரேத்து இயேசு போய்க் கொண்டிருக்கிறார் என்று அவருக்குத் தெரிவித்தார்கள்.

38உடனே அவர், “இயேசுவே! தாவீதின் மகனே, எனக்கு இரங்கும்” என்று கூக்குரலிட்டார்.

39முன்னே சென்று கொண்டிருந்தவர்கள் அமைதியாய் இருக்குமாறு அவரை அதட்டினார்கள். ஆனால், அவர், “தாவீதின் மகனே, எனக்கு இரங்கும்” என்று இன்னும் உரக்கக் கத்தினார்.

40இயேசு நின்று, அவரைத் தம்மிடம் கூட்டிக் கொண்டு வரும்படி ஆணையிட்டார். அவர் நெருங்கி வந்ததும்,

41

“நான் உமக்கு என்ன செய்ய வேண்டும் என விரும்புகிறீர்”

என்று இயேசு கேட்டார். அதற்கு அவர், “ஆண்டவரே, நான் மீண்டும் பார்வை பெற வேண்டும்” என்றார்.

42இயேசு அவரிடம்,

“பார்வை பெறும்; உமது நம்பிக்கை உம்மை நலமாக்கிற்று”

என்றார்.

43அவர் உடனே பார்வை பெற்று, கடவுளைப் போற்றிப் புகழ்ந்து கொண்டே இயேசுவைப் பின்பற்றினார். இதைக் கண்ட மக்கள் யாவரும் கடவுளைப் புகழ்ந்தனர்.


18:1 லூக் 11:9-13.
18:5 நீமொ 25:15.
18:7 திவெ 6:9-11.
18:8 மத் 24:12.
18:9 லூக் 16:15; நீமொ 21:2; 28:13.
18:14 மத் 23:12; லூக் 14:11.
18:20 விப 20:12-16; இச 5:16-20.
18:29 லூக் 14:26,27.
Pradeep Augustine Avatar

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Stay Connected

Recently added Bibles

Download our App

Get our official Catholic Gallery app for daily Mass readings, prayers & more

Your Faith. Your Way.
Download the Catholic Gallery app for offline Mass readings, daily prayers, and audio Bible — all in one place.
Available on:
No Thanks