Home » யோவான் நற்செய்தி அதிகாரம் – 8 – திருவிவிலியம்

யோவான் நற்செய்தி அதிகாரம் – 8 – திருவிவிலியம்

யோவான் நற்செய்தி அதிகாரங்கள் (Tamil Bible: Ecumenical Tamil Translation – ETB)

Click the play button to listen or click the Download button to save a copy.

விபசாரத்தில் பிடிபட்ட பெண்

1[இயேசு ஒலிவ மலைக்குச் சென்றார்.

2பொழுது விடிந்ததும் அவர் மீண்டும் கோவிலுக்கு வந்தார். அப்போது மக்கள் அனைவரும் அவரிடம் வந்தனர். அவரும் அங்கு அமர்ந்து அவர்களுக்குக் கற்பித்தார்.

3மறைநூல் அறிஞரும் பரிசேயரும் விபசாரத்தில் பிடிபட்ட ஒரு பெண்ணைக் கூட்டிக் கொண்டு வந்து நடுவில் நிறுத்தி,

4“போதகரே, இப்பெண் விபச்சாரத்தில் கையும் மெய்யுமாகப் பிடிப்பட்டவள்.

5இப்படிப்பட்டவர்களைக் கல்லால் எறிந்து கொல்ல வேண்டும் என்பது மோசே நமக்குக் கொடுத்த திருச்சட்டத்திலுள்ள கட்டளை. நீர் என்ன சொல்கிறீர்?” என்று கேட்டனர்.

6அவர்மேல் குற்றம் சுமத்த ஏதாவது வேண்டும் என்பதற்காக அவர்கள் இவ்வாறு கேட்டுச் சோதித்தார்கள். இயேசு குனிந்து விரலால் தரையில் எழுதிக்கொண்டிருந்தார்.

7ஆனால், அவர்கள் அவரை விடாமல் கேட்டுக்கொண்டிருந்ததால், அவர் நிமிர்ந்து பார்த்து,

“உங்களுள் பாவம் இல்லாதவர் முதலில் இப்பெண்மேல் கல் எறியட்டும்”

என்று அவர்களிடம் கூறினார்.

8மீண்டும் குனிந்து தரையில் எழுதிக் கொண்டிருந்தார்.

9அவர் சொன்னதைக் கேட்டதும் முதியோர் தொடங்கி ஒருவர் பின் ஒருவராக அவர்கள் யாவரும் அங்கிருந்து சென்று விட்டார்கள். இறுதியாக இயேசு மட்டுமே அங்கு இருந்தார். அப்பெண்ணும் அங்கேயே நின்று கொண்டிருந்தார்.

10இயேசு நிமிர்ந்து பார்த்து,

“அம்மா, அவர்கள் எங்கே? நீர் குற்றவாளி என்று எவரும் தீர்ப்பிடவில்லையா?”

என்று கேட்டார்.

11அவர், “இல்லை, ஐயா” என்றார். இயேசு அவரிடம்

“நானும் தீர்ப்பு அளிக்கவில்லை. நீர் போகலாம். இனிப் பாவம் செய்யாதீர்”

என்றார்.]

12மீண்டும் இயேசு மக்களைப் பார்த்து,

“உலகின் ஒளி நானே; என்னைப் பின்தொடர்பவர் இருளில் நடக்கமாட்டார்; வாழ்வுக்கு வழி காட்டும் ஒளியைக் கொண்டிருப்பார்”

என்றார்.

13பரிசேயர் அவரிடம், “உம்மைப்பற்றி நீரே சான்று பகர்கிறீர்; உம் சான்று செல்லாது” என்றனர்.

14அதற்கு இயேசு,

“என்னைப்பற்றி நானே சான்று பகர்ந்தாலும் என் சான்று செல்லும். ஏனெனில், நான் எங்கிருந்து வந்தேன், எங்குச் செல்கிறேன் என்பது எனக்குத் தெரியும். நான் எங்கிருந்து வருகிறேன், எங்குச் செல்கிறேன் என்பது உங்களுக்குத் தெரியாது.

15நீங்கள் உலகப் போக்கின்படி தீர்ப்பு அளிக்கிறீர்கள். நான் யாருக்கும் தீர்ப்பு அளிப்பதில்லை.

16ஆனால், நான் தீர்ப்பு வழங்கினால், அத்தீர்ப்புச் செல்லும். ஏனெனில், நான் தனியாகத் தீர்ப்பு வழங்குவதில்லை; என்னை அனுப்பிய தந்தையும் என்னோடு இருக்கிறார்.

17இருவருடைய சான்று செல்லும் என்று உங்கள் சட்டத்தில் எழுதியுள்ளது அல்லவா?

18

என்னைப் பற்றி நானும் சான்று பகர்கிறேன்; என்னை அனுப்பிய தந்தையும் சான்று பகர்கிறார்”

என்றார்.

19அப்போது அவர்கள், “உம் தந்தை எங்கே இருக்கிறார்?” என்று கேட்டார்கள். இயேசு மறுமொழியாக,

“உங்களுக்கு என்னையும் தெரியாது; என் தந்தையையும் தெரியாது. என்னை உங்களுக்குத் தெரிந்திருந்தால் ஒருவேளை என் தந்தையையும் தெரிந்திருக்கும்”

என்றார்.

20கோவிலில் காணிக்கைப் பெட்டி அருகிலிருந்து இயேசு கற்பித்துக்கொண்டிருந்தபோது இவ்வாறு சொன்னார். அவரது நேரம் இன்னும் வராததால் யாரும் அவரைப் பிடிக்கவில்லை.

21இயேசு மீண்டும் அவர்களிடம்,

“நான் போன பின் நீங்கள் என்னைத் தேடுவீர்கள். நான் போகுமிடத்திற்கு உங்களால் வர இயலாது. நீங்கள் பாவிகளாகவே சாவீர்கள்”

என்றார்.

22யூதர்கள், “‘நான் போகுமிடத்திற்கு உங்களால் வர இயலாது’ என்று சொல்கிறாரே, ஒருவேளை தற்கொலை செய்து கொள்ளப் போகிறாரோ?” என்று பேசிக்கொண்டார்கள்.

23இயேசு அவர்களிடம்,

“நீங்கள் கீழிருந்து வந்தவர்கள்; நான் மேலிருந்து வந்தவன். நீங்கள் இவ்வுலகைச் சார்ந்தவர்கள். ஆனால், நான் இவ்வுலகைச் சார்ந்தவன் அல்ல.

24

ஆகவேதான், நீங்கள் பாவிகளாகவே சாவீர்கள் என்று உங்களிடம் சொன்னேன். ‘இருக்கிறவர் நானே’ என்பதை நீங்கள் நம்பாவிடில் நீங்கள் பாவிகளாய்ச் சாவீர்கள்”

என்றார்.

25அவர்கள், “நீர் யார்?” என்று அவரிடம் கேட்டார்கள். அவர்,

“நான் யாரென்று தொடக்கத்திலிருந்தே சொல்லி வந்துள்ளேன்.*

26

உங்களைப் பற்றிப் பேசுவதற்கும் தீர்ப்பிடுவதற்கும் பல உண்டு. ஆனால், என்னை அனுப்பியவர் உண்மையானவர். நானும் அவரிடமிருந்து கேட்டவற்றையே உலகுக்கு எடுத்துரைக்கிறேன்”

என்றார்.

27தந்தையைப்பற்றியே அவர் பேசினார் என்பதை அவர்கள் உணர்ந்து கொள்ளவில்லை.

28இயேசு அவர்களிடம்,

“நீங்கள் மானிட மகனை உயர்த்திய பின்பு, ‘இருக்கிறவர் நானே’; நானாக எதையும் செய்வதில்லை; மாறாகத் தந்தை கற்றுத் தந்ததையே நான் எடுத்துரைக்கிறேன் என்பதை அறிந்து கொள்வீர்கள்.

29

என்னை அனுப்பியவர் என்னோடு இருக்கிறார். அவர் என்னைத் தனியாக விட்டுவிடுவதில்லை. நானும் அவருக்கு உகந்தவற்றையே எப்போதும் செய்கிறேன்”

என்றார்.

30அவர் இவற்றைச் சொன்னபோது பலர் அவரிடம் நம்பிக்கை கொண்டனர்.

யூதரும் ஆபிரகாமும்

31இயேசு தம்மை நம்பிய யூதர்களை நோக்கி,

“என் வார்த்தைகளை நீங்கள் தொடர்ந்து கடைப்பிடித்து வந்தால் உண்மையில் என் சீடர்களாய் இருப்பீர்கள்;

32

உண்மையை அறிந்தவர்களாயும் இருப்பீர்கள். உண்மை உங்களுக்கு விடுதலை அளிக்கும்”

என்றார்.

33யூதர்கள் அவரைப் பார்த்து,” ‘உங்களுக்கு விடுதலை கிடைக்கும்’ என நீர் எப்படிச் சொல்லலாம்? நாங்கள் யாருக்கும் ஒருபோதும் அடிமைகளாய் இருந்ததில்லை. நாங்கள் ஆபிரகாமின் வழிமரபினர் ஆயிற்றே!” என்றார்கள்.

34அதற்கு இயேசு,

“பாவம் செய்யும் எவரும் பாவத்திற்கு அடிமை என உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன்.

35வீட்டில் அடிமைக்கு நிலையான இடம் இல்லை; மகனுக்கு அங்கு என்றென்றும் இடம் உண்டு.

36மகன் உங்களுக்கு விடுதலை அளித்தால் நீங்கள் உண்மையிலே விடுதலை பெற்றவர்களாய் இருப்பீர்கள்.

37நீங்கள் ஆபிரகாமின் வழிமரபினர் என்பது எனக்குத் தெரியும். ஆனால், என் வார்த்தை உங்கள் உள்ளத்தில் இடம் பெறாததால் நீங்கள் என்னைக் கொல்ல முயலுகிறீர்கள்.

38

நான் என் தந்தையிடம் கண்டதைச் சொல்கிறேன். நீங்கள் உங்கள் தந்தையிடமிருந்து கேட்டதைச் செய்கிறீர்கள்”

என்றார்.

39அவர்கள் அவரைப் பார்த்து, “ஆபிரகாமே எங்கள் தந்தை” என்றார்கள். இயேசு அவர்களிடம்,

“நீங்கள் ஆபிரகாமின் மக்கள் என்றால் அவரைப் போலச் செயல்படுவீர்கள்.

40ஆனால், கடவுளிடமிருந்து கேட்டறிந்த உண்மையை உங்களுக்கு எடுத்துரைத்த என்னை நீங்கள் கொல்ல முயலுகிறீர்கள். ஆபிரகாம் இப்படிச் செய்யவில்லையே!

41

நீங்கள் உங்கள் தந்தையைப் போலச் செயல்படுகிறீர்கள்”

என்றார்.

யூதரும் சாத்தானும்

41அவர்கள், “நாங்கள் பரத்தைமையால் பிறந்தவர்கள் அல்ல; எங்களுக்கு ஒரே தந்தை உண்டு; கடவுளே அவர்” என்றார்கள்.

42இயேசு அவர்களிடம் கூறியது:

“கடவுள் உங்கள் தந்தையெனில் நீங்கள் என்மேல் அன்பு கொள்வீர்கள். நான் கடவுளிடமிருந்தே இங்கு வந்துள்ளேன். நானாக வரவில்லை; அவரே என்னை அனுப்பினார்.

43நான் சொல்வதற்குச் செவி சாய்க்க உங்களால் இயலவில்லை. எனவேதான் நான் சொல்வதை நீங்கள் கண்டுணர்வதில்லை.

44சாத்தானே உங்களுக்குத் தந்தை. உங்கள் தந்தையின் ஆசைப்படி நடப்பதே உங்கள் விருப்பம். தொடக்க முதல் அவன் ஒரு கொலையாளி. அவனிடம் உண்மை இல்லாததால் அவன் உண்மையைச் சார்ந்து நிற்கவில்லை. அவன் பொய் பேசும்போதும் அது அவனுக்கு இயல்பாக இருக்கிறது. ஏனெனில் ,அவன் பொய்யன், பொய்ம்மையின் பிறப்பிடம்.

45நான் உண்மையைக் கூறுவதால் நீங்கள் என்னை நம்புவதில்லை.

46என்னிடம் பாவம் உண்டு என்று உங்களுள் யாராவது என்மேல் குற்றம் சுமத்த முடியுமா? நான் உங்களிடம் உண்மையைக் கூறியும் நீங்கள் ஏன் என்னை நம்புவதில்லை?

47கடவுளைச் சார்ந்தவர் கடவுளிள் சொல்லுக்குச் செவிசாய்க்கிறார்; நீங்கள் கடவுளைச் சார்ந்தவர்கள் அல்ல. ஆதலால் அவர் சொல்லுக்குச் செவி சாய்ப்பதில்லை.”

இயேசுவும் ஆபிரகாமும்

48யூதர்கள் இயேசுவைப் பார்த்து,” நீ சமாரியன், பேய் பிடித்தவன் என நாங்கள் சொல்வது சரிதானே?” என்றார்கள்.

49அதற்கு இயேசு,

“நான் பேய் பிடித்தவன் அல்ல; என் தந்தைக்கு மதிப்பளிப்பவன். ஆனால், நீங்கள் என்னை அவமதிக்கிறீர்கள்.

50நான் எனக்குப் பெருமை தேடுவதில்லை. அதை எனக்குத் தேடித்தருபவர் ஒருவர் இருக்கிறார். அவரே தீர்ப்பளிப்பவர்.

51

என் வார்த்தையைக் கடைப்பிடிப்போர் என்றுமே சாகமாட்டார்கள் என உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன்”

என்றார்.

52யூதர்கள் அவரிடம், “நீ பேய் பிடித்தவன்தான் என்பது இப்போது தெரிந்துவிட்டது. ஆபிரகாம் இறந்தார்; இறைவாக்கினர்களும் இறந்தார்கள். ஆனால், என் வார்த்தையைக் கடைப் பிடிப்போர் என்றுமே சாகமாட்டார் என்கிறாயே!

53எங்கள் தந்தை ஆபிரகாமைவிட நீ பெரியவனோ? ஆபிரகாம் இறந்தார்; இறைவாக்கினரும் இறந்தனர். நீ யாரென்று நினைத்துக் கொண்டிருக்கிறாய்?” என்றார்கள்.

54இயேசு மறுமொழியாக,

“நானே என்னைப் பெருமைப்படுத்தினால், அது எனக்குப் பெருமை இல்லை. என்னைப் பெருமைப்படுத்துபவர் என் தந்தையே. அவரையே நீங்கள் உங்கள் தந்தை என்றும் சொல்கிறீர்கள்.

55ஆனால், அவரை உங்களுக்குத் தெரியாது; எனக்குத் தெரியும். எனக்கு அவரைத் தெரியாது என நான் சொன்னால் உங்களைப்போல நானும் பொய்யனாவேன். அவரை எனக்குத் தெரியும். அவருடைய வார்த்தையையும் நான் கடைபிடிக்கிறேன்.

56

உங்கள் தந்தை ஆபிரகாம் நான் வரும் காலத்தைக் காண முடியும் என்பதை முன்னிட்டுப் பேருவகை கொண்டார்; அதனைக் கண்டபோது மகிழ்ச்சியும் கொண்டார்”

என்றார்.

57யூதர்கள் அவரை நோக்கி, “உனக்கு இன்னும் ஐம்பது வயது கூட ஆகவில்லை; நீ ஆபிரகாமைக் கண்டிருக்கிறாயா?” என்று கேட்டார்கள்

58இயேசு அவர்களிடம்,

“ஆபிரகாம் பிறப்பதற்கு முன்பே நான் இருக்கிறேன் என உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன்”

என்றார்.

59இதைக் கேட்ட அவர்கள் அவர்மேல் எறியக் கற்களை எடுத்தார்கள். ஆனால், இயேசு மறைவாக நழுவிக் கோவிலிலிருந்து வெளியேறினார்.


8:5 லேவி 20:10; இச 22:22-24.
8:12 எசா 42:6; மத் 5:14; யோவா 9:5.
8:16 யோவா 5:30.
8:17 இச 17:6; 19:15.
8:29 1 யோவா 3:22.
8:32 எசா 42:7.
8:34 யோவா 8:17-19; 2 பேது 2:19.
8:36 கலா 5:1.
8:44 1 யோவா 3:8.
8:46 1 பேது 2:22; 1 யோவா 3:5.


8:11 அடைப்புக் குறிக்குள் உள்ள இவ்வசனங்கள் பல முக்கிய கையெழுத்துப் படிகளில் காணப்படவில்லை.
8:25 “நான் சொல்லி வந்துள்ளேன்.” என்னும் சொற்றொடரை “நான் உங்களிடம் ஏன் பேசவேண்டும்?” எனவும் மொழிபெயர்க்கலாம்.
Pradeep Augustine Avatar

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Stay Connected

Recently added Bibles

Download our App

Get our official Catholic Gallery app for daily Mass readings, prayers & more

Your Faith. Your Way.
Download the Catholic Gallery app for offline Mass readings, daily prayers, and audio Bible — all in one place.
Available on:
No Thanks