Home » எரேமியா அதிகாரம் – 4 – திருவிவிலியம்

எரேமியா அதிகாரம் – 4 – திருவிவிலியம்

எரேமியா அதிகாரங்கள் (Tamil Bible: Ecumenical Tamil Translation – ETB)

Click the play button to listen or click the Download button to save a copy.

1இஸ்ரயேலே, நீ திரும்பிவருவதாக

இருந்தால்

என்னிடம் திரும்பிவா,

என்கிறார் ஆண்டவர்.

அருவருப்பானவற்றை அகற்றி விட்டால்

என் திருமுன்னிருந்து

அலைந்து திரியமாட்டாய்.

2வாழும் ஆண்டவர் மேல் ஆணை

என்று சொல்லி

உண்மையோடும் நீதியோடும்

நேர்மையோடும் ஆணையிட்டால்,

மக்களினத்தார் அவர் வழியாகத்

தங்களுக்கு ஆசி கூறிக்கொள்வர்;

அவரில் பெருமை பாராட்டுவர்..

3யூதாவிலும் எருசலேமிலும்

உள்ள மக்களுக்கு

ஆண்டவர் கூறுவது இதுவே;

தரிசு நிலத்தைப் பண்படுத்துங்கள்;

முட்களிடையே விதைக்காதீர்கள்.

4யூதாவின் மக்களே,

எருசலேமில் குடியிருப்போரே,

ஆண்டவருக்காக

விருத்தசேதனம் செய்துகொள்ளுங்கள்;

உங்கள் இதயத்தின் நுனித்தோலை

அகற்றிவிடுங்கள்; இல்லையேல்

உங்கள் தீச்செயல்களை முன்னிட்டு

என் சீற்றம் நெருப்பென வெளிப்பட்டுப்

பற்றியெரியும்;

அதனை அணைப்பார் எவருமிலர்.

வடக்கிலிருந்து வரும் அழிவு

5“யூதாவில் அறிவியுங்கள்;

எருசலேமில் பறைசாற்றுங்கள்;

நாட்டில் எக்காளம் ஊதுங்கள்”

எனச் சொல்லுங்கள்.

ஒன்று கூடுங்கள்;

“அரண்சூழ் நகர்களுக்குச்

சென்றிடுவோம்” என

உரக்கக் கூவுங்கள்.

6சீயோனுக்கு நேராகக்

கொடியை உயர்த்திப் பிடியுங்கள்;

விரைந்து தப்பியோடுங்கள்;

நிற்காதீர்கள்; ஏனெனில்,

வடக்கிலிருந்து தீமை வரச்செய்வேன்;

அது பேரழிவாய் இருக்கும்.

7சிங்கம் ஒன்று

புதரிலிருந்து கிளம்பியுள்ளது;

மக்களினங்களை அழிப்பவன்

புறப்பட்டு விட்டான்;

உங்கள் நாட்டைப் பாழாக்க,

அவன் தன் இடத்திலிருந்து

வெளியேறிவிட்டான்;

உங்கள் நகர்கள் பாழாடைந்து

குடியற்றுப் போகும்.

8எனவே, சாக்கு உடை

உடுத்திக் கொள்ளுங்கள்.

அழுது புலம்புங்கள்; ஒப்பாரி வையுங்கள்;

ஏனெனில், ஆண்டவரின் கோபக் கனல்

நம்மை விட்டு நீங்கவில்லை.

9அக்காலத்தில் அரசனும் தலைவர்களும் நம்பிக்கையிழந்துவிடுவர், என்கிறார் ஆண்டவர்; குருக்கள் திடுக்கிட்டுப் போவர்; இறைவாக்கினர் திகைத்து நிற்பர்.

10அப்போது நான், “ஆ! என் தலைவராகிய ஆண்டவரே! நீர் இம்மக்களையும் எருசலேமையும் முற்றிலும் ஏமாற்றிவிட்டீர்; ஏனெனில் வாள் எங்கள் தொண்டைமீது இருக்கும்போதே ‘உங்களுக்குச் சமாதானம்’ என்கிறீர்” என்றேன்.

11அக்காலத்தில் இம்மக்களுக்கும் எருசலேமுக்கும் இவ்வாறு கூறப்படும்; பாலை நிலத்தின் மொட்டை மேடுகளிலிருந்து அனல்காற்று என் மகளாகிய மக்கள்மீது வீசும். அது தூற்றுவதற்கும் தூய்மைப்படுத்துவதற்குமான காற்றன்று.

12அதைவிடப் பெரும் காற்று ஒன்று என்னிடமிருந்து வருகின்றது. இப்போது நானே அவர்கள் மேல் தண்டனைத் தீர்ப்பு வழங்கப் போகிறேன்.

13இதோ, மேகங்களைப் போல் எதிரி வருகிறான். அவன் தேர்கள் சூறாவளி போன்றவை; அவன் குதிரைகள் கழுகுகளைவிட விரைவாகச் செல்பவை; நமக்கு ஐயோ கேடு! நாம் அழிந்தோம்.

14எருசலேமே, நீ விடுவிக்கப்பட வேண்டுமானால், உன் இதயத்திலிருந்து தீயதைக் கழுவி விடு; இன்னும் எத்துணைக் காலத்திற்குத் தீய சிந்தனைகள் உன்னில் குடி கொண்டிருக்கும்?

15தாணிலிருந்து எழும்பும் குரலொலி அறிக்கையிடுகிறது. எப்ராயிம் மலையிலிருந்து கேடு அறிவிக்கப்படுகிறது.

16‘தொலை நாட்டிலிருந்து உன்னை முற்றுகையிடுவோர் வருகின்றனர்; யூதாவின் நகர்களுக்கு எதிராகப் போர்க் குரல் எழுப்புகின்றனர்’ என மக்களினங்களை எச்சரியுங்கள். இதை எருசலேமுக்கு அறிவியுங்கள்.

17வயல்வெளியின் காவலாளியென, அவர்கள் அவளைச் சுற்றி வளைத்து எதிர்த்து நிற்கின்றனர். ஏனெனில் அவள் எனக்கு எதிராகக் கலகம் செய்தாள், என்கிறார் ஆண்டவர்.

18உன் நடத்தையும் உன் செயல்களும் இவற்றை உன்மேல் வருவித்தன. உனக்கு வந்த இக்கேடு எத்துணைக் கசப்பாய் உள்ளது? அது உன் இதயத்தையே நொறுக்கி விட்டது.

19என் அடிவயிறு கலங்குகின்றது;

நான் வேதனையால் துடிக்கின்றேன்;

என் இதயம் துயரத்தால்

பதைபதைக்கின்றது;

நான் வாளாவிருக்க முடியுமா?

என் நெஞ்சே, எக்காள ஒலி

என் காதில் விழுகிறதே!

போர்க்குரல் கேட்கிறதே!

20அழிவின் மேல் அழிவு

என்ற செய்தியே வருகின்றது;

நாடு முழுவதும் பாழடைந்துவிட்டது;

நொடிப்பொழுதில் என் கூடாரங்களும்,

இமைப்பொழுதில் மூடு திரைகளும்

அழிந்து போயின;

21எதுவரைக்கும் நான்

போர்க்கொடியைப் பார்த்துக் கொண்டிருக்க வேண்டும்?

எக்காளத்தின் குரலைக்

கேட்டுக் கொண்டிருக்க வேண்டும்?

22என் மக்கள் அறிவிலிகள்;

என்னை அவர்கள்

அறிந்து கொள்ளவில்லை;

மதிகெட்ட மக்கள் அவர்கள்;

உய்த்துணரும் ஆற்றல்,

அவர்களுக்கில்லை;

தீமை செய்வதில் அவர்கள் வல்லவர்கள்;

நன்மை செய்ய

அவர்களுக்குத் தெரிவதில்லை.

23நான் நாட்டைப் பார்த்தேன்;

அது பாழ்நிலமாய்க் கிடந்தது;

வானங்களைப் பார்த்தேன்;

அவற்றில் ஒளியே இல்லை.

24நான் மலைகளைப் பார்த்தேன்;

இதோ! அவை அதிர்ந்தன;

குன்றுகள் அனைத்தும் அசைந்தன.

25நான் பார்த்தேன்;

மனிதரையே காணவில்லை;

வானத்துப் பறவைகள் அனைத்தும்

பறந்து போய்விட்டன.

26நான் பார்த்தேன்;

இதோ செழிப்பான நிலமெல்லாம்

பாலை நிலமாகிவிட்டது;

ஆண்டவரின் திருமுன்

அவரது கோபக் கனலால்

அதன் நகர்கள் அனைத்தும்

தகர்க்கப்பட்டன.

27ஆண்டவர் கூறுவது இதுவே:

நாடு முழுவதும் பாழடைந்து போகும்;

எனினும் அதனை முற்றிலும்

பாழாக்கமாட்டேன்.

28இதனை முன்னிட்டு நாடு புலம்பும்;

மேலே வானங்கள் இருளடையும்;

எனெனில், நான் சொல்லிவிட்டேன்;

இது பற்றி வருந்தமாட்டேன்;

நான் முடிவு செய்து விட்டேன்;

மனம் மாறமாட்டேன்.

29குதிரை வீரர், வில் வீரர்

எழுப்பும் ஒலி கேட்டு,

நகரினர் அனைவரும் ஓட்டமெடுப்பர்;

புதர்களுக்குள் மறைந்துகொள்வர்;

பாறைகள் மீது ஏறிக்கொள்வர்;

நகர்கள் அனைத்தையும் விட்டுவிட்டு

ஓடிவிடுவர்;

அவற்றில் குடியிருக்க எவருமே இரார்.

30பாழ்பட்டவளாகிய நீ ஏன்

கருஞ் சிவப்பு ஆடை உடுத்துகின்றாய்?

பொன் அணிகலன்களால்

அலங்கரிக்கின்றாய்?

நீ உன்னை அழகுபடுத்துவது வீண்;

உன் காதலர் உன்னை

அவமதிக்கின்றனர்;

உன் உயிரைப் பறிக்கத் தேடுகின்றனர்.

31பேறுகாலப் பெண் எழுப்பும்

குரல் போன்றும்

தன் முதற் பிள்ளையைப்

பெற்றெடுப்பவளின்

வேதனைக் குரல் போன்றும்

குரல் ஒன்று கேட்டேன்.

அது, மூச்சுத் திணறி,

கைகளை விரித்து,

“எனக்கு ஐயோ கேடு!

கொலைஞர் முன்னால்

நான் உணர்வற்றுக் கிடக்கிறேன்!”

என்று அலறும்

மகள் சீயோனின் குரலாகும்.


4:3 ஓசே 10:12.
Pradeep Augustine Avatar

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Stay Connected

Recently added Bibles

Download our App

Get our official Catholic Gallery app for daily Mass readings, prayers & more

Your Faith. Your Way.
Download the Catholic Gallery app for offline Mass readings, daily prayers, and audio Bible — all in one place.
Available on:
No Thanks