Home » எஸ்தர் (கிரேக்கம்) அதிகாரம் – 5 – திருவிவிலியம்

எஸ்தர் (கிரேக்கம்) அதிகாரம் – 5 – திருவிவிலியம்

எஸ்தர் (கிரேக்கம்) அதிகாரங்கள் (Tamil Bible: Ecumenical Tamil Translation – ETB)

Click the play button to listen or click the Download button to save a copy.

எஸ்தர் மன்னரிடம் வேண்டுகோள் விடுத்தல்

மூன்றாம் நாள் எஸ்தர் தம் மன்றாட்டை முடித்துக்கொண்டு, வழிபாட்டுக்குரிய உடைகளைக் களைந்துவிட்டு பகட்டான ஆடைகளை அணிந்துகொண்டார்; 1aசிறப்பாக ஒப்பனை செய்து கொண்டபின், அனைத்தையும் காண்பவரும் மீட்பவருமான கடவுளிடம் மன்றாடினார்; பின்பு இரண்டு பணிப்பெண்களை அழைத்து, ஒருத்திமீது மெல்லச் சாய்ந்துகொள்ள, மற்றவள் தம் ஆடையின் பின்பகுதியைத் தாங்கி வரச்செய்தார். 1bஅழகின் நிறைவோடு விளங்கிய அவரது முகத்தில் மகிழ்ச்சியும் அன்பும் பொலிந்தன; அவருடைய உள்ளமோ அச்சத்தால் கலங்கியிருந்தது.

1cஎல்லா வாயில்களையும் கடந்து எஸ்தர் மன்னர்முன் வந்து நின்றார். பொன்னாலும் விலையுயர்ந்த மணிகளாலும் அணி செய்யப்பட்ட மன்னருக்குரிய ஆடம்பர உடைகளை அணிந்தவராக மன்னர் தம் அரியணைமீது வீற்றிருந்தார். அவரது தோற்றம் பேரச்சத்தைத் தருவதாக இருந்தது. 1dமாட்சியில் துலங்கிய தம் முகத்தை நிமிர்த்தி அவர் கடுஞ்சீற்றத்துடன் எஸ்தரை நோக்கினார். முகம் வெளுத்து மயக்கமுற்ற எஸ்தர் தடுமாறி விழுந்தபோது தம்முன் சென்ற பணிப்பெண்ணைப் பற்றிக் கொண்டார். 1eஆனால் கடவுள் மன்னரின் மனத்தை மாற்றிக் கனிவுகொள்ளச் செய்தார். மன்னர் கலக்கத்துடன் தம் அரியணையினின்று விரைந்து வந்து, எஸ்தரின் மயக்கம் தெளியும்வரை தம் கைகளில் அவரைத் தாங்கிக் கொண்டார்; இன்சொற்களால் அவரைத் தேற்றியபின், 1f“எஸ்தர், என்ன நேர்ந்தது? நான் உன் அன்புக்குரியவன். ஆகவே அஞ்சாதே. நீ இறக்கமாட்டாய்; ஏனெனில் நம் ஆணை நம்முடைய குடிமக்களுக்கு மட்டுமே உரியது. அருகில் வா” என்றார்.

பின்பு அவர் தம் பொற் செங்கோலை உயர்த்தி அதைக்கொண்டு, எஸ்தரின் கழுத்தைத் தொட்டபின் அவரைத் தழுவிக்கொண்டு “இப்போது சொல்” என்றார். 2aஎஸ்தர் மறுமொழியாக, “என் தலைவரே, கடவுளின் தூதரைப்போலத் தாங்கள் காணப்பட்டீர்கள். தங்களின் மாட்சியைக் கண்டு என் உள்ளம் அஞ்சிக் கலங்கியது. என் தலைவரே, தாங்கள் வியப்புக்குரியவர்! தங்கள் முகம் அருள் நிறைந்து விளங்குகிறது” என்றார். 2bஎஸ்தர் பேசிக்கொண்டிருக்கும்போதே மயங்கிக் கீழே விழுந்தார். இதனால் மன்னர் கலக்கமுற்றார். எஸ்தருடைய பணியாளர்கள் அனைவரும் அரசியைத் தேற்றினார்கள்.

3அப்பொழுது மன்னர், “எஸ்தர், உனக்கு என்ன வேண்டும்? உன் விருப்பம் யாது? என் பேரரசில் பாதியைக் கேட்டாலும் அதை உனக்குக் கொடுப்பேன்” என்றார்.

4அதற்கு எஸ்தர், “இன்று எனக்கு ஒரு பொன்னாள். மன்னருக்கு விருப்பமானால் இன்று நான் கொடுக்கவிருக்கும் விருந்தில் மன்னரும் ஆமானும் கலந்துகொள்ள வேண்டுகிறேன்” என்று கூறினார்.

எஸ்தர் அளித்த முதல் விருந்து

5அப்பொழுது மன்னர், “எஸ்தரின் விருப்பத்தை நான் நிறைவேற்றுவேன். எனவே ஆமானை உடனே அழைத்து வாருங்கள்” என்று சொன்னார். எஸ்தர் அழைத்தவாறே விருந்தில் இருவரும் கலந்துகொண்டனர்.

6திராட்சை மதுவை அருந்திய வண்ணம் மன்னர் அரசியை நோக்கி, “எஸ்தர், உனக்கு என்ன வேண்டும்? நீ கேட்பதெல்லாம் உனக்குக் கொடுப்பேன்” என்றார்.

7அதற்கு எஸ்தர், “என் வேண்டுகோளும் விருப்பமும் இதுதான்:

8மன்னரின் பரிவு எனக்குக் கிட்டுமாயின், நான் நாளை கொடுக்கவிருக்கும் விருந்திலும் மன்னரும் ஆமானும் கலந்துகொள்ள வேண்டுகிறேன். இதைப்போன்றே நாளையும் செய்வேன்” என்றார்.

மொர்தெக்காய்க்கு எதிராக ஆமானின் சூழ்ச்சி

9ஆமான் மகிழ்ச்சியுடனும் உவகை உள்ளத்துடனும் மன்னரிடமிருந்து விடைபெற்றுச் சென்றான்; ஆனால் அரண்மனையில் யூதராகிய மொர்தெக்காயைக் கண்டபோது அவன் கடுஞ்சீற்றங்கொண்டான்;

10தன் வீட்டுக்குச் சென்றதும் அவன் தன் நண்பர்களையும் மனைவி சோசராவையும் அழைத்தான்;

11தன் செல்வத்தை அவர்களுக்குக் காட்டி, மன்னர் தன்னைப் பெருமைப்படுத்தியதையும், மற்றவர்களுக்கு மேலாகத் தன்னை உயர்த்திப் பேரரசில் தனக்கு முதலிடம் கொடுத்ததையும் அவர்களிடம் விளக்கினான்.

12பின் ஆமான், “மன்னரோடு விருந்துக்கு வருமாறு அரசி என்னைத் தவிர வேறு யாரையும் அழைக்கவில்லை. நாளைய விருந்துக்கும் என்னை அழைத்திருக்கிறார்;

13ஆனால் அரண்மனையில் யூதனாகிய மொர்தெக்காயைக் காணும்போது இதெல்லாம் எனக்கு மகிழ்ச்சி தருவதாக இல்லை” என்றான்.

14ஐம்பது முழம் உயரமுள்ள தூக்குமரம் ஒன்றை நாட்டச் செய்யும்; நாளைக் காலையில் மன்னரிடம் சொல்லி அதில் மொர்தெக்காயைத் தூக்கிலிடச் செய்யும். பின் மன்னரோடு விருந்துக்குச் சென்று உண்டு மகிழும்” என்று அவனுடைய மனைவி சோசராவும் நண்பர்களும் அவனிடம் கூறினார்கள். இது ஆமானுக்கு உகந்ததாய் இருந்தது. உடனே அவன் தூக்குமரத்தை ஏற்பாடு செய்தான்.

Pradeep Augustine Avatar

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Stay Connected

Recently added Bibles

Download our App

Get our official Catholic Gallery app for daily Mass readings, prayers & more

Your Faith. Your Way.
Download the Catholic Gallery app for offline Mass readings, daily prayers, and audio Bible — all in one place.
Available on:
No Thanks