Home » எஸ்தர் (கிரேக்கம்) அதிகாரம் – 1 – திருவிவிலியம்

எஸ்தர் (கிரேக்கம்) அதிகாரம் – 1 – திருவிவிலியம்

எஸ்தர் (கிரேக்கம்) அதிகாரங்கள் (Tamil Bible: Ecumenical Tamil Translation – ETB)

Click the play button to listen or click the Download button to save a copy.

முகவுரை

மொர்தெக்காயின் கனவு

1aஅர்த்தக்சஸ்தா* மாமன்னருடைய ஆட்சியின் இரண்டாம் ஆண்டில், நீசான் மாதம் முதல் நாள் மொர்தெக்காய் ஒரு கனவு கண்டார். அவர் பென்யமின் குலத்தைச் சேர்ந்த கீசு என்பவரின் கொள்ளுப் பேரனும் சிமேயி என்பவரின் பேரனும் யாயீரின் மகனும் ஆவார்; 1bசூசா நகரில் வாழ்ந்து வந்த அவர் ஒரு யூதர், அரசவையில் பணிபுரிந்தவர்களுள் தலைசிறந்தவர். 1cபாபிலோனிய மன்னராகிய நெபுகத்னேசர் யூதேயா நாட்டு அரசராகிய எக்கோனியாவுடன் எருசலேமிலிருந்து சிறைப்படுத்திச் சென்ற கைதிகளுள் அவரும் ஒருவர்.

1dஅவர் கண்ட கனவு இதுதான்: பேரொலியும் இரைச்சலும் இடிமுழக்கமும் நிலநடுக்கமும் குழப்பமும் மண்ணுலகின்மீது உண்டாயின. 1eஇரண்டு பெரிய அரக்கப் பாம்புகள் எழுந்துவந்தன; ஒன்றோடு ஒன்று போரிட முனைந்து பேரொலி எழுப்பின. 1fஅதைக் கேட்டதும் நீதி வழுவா இறைமக்களுக்கு எதிராகப் போரிடுமாறு எல்லா நாடுகளும் முன்னேற்பாடாயின. 1gமண்ணுலகின்மீது இருட்டும் காரிருளும் துன்பமும் கொடுந்துயரமும், பேரிடரும் பெருங்குழப்பமும் நிலவிய நாள் அது. 1hநீதி வழுவா இறைமக்கள் அனைவரும் தங்களுக்கு வரவிருந்த தீமைகளைப் பற்றி அஞ்சிக் கலங்கினார்கள்; சாவுக்குத் தங்களையே ஆயத்தமாக்கிக் கொண்டு கடவுளை நோக்கிக் கதறி அழுதார்கள். 1iஅதன் விளைவாக, ஒரு சிறிய ஊற்றிலிருந்து ஒரு பெரிய ஆறு தோன்ற, அதில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. 1k*கதிரவன் எழ, ஒளி உண்டாயிற்று. தாழ்ந்தோர் உயர்த்தப்பட்டு மேலோரை விழுங்கினர்.

1lகடவுள் செய்யத் திட்டமிட்டிருந்ததைக் கனவில் கண்ட மொர்தெக்காய் விழித்தெழுந்தார்; அன்று பகல் முழுவதும் அதைப்பற்றியே சிந்தித்து, அதன் பொருளை நுணுக்கமாகக் காண முயன்றார்.

மன்னருக்கு எதிரான சூழ்ச்சி வெளிப்படுதல்

1mமன்னரின் அலுவலர்களும் அரண்மனைக் காவலர்களுமான கபத்தா, தாரா ஆகிய இருவருடன் மொர்தெக்காய் அரண்மனை முற்றத்தில் இளைப்பாறிக் கொண்டிருந்தார். 1nஅப்போது அவர் அவர்களின் உரையாடலைக் கேட்க நேர்ந்தது. அவர் அவர்களின் சூழ்ச்சிகளை ஆராய்ந்து, அவர்கள் அர்த்தக்சஸ்தா மன்னரைக் கொல்ல ஏற்பாடு செய்துகொண்டிருந்ததை அறிந்தார்; எனவே மன்னரிடம் அவர்களைப்பற்றி எடுத்துரைத்தார். 1oமன்னர் அந்த இரண்டு அலுவலர்களையும் விசாரித்தபோது அவர்கள் தங்கள் குற்றத்ததை ஒப்புக்கொண்டதால் கொல்லப்பட்டார்கள். 1pமன்னர் இவற்றையெல்லாம் தம் குறிப்பேட்டில் எழுதிவைத்தார். மொர்தெக்காயும் இவற்றைக் குறித்து வைத்துக் கொண்டார். 1qமொர்தெக்காய் அரசவையில் பணியாற்றவேண்டும் என்று மன்னர் ஆணை பிறப்பித்து, அவரது தொண்டுக்காகப் பரிசுகள் வழங்கினார். 1rஆனால் பூகையனாகிய அம்மதாத்தாவி மகனும், மன்னரிடம் உயர் மதிப்புப் பெற்றுத் திகழ்ந்தவனுமான ஆமான், அந்த அலுவலர்கள் இருவரையும் முன்னிட்டு மொர்தெக்காயுக்கும் அவருடைய இனத்தாருக்கும் தீங்கு விளைவிக்க முயன்று வந்தான்.

எஸ்தரின் உயர்வு

மன்னர் அளித்த விருந்து

1sஇதன்பின், அர்த்தக்சஸ்தாவின் ஆட்சிக்காலத்தில் பின்வரும் நிகழ்ச்சிகள் நடந்தன. இந்த அர்த்தக்சஸ்தாதான் இந்தியா முதல் எத்தியோப்பியா வரை இருந்த நூற்று இருபத்தேழு மாநிலங்கள்மீதும் ஆட்சி செலுத்திவந்தார்.

2அக்காலத்தில் அவர் சூசா நகரில் அரியணையில் வீற்றிருந்தார்.

3தம் ஆட்சியின் மூன்றாம் ஆண்டில் மன்னர் தம் நண்பர்களுக்கும் பிற நாட்டினருக்கும் பாரசீக, மேதிய நாட்டு உயர்குடி மக்களுக்கும் மாநில ஆளுநர்களுக்கும் விருந்து அளித்தார்;

4நூற்று எண்பது நாள்களாகத் தம் பேரரசின் செல்வங்களையும் தம் விருந்தின் மேன்மையையும் அவர்கள் அறியச் செய்தார்.

5விருந்து நாள்கள் முடிவுற்றபோது, சூசா நகரில் வாழ்ந்துவந்த பிற நாட்டினருக்குத் தம் அரண்மனை முற்றத்தில் ஆறு நாள் விருந்து அளித்தார்.

6அரண்மனை முற்றத்தை விலையுயர்ந்த மென்துகிலாலும் பருத்தித் துணியாலுமான திரைகள் அணி செய்தன; அத்திரைகள் பளிங்குக் கற்களாலும் பிறகற்களாலும் எழுப்பப்பட்ட தூண்கள் மீது பொன், வெள்ளிக்கட்டிகளோடு பிணைக்கப்பட்ட கருஞ்சிவப்புக் கயிறுகளில் தொங்கவிடப்பட்டிருந்தன; மரகதம், பளிங்கு, முத்துச்சிப்பி ஆகியவை பதிக்கப்பட்ட தளத்தின்மீது பொன், வெள்ளியால் இழைக்கப்பட்ட மஞ்சங்கள் அமைக்கப்பட்டிருந்தன; வலைப் பின்னலாலான பல வண்ணப் பூத்தையல் வேலைப்பாடுகளும் அவற்றைச் சுற்றிலும் ரோசாப் பூக்களும் பின்னப்பட்ட விரிப்புகள் அங்கே இருந்தன.

7பொன், வெள்ளிக்கிண்ணங்களின் நடுவே ஏறத்தாழ ஆயிரத்து இருநூறு டன்* வெள்ளி மதிப்புள்ள மாணிக்கக் கல்லாலான ஒரு சிறு கிண்ணமும் வைக்கப்பட்டிருந்தது. மன்னருக்குரிய இனிய திராட்சை மது தாராளமாகப் பரிமாறப்பட்டது.

8குடி அளவு மீறிப்போயிற்று; ஏனெனில், தம் விருப்பப்படியும் விருந்தினரின் விருப்பப்படியும் திராட்சை மதுவைப் பரிமாறும்படி பணியாளர்களுக்கு மன்னர் ஆணையிட்டிருந்தார்.

9அதே நேரத்தில் அர்த்தக்சஸ்தா மன்னரின் அரண்மனையில் ஆஸ்தின்* அரசி பெண்களுக்கு விருந்து அளித்தாள்.

ஆஸ்தின் அரசியின் வீழ்ச்சி

10ஏழாம் நாளன்று அர்த்தக்சஸ்தா மன்னர் களிப்புற்றிருந்த பொழுது தம் அலுவலர்களாகிய ஆமான், பாசான், தாரா, போராசா, சதோல்தா, அபத்தாசா, தராபா என்னும் ஏழு அண்ணகர்களிடமும்,

11அரசியைத் தம்மிடம் அழைத்து வருமாறு பணித்தார்; அவளை அரியணையில் அமர்த்தி, முடிசூட்டி, அவளது எழிலை மாநில ஆளுநர்களும் பிற நாட்டினரும் காணவேண்டும் என்று விரும்பினார்; ஏனெனில் அவள் மிகுந்த அழகுள்ளவள்.

12ஆனால் ஆஸ்தின் அரசி மன்னருக்குக் கீழ்ப்படியவும் அண்ணகர்களுடன் வரவும் மறுத்துவிட்டாள். இதனால் மன்னர் வருத்தமுற்றுச் சினங்கொண்டார்.

13மன்னர் தம் நண்பர்களிடம், “ஆஸ்தின் இவ்வாறு சொல்லிவிட்டாள். எனவே இதற்குச் சட்டப்படி தீர்ப்பு வழங்குங்கள்” என்று கூறினார்.

14பாரசீக, மேதிய நாட்டு ஆளுநர்களான ஆர்க்கெசாய், சர்தாத்தாய், மலேசயார் ஆகியோர் மன்னருக்கு நெருக்கமாயும் அரசில் முதன்மை நிலையிலும் இருந்தார்கள். அவர்கள் மன்னரை அணுகி,

15அண்ணகர்கள் வழியாக அறிவிக்கப்பட்ட அரச கட்டளையை நிறைவேற்றத் தவறிய ஆஸ்தின் அரசிக்குச் சட்டப்படி செய்ய வேண்டியது என்ன என்பதை அறிவித்தார்கள்.

16மன்னரிடமும் ஆளுநர்களிடமும் மூக்காய் என்பவர் பின்வருமாறு கூறினார்: “ஆஸ்தின் அரசி மன்னருக்கு எதிராக மட்டுமன்றி, மன்னரின் எல்லா ஆளுநர்களுக்கும் அலுவலர்களுக்கும் எதிராகவும் தவறிழைத்திருக்கிறாள்.

17— ஏனெனில், அரசி சொல்லியிருந்ததை அவர் திரும்பச் சொல்லி, அவள் எவ்வாறு மன்னரை அவமதித்தாள் என்பதை அவர்களுக்கு விளக்கினார். — அர்த்தக்சஸ்தா மன்னரை அவள் அவமதித்தது போலவே,

18பாரசீக, மேதிய நாட்டு ஆளுநர்களின் மனைவியரான உயர்குடிப் பெண்டிரும், அரசி மன்னருக்குக் கூறியதுபற்றிக் கேள்விப்பட்டு, தங்கள் கணவர்களை அவமதிக்கத் துணிவர்.

19எனவே மன்னருக்கு விருப்பமானால், அவர் ஓர் ஆணை பிறப்பிக்கட்டும்; அது பாரசீக, மேதிய நாட்டுச் சட்டங்களுள் பொறிக்கப்படட்டும்; ஆஸ்தின் இனி மன்னர்முன் வாராதிருக்கட்டும்; அரசிப்பட்டத்தை அவளிடமிருந்து பறித்து, அவளைவிடச் சிறந்ததொரு பெண்மணிக்கு மன்னர் வழங்கட்டும். இதைத்தவிர வேறு வழியே இல்லை.

20மன்னர் இயற்றும் சட்டம் எதுவாயினும், அதைத் தமது பேரரசு முழுவதும் அவர் அறிவிக்கட்டும். இதனால் வறியோர், செல்வர் ஆகிய அனைவருடைய மனைவியரும் தம் தம் கணவரை மதித்து ஒழுகுவார்கள்.”

21மூக்காயின் கருத்து மன்னருக்கும் ஆளுநர்களுக்கும் ஏற்றதாயிருந்தது. அவர் சொன்னவாறே மன்னர் செய்தார்;

22கணவர்கள் எல்லாரும் அவரவர் வீட்டில் மதிக்கப்படவேண்டும் என்ற ஆணையைத் தம் பேரரசின் எல்லா மாநிலங்களுக்கும் அந்தந்த மாநில மொழியில் அனுப்பிவைத்தார்.


1:1c எஸ் (கி) 2:6; அர 24:15.
1:1d-k எஸ் (கி) 10:3 a-f.
1:1m-q எஸ் (கி) 2:21-23; 6:1-2.
1:1r எஸ் (கி) 3:1-15.


1:1a * எபிரேய பாடத்தில் இப்பெயர் ‘அகஸ்வேர்’ என உள்ளது.
1:1k*,j,v ஆகிய எழுத்துக்கள் ‘செப்துவாசிந்தா’ வில் இல்லை. எனவே அவை இந்நூலின் எண் வரிசையில் இடம் பெறா.
1:7 * ‘முப்பதாயிரம் தாலந்து’ என்பது கிரேக்க பாடம்.
1:9 * எபிரேய பாடத்தில் இப்பெயர் ‘வஸ்தி’ என உள்ளது.
Pradeep Augustine Avatar

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Stay Connected

Recently added Bibles

Download our App

Get our official Catholic Gallery app for daily Mass readings, prayers & more

Your Faith. Your Way.
Download the Catholic Gallery app for offline Mass readings, daily prayers, and audio Bible — all in one place.
Available on:
No Thanks