Home » 2 குறிப்பேடு அதிகாரம் – 2 – திருவிவிலியம்

2 குறிப்பேடு அதிகாரம் – 2 – திருவிவிலியம்

2 குறிப்பேடு அதிகாரங்கள் (Tamil Bible: Ecumenical Tamil Translation – ETB)

Click the play button to listen or click the Download button to save a copy.

கட்டுவதற்கான முன்னேற்பாடுகள்
(1 அர 5:1-18)

1சாலமோன் ஆண்டவரின் திருப்பெயருக்கென ஒரு கோவிலையும் தமக்கென ஓர் அரச மாளிகையையும் கட்டியெழுப்ப முடிவு செய்தார்.

2சுமைசுமப்பதற்கு எழுபதினாயிரம் பேரையும், மலைகளில் கருங்கற்களை வெட்டுவதற்கு எண்பதினாயிரம் பேரையும், அவர்களைக் கண்காணிக்க மூவாயிரத்து அறுநூறு பேரையும் நியமித்தார்.

3தீரின் மன்னன் ஈராமிடம் சாலமோன் தூதனுப்பிக் கூறியது: “என் தந்தை தாவீது வாழும்படி ஒரு மாளிகை கட்ட நீர் அவருக்கு கேதுரு மரங்களை அனுப்பி வைத்தீரே! அவருக்குச் செய்ததுபோலவே எனக்கும் செய்தருளும்.

4நான் கடவுளாகிய ஆண்டவரின் பெயருக்கென ஒரு கோவில் கட்டி, அவருக்கு அர்ப்பணிக்கவிருக்கிறேன். இஸ்ரயேலரின் என்றுமுள நியமத்திற்கேற்ப ஆண்டவரது திருமுன் நறுமணத் தூபம் காட்டுவதற்காகவும், திருமுன்னிலை அப்பங்களை எந்நாளும் வைப்பதற்காகவும், காலை மாலையிலும், ஓய்வு, அமாவாசை நாள்களிலும், எம் கடவுளாகிய ஆண்டவரின் திருவிழாக்களிலும் எரிபலி செலுத்துவதற்காகவும் அதை அவரது பெயருக்கு அர்ப்பணிக்கவிருக்கிறேன்.

5எம் கடவுள் எல்லாத் தெய்வங்களையும் விட மிகப் பெரியவர்! எனவே, நான் கட்டப்போகிற கோவிலும் மிகப் பெரியதாயிருக்கும்.

6விண்ணும் விண்ணுலகும் அவரைக் கொள்ள இயலாதிருக்க, அவருக்கேற்ற ஒரு கோவில் கட்ட யாரால் முடியும்? அவரது திருமுன் தூபம் காட்டுவதற்கேயன்றி அவருக்கென ஒரு கோவில் எழுப்ப நான் யார்?

7ஆகவே, ஒரு திறமைமிக்க கலைஞனை என்னிடம் அனுப்பும். அவன் பொன், வெள்ளி, வெண்கலம், இரும்பு ஆகியவற்றிலும் ஊதா, கருஞ்சிவப்பு, நீலநூல் வேலைப்பாட்டிலும், சிற்பம் செதுக்குவதிலும் தேர்ந்தவனாக இருக்க வேண்டும். என் தந்தை தாவீதால் தேர்ந்தெடுக்க்பட்டவர்களும், என்னோடு யூதா, எருசலேமில் இருக்கிறவர்களுமான கலைஞரோடு சேர்ந்து அவன் வேலை செய்ய வேண்டும்.

8மேலும், லெபனோலிருந்து கேதுரு மரங்கள், தேவதாரு மரங்கள், வாசனை மரங்கள் ஆகியவற்றை நீர் எனக்கு அனுப்பிவையும். ஏனெனில், உம் பணியாளர் லெபனோனின் மரங்களை வெட்டுவதிலும் திறமைமிக்கவர் என நான் அறிவேன். என் பணியாளரும் அவர்களோடு சேர்ந்து உழைப்பர்.

9அவர்கள் எனக்கு ஏராளமான மரங்களைத் தயார் செய்ய வேண்டும். ஏனெனில், மிகவும் பெரிய, சிறந்த கோவில் ஒன்றை நான் கட்டவிருக்கிறேன்.

10மரங்களை வெட்டும் உம் பணியாளருக்கு நான் இருபதினாயிரம் மரக்கால் பதப்படுத்தப்பட்ட கோதுமையும், இருபதினாயிரம் மரக்கால் வாற்கோதுமையும், இருபதினாயிரம் குடம் திராட்சை இரசமும், இருபதினாயிரம் குடம் எண்ணெயும் கொடுப்பேன்.”

11அதற்கு தீரின் மன்னன் ஈராம்* சாலமோனுக்கு எழுதி அனுப்பிய மடல்: “ஆண்டவர் தம் மக்களுக்கு அன்பு காட்டுகிறார். அதனால் உம்மை அவர்களின் அரசராக நியமித்திருக்கிறார்.

12விண்ணகம், மண்ணகம் அனைத்தையும் படைத்த இஸ்ரயேலின் கடவுளாகிய ஆண்டவர் வாழ்த்தப் பெறுவாராக! அவரே ஆண்டவராகிய தமக்கு ஒர் இல்லத்தையும் அரசராகிய உமக்கு ஓர் அரண்மனையையும் கட்டுவதற்கு விவேகமும் அறிவாற்றலுமுடைய ஞானியாம் உம்மைத் தாவீது அரசருக்கு மகனாகத் தந்தருளினார்!

13எனவே, அறிவும் திறமையும் படைத்த ஈராம் அபி என்பவனை நான் உம்மிடம் அனுப்புகிறேன்.

14அவன் தாண் குலத்தைச் சேர்ந்த ஒரு பெண்ணின் மகன்; அவன் தந்தை தீர் நாட்டைச் சேர்ந்தவன். அவன் பொன், வெள்ளி, வெண்கலம், இரும்பு, கருங்கல், மரம் ஆகியவற்றிலும், ஊதா நீலம் கருஞ்சிவப்பு நூல், மெல்லிய சணல் வகைகளிலும் வேலை செய்யும் திறன்மிக்கவன். எல்லாவித சித்திர சிற்ப வேலைகளையும் அறிந்தவன்; அவனது வேலைக்குத் தேவையானவற்றை எல்லாம் அவனே உய்த்துணரும் ஆற்றல் படைத்தவன்; உம் கலைஞரோடும், உம் தந்தையும் என் தலைவருமான தாவீதின் கலைஞரோடும் இணைந்து வேலை செய்யக்கூடியவன்.

15எனவே, என் தலைவரே, நீர் வாக்களித்தபடி கோதுமை, வாற்கோதுமை, எண்ணெய், திராட்சை இரசம் ஆகியவற்றை உம் பணியாளர்களுக்கு அனுப்பும்.

16நாங்கள் உமக்குத் தேவையான மரங்களையெல்லாம் லெபனோனில் வெட்டி, அவற்றைத் தெப்பங்களாகக் கட்டி, கடல் வழியாக யோப்பா வரை கொண்டு வருவோம். அங்கிருந்து அவற்றை எருசலேமுக்கு நீர் கொண்டு செல்லலாம்.”

திருக்கோவில் கட்டப்படல்
(1 அர 6:1-38)

17பிறகு, சாலமோன் தம் தந்தை தாவீதைப்போன்று இஸ்ரயேல் நாட்டில் வாழ்ந்து வந்த அந்நியரைக் கணக்கிட்டார். அவர்கள் எண்ணிக்கை ஓர் இலட்சத்து ஐம்பத்து மூவாயிரத்து அறுநூறு.

18அவர்களுள் எழுபதினாயிரம் பேரைச் சுமை சுமக்கவும், எண்பதினாயிரம் பேரை மலையில் கல் வெட்டவும், மூவாயிரத்து அறுநூறு பேரை மக்களின் வேலையை மேற்பார்வையிடவும் அவர் அமர்த்தினார்.


2:6 1 அர 8:27; 2 குறி 6:18.


2:11 * ‘ஊராம்’ என்பது எபிரேய பாடம்.
Pradeep Augustine Avatar

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Stay Connected

Recently added Bibles

Download our App

Get our official Catholic Gallery app for daily Mass readings, prayers & more

Your Faith. Your Way.
Download the Catholic Gallery app for offline Mass readings, daily prayers, and audio Bible — all in one place.
Available on:
No Thanks