Home » 1 குறிப்பேடு அதிகாரம் – 11 – திருவிவிலியம்

1 குறிப்பேடு அதிகாரம் – 11 – திருவிவிலியம்

1 குறிப்பேடு அதிகாரங்கள் (Tamil Bible: Ecumenical Tamil Translation – ETB)

Click the play button to listen or click the Download button to save a copy.

தாவீது இஸ்ரயேல் மற்றும் யூதாவின் அரசராதல்
(2 சாமு 5:1-10)

1எனவே, இஸ்ரயேலர் அனைவரும் ஒன்றுதிரண்டு எபிரோனிலிருந்த தாவீதிடம் வந்து, “இதோ நாங்கள் உம் எலும்பும் சதையுமாய் இருக்கிறோம்.

2சென்ற நாள்களில் சவுல் அரசனாயிருந்தபோதும், நீர்தாம் இஸ்ரயேலரின் எல்லாப் போர்களிலும் தலைமை தாங்கினீர். ‘என் மக்களாகிய இஸ்ரயேலை நீ மேய்த்து, அவர்களின் தலைவனாயிருப்பாய்’ என்று உம் கடவுளாகிய ஆண்டவரும் உம்மிடமே சொன்னார்” என்றார்கள்.

3இஸ்ரயேலின் மூப்பர்கள் எல்லாரும் எபிரோனிலிருந்த அரசரிடம் வந்தார்கள். ஆண்டவர் திருமுன் தாவீது அவர்களோடு உடன்படிக்கை செய்து கொண்டார். ஆண்டவர் சாமுவேல் வழியாக உரைத்தபடி அவர்கள் தாவீதை இஸ்ரயேலின் அரசராகத் திருப்பொழிவு செய்தார்கள்.

4பின்பு, தாவீதும் இஸ்ரயேலர் அனைவரும் எருசலேமுக்குச் சென்றனர். அது அந்நாட்களில் “எபூசு” என்று அழைக்கப்பட்டது; எபூசியர் அங்கே அப்பகுதியில் வாழ்ந்து வந்தனர்.

5எபூசுவாழ் மக்கள் தாவீதை நோக்கி; “நீர் இங்கு நுழையவே முடியாது” என்றனர்; ஆயினும், தாவீது சீயோன் கோட்டையைக் கைப்பற்றினார். அதுவே ‘தாவீதின் நகர்’ ஆயிற்று.

6தாவீது, “எபூசியரை முதலில் வெட்டி வீழ்த்துபவன் படைத்தலைவனும் தளபதியுமாய் இருப்பான்” என்று அறிவித்திருந்தார். செரூயாவின் மகன் யோவாபு முதலில் உட்புகுந்தார். எனவே, அவர் படைத்தலைவர் ஆனார்.

7தாவீது அக்கோட்டைக்குள் வாழ்ந்ததன் காரணமாக அது ‘தாவீதின் நகர்’ என்று அழைக்கப்பட்டது.

8அவர் கிழக்கிலிருந்த பள்ளத்தை நிரப்பி நகரைச் சற்றிலும் மதில் எழுப்பினார்; யோவாபு நகரின் ஏனைய பகுதிகளைப் பழுது பார்த்தார்.

9படைகளின் ஆண்டவர் தாவீதோடு இருந்ததால், தாவீதின் புகழ் நாளுக்குநாள் வளர்ந்துகொண்டே வந்தது.

அரசர் தாவீதின் படைச் சிறப்பு
(2 சாமு 23:8-39)

10ஆண்டவர் இஸ்ரயேலரைக் குறித்து உரைத்த வாக்கின்படி தாவீது அரசராவதற்கு இஸ்ரயேல் மக்கள் அனைவரோடும் அவருக்கு உறுதுணையாய் இருந்த தாவீதின் ஆற்றல்மிகு வீரர்களின் தலைவர்கள் இவர்களே;

11தாவீதின் ஆற்றல்மிகு வீரர்களின் பெயர்ப்பட்டியல்; அக்மோனியின் மகன் யாசொபயாம்; இவர் முப்பதின்மர் தலைவர்; தம் ஈட்டியால் முந்நூறு பேரை ஒரேநேரத்தில் குத்திக் கொன்றவர்.

12அவரை அடுத்து அகோகியராகிய தோதோவின் மகன் எலயாசர்; இவர் மாவீரர் மூவருள் ஒருவர்.

13பெலிஸ்தியர் போரிடப் படைதிரட்டிக் கொண்டு வந்திருந்த பொழுது, பஸ்தம்மில் தாவீதுடன் இருந்தார். வாற்கோதுமைப் பயிர் நிறைந்த ஒரு வயல் அங்கிருந்தது. மக்களோ பெலிஸ்தியருக்கு அஞ்சி ஓடினர்.

14அப்போது அவர்கள் அவ்வயலின் நடுவே நின்றுகொண்டு, அதைக் காத்து, பெலிஸ்தியரை முறியடித்தனர். இவ்வாறு, ஆண்டவர் மாபெரும் வெற்றியைத் தந்தருளினார்.

15பெலிஸ்தியரின் படை இரபாயிம் பள்ளத்தாக்கில் பாளையமிறங்கி இருந்தபோது, முப்பதின்மர் தலைவருள் மூவர் அதுல்லாம் குகைக்குச் சென்றனர்.

16தாவீது கோட்டைக்குள் இருந்தார். பெலிஸ்தியரின் பாளையம் பெத்லகேமில் இருந்தது.

17ஒருநாள் தாவீது, “பெத்லகேம் நுழைவாயிலில் உள்ள கிணற்று நீரில் கொஞ்சம் யாராவது குடிக்கக் கொடுத்தால் நலமாயிருக்கும்” என்று ஆவலுடன் கூறினார்.

18அப்போது அந்த மூவரும் பெலிஸ்தியரின் பாளையத்தினுள்ளே துணிந்து சென்று, பெத்லகேம் நுழைவாயிலில் இருந்த கிணற்று நீரை மொண்டு தாவீதிடம் கொண்டு வந்தார்கள். தாவீதோ அதைக் குடிக்கமனமில்லாமல், அதை ஆண்டவருக்கென்று கீழே கொட்டிவிட்டார்.

19“நான் இதைச் செய்யாதவாறு ஆண்டவர் என்னைக் காப்பாராக! தங்கள் உயிரை ஒரு பொருட்டாக எண்ணாத இந்த மனிதரின் இரத்தத்தை நான் குடிப்பது எப்படி? இவர்கள் தங்கள் உயிரைப் பொருட்படுத்தாது இந்தத் தண்ணீரைக் கொண்டுவந்தனரே!” என்று கூறி அதைக் குடிக்க மறுத்துவிட்டார். அந்த மாவீரர் மூவரும் இத்தகையவற்றைச் செய்தனர்.

20யோவாபின் சகோதரராகிய அபிசாய் முப்பதின்மருள் தலைசிறந்தவர். இவரே தம் ஈட்டியால் முந்நூறு பேரைக் கொன்றவர்; எனவே, முப்பதின்மருள் பெயர் பெற்றவராய் இருந்தார்.

21இவர் முப்பதின்மருள் மிகுந்த புகழ் பெற்றிருந்தார். எனவே, அவர்களுக்குத் தலைவராய் இருந்தார். ஆயினும், முந்தின மூவருக்கு அவர் சமமானவர் அல்ல.

22கப்சியேலைச் சார்ந்தவரும் வலிமைமிக்கவருமான யோயாதாவின் மகன் பெனாயா தீரச் செயல்கள் பல புரிந்தார். மோவாபிய வீரர் இருவரைக் கொன்றார்; மேலும், உறைபனி நாளில் ஒரு குழியினுள் இறங்கி அங்கிருந்த சிங்கத்தைக் கொன்றார்.

23ஐந்து முழ உயரமுடைய ஒரு எகிப்தியனையும் இவர் கொன்றார். அந்த எகிப்தியன் கையில் தறிக்கட்டை போன்ற ஈட்டி இருக்கையில், இவர் ஒரு தடியோடு அவனுக்கு எதிராகச் சென்று அந்த எகிப்தியனின் கையிலிருந்த ஈட்டியைப் பறித்து அதே ஈட்டியால் அவனைக் கொன்றார்.

24யோயாதாவின் மகன் பெனாயா இத்தகையவற்றைச் செய்து மாவீரர் மூவருள் பெயர் பெற்றவராய் இருந்தார்.

25அம்முப்பதின்மருள் அவர் முதல்வராய் இருந்தாலும், முந்தின மூவருக்கு அவர் இணையானவர் அல்ல. அவரையே தாவீது தம் மெய்க்காப்பாளர்க்குத் தலைவராக நியமித்தார்.

26படையின் மாவீரர் பின்வருமாறு; யோவாபின் சகோதரர் அசாவேல்; பெத்லகேமைச் சார்ந்த தோதோவின் மகன் எல்கானான்;

27அரோரியரான சம்மோத்து; பெலொனியரான ஏலேசு,

28தெக்கோவாவைச் சார்ந்த இக்கேசின் மகன் ஈரா; அனதோத்தியரான அபியேசர்,

29ஊசாயரான சிபக்காய்; அகோகியரான ஈலாய்.

30நெற்றோபாயரான மகராய், நெற்றோபாயரான பானாவின் மகன் ஏலேது.

31பென்யமினின் குலத்தில், கிபயாவைச் சார்ந்த இரிபாயின் மகன் இத்தாய்; பிராத்தோனியரான பெனாயா;

32காகசு நீரோடைப் பகுதியைச் சார்ந்த ஊராய்; அர்பாயரான அபியேல்;

33பகரூமியரான அஸ்மவேத்து; சால்போனியரான எல்யக்பா;

34கீசோனியரான ஆசேமின் புதல்வர்: ஆராரியரான சாகேயின் மகன் யோனத்தான்;

35ஆராரியரான சாகாரின் மகன் அகியாம்; ஊரின் மகன் எலிப்பால்;

36மெக்கராயரான ஏபேர்; பெலோனியரான அகியா;

37கர்மேலியரான எட்சரோ; எஸ்பாயின் மகன் நாராய்;

38நாத்தானின் சகோதரர் யோவேல்; அக்ரியின் மகன் மிப்கார்;

39அம்மோனியரான செலேக்கு; பெயரோத்தியரான நகராய்; இவர் செரூயாவின் மகனான யோவாபின் படைக்கலன் சுமப்பவர்.

40இத்ரியரான ஈரா இத்ரியரான காரேபு;

41இத்ரியரான உரியா; அக்லாயின் மகன் சாபாது;

42ரூபன் குலத்தலைவரும் சீசாவின் மகனுமான அதீனா; இவரோடிருந்த முப்பது பேர்;

43மாக்காவின் மகன் ஆனான்; மித்னியரான யோசபாற்று;

44அஸ்தராயரான உசியா; அரோயேரியரான ஓதாமின் புதல்வர் சாமா, எயியேல்;

45தீட்சியரான சிம்ரியின் மகன் எதியவேல்; அவன் சதோதரர் யோகா;

46மகவாயரான எலியேல்; எல்னாமின் புதல்வர் எரிபாய், யோசவியா; மோவாபியரான இத்மா;

47மெட்சோபாயரான எலியேல், ஓபேது, யகசியேல் என்பவர்களே.


11:4 யோசு 15:63; நீத 1:21.
Pradeep Augustine Avatar

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Stay Connected

Recently added Bibles

Download our App

Get our official Catholic Gallery app for daily Mass readings, prayers & more

Your Faith. Your Way.
Download the Catholic Gallery app for offline Mass readings, daily prayers, and audio Bible — all in one place.
Available on:
No Thanks