செப்பனியா அதிகாரங்கள் (Tamil Bible: Ecumenical Tamil Translation – ETB)
மனந்திரும்ப அழைப்பு
1பண்புகெட்ட இனமே!
பகுத்தறிவோடு நடந்துகொள்.
2பதரைப்போல் நீங்கள்
தூற்றப்படுமுன்னே,
ஆண்டவரது கடும் சினம்
உங்கள் மேல் விழுமுன்னே,
ஆண்டவரது சினத்தின் நாள்
உங்கள்மேல் விழுமுன்னே,
3நாட்டிலிருக்கும் எளியோரே!
ஆண்டவரின் கட்டளையைக்
கடைப்பிடிப்போரே!
அனைவரும் ஆண்டவரைத் தேடுங்கள்;
நேர்மையை நாடுங்கள்;
மனத்தாழ்மையைத் தேடுங்கள்;
ஆண்டவரது சினத்தின் நாளில்
ஒரு வேளை உங்களுக்குப்
புகலிடம் கிடைக்கும்.
வேற்றினத்தாரின் அழிவு
4காசா குடியற்றுப்போகும்;
அஸ்கலோன் பாழடைந்துபோகும்;
அஸ்தோது நண்பகலில்
விரட்டியடிக்கப்படும்;
எக்ரோன் வேரோடு
பிடுங்கியெறியப்படும்.
5கடற்கரையில் வாழும்
இனத்தாராகிய கெரேத்தியரே!
உங்களுக்கு ஐயோ கேடு!
ஆண்டவரின் வாக்கு
உங்களுக்கு எதிராய் உள்ளது;
பெலிஸ்தியரின் நாடே! கானானே!
எவனும் குடியிராதபடி
நான் உன்னை அழித்து விடுவேன்.
6இவ்வாறு அந்தக் கடற்கரை நாடு
இடையரின் குடில்களுக்கும்
ஆடுகளின் பட்டிகளுக்குமே
ஏற்றதாகும்.
7அந்தக் கடற்கரை
யூதாவின் குடும்பத்தவருள்
எஞ்சியிருப்போர்க்கு உடைமையாகும்;
அங்கே அவர்கள்
தங்கள் ஆடுகளை மேய்த்து,
மாலையில் அஸ்கலோன் வீடுகளில்
படுத்திருப்பார்கள்;
ஏனெனில்
அவர்களுடைய கடவுளாகிய ஆண்டவர்
அவர்கள்மீது அக்கறை கொண்டு,
முன்னைய நன்னிலைக்கு
அவர்களை உயர்த்துவார்.
8மோவாபின் பழிப்புரைகளையும்
அம்மோனியரின் வசைமொழிகளையும்
நான் கேட்டேன்;
அவர்கள் என் மக்களை இழித்துரைத்து,
அவர்களின் நாட்டு
எல்லைகளைக் குறித்து
வீம்பு பேசியதையும் நான் கேட்டேன்.
9ஆதலால், படைகளின் ஆண்டவரும்,
இஸ்ரயேலின் வாழும் கடவுளுமாகிய
நான் ஆணையிட்டுக் கூறுகின்றேன்;
மோவாபு சோதோமைப்போல் ஆகும்;
அம்மோனியர்
கொமோராவைப்போல் ஆவர்;
இது உறுதி.
இந்நாடுகள்
காஞ்சொறி படரும் காடாகவும்,
உப்புப் பள்ளம் நிறைந்த
பாழ்நிலமாகவும் என்றும் இருக்கும்.
என் மக்களில் எஞ்சியோர்
அவர்களைக் கொள்ளையடிப்பர்;
என் மக்களுள் தப்பியோர்
அவர்களை அடிமைகளாக்கிக் கொள்வர்.
10அவர்களுடைய இறுமாப்புக்குக்
கிடைக்கும் பயன் இதுவே;
ஏனெனில், படைகளின் ஆண்டவருடைய
மக்களுக்கு எதிராக
அவர்கள் பழித்துரைத்தார்கள்;
வீம்பு பேசினார்கள்.
11ஆண்டவர் அவர்களை
அச்சமுறச் செய்வார்;
நாட்டின் தெய்வங்களை எல்லாம்
ஆற்றல் குன்றிப்போகச் செய்வார்.
வேற்றினத்தார் அனைவரும்
அவரவர்தம் தீவுகளில்
இருந்து கொண்டு
அவரையே வணங்குவர்.
12எத்தியோப்பியரே!
நீங்களும் எனது வாளால்
வெட்டி வீழ்த்தப்படுவீர்கள்.
13வடதிசைக்கு எதிராகத்
தம் கையை ஓங்கி,
ஆண்டவர் அசீரியாவை அழித்திடுவார்;
நினிவே நகரைப் பாழடையச் செய்து,
வறண்ட பாலைநிலமாக்குவார்.
14அங்கே மந்தைகளும்
எல்லாவகை விலங்குகளும்
படுத்துக் கிடக்கும்;
தூண்களின் உச்சியில்
கூகையும் சாக்குருவியும்
தங்கியிருக்கும்;
பலகணியில் அமர்ந்தவாறு
ஆந்தை அலறும்;
நிலைக்கதவின்மேல் இருந்தவாறு
காகம் கரையும்;
கேதுரு மர வேலைப்பாடுகள்
அழிக்கப்படும்.
15“நான் ஒப்புயர்வு அற்றவன்” என்று
கவலையின்றிக் களிப்புற்றிருந்த
நகர் இதுதானோ?
இப்பொழுது அது
காட்டு விலங்குகளின் குகையாகி
எவ்வளவு பாழாய்ப் போயிற்று!
அதைக் கடந்துபோகும் ஒவ்வொருவனும்
சீழ்க்கையடித்துக் கையசைக்கிறான்.