Home » தோபித்து அதிகாரம் – 14 – திருவிவிலியம்

தோபித்து அதிகாரம் – 14 – திருவிவிலியம்

தோபித்து அதிகாரங்கள் (Tamil Bible: Ecumenical Tamil Translation – ETB)

Click the play button to listen or click the Download button to save a copy.

1தோபித்தின் புகழ்ப்பா நிறைவு பெற்றது.

தோபித்தின் இறுதி அறிவுரை

2தோபித்து தம் நூற்றுப் பன்னிரண்டாம் வயதில் அமைதியாக இறந்தார்; நினிவேயில் சிறப்புடன் அடக்கம் செய்யப்பட்டார். அவர் பார்வை இழந்தபோது அவருக்கு வயது அறுபத்திரண்டு. அவருக்குப் பார்வை திரும்பியபின் வளமாக வாழ்ந்து, தருமங்கள் புரிந்து வந்தார்; கடவுளைப் போற்றுவதிலும் அவரது பெருமையை அறிக்கையிடுவதிலும் ஓயாது ஈடுபட்டிருந்தார்.

3அவர் இறக்கும் தறுவாயில் இருந்தபொழுது தம் மகன் தோபியாவை அழைத்துப் பின்வருவாறு அறிவுறுத்தினார்: “மகனே, உன் மக்களை அழைத்துக்கொண்டு,

4மேதியாவுக்குத் தப்பிச் செல்; ஏனெனில் நினிவேக்கு எதிராக இறைவாக்கினர் நாகூம் வழியாகக் கடவுள் கூறிய வாக்கு நிறைவேறும் என நம்புகிறேன். கடவுள் அனுப்பிய இஸ்ரயேலின் இறைவாக்கினர்கள் அசீரியாவுக்கும் நினிவேக்கும் எதிராகக் கூறிய அனைத்தும் தவறாது நிகழும். உரிய வேளையில் அவை அனைத்தும் நடந்தே தீரும். பாபிலோன், அசீரியா ஆகியவற்றைவிட மேதியா நாடு பாதுகாப்பாக இருக்கும்; ஏனெனில் கடவுள் கூறிய அனைத்தும் நிறைவேறும் என நான் நம்புகிறேன். அவையெல்லாம் தவறாது நடந்தே தீரும். இஸ்ரயேல் நாட்டில் வாழும் நம் உறவினர் அனைவரும் சிதறடிக்கப்பட்டு, அந்த நல்ல நாட்டிலிருந்து கடத்தப்படுவர். சமாரியாவும் எருசலேமும் உட்பட இஸ்ரயேல் நாடு முழுவதும் பாலைநிலமாகும். கடவுளின் இல்லம் தீக்கிரையாகிச் சிறிதுகாலத்திற்குப் பாழடைந்து கிடக்கும்.

5கடவுள் மீண்டும் அவர்கள்மீது இரக்கம் காட்டுவார். மீண்டும் அவர்களை இஸ்ரயேல் நாட்டுக்குக் கூட்டிக்கொண்டு வருவார். மீண்டும் அவர்கள் கடவுளின் இல்லத்தைக் கட்டி எழுப்புவார்கள். ஆனால் குறிப்பிட்ட காலம் நிறைவேறும்வரை அது முதலில் கட்டப்பட்ட இல்லம்போன்று இராது. அதன்பின் இஸ்ரயேலர் அனைவரும் சிதறடிக்கப்பட்ட நாடுகளிலிருந்து திரும்பி வருவர்; எருசலேமைச் சிறப்புடன் கட்டி எழுப்புவர். இஸ்ரயேலரின் இறைவாக்கினர்கள் கூறியபடி அந்நகரில் கடவுளின் இல்லம் கட்டப்படும்.

6உலகம் முழுவதிலும் உள்ள மக்களினத்தார் அனைவரும் மனம் மாறுவர். உண்மையாகவே கடவுளுக்கு அஞ்சுவர்; தங்களை ஏமாற்றி, தவறான வழியில் நடக்கத் தூண்டிய சிலைகளையெல்லாம் விட்டொழிப்பர்; என்றுமுள கடவுளை நேர்மையுடன் போற்றுவர்.

7அக்காலத்தில் எஞ்சியிருக்கும் இஸ்ரயேல் மக்கள் அனைவரும் உண்மையில் கடவுளை நினைப்பர்; ஒன்றுகூடி எருசலேமுக்குத் திரும்பி வந்து தங்களுக்கு அளிக்கப்பட்ட ஆபிரகாமின் நாட்டில் எக்காலத்துக்கும் பாதுகாப்பாகக் குடியிருப்பர். உண்மையில் கடவுள்மீது அன்புகூர்வோர் மகிழ்வர்; பாவமும் அநீதியும் புரிவோர் உலகம் எங்கிலுமிருந்தும் மறைவர்.

8-9“இப்பொழுது, என் மக்களே, உங்களுக்கு நான் இடும் கட்டளை: கடவுளுக்கு உண்மையாகப் பணிபுரிங்கள்; அவர் திருமுன் அவருக்கு உகந்ததைச் செய்யுங்கள்; நேர்மையாய் ஒழுகவும் தருமங்கள் செய்யவும் உங்கள் குழந்தைகளுக்குப் பயிற்சி அளியுங்கள். அதனால் அவர்கள் கடவுளை நினைத்து, எக்காலத்திலும் முழு ஆற்றலுடன் உண்மையோடு அவரது பெயரைப் போற்றுவார்கள். இப்பொழுது, மகனே, நினிவேயிலிருந்து புறப்படு; இங்குத் தங்காதே. என் அருகில் உன் தாயை அடக்கம்செய்தபின் இந்நாட்டின் எல்லைக்குள் தங்காதே; ஏனெனில் இங்கு அநீதி மலிந்துள்ளது; வஞ்சகம் நிரம்பியுள்ளது. மக்களோ அதைப்பற்றி வெட்கப்படுவதில்லை என்பதும் எனக்குத் தெரியும்.

10மகனே, தன்னை வளர்த்து ஆளாக்கிய அகிக்காருக்கு நாதாபு செய்ததை எண்ணிப்பார். நாதாபு அகிக்காரை உயிரோடு மண்ணில் புதைக்கவில்லையா? அதனால் கடவுள் நேரடியாக அவனைத் தண்டித்தார். அகிக்கார் ஒளியைக் கண்டான்; நாதாபோ முடிவில்லா இருளில் மறைந்தான்; ஏனெனில் அவன் அகிக்காரைக் கொல்ல முயன்றான். அகிக்கார் தருமம் செய்ததனால், நாதாபின் சூழ்ச்சியிலிருந்து தப்பினான்; ஆனால் நாதாபு தன் சூழ்ச்சியிலேயே சிக்கி மடிந்தான்.

11இப்பொழுது, என் மக்களே, தருமத்தினால் வரும் நன்மையையும், அநீதியினால் வரும் தீமையையும், அதாவது சாவையும் எண்ணிப் பாருங்கள். என் உயிர் பிரியப்போகின்றது.” பின் தோபித்தைப் படுக்கையில் கிடத்தினர். அவர் இறந்தபின் சிறப்புடன் அடக்கம் செய்தனர்.

முடிவுரை

12தம் தாய் இறந்ததும், தோபியா அவரைத் தம் தந்தையின் அருகில் அடக்கம்செய்தார். பின் அவரும் அவருடைய மனைவியும் மேதியாவுக்குச் சென்றனர். அவர் தம் மாமனார் இரகுவேலுடன் எக்பத்தானாவில் வாழ்ந்தார்.

13தம் மனைவியின் வயது முதிர்ந்த பெற்றோரை மரியாதையுடன் பேணி வந்தார்; அவர்களை மேதியா நாட்டு எக்பத்தானாவில் அடக்கம் செய்தார்; இரகுவேலின் சொத்துக்கும் தம் தந்தை தோபித்தின் சொத்துக்கும் உரிமையாளரானார்.

14மக்களின் மதிப்புக்குரியவராய்த் தம் நூற்றுப்பதினேழாம் வயதில் இறந்தார்.

15இறக்குமுன் நினிவேயின் அழிவைப்பற்றிக் கேள்விப்பட்டு, அதைக் கண்ணாலும் கண்டார்; நினிவே கைப்பற்றப்பட்டதையும், மேதியாவின் மன்னர் அகிக்கார் நினிவே மக்களை மேதியாவுக்கு நாடுகடத்தியதையும் கண்டார்; நினிவே மக்களுக்கும் அசீரியாவின் மக்களுக்கும் கடவுள் செய்த அனைத்தையும் குறித்து அவரைப் புகழ்ந்தார். நினிவேக்கு நிகழ்ந்ததை முன்னிட்டுத் தாம் இறக்குமுன் மகிழ்ந்தார்; கடவுளாகிய ஆண்டவரை என்றென்றும் புகழ்ந்தார்.


14:4 நாகூ 1:1-3:19.
Pradeep Augustine Avatar

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Stay Connected

Recently added Bibles

Download our App

Get our official Catholic Gallery app for daily Mass readings, prayers & more

Your Faith. Your Way.
Download the Catholic Gallery app for offline Mass readings, daily prayers, and audio Bible — all in one place.
Available on:
No Thanks