Home » எண்ணிக்கை அதிகாரம் – 26 – திருவிவிலியம்

எண்ணிக்கை அதிகாரம் – 26 – திருவிவிலியம்

எண்ணிக்கை அதிகாரங்கள் (Tamil Bible: Ecumenical Tamil Translation – ETB)

Click the play button to listen or click the Download button to save a copy.

இரண்டாம் கணக்கெடுப்பு

1அந்தக் கொள்ளை நோய்க்குப் பின்பு ஆண்டவர் மோசேயிடமும் குரு ஆரோன் மகன் எலயாசரிடமும்,

2“இஸ்ரயேல் மக்களின் கூட்டமைப்பு முழுவதிலும் இருபது வயதும் அதற்கு மேலும் உள்ள போருக்குச் செல்லத்தக்க இஸ்ரயேலின் ஆண் மக்கள் அனைவரையும் அவர்கள் மூதாதையர் வீடுகள் வாரியாகக் கணக்கெடுங்கள்” என்றார்.

3மோசேயும் குரு எலயாசரும் எரிகோவுக்கு எதிரே யோர்தானையடுத்த மோவாபு சமவெளியில் அவர்களிடம்,

4“ஆண்டவர் மோசேக்குக் கட்டளையிட்டபடியே இருபது வயதும் அதற்கு மேலுமுள்ளவர்களைக் கணக்கெடுங்கள்” என்று கூறினர். எகிப்து நாட்டிலிருந்து வெளியேறி வந்த இஸ்ரயேலின் ஆண் மக்கள் பின்வருமாறு;

5ரூபன் இஸ்ரயேலின் தலைமகன். ரூபன் புதல்வர்; அனோக்கு, அனோக்கு வீட்டார்; பல்லூ, பல்லூ வீட்டார்;

6எட்சரோன், எட்சரோன் வீட்டார், கர்மி, கர்மி வீட்டார்,

7ரூபன் குடும்பங்கள் இவைகளே. இவற்றில் எண்ணப்பட்டோர் நாற்பத்து மூவாயிரத்து எழுநூற்று முப்பது பேர்.

8பல்லூ புதல்வர் எலியாபு.

9எலியாபு புதல்வர்; நெமுவேல், தாத்தான், அபிராம். கோராகின் கூட்டத்தார் ஆண்டவருடன் வாக்குவாதம் செய்தபோது மோசேக்கும் ஆரோனுக்கும் எதிராகப் போராடுமாறு மக்கள் கூட்டமைப்பு தேர்ந்தெடுத்த தாத்தானும் அபிராமும் இவர்களே.

10அப்போது நிலம் வாயைத் திறந்து கோராகுடன் சேர்ந்து அவர்களை விழுங்கியது. நெருப்பு இருநூற்றைம்பது பேரைக் கவ்வியது; அக்கூட்டம் மாண்டது; இவ்வாறு, அவர்கள் ஓர் எச்சரிப்பாயினர்.

11ஆனால், கோராகு புதல்வர் மடியவில்லை.

12தங்கள் குடும்பங்கள் வாரியாகச் சிமியோன் புதல்வர்; நெமுவேல், நெமுவேல் வீட்டார்; யாமீன், யாமீன் வீட்டார்; யாக்கின், யாக்கின் வீட்டார்;

13செராகு, செராகின் வீட்டார்; சாவூல், சாவூல் வீட்டார்;

14சிமியோன் குடும்பங்கள் இவையே. இவர்கள் இருபத்து இரண்டாயிரத்து இருநூறு பேர்.

15தங்கள் குடும்பங்கள் வாரியாக காத்துப் புதல்வர்; செப்போன், செப்போன் வீட்டார்; அக்கி, அக்கி வீட்டார்; சூனி, சூனி வீட்டார்;

16ஒசுனீ, ஒசுனீ வீட்டார்; ஏரி, ஏரி வீட்டார்;

17அரோது, அரோது வீட்டார்; அரேலி, அரேலி வீட்டார்.

18அவர்கள் எண்ணிக்கைப்படி காத்துப் புதல்வர் குடும்பங்கள் இவையே. அவர்கள் நாற்பதாயிரத்து ஐந்நூறு பேர்.

19யூதாவின் புதல்வர் ஏர், ஓனான் என்போர்; ஏர், ஓனான் ஆகியோர் கானான் நாட்டில் இறந்தனர்.

20தங்கள் குடும்பங்கள் வாரியாக யூதாவின் புதல்வர்; சேலா, சேலா வீட்டார்; பெரேட்சு, பெசேட்சு வீட்டார்; செராகு, செராகு வீட்டார்.

21பெரேட்சின் புதல்வர்; எட்சரோன், எட்சரோன் வீட்டார்; ஆமூல், ஆமூல் வீட்டார்;

22அவர்கள் எண்ணிக்கைப்படி யூதாவின் குடும்பங்கள் இவையே. அவர்கள் எழுபத்தாறாயிரத்து ஐந்நூறு பேர்.

23தங்கள் குடும்பங்கள் வாரியாக இசக்கார் புதல்வர்; தோலா, தோலா வீட்டார்; பூவா, பூவா வீட்டார்;

24யாசூபு, யாசூபு வீட்டார்; சிம்ரோன், சிம்ரோன் வீட்டார்.

25அவர்கள் எண்ணிக்கைப்படி இசக்கார் குடும்பங்கள் இவையே. அவர்கள் அறுபத்து நாலாயிரத்து முந்நூறு பேர்.

26தங்கள் குடும்பங்கள் வாரியாக செபுலோன் புதல்வர்; செரேது, செரேது வீட்டார்; ஏலோன், ஏலோன் வீட்டார்; யாகுலவேல், யாகுலவேல் வீட்டார்.

27அவர்கள் எண்ணிக்கைப்படி செபுலோன் குடும்பங்கள் இவையே. அவர்கள் அறுபதாயிரத்து ஐந்நூறு பேர்.

28தங்கள் குடும்பங்கள் வாரியாக யோசேப்புப் புதல்வர் மனாசேயும் எப்ராயிமும் ஆவர்.

29மனாசே புதல்வர்; மாக்கிர், மாக்கிர் வீட்டார்; மாக்கிர் கிலயாதின் தந்தை; கிலயாது, கிலயாது வீட்டார்.

30கிலயாது புதல்வர் இவர்களே; இயசேர், இயசேர் வீட்டார்; ஏலேக்கு, ஏலேக்கு வீட்டார்;

31அசிரியேல், அசிரியேல் வீட்டார்; செக்கேம், செக்கேம் வீட்டார்;

32செமிதா, செமிதா வீட்டார்; ஏபேர், ஏபேர் வீட்டார்.

33ஏபேர் மகன் செலோபுகாதுக்குப் புதல்வர்கள் இல்லை; ஆனால் புதல்வியர் இருந்தனர்; செலோபுகாதின் புதல்வியர் பெயர்கள்; மக்லா, நோகா, ஒக்லா, மில்கா, திர்சா.

34மனாசேயின் குடும்பங்கள் இவைகளே. அவர்கள் தொகை ஐம்பத்தீராயிரத்து எழுநூறு.

35தங்கள் குடும்பங்கள் வாரியாக எப்ராயிம் புதல்வர் இவர்களே; சுத்தேலாகு, சுத்தேலாகு வீட்டார்; பெக்கேர், பெக்கேர் வீட்டார்; தகான், தகான் வீட்டார்.

36சுத்தேலாகின் புதல்வர், ஏரானும் ஏரான் வீட்டாருமே.

37அவர்கள் எண்ணிக்கைப்படி எப்ராயிம் புதல்வர் குடும்பங்கள் இவையே. அவர்கள் முப்பத்தீராயிரத்து ஐந்நூறு பேர். ஆக மொத்தம் தங்கள் குடும்பங்கள் வாரியாக யோசேப்புப் புதல்வர் இவர்களே.

38தங்கள் குடும்பங்கள் வாரியாகப் பென்யமின் புதல்வர்; பேலா, பேலா வீட்டார், அசுபேல், அசுபேல் வீட்டார்; அகிராம், அகிராம் வீட்டார்;

39செபூபாம், செபூபாம் வீட்டார்; கூபாம், கூபாம் வீட்டார்;

40பேலா புதல்வர் அருது, நாமான் என்போரே; அருது, அருது வீட்டார்; நாமான், நாமான் வீட்டார்.

41தங்கள் குடும்பங்கள் வாரியாகப் பென்யமின் புதல்வர் இவர்களே. அவர்கள் தொகை நாற்பத்தையாயிரத்து அறுநூறு.

42தங்கள் குடும்பங்கள் வாரியாக தாண் புதல்வர் இவர்களே; சூகாம், சூகாம் வீட்டார். தங்கள் குடும்பங்கள் வாரியாக இவைகளே தாண் குடும்பங்கள்.

43அவர்கள் எண்ணிக்கைப்படி சூகாம் குடும்பத்தினர் அறுபத்து நாலாயிரத்து நானூறு பேர்.

44தங்கள் குடும்பங்கள் வாரியாக ஆசேர் புதல்வர்; இம்னா, இம்னா வீட்டார்; இசுவி, இசுவி வீட்டார்; பெரியா, பெரியா வீட்டார்.

45பெரியா புதல்வர்; எபேர், எபேர் வீட்டார்; மல்கியேல், மல்கியேல் வீட்டார்.

46ஆசேர் புதல்வி பெயர் செராகு.

47அவர்கள் எண்ணிக்கைப்படி ஆசேர் புதல்வர் குடும்பங்கள் இவையே. அவர்கள் ஐம்பத்து மூவாயிரத்து நானூறு பேர்.

48தங்கள் குடும்பங்கள் வாரியாக நப்தலி புதல்வர்; யாகுட்சேல், யாகுட்சேல் வீட்டார்; கூனி, கூனி வீட்டார்;

49எட்சேர், எட்சேர் வீட்டார், சில்லேம், சில்லேம் வீட்டார்.

50அவர்கள் எண்ணிக்கைப்படி நப்தலிக் குடும்பங்கள் இவையே. அவர்கள் தொகை நாற்பத்தையாயிரத்து நானூறு.

51ஆக, இஸ்ரயேலின் ஆண் மக்கள் தொகை ஆறு லட்சத்து ஓராயிரத்து எழுநூற்று முப்பது.

52ஆண்டவர் மோசேயிடம் கூறியது:

53பெயர்களின் எண்ணிக்கைக்குத்தக்கவாறு இவர்களுக்கு இந்த நாடு உரிமைச் சொத்தாகப் பங்கிடப்படும்.

54குலங்களுள் பெரியவற்றுக்குக் கூட்டியும், சிறியவற்றுக்குக் குறைத்தும் நீ அதனதன் உரிமைச் சொத்தைக் கொடுப்பாய். ஒவ்வொன்றுக்கும் அதன் தொகைக்கேற்ப உரிமைச் சொத்து வழங்கப்படும்.

55ஆயினும், திருவுளச் சீட்டு முறையிலேயே நாடு பங்கிடப்படும். அவர்கள் தங்கள் மூதாதையர் குலப்பெயர்கள் வாரியாக உரிமைச் சொத்தைப் பெறுவர்.

56பெரியவற்றுக்கும், சிறியவற்றுக்குமிடையே திருவுளச் சீட்டு முறைப்படி அதனதன் உரிமைச் சொத்து பங்கிடப்படும்.

57தங்கள் குடும்பங்கள் வாரியாக எண்ணப்பட்ட லேவியர் இவர்களே; கேர்சோன், கேர்சோன் வீட்டார்; கெகாது, கெகாது வீட்டார்; மெராரி, மெராரி வீட்டார்.

58லேவி குடும்பங்களாவன; லிப்னி குடும்பம், எபிரோன் குடும்பம், மக்லி குடும்பம், மூசி குடும்பம், கோராகு குடும்பம். கெகாது அம்ராமின் தந்தை.

59அம்ராம் மனைவி பெயர் யோக்கபெத்து. இவள் லேவி மகள்; லேவிக்கு எகிப்தில் பிறந்தவள். அம்ராமுக்கு இவள் ஆரோன், மோசே, அவர்களின் சகோதரி மிரியாம் ஆகியோரைப் பெற்றெடுத்தாள்.

60ஆரோனுக்குப் பிறந்தவர்கள் நாதாபு, அபிகூ, எலயாசர், இத்தாமர் ஆகியோர்.

61ஆனால், நாதாபும் அபிகூவும் ஆண்டவர் முன் வேற்று நெருப்பைக் கொண்டு வந்தபோது கொல்லப்பட்டனர்.

62லேவியருள் ஒரு மாதமும் அதற்கு மேலும் வயதுடைய ஆண்களில் எண்ணப்பட்டோர் இருபத்து மூவாயிரத்து பேர். இஸ்ரயேல் மக்களிடையே அவர்கள் பதிவு செய்யப்படவில்லை. ஏனெனில், இஸ்ரயேல் மக்களிடையே அவர்களுக்கு எந்த உரிமைச் சொத்தும் தரப்படவில்லை.

63மோசேயாலும் குரு எலயாரசராலும் எண்ணப்பட்டோர் இவர்களே. அவர்கள் இஸ்ரயேல் மக்களை எரிகோவுக்கு எதிரே யோர்தானை அடுத்த மோவாபியச் சமவெளியில் எண்ணினார்கள்.

64ஆனால், சீனாய்ப் பாலை நிலத்தில் எண்ணப்பட்டிருந்த இஸ்ரயேல் மக்களில், அதாவது மோசேயாலும் குரு ஆரோனாலும் எண்ணப்பட்டோருள் எவரும் இவர்களிடையே இல்லை.

65ஏனெனில், “அவர்கள் பாலைநிலத்தில் மடிந்து விடுவர்” என்று ஆண்டவர் சொல்லியிருந்தார். எபுன்னே புதல்வன் காலேபையும் நூன் புதல்வன் யோசுவாவையும் தவிர அவர்களில் ஒருவனும் மீந்திருக்கவில்லை.


26:52-56 எண் 34:13; யோசு 14:1-2.
26:60 எண் 3:2.
26:61 லேவி 10:1-2; எண் 3:4.
26:65 எண் 14:26-35.
Pradeep Augustine Avatar

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Stay Connected

Recently added Bibles

Download our App

Get our official Catholic Gallery app for daily Mass readings, prayers & more

Your Faith. Your Way.
Download the Catholic Gallery app for offline Mass readings, daily prayers, and audio Bible — all in one place.
Available on:
No Thanks