Home » அபக்கூக்கு அதிகாரம் – 1 – திருவிவிலியம்

அபக்கூக்கு அதிகாரம் – 1 – திருவிவிலியம்

அபக்கூக்கு அதிகாரங்கள் (Tamil Bible: Ecumenical Tamil Translation – ETB)

Click the play button to listen or click the Download button to save a copy.

1இறைவாக்கினர் அபக்கூக்கு கண்ட காட்சியில் அருளப்பட்ட இறைவாக்கு:

அநீதி குறித்து அபக்கூக்கின் முறையீடு

2ஆண்டவரே,

எத்துணைக் காலத்திற்கு நான்

துணை வேண்டிக் கூக்குரலிடுவேன்;

நீரும் செவிசாய்க்காதிருப்பீர்?

இன்னும் எத்துணைக் காலத்திற்கு

வன்முறையை முன்னிட்டு

உம்மிடம் அழுது புலம்புவேன்;

நீரும் எம்மை மீட்காமல் இருப்பீர்?

3நீர் என்னை ஏன்

கொடுமையைப் பார்க்கச் செய்கின்றீர்,

கேட்டினைக் காணச் செய்கின்றீர்?

கொள்ளையும் வன்முறையும்

என் கண்முன் நிற்கின்றன;

வழக்கும் வாதும் எழும்புகின்றன.

4ஆதலால் திருச்சட்டம்

வலுவற்று பயனற்றுப் போகின்றது.

நீதி ஒருபோதும்

வெளிப்படுவதில்லை.

கொடியோர் நேர்மையுள்ளோரை

வளைத்துக் கொள்கின்றனர்.

ஆகவே நீதி

தடம்புரண்டு காணப்படுகின்றது.

ஆண்டவரின் பதிலுரை

5நீங்கள் உங்களைச் சூழ்ந்துள்ள

வேற்றினத்தாரைக்

கூர்ந்து கவனியுங்கள்;

கவனித்து வியப்பும்

திகைப்பும் அடையுங்கள்;

ஏனெனில் உங்கள் வாழ்நாளில் நான்

செயல் ஒன்றைச் செய்திடுவேன்;

விளக்கிச் சொன்னாலும்

அதை நீங்கள் நம்பமாட்டீர்கள்.

6நான் கல்தேயர் இனத்தை

எழுப்பவிருக்கிறேன்;

அது பரபரப்பும் கொடுமையும்

உடைய இனம்;

தங்களுக்குச் சொந்தமில்லாத

இருப்பிடங்களைக் கவர,

உலகின் ஒரு முனை முதல்

மறுமுனைவரை

சுற்றித் திரியும் இனம்.

7அவர்கள் அச்சமும் திகிலும்

உண்டாக்குகின்றவர்கள்;

தங்களுடைய நீதியையும்

பெருமையையும்

தாங்களே உருவாக்குகின்றவர்கள்.

8வேங்கையைவிட

அவர்களின் குதிரைகள்

விரைவாய் ஓடுகின்றன;

அவை மாலை வேளையில்

திரியும் ஓநாய்களைவிடக் கொடியவை;

அவர்களுடைய குதிரை வீரர்கள்

பாய்ந்து வருகின்றார்கள்;

இரைமேல் பாயும் கழுகைப்போல்

பறந்து வருகின்றார்கள்.

9அவர்கள் யாவரும்

வன்முறை செய்யவே

முன்னேறி வருகின்றார்கள்;

அவர்கள் முன்னேறும்போது

எல்லாரும் கலங்கித் திகைக்கின்றார்கள்.

மணல்போல

எண்ணற்ற மக்களைச் சிறைப்படுத்துகின்றார்கள்.

10அரசர்களை அவர்கள்

ஏளனம் செய்கின்றார்கள்;

அதிகாரிகளை

எள்ளி நகையாடுகின்றார்கள்;

அரண்களை எல்லாம் பார்த்து

நகைக்கின்றார்கள்;

மண்மேடுகளை எழுப்பி

அவற்றைப் பிடிக்கின்றார்கள்.

11அவர்கள் காற்றைப்போல் விரைவாகக்

கடந்து போகின்றார்கள்;

மறைந்து விடுகின்றார்கள்.

தங்கள் வலிமையைக்

கடவுளாகக் கருதியதே

அவர்கள் செய்த குற்றம்.

அபக்கூக்கு மீண்டும் முறையிடுகிறார்

12ஆண்டவரே, என் கடவுளே,

என் தூயவரே

தொன்று தொட்டே இருப்பவர்

நீர் அல்லவா?

நீர்* சாவைக் காண்பதில்லை;

ஆண்டவரே, அவர்களை

எங்கள் தண்டனைத் தீர்ப்பாய்

ஏற்படுத்தியவர் நீரே;

புகலிடமே, எங்களைச் சாடும் சாட்டையாய்

அவர்களை ஆக்கியவரும் நீரே

13தீமையைக் காண நாணும்

தூய கண்களை உடையவரே,

கொடுமையைப் பார்க்கத் தாங்காதவரே,

கயவர்களை நீர்

ஏன் பார்த்துக் கொண்டே இருக்கிறீர்?

பொல்லாதவர்

தம்மைவிட நேர்மையாளரை

விழுங்கும்போது

நீர் ஏன் மௌனமாய் இருக்கின்றீர்?

14நீர் மானிடரைக்

கடல் மீன்கள் போலும்

தலைமை இல்லா ஊர்வனபோலும்

நடத்துகின்றீர்.

15கல்தேய இனத்தார் மற்றெல்லாரையும்

தூண்டிலால் பிடிக்கின்றார்கள்;

வலையால் வாரி இழுக்கின்றார்கள்;

தங்கள் பறியிலே சேர்த்துக்கொண்டு

அகமகிழ்ந்து களிப்புறுகின்றார்கள்.

16ஆதலால், தங்கள் வலைக்குப்

பலி செலுத்துகின்றார்கள்;

பறிக்குத் தூபம் காட்டுகின்றார்கள்;

ஏனெனில் அவற்றாலேயே

இன்பமான வாழ்வை அடைகின்றார்கள்;

அறுசுவை உணவைப் பெறுகின்றார்கள்.

17அப்படியானால், அவர்கள்

தங்கள் வலையில் இருப்பவற்றை

ஓயாமல் வெளியே கொட்டி

மக்களினங்களை

இரக்கமின்றி இடைவிடாமல்

கொன்று குவிக்கவும் வேண்டுமோ?


1:5 திப 13:41.
1:6 2 அர 24:2.


1:12 * ‘நாங்கள்’ என்பது எபிரேய பாடம்.
Pradeep Augustine Avatar

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Stay Connected

Recently added Bibles

Download our App

Get our official Catholic Gallery app for daily Mass readings, prayers & more

Your Faith. Your Way.
Download the Catholic Gallery app for offline Mass readings, daily prayers, and audio Bible — all in one place.
Available on:
No Thanks