Home » Tamil » எஸ்தர் அதிகாரம் – 8 – திருவிவிலியம்

எஸ்தர் அதிகாரம் – 8 – திருவிவிலியம்

எஸ்தர் அதிகாரங்கள் (Tamil Bible: Ecumenical Tamil Translation – ETB)
Click the play button to listen or click the Download button to save a copy.

தம்மைக் காத்துக்கொள்ளும்படி எஸ்தர் யூதரைத் தூண்டல்

1சில நாள்களில் மன்னர் அகஸ்வேர், யூதரின் பகைவனான ஆமானின் இல்லத்தை அரசி எஸ்தருக்கு வழங்கினார். மொர்தக்காய்க்கும் தமக்கும் உள்ள உறவை எஸ்தர் வெளிப்படுத்த, அவரும் மன்னரின் முன்னிலைக்கு வந்தார்.

2ஆமானிடமிருந்து கழற்றப்பெற்ற தம் கணையாழியை மன்னர் எடுத்து மொர்தக்காய்க்கு அளித்தார். எஸ்தரும் மொர்தக்காயை ஆமான் வீட்டின் பொறுப்பாளராக நியமித்தார்.

3மீண்டும் எஸ்தர், யூதருக்கு எதிராய்ச் சதிசெய்த தீயோன் ஆகாகியானான ஆமானின் திட்டங்கள் யாவும் குலைந்து போகுமாறு, மன்னரின் காலடிகளில் வீழ்ந்து, அழுது மன்றாடி, அவரது தயவினை நாடினார்.

4உடனே மன்னர் தம் பொற்செங்கோலை எஸ்தருக்கு நீட்ட, அவர் எழுந்து மன்னர்முன் நின்றார்.

5அவர், “மன்னருக்கு இது நலமெனப்பட்டால், அவர்தம் கண்களில் எனக்குத் தயவு கிடைத்தால், அரசருக்கு இது சரியெனத் தோன்றினால், நானும் உம் பார்வையில் இனியவளெனப்பட்டால் மன்னரின் அனைத்து மாநிலங்களிலும் உள்ள யூதர் அழிந்துபோகுமாறு வஞ்சனையாய்த் திட்டமிட்ட அம்மதாத்தின் மகனும் ஆகாகியனுமான ஆமான் எழுதிய மடல்கள் அனைத்தையும் திருப்பி அனுப்பும்படி எழுதுவீராக!

6என் மக்களுக்கு நேரிடும் தீங்கினையும், என் உறைவினரின் படுகொலையினையும் நான் எவ்வாறு காண இயலும்?” என்று கூறினார்.

7அப்பொழுது மன்னர் அகஸ்வேர், அரசி எஸ்தரையும் யூதரான மொர்தக்காயையும் நோக்கி, “இதோ! ஆமானின் இல்லத்தை எஸ்தருக்கு அளித்தேன்; யூதருக்கு எதிராய்க் கை நீட்டிய ஆமான் தூக்கிலிடப்பட்டான்.

8மன்னரின் பெயரால் எழுதப்பட்டு, அவர் கணையாழியின் முத்திரை பதிக்கப்பெற்ற எம்மடலும் திருப்பிப் பெற இயலாதபடியால், உங்கள் பார்வையில் நலமெனத்தோன்றும் அனைத்தையும் மன்னரின் பெயரால் நீங்கள் யூதருக்கு எழுதி, மன்னரின் கணையாழியால் முத்திரையிடுங்கள்” என்று கூறினார்.

9சீவான் என்ற மூன்றாம் மாதத்தில், இருபத்து மூன்றாம் நாளன்று மன்னரின் எழுத்தர்கள் வரவழைக்கப்பட்டனர். மொர்தக்காய் இட்ட ஆணையின்படியே யூதர் அனைவருக்கும் இந்தியா தொடங்கி எத்தியோப்பியா வரையிலுள்ள நூற்றிருபத்தேழு மாநிலங்களின் குறுநில மன்னர்களுக்கும், மாநிலங்களின் ஆளுநர் அனைவர்க்கும் மாநிலத் தலைவர் அனைவர்க்கும் அவர்தம் மக்களின் வரிவடிவ வாரியாகவும், மொழி வாரியாகவும் மடல்கள் வரையப் பெற்றன.

10மன்னர் அகஸ்வேர் பெயரால் எழுதப் பெற்று, அரச கணையாழி முத்திரையிடப்பெற்ற இம்மடல்கள், அரசக் கொட்டிலைச் சார்ந்த அரசப் பணிக்குரிய புரவிகள் மீது அமர்ந்தேகும் விரைவு அஞ்சலர் மூலம் அனுப்பப்பட்டன.

11ஒவ்வொரு நகரிலும் உள்ள யூதர் ஒன்றுதிரண்டு தங்களைப் பாதுகாத்துக்கொள்ளவும், அவர்களையும் அவர்களின் குழந்தைகள், பெண்கள் ஆகியோரையும் தாக்கக்கூடிய எந்த நாட்டையும் மாநிலத்தையும் சார்ந்த படைகளை அழித்துக் கொன்று ஒழிக்கவும், அவற்றின் உடைமைகளைக் கொள்ளையிடவும் தேவையான அதிகாரத்தை மன்னரின் பெயரால் எழுதப்பட்ட இம்மடல்கள் அளித்தன.

12மன்னர் அகஸ்வேரின் மாநிலங்கள் அனைத்திலும், அதார் என்ற பன்னிரண்டாம் மாதம் பதின்மூன்றாம் நாளன்று, ஒரே நாளில் இவ்வாறு செய்வதென அறிவிக்கப்பட்டது.

13அம்மடலின் நகல் ஒவ்வொரு மாநிலத்தின் அனைத்து மக்களுக்கும் சட்டமாக அறிவிக்கப்பட்டது. யூதரும் தம் பகைவரைப் பழிதீர்க்க இந்நாளில் ஆயத்தமாகும்படி கேட்டுக் கொள்ளப்பட்டனர்.

14அரசப் பணிக்குரிய புரவிகள் மீது அமர்ந்தேகும் விரைவு அஞ்சலர் மன்னரின் ஆணையால் ஏவப்பட்டு, வெளி மாநிலங்களுக்கு விரைந்தனர். சூசான் அரண்மனையிலும் இச்சட்டம் அறிவிக்கப்பட்டது.

15நீலமும் வெண்மையுமான அரச உடையணிந்து, பெரிய பொன் மகுடம் சூடி, கருஞ்சிவப்பு மென்துகில் அணிந்தவராய் மொர்தக்காய் மன்னரின் முன்னிலையிலிருந்து வெளியேற, சூசான் நகர் மகிழ்ந்து களிகூர்ந்தது.

16இச்செய்தி யூதருக்கு நம்பிக்கை ஒளியாகவும், மகிழ்வுக்கும், அக்களிப்புக்கும் மதிப்பிற்கும் உரிய ஒன்றாகவும் விளங்கியது.

17ஒவ்வொரு மாநிலத்திலும், ஒவ்வொரு நகரிலும், எங்கெல்லாம் மன்னரின் இந்த வாக்கும் நியமமும் எட்டினவோ, அங்கெல்லாம் வாழ்ந்த யூதர் மகிழ்ந்து களிகூர்ந்தனர். அந்நாள் விருந்தாடும் விழா நாளாக விளங்கியது. யூதரைப்பற்றிய அச்சம் பிறர்மீது விழ, நாட்டு மக்களில் பலர் யூதராயினர்.

Pradeep Augustine Avatar

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recently added Bibles

Download our App

Enjoy Catholic Gallery without ads!
Get our official app for daily Mass readings, prayers & more.