Home » ஆமோஸ் அதிகாரம் – 4 – திருவிவிலியம்

ஆமோஸ் அதிகாரம் – 4 – திருவிவிலியம்

ஆமோஸ் அதிகாரங்கள் (Tamil Bible: Ecumenical Tamil Translation – ETB)

Click the play button to listen or click the Download button to save a copy.

1“சமாரியா மலைமேல் வாழும் பாசான்

பசுக்களே! இந்த வாக்கைக் கேளுங்கள்;

ஏழைகளை ஒடுக்கி,

வறியோரை நசுக்குகின்ற நீங்கள்

உங்கள் கணவர்களைப் பார்த்து,

“கொண்டுவாருங்கள், குடிப்போம்” என்று சொல்கிறீர்கள்.

2இறைவனாகிய ஆண்டவர்

தம் புனிதத்தின்மேல்

ஆணையிட்டுக் கூறுவது இதுவே:

“உங்களுக்கு அந்த நாள்கள்

வருகின்றன;

அப்பொழுது அவர்கள் உங்களைக்

கொக்கிகளாலும்,

உங்களுள் எஞ்சியிருப்போரைத்

தூண்டில்களாலும்

இழுத்துக் கொண்டு போவார்கள்.

3நீங்கள் ஒருவர் பின் ஒருவராய்

அருகிலுள்ள கோட்டையின்

பிளவு வழியாய் வெளியேற்றப்பட்டு

அர்மோனை நோக்கித்

தள்ளப்படுவீர்கள்”

என்கிறார் ஆண்டவர்.

இஸ்ரயேலின் பிடிவாதம்

4“வாருங்கள், பெத்தேலுக்கு வந்து

குற்றம் செய்யுங்கள்;

கில்காலுக்கு வந்து

குற்றங்களைப் பெருக்குங்கள்;

நாள்தோறும் காலையில்

உங்கள் பலிகளைக்

கொண்டு வாருங்கள்;

மூன்று நாளைக்கு ஒருமுறை

பத்திலொரு பங்கையும் செலுத்துங்கள்.

5புளித்த மாவின் அப்பத்தைக்

கொண்டுவந்து

நன்றிப் பலியாகப் படையுங்கள்;

நேர்ச்சைகளைச் செலுத்தி

அவற்றை விளம்பரப்படுத்துங்கள்.

இஸ்ரயேல் மக்களே,

இப்படிச் செய்வதுதானே

உங்கள் விருப்பம்”,

என்கிறார் ஆண்டவர்.

6“உங்கள் நகர்களில் எல்லாம்

உங்கள் பற்களுக்கு

வேலை இல்லாமல் செய்தேன்;

நீங்கள் குடியிருக்கும்

இடங்களிலெல்லாம்

உணவுப் பற்றாக்குறையை

உண்டாக்கினேன்;

ஆயினும் நீங்கள்

என் பக்கம் திரும்பவில்லை”

என்கிறார் ஆண்டவர்.

7“நீங்கள் அறுவடை செய்ய

மூன்று மாதம் இருந்த போதே

உங்களுக்கு மழையை நிறுத்திவிட்டேன்;

ஓர் ஊரில் மழைபெய்யச் செய்து

அடுத்த ஊரில்

வறட்சியை உண்டாக்கினேன்.

ஒரு வயலில் மழை பெய்யச் செய்தேன்.

வேறொரு வயல்

மழையின்றிக் காய்ந்து போயிற்று.

8ஆகையால், இரண்டு மூன்று

நகர்களின் மக்கள்

தண்ணீர் தேடித் தள்ளாடித் திரிந்து

வேறொரு நகருக்குப் போயும்

அவர்கள் தாகம் தீரவில்லை;

இப்படியெல்லாம் செய்தும்

நீங்கள் என் பக்கம் திரும்பவில்லை”

என்கிறார் ஆண்டவர்.

9‘வெப்பக் காற்றாலும்

பயிரழிக்கும் நோயாலும்

உங்களை வதைத்தேன்.

உங்கள் தோப்புகளையும்

திராட்சைத் தோட்டங்களையும்

அழித்தேன்;

அத்திமரங்களையும் ஒலிவமரங்களையும்

வெட்டுக்கிளி தின்றது;

ஆயினும் நீங்கள்

என்பக்கம் திரும்பவில்லை,”

என்கிறார் ஆண்டவர்.

10“எகிப்தின்மீது அனுப்பிய

கொள்ளை நோய் போன்ற

கொடிய நோயை

உங்கள்மீதும் அனுப்பினேன்;

உங்கள் இளைஞர்களை

வாளால் வெட்டி வீழ்த்தினேன்;

உங்கள் குதிரைகளும்

கொள்ளை போயின;

உங்கள் பாளையங்களில்

செத்தவர்களின் பிணநாற்றம்

உங்கள் மூக்கில் ஏறும்படி செய்தேன்;

ஆயினும் நீங்கள்

என் பக்கம் திரும்பவில்லை,”

என்கிறார் ஆண்டவர்.

11“சோதோம், கொமோராவின் மக்களைக்

கடவுள் அழித்ததுபோல

உங்களுள் சிலரை அழித்தேன்.

நீங்களோ,

நெருப்பிலிருந்து இழுக்கப்பட்ட

கொள்ளிக் கட்டைபோல் ஆனீர்கள்;

ஆயினும் நீங்கள்

என்பக்கம் திரும்பவில்லை”

என்கிறார் ஆண்டவர்.

12“ஆகையால், இஸ்ரயேலே!

உனக்கும் இவ்வாறே செய்வேன்,

இஸ்ரயேலே!

இப்படி நான் செய்யப் போவதால்

உன் கடவுளைச் சந்திக்கத் தயாராயிரு!”

13ஏனெனில், மலைகளை உருவாக்கியர் அவரே;

காற்றைத் தோற்றுவிப்பவர் அவரே;

தம் எண்ணத்தை மனிதனுக்கு

வெளிப்படுத்துபவரும் அவரே;

காலைப்பொழுதைக்

காரிருள் ஆகச்செய்பவரும் அவரே;

நிலத்தின் உயர்ந்த இடங்களில்

நடமாடுபவரும் அவரே;

படைகளின் கடவுளாகிய

ஆண்டவர் என்பதே அவரது பெயராகும்.

Pradeep Augustine Avatar

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Stay Connected

Recently added Bibles

Download our App

Get our official Catholic Gallery app for daily Mass readings, prayers & more

Your Faith. Your Way.
Download the Catholic Gallery app for offline Mass readings, daily prayers, and audio Bible — all in one place.
Available on:
No Thanks