Home » 2 கொரிந்தியர் அதிகாரம் – 12 – திருவிவிலியம்

2 கொரிந்தியர் அதிகாரம் – 12 – திருவிவிலியம்

2 கொரிந்தியர் அதிகாரங்கள் (Tamil Bible: Ecumenical Tamil Translation – ETB)

Click the play button to listen or click the Download button to save a copy.

காட்சிகளும் வெளிப்பாடுகளும்

1பெருமை பாராட்டுதல் பயனற்றதே. ஆயினும் பெருமை பாராட்ட வேண்டி இருப்பதால் ஆண்டவர் அருளிய காட்சிகளையும் வெளிப்பாடுகளையும் குறித்துப் பேசப் போகிறேன்.

2கிறிஸ்துவின் அடியான் ஒருவனை எனக்குத் தெரியும். அவன் பதினான்கு ஆண்டுகளுக்கு முன்பு ஒருமுறை மூன்றாம் வானம் வரை எடுத்துச் செல்லப்பட்டான். அவன் உடலோடு அங்குச் சென்றானா, உடலின்றி அங்குச் சென்றானா, யானறியேன். கடவுளே அதை அறிவார்.

3-4ஆனால், அம்மனிதன் பேரின்ப வீட்டுக்கு எடுத்துச் செல்லப்பட்டான் என்பது எனக்குத் தெரியும். நான் மீண்டும் சொல்கிறேன்; அவன் உடலோடு அங்குச் சென்றானா அல்லது உடலின்றி அங்குச் சென்றானா யானறியேன். கடவுளே அதை அறிவார். அவன் அங்கே மனிதரால் உச்சரிக்கவும் சொல்லவும் முடியாத வார்த்தைகளைச் சொல்லக் கேட்டான்.

5இந்த ஆளைப் பற்றியே நான் பெருமை பாராட்டுவேன். என் வலுவின்மையே எனக்குப் பெருமை.

6அப்படி நான் பெருமை பாராட்ட விரும்பினாலும் அது அறிவீனமாய் இராது. நான் பேசுவது உண்மையாகவே இருக்கும். ஆயினும் என்னிடம் காண்பதையும் கேட்பதையும் விட உயர்வாக யாரும் என்னைக் கருதாதபடி நான் பெருமை பாராட்டாது விடுகிறேன்.

7எனக்கு அருளப்பட்ட ஒப்புயர்வற்ற வெளிப்பாடுகளால் நான் இறுமாப்பு அடையாதவாறு பெருங்குறை ஒன்று என் உடலில் தைத்த முள் போல் என்னை வருத்திக் கொண்டே இருக்கிறது. அது என்னைக் குத்திக் கொடுமைப்படுத்த சாத்தான் அனுப்பிய தூதனைப் போல் இருக்கிறது. நான் இறுமாப்படையாதிருக்கவே இவ்வாறு நடக்கிறது.

8அதை என்னிடமிருந்து நீக்கிவிடுமாறு மூன்று முறை ஆண்டவரிடம் வருந்தி வேண்டினேன்.

9ஆனால், அவர் என்னிடம், “என் அருள் உனக்குப் போதும்; வலுவின்மையில்தான் வல்லமை நிறைவாய் வெளிப்படும்” என்றார். ஆதலால், நான் என் வலுவின்மையைப் பற்றித்தான் மனமுவந்து பெருமை பாராட்டுவேன். அப்போது கிறிஸ்துவின் வல்லமை என்னுள் தங்கும்.

10ஆகவே, என் வலுவின்மையிலும் இகழ்ச்சியிலும் இடரிலும் இன்னலிலும் நெருக்கடியிலும் கிறிஸ்துவை முன்னிட்டு நான் அகமகிழ்கிறேன். ஏனெனில், நான் வலுவற்றிருக்கும்போது வல்லமை பெற்றவனாக இருக்கிறேன்.

கொரிந்துத் திருச்சபையின் மீது அக்கறை

11நான் ஓர் அறிவிலிபோல் பேசிவிட்டேன். என்னைப் பாராட்டி இருக்க வேண்டிய நீங்களே என்னை அப்படிப் பேசவைத்து விட்டீர்கள். நான் ஒன்றுமில்லை. எனினும், அந்த மாபெரும் திருத்தூதர்களை விட எதிலும் குறைந்தவனல்ல.

12உங்களிடையே நான் கொண்டிருந்த மனஉறுதி, நான் செய்த அரும் அடையாளங்கள், அருஞ்செயல்கள், வல்லசெயல்கள் ஆகியவையே ஒரு திருத்தூதருக்குரிய அறிகுறிகள்.

13எந்த முறையில் மற்றத் திருச்சபைகளை விட உங்களைத் தாழ்வாய் நடத்தினேன்? உங்களுக்குச் சுமையாய் இராதது ஒரு குற்றமா? அப்படியானால் அக்குற்றத்தை மன்னித்துக் கொள்ளுங்கள்.

14இதோடு மூன்றாவது முறையாக நான் உங்களிடம் வரத் தயாராக இருக்கிறேன். ஆனால், உங்களுக்குச் சுமையாய் இருக்கமாட்டேன். உங்களுடைய உடைமைகளை அல்ல, உங்களையே நாடி வருகிறேன். பெற்றோருக்குப் பிள்ளைகள் செல்வம் சேமித்து வைக்க வேண்டியதில்லை. மாறாக, பெற்றோரே பிள்ளைகளுக்காகச் சேமிக்க வேண்டும்.

15நான் உங்களுக்காக எனக்குள்ளவற்றையும், ஏன் என்னையுமே மனமுவந்து அளித்திடுவேன். உங்கள் மீது நான் இத்துணை அன்பு கொண்டிருக்க நீங்கள் என்மீது கொண்டுள்ள அன்பு குறையலாமா?

16நான் உங்களுக்குச் சுமையாய் இல்லாதது குற்றமாகவே இருக்கட்டும். ஆனால், நான் உங்களைக் சூழ்ச்சியாய் வஞ்சித்தேன் என நினைக்கிறீர்களா?

17நான் உங்களிடம் அனுப்பியவர் எவர் மூலமாவது ஆதாயம் தேடினேனா?

18உங்களிடம் வருமாறு தீத்துவைக் கெஞ்சிக் கேட்டுக் கொண்டேன்; மற்றொரு சகோதரரையும் அவரோடு அனுப்பிவைத்தேன். தீத்து உங்களிடம் ஆதாயம் தேடினாரா? நாங்கள் ஒரே மனப்பாங்கோடு செயல்படவில்லையா? ஒரே வழிமுறையைப் பின்பற்றவில்லையா?

19நாங்கள் குற்றமற்றவர்கள் என உங்கள் முன் காட்டுவதாக இதுவரை எண்ணியிருப்பீர்கள். அன்பார்ந்தவர்களே, கடவுளின் திருமுன் கிறிஸ்து வழியாய் உங்களுக்குச் சொல்கிறேன்; நான் செய்வதெல்லாம் உங்கள் வளர்ச்சிக்காகவே.

20எனக்கு ஓர் அச்சம்! நான் அங்கே வரும்போது நான் காணவிரும்பும் நிலையில் நீங்கள் இருப்பீர்களோ என்னவோ! ஒருவேளை நீங்கள் காண விரும்பாத நிலையில் நானும் இருக்கலாம். சண்டை சச்சரவு, பொறாமை, சீற்றம், கட்சி மனப்பான்மை, அவதூறு பேசல், புறங்கூறல், இறுமாப்பு, குழப்பம் ஆகியவை உங்களிடம் இருக்கக் காண்பேனோ என்னவோ!

21நான் மீண்டும் உங்களிடம் வரும்போது என் கடவுள் உங்கள்முன் என்னைத் தலைகுனியச் செய்வாரோ என்னவோ! முன்பு பாவம் செய்தவர்களுள் பலர் தங்களுடைய ஒழுக்கக்கேடு, பரத்தைமை, காமவெறி ஆகியவற்றை விட்டு மனம் மாறாமல் இருப்பதைக் கண்டு துயருற்று அழவேண்டியிருக்குமோ என்னவோ!


12:9 எசா 40:29.
Pradeep Augustine Avatar

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Stay Connected

Recently added Bibles

Download our App

Get our official Catholic Gallery app for daily Mass readings, prayers & more

Your Faith. Your Way.
Download the Catholic Gallery app for offline Mass readings, daily prayers, and audio Bible — all in one place.
Available on:
No Thanks