Home » 2 கொரிந்தியர் அதிகாரம் – 11 – திருவிவிலியம்

2 கொரிந்தியர் அதிகாரம் – 11 – திருவிவிலியம்

2 கொரிந்தியர் அதிகாரங்கள் (Tamil Bible: Ecumenical Tamil Translation – ETB)

Click the play button to listen or click the Download button to save a copy.

பவுலும் போலித் திருத்தூதர்களும்

1என் அறிவீனத்தை நீங்கள் சற்றுப் பொறுத்துக் கொள்ள வேண்டும்; ஆம் சற்றே பொறுத்துக் கொள்ளுங்கள்.

2உங்கள் மீது கடவுள் கொண்டுள்ள அதே அன்பார்வத்தை நானும் கொண்டுள்ளேன். கிறிஸ்து என்னும் ஒரே மணமகனுக்கும் உங்களுக்குமிடையே மண ஒப்பந்தம் செய்துள்ளேன். அவர்முன் உங்களைக் கற்புள்ள கன்னியாக நிறுத்த வேண்டும் என்பதே என் விருப்பம்.

3ஆனால், ஏவா பாம்பின் சூழ்ச்சியினால் ஏமாற்றப்பட்டதைப் போல நீங்களும் உங்கள் எண்ணங்களைச் சீரழியவிட்டுக் கிறிஸ்துவிடம் விளங்கிய நேர்மையையும் தூய்மையையும் இழந்து விடுவீர்களோ என அஞ்சுகிறேன்.

4உங்களிடம் யாராவது வந்து, நாங்கள் அறிவித்த இயேசுவைத் தவிர வேறு ஓர் இயேசுவைப் பற்றி அறிவித்தால், அல்லது நீங்கள் பெற்ற தூய ஆவியைத் தவிர வேறு ஓர் ஆவியைப்பற்றிப் பேசினால், அல்லது நீங்கள் ஏற்ற நற்செய்தியைத் தவிர வேறு ஒரு நற்செய்தியைக் கொண்டு வந்தால் நீங்கள் அவர்களை எளிதாக ஏற்றுக் கொள்கிறீர்கள்.

5இப்படிப்பட்ட ‘மாபெரும்’ திருத்தூதரை விட நான் எதிலும் குறைந்தவன் அல்லேன் என்றே கருதுகிறேன்.

6நான் நாவன்மையற்று இருக்கலாம்; ஆனால், அறிவு அற்றவன் அல்ல; இதை எப்போதும் எல்லா வகையிலும் உங்களுக்குத் தெளிவுபடுத்தியே இருக்கிறோம்.

7ஊதியம் எதுவும் எதிர்பார்க்காமல் நான் உங்களுக்கு நற்செய்தி அறிவித்தேன். நீங்கள் உயர்வுபெற நான் தாழ்வுற்றேன். இதுதான் நான் செய்த பாவமா?

8நான் உங்களிடையே பணிபுரிந்தபோது என் செலவுக்கு வேண்டியதை மற்றத் திருச்சபைகளிடமிருந்து பெற்றுக் கொண்டேன். உங்களுக்காக அவர்களைக் கொள்ளையிட்டேன் என்றே சொல்லலாம்.

9நான் உங்களோடு இருந்தபோது எனக்குப் பற்றாக்குறை இல்லாமல் இல்லை. எனினும், நான் உங்களில் எவருக்கும் சுமையாய் இருந்ததில்லை. மாசிதோனியாவிலிருந்து வந்த அன்பர்கள் என் பற்றாக்குறையைப் போக்கினார்கள். நான் எதிலும் உங்களுக்குச் சுமையாய் இருந்ததில்லை; இனி இருக்கவும் மாட்டேன்.

10கிறிஸ்துவின் உண்மையே என்னுள்ளும் இருப்பதால் நான் பெருமைப்படுவதை அக்காயா பகுதியிலுள்ள யாரும் தடுக்க முடியாது.

11ஏன் இப்படிச் சொல்கிறேன்? உங்களிடம் எனக்கு அன்பே இல்லை என்பதாலா? நான் உங்கள் மீது அன்புகொண்டவன் என்பது கடவுளுக்குத் தெரியும்.

12எங்களைப் போன்று பணியாற்றுவதாகக் காட்டித் தம் பணியில் பெருமையடைய சிலர் வாய்ப்புத் தேடுகின்றனர். அந்த வாய்ப்பு அவர்களுக்குக் கிடைக்காதிருக்க நான் இப்போது செய்து வருவதையே தொடர்ந்து செய்வேன்.

13ஏனெனில், இத்தகையோர் போலித் திருத்தூதர்; வஞ்சக வேலையாள்கள்; கிறிஸ்துவின் திருத்தூதராக நடிப்பவர்கள்.

14இதில் வியப்பு என்ன? சாத்தான் கூட ஒளியைச் சார்ந்த தூதனாக நடிக்கிறானே?

15ஆகவே, அவனுடைய தொண்டர்கள் கடவுளுக்கு ஏற்புடையவர்களாக நடிப்பதில் வியப்பு ஒன்றுமில்லை. அவர்களது முடிவு அவர்களுடைய செயலுக்கு ஏற்பவே அமையும்.

பவுலின் துன்பங்கள்

16நான் மீண்டும் சொல்கிறேன். நான் ஒரு அறிவிலி என எவரும் எண்ண வேண்டாம். அவ்வாறு எண்ணினால், என்னை அறிவிலியாகவே வைத்துக் கொள்ளுங்கள்; அப்படியானால் நானும் சற்றுப் பெருமையடித்துக்கொள்ளலாமே!

17நான் இவ்வாறு பெருமையாய்ப் பேசுவது ஆண்டவரின் தூண்டுதலால் அல்ல; மாறாக நான் ஓர் அறிவிலியாய் இருப்பதால் தான்.

18பலர் உலகு சார்ந்த முறையில் பெருமையடித்துக் கொள்வதால் நானும் அவ்வாறே செய்கிறேன்.

19நீங்கள் அறிவுக்கூர்மையுள்ளவர்கள் அல்லவா? அறிவிலிகளை மனமுவந்து பொறுத்துக் கொள்பவர்கள் ஆயிற்றே!

20யாராவது உங்களை அடிமைப்படுத்தினாலும் சுரண்டினாலும் உங்களுக்குக் கண்ணி வைத்தாலும் உங்களிடம் இறுமாப்போடு நடந்து கொண்டாலும் உங்களைக் கன்னத்தில் அறைந்தாலும் நீங்கள் பொறுத்துக் கொள்கிறீர்கள்!

21இப்படியெல்லாம் செய்ய நாங்கள் வலுவற்றவர்களே! இது அவமானத்திற்குரிய ஒன்றுதான்!

அவர்கள் எதில் பெருமை பாராட்டத் துணிகிறார்களோ அதில் நானும் பெருமைப்பாராட்டத் துணிந்து நிற்கிறேன். இப்போதும் ஓர் அறிவிலியைப் போன்றே பேசுகிறேன்.

22அவர்கள் எபிரேயரா? நானும் தான்; அவர்கள் இஸ்ரயேலரா? நானும் தான்; அவர்கள் ஆபிரகாமின் வழிமரபினரா? நானும் தான்.

23அவர்கள் கிறிஸ்துவின் பணியாளர்களா? நான் அவர்களைவிடச் சிறந்த பணியாளனே. இங்கும் நான் ஒரு மதியீனனாகவே பேசுகிறேன். நான் அவர்களை விட அதிகமாய்ப் பாடுபட்டு உழைத்தேன்; பன்முறை சிறையில் அடைபட்டேன்; கொடுமையாய் அடிபட்டேன்; பன்முறை சாவின் வாயிலில் நின்றேன்.

24ஐந்துமுறை யூதர்கள் என்னைச் சாட்டையால் ஒன்று குறைய நாற்பது அடி அடித்தார்கள்.

25மூன்றுமுறை தடியால் அடிபட்டேன்; ஒருமுறை கல்லெறிபட்டேன்; மூன்றுமுறை கப்பல் சிதைவில் சிக்கினேன்; ஓர் இரவும் பகலும் ஆழ்கடலில் அல்லலுற்றேன்.

26பயணங்கள் பல செய்தேன்; அவற்றில், ஆறுகளாலும் இடர்கள், கள்வராலும் இடர்கள், என் சொந்த மக்களாலும் இடர்கள், பிற மக்களாலும் இடர்கள், நாட்டிலும் இடர்கள், காட்டிலும் இடர்கள், கடலிலும் இடர்கள், போலித் திருத்தூதர்களாலும் இடர்கள், இப்படி எத்தனையோ இடர்களுக்கு ஆளானேன்.

27பாடுபட்டு உழைத்தேன்; பன்முறை கண்விழித்தேன்; பசிதாகமுற்றேன்; பட்டினி கிடந்தேன்; குளிரில் வாடினேன்; ஆடையின்றி இருந்தேன்.

28இவை தவிர எல்லாத் திருச்சபைகளையும் பற்றிய கவலை எனக்கு அன்றாடச் சுமையாயிருந்தது.

29யாராவது வலுவற்றிருந்தால் நானும் அவரைப்போல் ஆவதில்லையா? யாராவது பாவத்தில் விழ நேர்ந்தால் என் உள்ளம் கொதிப்பதில்லையா?

30நான் பெருமைபாராட்ட வேண்டுமென்றால் என் வலுவின்மையைப் பற்றியேதான் நான் பெருமை பாராட்ட வேண்டும்.

31நான் சொல்வது பொய் அல்ல. இதை ஆண்டவர் இயேசுவின் தந்தையாம் கடவுளே அறிவார். அவர் என்றென்றும் போற்றப்பெறுக!

32நான் தமஸ்கு நகரில் இருந்தபோது அரசர் அரேத்தாவின் கீழிருந்த ஆளுநர் என்னைப் பிடிக்க நகர வாயிலில் காவல் வைத்தார்.

33ஆனால், நான் நகர மதிலில் இருந்த பலகணி வழியாகக் கூடையில் வைத்து இறக்கப்பட்டு அவர் கைக்குக் தப்பினேன்.


11:2 எபே 5:27.
11:3 தொநூ 3:1-5,13.
11:4 கலா 1:6-9.
11:13 திவெ 2:2.
11:23 திப 16:23.
11:24 இச 25:3.
11:25 திப 16:22.
11:29 1 கொரி 9:22.
11:32-33 திப 9:24,25.
Pradeep Augustine Avatar

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Stay Connected

Recently added Bibles

Download our App

Get our official Catholic Gallery app for daily Mass readings, prayers & more

Your Faith. Your Way.
Download the Catholic Gallery app for offline Mass readings, daily prayers, and audio Bible — all in one place.
Available on:
No Thanks