Home » திருப்பலி வாசகங்கள் – செப்டம்பர் 23, 2026

திருப்பலி வாசகங்கள் – செப்டம்பர் 23, 2026

பொதுக்காலம் 25ஆம் வாரம் – புதன்

முதல் வாசகம்

எனக்குச் செல்வம் வேண்டாம். வறுமையும் வேண்டாம்; எனக்குத் தேவையான உணவை மட்டும் தந்தருளும்.

நீதிமொழிகள் நூலிலிருந்து வாசகம் 30: 5-9

கடவுளின் ஒவ்வொரு வாக்கும் பரிசோதிக்கப்பட்டு நம்பத்தக்கதாய் விளங்குகிறது; தம்மை அடைக்கலமாகக் கொண்டவர்களுக்கு அவர் கேடயமாய் இருக்கிறார். அவருடைய வார்த்தைகளோடு ஒன்றையும் கூட்டாதே; கூட்டினால் நீ பொய்யன் ஆவாய்; அவர் உன்னைக் கடிந்து கொள்வார்.

வரம் இரண்டு உம்மிடம் கேட்கிறேன். மறுக்காதீர்; நான் சாவதற்குள் அவற்றை எனக்கு அளித்தருளும். வஞ்சனையும் பொய்யும் என்னை விட்டு அகலச் செய்யும்; எனக்குச் செல்வம் வேண்டாம். வறுமையும் வேண்டாம்; எனக்குத் தேவையான உணவை மட்டும் தந்தருளும். எனக்கு எல்லாம் இருந்தால், நான், “உம்மை எனக்குத் தெரியாது” என்று மறுதலித்து, “ஆண்டவரைக் கண்டது யார்?” என்று கேட்க நேரிடும். நான் வறுமையுற்றால், திருடனாகி, என் கடவுளின் திருப்பெயருக்கு இழிவு வருவிக்க நேரிடும்.

ஆண்டவரின் அருள்வாக்கு.

பதிலுரைப் பாடல்

திபா 119: 29,72. 89,101. 104,163 (பல்லவி: 105a)

பல்லவி: என் காலடிக்கு உம் வாக்கே விளக்கு!

29பொய் வழியை என்னைவிட்டு விலக்கியருளும்; உமது திருச்சட்டத்தை எனக்குக் கற்றுத்தாரும்.72நீர் திருவாய் மலர்ந்த சட்டம், ஆயிரக்கணக்கான பொன், வெள்ளிக் காசுகளை விட எனக்கு மேலானது. – பல்லவி

89ஆண்டவரே! என்றென்றைக்கும் உள்ளது உமது வாக்கு; விண்ணுலகைப் போல் அது நிலைத்துள்ளது.101உம் வாக்கைக் கடைப்பிடிக்குமாறு தீய வழி எதிலும் நான் கால் வைக்காது பார்த்துக் கொள்கின்றேன். – பல்லவி

104உம் நியமங்களால் நான் நுண்ணறிவு பெறுகின்றேன். ஆகவேதான் பொய் வழிகள் அனைத்தையும் நான் வெறுக்கின்றேன்163பொய்யை வெறுத்து ஒதுக்குகின்றேன்; உமது திருச்சட்டத்தின் மீது பற்றுக்கொண்டுள்ளேன். – பல்லவி

நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

மாற் 1: 15

அல்லேலூயா, அல்லேலூயா! காலம் நிறைவேறிவிட்டது, இறையாட்சி நெருங்கி வந்துவிட்டது; மனம் மாறி நற்செய்தியை நம்புங்கள். அல்லேலூயா.

நற்செய்தி வாசகம்

இறையாட்சி பற்றிப் பறைசாற்றவும் உடல்நலம் குன்றியோரின் பிணி தீர்க்கவும் அவர்களை அனுப்பினார்.

லூக்கா எழுதிய தூய நற்செய்தியிலிருந்து வாசகம் 9: 1-6

அக்காலத்தில்

இயேசு பன்னிருவரையும் ஒன்றாக வரவழைத்து, பேய்களையெல்லாம் அடக்கவும் பிணிகளைப் போக்கவும் வல்லமையும் அதிகாரமும் அவர்களுக்குக் கொடுத்தார். இறையாட்சி பற்றிப் பறைசாற்றவும் உடல் நலம் குன்றியோரின் பிணி தீர்க்கவும் அவர்களை அனுப்பினார்.

அப்போது அவர்களை நோக்கி, “பயணத்திற்குக் கைத்தடி, பை, உணவு, பணம் போன்ற எதையும் எடுத்துக்கொண்டு போகவேண்டாம். ஓர் அங்கி போதும். நீங்கள் எந்த வீட்டுக்குள் சென்றாலும் அங்கேயே தங்கியிருங்கள்; அங்கிருந்தே புறப்படுங்கள். உங்களை ஏற்றுக்கொள்ளாதவர்களுடைய நகரை விட்டுப் புறப்படும்போது உங்கள் கால்களில் படிந்துள்ள தூசியை உதறிவிடுங்கள். இதுவே அவர்களுக்கு எதிரான சான்றாகும்” என்றார். அவர்கள் ஊர் ஊராகச் சென்று எங்கும் நற்செய்தியை அறிவித்து நோயாளிகளைக் குணமாக்கினார்கள்.

ஆண்டவரின் அருள்வாக்கு.

செப்டம்பர்-2026 அக் ►
ஞா 6 13 20 27
தி 7 14 21 28
செ 1 8 15 22 29
பு 2 9 16 23 30
வி 3 10 17 24
வெ 4 11 18 25
5 12 19 26
Archive 2026 2027
Pradeep Augustine Avatar

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Stay Connected

Recently added Bibles

Download our App

Get our official Catholic Gallery app for daily Mass readings, prayers & more

Your Faith. Your Way.
Download the Catholic Gallery app for offline Mass readings, daily prayers, and audio Bible — all in one place.
Available on:
No Thanks