Home » Tamil » அபக்கூக்கு அதிகாரம் – 3 – திருவிவிலியம்

அபக்கூக்கு அதிகாரம் – 3 – திருவிவிலியம்

அபக்கூக்கு அதிகாரங்கள் (Tamil Bible: Ecumenical Tamil Translation – ETB)
Click the play button to listen or click the Download button to save a copy.

அபக்கூக்கின் மன்றாட்டு

1இறைவாக்கினர் அபக்கூக்கு ‘சிகாயோன்’ பண்களில் பாடிய மன்றாட்டு:

2ஆண்டவரே,

உம்மைப்பற்றிக் கேள்வியுற்றேன்;

ஆண்டவரே,

உம் செயலைக் கண்டு

அச்சமடைகிறேன்;

எங்கள் வாழ்நாள் காலத்திலேயே

அதை மீண்டும் செய்யும்;

காலப்போக்கில் அதை

அனைவரும் அறியும்படி செய்யும்;

சினமுற்றபோதும்

உமது இரக்கத்தை நினைவு கூரும்.

3தேமானிலிருந்து

இறைவன் வருகிறார்;

பாரான் மலையிலிருந்து

புனிதர் வருகிறார். (சோலா)

அவரது மாட்சி

விண்ணுலகை மூடியிருக்கின்றது;

அவரது புகழால்

மண்ணுலகம் நிறைந்திருக்கின்றது.

4அவரது பேரொளி

கதிரவன் ஒளிபோல் இருக்கின்றது;

அவர் கையினின்று

ஒளிக்கதிர்கள் புறப்படுகின்றன;

அங்கேதான் அவரது வல்லமை

மறைந்திருக்கின்றது.

5அவருக்கு முன்பாகப்

பெருவாரி நோய் செல்கின்றது;

அவருடைய அடிச்சுவடுகளைத்

தொடர்ந்து

கொள்ளைநோய் புறப்படுகின்றது.

6அவர் நின்றால்,

நிலம் அதிர்கின்றது,

அவர் நோக்கினால்

வேற்றினத்தார் நடுங்குகின்றனர்;

தொன்றுதொட்டு இருக்கும் மலைகள்

பிளவுண்டு போகின்றன.

பண்டைக் காலக் குன்றுகள்

அமிழ்ந்து விடுகின்றன.

அவர்தம் வழிகளோ என்றும் உள்ளவை.

7கூசாவின் கூடாரங்களில்

வேதனை நிறைந்திருப்பதை

நான் கண்டேன்;

மிதியான் நாட்டுக் கூடாரத் திரைகள்

நடுநடுங்கின.

8ஆண்டவரே,

நீர் உம்முடைய குதிரைகள் மேலும்,

வெற்றித் தேர்மேலும் ஏறிவரும்போது,

நீரோடைகள்மீதா

உம் கோபத்தீ மூண்டது?

ஆறுகள் மீதா உம் சினம் பெருகியது?

கடல்மீதா உம் சீற்றம் மிகுந்தது?

9நீர் உம் வில்லைக் கையிலெடுத்து

நாணேற்றுகின்றீர்;

அம்பறாத் தூணியை

அம்புகளால் நிரப்புகின்றீர்; (சேலா)

நிலத்தை ஆறுகளால் பிளக்கின்றீர்.

10மலைகள் உம்மைக்கண்டு

நடுங்கின்றன;

பெரும் வெள்ளங்கள்

பீறிட்டுப் பாய்கின்றன;

ஆழ்கடல்

தன் இரைச்சலை எழுப்புகின்றது;

அது தன் கைகளை

மேலே உயர்த்துகின்றது.

11கதிரவனும் நிலவும்

தங்கள் இருப்பிடத்திலேயே

நிலைத்து நிற்கின்றன;

பாய்ந்தோடும் உம் அம்புகளின்

ஒளியின் முன்னும்,

பளிச்சிடும் உம் ஈட்டியினுடைய

சுடரின் முன்னும்

தங்கள் செயல் திறனை

இழந்து நிற்கின்றன.

12சினத்தோடு மண்ணுலகில்

நடந்து போகின்றீர்;

சீற்றம்கொண்டு

வேற்றினத்தாரை நசுக்குகின்றீர்.

13உம் மக்களை மீட்கவும்,

நீர் திருப்பொழிவு செய்தவரை

விடுவிக்கவுமே நீர் புறப்படுகின்றீர்.

பொல்லாதவனின் குடும்பத் தலைவனை

வெட்டி வீழ்த்துகின்றீர்.

அவனைப் பின்பற்றுவோரை

முற்றிலும் அழித்து விடுகின்றீர். (சேலா)

14அவன் படைத்தலைவனின் தலையை

அவன் ஈட்டிகளைக் கொண்டே

பிளக்கின்றீர்;

அவனோ ஒடுக்கப்பட்டவனை

மறைவாக விழுங்கி

மகிழ்வது போல மகிழ்ந்து,

சூறாவளிக் காற்றென

என்னைச் சிதறடிக்கப்

பாய்ந்து வருகின்றான்.

15ஆனால், நீர்

உம்முடைய குதிரைகளால்

ஆழ்கடலை மிதித்து,

பெருவெள்ளக் குவியலைச்

சிதறடிக்கின்றீர்.

16இதை நான் கேட்கும்போது

என் உடல் நடுநடுங்குகின்றது;

அப்பேரொலியைக் கேட்பதனால்

என் உதடுகள் துடிதுடிக்கின்றன;

என் எலும்புகள் உளுத்துப் போகின்றன;

என் காலடிகள் நிற்கும் இடத்திலேயே

தடுமாறுகின்றன;

எங்களைத் தாக்கும் மக்கள்மீது

இடுக்கண் வரும் நாள்வரை

அமைதியாய்க் காத்திருப்பேன்.

17அத்திமரம் துளிர்த்து

அரும்பாமல் போயினும்,

திராட்சைக் கொடிகள்

கனி தராவிடினும்

ஒலிவ மரங்கள்

பயன் அற்றுப் போயினும்,

வயல்களில்

தானியம் விளையாவிடினும்,

கிடையில் ஆடுகள் யாவும்

அழிந்து போயினும்,

தொழுவங்களில்

மாடுகள் இல்லாது போயினும்,

18நான் ஆண்டவரில் களிகூர்வேன்;

என் மீட்பரான கடவுளில்

மகிழ்ச்சியுறுவேன்.

19ஆண்டவராகிய என் தலைவரே

என் வலிமை;

அவர் என் கால்களைப்

பெண்மானின்

கால்களைப் போலாக்குவார்;

உயர்ந்த இடங்களுக்கு

என்னை நடத்திச் செல்வார்.


3:19 2 சாமு 22:34; திபா 18:33.

3:19 பாடகர் தலைவர்க்கு: இசைக்கருவி நெகினோத்து.
Pradeep Augustine Avatar

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recently added Bibles

Download our App

Get our official Catholic Gallery app for daily Mass readings, prayers & more