Home » மத்தேயு நற்செய்தி அதிகாரம் – 28 – திருவிவிலியம்

மத்தேயு நற்செய்தி அதிகாரம் – 28 – திருவிவிலியம்

மத்தேயு நற்செய்தி அதிகாரங்கள் (Tamil Bible: Ecumenical Tamil Translation – ETB)

Click the play button to listen or click the Download button to save a copy.

இயேசு உயிர்பெற்று எழுதல்
(மாற் 16:1-8; லூக் 24:1-12; யோவா 20:1-10)

1ஓய்வுநாளுக்குப்பின் வாரத்தின் முதல் நாள் விடியற்காலையில்* மகதலா மரியாவும் வேறொரு மரியாவும் கல்லறையைப் பார்க்கச் சென்றார்கள்.

2திடீரென ஒரு பெரிய நிலநடுக்கம் ஏற்பட்டது. ஆண்டவரின் தூதர் விண்ணகத்திலிருந்து இறங்கி வந்து கல்லறையை மூடியிருந்த கல்லைப் புரட்டி அதன் மேல் உட்கார்ந்தார்.

3அவருடைய தோற்றம் மின்னல் போன்றும் அவருடைய ஆடை உறைபனி வெண்மை போன்றும் இருந்தது.

4அவரைக் கண்ட அச்சத்தால் காவல் வீரர் நடுக்கமுற்றுச் செத்தவர் போலாயினர்.

5அப்பொழுது வானதூதர் அப்பெண்களைப் பார்த்து, “நீங்கள் அஞ்சாதீர்கள்; சிலுவையில் அறையப்பட்ட இயேசுவைத் தேடுகிறீர்கள் என எனக்குத் தெரியும்.

6அவர் இங்கே இல்லை; அவர் கூறியபடியே உயிருடன் எழுப்பப்பட்டார். அவரை வைத்த இடத்தை வந்து பாருங்கள்.

7நீங்கள் விரைந்து சென்று, ‘இறந்த அவர் உயிருடன் எழுப்பப்பட்டார்’ எனச் சீடருக்குக் கூறுங்கள். உங்களுக்கு முன்பாக அவர் கலிலேயாவுக்குப் போய்க்கொண்டிருக்கிறார். அங்கே நீங்கள் அவரைக் காண்பீர்கள். இப்பொழுதே நான் உங்களுக்குச் சொல்லிவிட்டேன்” என்றார்.

8அவர்களும் கல்லறையைவிட்டு விரைவாகப் புறப்பட்டுச் சென்றார்கள். அவர்கள் அச்சமுற்றாலும் அதே வேளையில் பெருமகிழ்ச்சியுற்றவர்களாய் அவருடைய சீடருக்கு அறிவிக்க ஓடினார்கள்.

9திடீரென்று இயேசு அவர்களை எதிர்கொண்டு வந்து வாழ்த்தினார். அவர்கள் அவரை அணுகி அவர் காலடிகளைப் பற்றிக் கொண்டு பணிந்து நின்றார்கள்.

10அப்பொழுது இயேசு அவர்களிடம்,

“அஞ்சாதீர்கள்! என் சகோதரர்களிடம் சென்று அவர்களைக் கலிலேயாவுக்குப் போகுமாறு சொல்லுங்கள். அங்கே அவர்கள் என்னைக் காண்பார்கள்”

என்றார்.

காவல் வீரர்கள் வதந்தியைப் பரப்புதல்

11அவர்கள் போய்க்கொண்டிருந்த போது காவல் வீரருள் சிலர் நகரத்திற்குள் சென்று, நிகழ்ந்தவை யாவற்றையும் தலைமைக் குருக்களுக்கு அறிவித்தனர்.

12அவர்கள் மூப்பர்களுடன் கூடிக் கலந்து ஆலோசித்து அப்படை வீரருக்கு மிகுதியாகப் பணம் கொடுத்து,

13“‘நாங்கள் தூங்கிக் கொண்டிருந்த போது இயேசுவின் சீடர் இரவில் வந்து அவரது உடலைத் திருடிச் சென்றுவிட்டனர்’ எனச் சொல்லுங்கள்.

14ஆளுநர் இதைக் கேள்வியுற்றால் நாங்கள் அவரை நம்பச்செய்து நீங்கள் தொல்லைக்கு உள்ளாகாதபடி பார்த்துக் கொள்வோம்” என்று அவர்களிடம் கூறினார்கள்.

15அவர்களும் பணத்தைப் பெற்றுக் கொண்டு தங்களுக்கு அவர்கள் சொல்லிக் கொடுத்தவாறே செய்தார்கள். இந்நாள் வரை இந்த வதந்தி யூதரிடையே பரவியிருக்கிறது.

இயேசு சீடருக்குக் கட்டளை கொடுத்து அனுப்புதல்
(மாற் 16:14-18; லூக் 24:36-49; யோவா 20:19-23; திப 1:6-8)

16பதினொரு சீடர்களும் இயேசு தங்களுக்குப் பணித்தபடியே கலிலேயாவிலுள்ள ஒரு மலைக்குச் சென்றார்கள்.

17அங்கே அவரைக் கண்டு பணிந்தார்கள். சிலரோ ஐயமுற்றார்கள்.

18இயேசு அவர்களை அணுகி,

“விண்ணுலகிலும் மண்ணுலகிலும் அனைத்து அதிகாரமும் எனக்கு அருளப்பட்டிருக்கிறது.

19எனவே நீங்கள் போய் எல்லா மக்களினத்தாரையும் சீடராக்குங்கள்; தந்தை, மகன், தூய ஆவியார் பெயரால் திருமுழுக்குக் கொடுங்கள்.

20

நான் உங்களுக்குக் கட்டளையிட்ட யாவையும் அவர்களும் கடைப்பிடிக்கும்படி கற்பியுங்கள். இதோ! உலக முடிவுவரை எந்நாளும் நான் உங்களுடன் இருக்கிறேன்”

என்று கூறினார்.


28:16-17 மத் 26:32; மாற் 14:28.
28:19 லூக் 24:47; திப 1:8.
28:20 திபா 125:2; யோவா 14:16-21.


28:1 * ‟ஓய்வுநாள் முடிந்து வாரத்தின் முதல் நாள் தொடங்குகையில்” என்றும் மொழிபெயர்க்கலாம்.
Pradeep Augustine Avatar

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Stay Connected

Recently added Bibles

Download our App

Get our official Catholic Gallery app for daily Mass readings, prayers & more

Your Faith. Your Way.
Download the Catholic Gallery app for offline Mass readings, daily prayers, and audio Bible — all in one place.
Available on:
No Thanks