back to top
HomeTamilயூதித்து அதிகாரம் - 4 - திருவிவிலியம்

யூதித்து அதிகாரம் – 4 – திருவிவிலியம்

யூதித்து அதிகாரங்கள் (Tamil Bible: Ecumenical Tamil Translation – ETB)

Click the play button to listen or click the Download button to save a copy.
Audio Bible by Rev. Fr. Arulselvam Rayappan. Know more about him here

இஸ்ரயேலின் எதிர்ப்பு

1அசீரிய மன்னன் நெபுகத்னேசருடைய படைத்தலைவன் ஒலோபெரின் வேற்றினத்தாருக்குச் செய்திருந்த அனைத்தையும், அவன் எவ்வாறு அவர்களின் கோவில்கள் எல்லாவற்றையும் சூறையாடித் தகர்த்தெறிந்தான் என்பதையும் யூதேயாவில் வாழ்ந்து வந்த இஸ்ரயேலர் கேள்விப்பட்டனர்.

2எனவே, அவன் வருவதை அறிந்து பெரிதும் அஞ்சினார்கள்; எருசலேமைக் குறித்தும் தங்கள் கடவுளாகிய ஆண்டவரின் கோவிலைக் குறித்தும் கலங்கினார்கள்.

3ஏனெனில், சற்று முன்னரே அவர்கள் தங்கள் அடிமை வாழ்விலிருந்து விடுதலை பெற்றிருந்தார்கள்; யூதேயா நாட்டு மக்கள் யாவரும் அண்மையில்தான் ஒருங்கிணைக்கப்பட்டிருந்தார்கள்; தீட்டுப்பட்டிருந்த தூய கலன்களும் பலிபீடமும் கோவிலும் மீண்டும் தூய்மைப்படுத்தப்பட்டிருந்தன.

4அவர்கள் சமாரியா நாடு முழுவதற்கும், கோனா, பெத்கோரோன், பெல் மாயிம், எரிகோ, கோபா, ஐசொரா, சாலேம் பள்ளத்தாக்கு ஆகிய நகர்களுக்கும் செய்தி அனுப்பினார்கள்.

5உடனே அவர்கள் உயர்ந்த மலையுச்சிகளைக் கைப்பற்றி, அங்கு இருந்த ஊர்களைக் காவலரண் செய்து வலுப்படுத்தினார்கள்; அவர்களின் வயல்கள் அண்மையிலேயே அறுவடையாகியிருந்ததால் போருக்கு முன்னேற்பாடாக உணவுப்பொருள்களைச் சேகரித்தார்கள்.

6அக்காலத்தில் எருசலேமில் இருந்த தலைமைக்குரு யோவாக்கிம் என்பவர் எஸ்திரலோனுக்கு எதிரிலும் தோத்தான் சமவெளிக்கு அருகிலும் அமைந்திருந்த பெத்தூலியா, பெத்தமஸ்தாயிம் ஆகிய நகரங்களின் மக்களுக்கு மடல் எழுதி அனுப்பினார்;

7யூதேயாவுக்குள் நுழைவதற்குரிய மலைப்பாதைகளைக் கைப்பற்றுமாறு அவர்களுக்குக் கட்டளையிட்டார். ஓரே நேரத்தில் இருவர் மட்டுமே செல்லக்கூடிய அளவுக்கு அவை குறுகியனவாய் இருந்ததால், தாக்குவதற்காக மேலே ஏறிவரும் எவரையும் தடுப்பதற்கு எளிதாய் இருந்தது.

8தலைமைக் குரு யோவாக்கிமும் எருசலேமில் குழுமியிருந்த இஸ்ரயேல் மக்களின் ஆட்சி மன்ற உறுப்பினர்களும் ஆணையிட்டபடி இஸ்ரயேலர் செய்து முடித்தனர்.

பொது மன்றாட்டும் நோன்பும்

9இஸ்ரயேலின் ஆண்கள் யாவரும் கடவுளை நோக்கி மிகுந்த ஆர்வத்துடன் கூக்குரலிட்டார்கள்; நோன்பிருந்து தங்களையே தாழ்த்திக்கொண்டார்கள்.*

10அவர்களும் அவர்களுடைய மனைவியர், மக்கள், கால்நடைகள், உடன்வாழ் அன்னியர்கள், கூலியாள்கள், அடிமைகள் ஆகிய அனைவரும் இடுப்பில் சாக்கு உடை அணிந்து கொண்டனர்.

11எருசலேமில் வாழ்ந்துவந்த இஸ்ரயேலிய ஆண்கள், பெண்கள், குழந்தைகள் ஆகிய அனைவரும் தலையில் சாம்பலைத் தூவிக் கொண்டனர்; சாக்கை விரித்துக் கோவிலின் முகப்பில் ஆண்டவர் திருமுன் குப்புற விழுந்தனர்.

12பிறகு அவர்கள் பலிபீடத்தையும் சாக்கினால் மூடினார்கள்; இஸ்ரயேலின் கடவுளை நோக்கி, தங்கள் குழந்தைகள் அடிமைவாழ்வுக்குக் கையளிக்கப்படாதவாறும், மனைவியர் கவர்ந்து செல்லப்படாதவாறும், உரிமைச் சொத்தாகிய நகர்கள் அழிவுறாதவாறும், வேற்றினத்தார் ஏளனம் செய்யும் அளவுக்குத் திருவிடம் தீட்டுப்பட்டு இழிவுறாதவாறும் காத்திடும்படி ஒரே குரலில் மனமுருகி மன்றாடினார்கள்.

13ஆண்டவர் அவர்களது குரலுக்குச் செவிசாய்த்தார்; அவர்களது கடுந்துன்பத்தைக் கண்ணுற்றார்; ஏனெனில், யூதேயா முழுவதிலும் எருசலேமில் எல்லாம் வல்ல ஆண்டவரது கோவில் முன்னிலையிலும் மக்கள் பல நாள் நோன்பிருந்தார்கள்.

14தலைமைக்குரு யோவாக்கிமும் ஆண்டவர் திருமுன் பணிபுரிந்த குருக்கள் அனைவரும் திருவழிபாட்டுப் பணியாளர்களும் இடுப்பில் சாக்கு உடை அணிந்து கொண்டு அன்றாட எரிபலிகளையும் மக்களின் நேர்ச்சைகளையும் தன்னார்வக் காணிக்கைகளையும் செலுத்தினார்கள்;

15தங்கள் தலைப்பாகைமேல் சாம்பலைத் தூவிக் கொண்டு, இஸ்ரயேல் இனம் அனைத்தின்மீதும் ஆண்டவர் இன்முகம் காட்டுமாறு, முழுவலிமையோடும் அவரை நோக்கிக் கூக்குரலிட்டார்கள்.


4:10-12 யோனா 3:7-8; எஸ் (கி) 4:1-3.


4:9 ‘மிகுந்த ஆர்வத்துடன் தங்களையே தாழ்த்திக்கொண்டார்கள்.’ என்பது கிரேக்க பாடம்.
Pradeep Augustine
Pradeep Augustinehttps://bible.catholicgallery.org/
Pradeep Augustine is the founder of Catholic Gallery. He is a passionate Writer, An Artist, a computer geek and a part-time Blogger who loves to write a lot of contents on Catholicism in his free time. He is the founder of the Technical Blog www.GetCoolTricks.com, where he shares a lot of technical Contents. Stay connected with him on his social profiles.
Access Catholic Videos
Subscribe to our YouTube channel to access Mass Readings and Prayers as videos.
No Thanks